இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Sunday, August 23, 2020

பதின்மூன்றாம் அத்தியாயம் - மறு பிறப்பிற்கான உதாரணங்கள் (Examples of Reincarnation)


பெரிய வெள்ளியன்று (Good Friday) காலையில் ஆர்தர் போர்ட் பின்வருமாறு டைப்ரைட்டரில் எழுதினார்: "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிட்டத்தட்ட இதே நாளில் நாஸரேத்திலிருந்து வந்த யேசு என்னும் பெயருடையவர் முடிவற்ற வாழ்வின் அடையாளமாகச் சிலுவையில் மரித்தார். அவர் மேலுமொரு அதிசயத்தை வெளிப்படுத்தும் முகமாகத்தான் அன்று சிலுவையிலிருந்து அகன்றார் எனச் சிலர் எண்ணுகின்றனர். ஆனால் அவருள் இருந்த கிறிஸ்துவே உண்மையில் அன்று மரணத்தை வென்று எழுந்தது. எழுந்து மீண்டும் மீண்டும் சூக்கும வடிவில் தோன்றி, உயிர் என்றும் நிரந்தரமானது என்பதையும், பூதவுடலுடன் இருக்கும் மனிதன் உண்மையான மனிதனல்ல ஆனால் என்றும் இருந்து கொண்டேயிருக்கும் ஆத்மாவின் பௌதீக வடிவமேயன்றி வேறல்லவென்பதையும் நிரூபித்தார். அவரது போதனைகளின் உண்மையையும் அதன்மூலம் அவர் நிரூபித்தார். அதன் காரணமாக அவர் பூவுலகில் என்றுமே நிலைத்து நிற்கும் யேசுவாகவும், காலகாலமாக இறை சக்தியிலிருந்து கொண்டிருக்கும் இறையுணர்வாகவும் (Christ consciousness) பரிணமித்துக் கொண்டிருக்கிறார்.
"டமஸ்கஸ் (Damascus) செல்லும் வழியில் கிறிஸ்து அவர் முன் தோன்றிக் காட்சி கொடுத்த, புனித பவுலின் (Saint Paul) விடயத்தைக் கருத்திற் கொள்வோம். யேசு என்ற ஒரு மனிதரைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால் அந்த ஆத்மவுருவத் தோற்றத்தைக் கண்டதும் உடனடியாக உள்ளுணர்வில்  அவரே யேசு என்றொருவரின் உடலில் வசித்த கிறிஸ்து என அவர் அடையாளம் கண்டுகொண்டார். அவருக்கு உரைக்கப்பட்ட வாசகங்கள் உண்மையானவை. இந்தப் பிரபஞ்சம் தோன்றுகையில் உருவாக்கப்பட்டுப் பின்னர் காலத்துக்குக் காலம் மனிதவடிவில் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆத்மாவின் பூவுலக வாசங்களின் நீண்ட வரிசையில் யேசுவானவர் மிக மேலானவராகும். அவர் தான் புத்தராக வந்தவர், அவர்தான் தேவதூதன், அவர் தான் எல்லாமாகவும் வந்தவர், அத்துடன் எமது ஆத்மாக்கள் உள்ளுக்குள்ளே எப்போதும் எவருக்காக எண்ணி ஏங்குகின்றனவோ அவரே இவர் - எம்மை வழிநடத்துபவர், என்றும் எமக்கு உதவுபவர், அமைதி தருபவர், நல்லனவற்றின் மொத்த உருவம். நிச்சயமாக அவர் இறைமகன் தான். ஆனால் நாமனைவருமே இறைவனின் புத்திரர்களும், புத்திரிகளுமில்லையா? ஒரேயொரு வித்தியாசமென்னவென்றால், யேசுவானவர் மனிதகுலத்தை அதனது அடிப்படை உண்மைகளுக்கு இட்டுச் செல்வதற்கு இறைவனால் அதிகாரமளிக்கப்பட்டவர்: ஒவ்வொருவரிலும் அன்பாயிருங்கள், உங்களுக்குத் தீங்கு செய்பவனுக்குக் கூட நீங்கள் நன்மை செய்யுங்கள், உங்களைப் பற்றி மற்றவர்கள் தீங்காகக் கதைக்க நீங்கள் விரும்பாவிடின், மற்றவர்களைப் பற்றி நீங்கள் தீங்காகப் பேசாதீர்கள், உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டுமென எண்ணுகிறீர்களோ அவ்வாறே நீங்கள் மற்றவர்களை நடத்துங்கள். கிறிஸ்துவின் ஆத்மாவானது நாசரேத்துவைச் சேர்ந்த யேசுவின் உடலில் பல காலங்களுக்கு வாழ்ந்து முடித்தது. ஆனால் நாமெல்லோரும் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். அதாவது நம் எல்லோரது உடலினுள்ளும் வாழும் ஆத்மாவானது அதேபோலவே இறைவனின் ஒரு பகுதியாகும் என்பதையும், அது தீமையை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். எனவே நாம் அனைவரும் எது ஆரம்பத்திலேயே தூய்மையாகவும் மாசற்றதாகவும்  உண்மையாகவும் இருந்ததோ அதே போலவே மாறுவதற்கு சற்றுக் கடுமையாக முயற்சிப்போம். உன்னைப் போலவே உன் அயலானையும் நேசி." 
உயிர்த்தெழுந்த ஞாயிறன்று காலையில் ஆர்தர் உபதேசம் செய்கையிலும் இதே போன்றதொரு கருத்தையே முன் வைத்தார் பின்வருமாறு:
"இன்று, வாழ்வு என்றும் சாஸ்வதமானதென்பதை நிரூபிப்பதற்காக உடலிலிருந்து விடுதலை பெற்ற கிறிஸ்துவானவர் கல்லறையிலிருந்து எழுந்த அந்த அழகான காலையைக் குறிக்கும் நினைவு நாளாகும். உடலிலிருந்து விடுதலையாகிப், பாலஸ்தீனத்தின் பல பாகங்களில் தனது சீடர்களுக்குக் காட்சியளித்தார். சந்தேகமுற்ற தாமஸுக்குத் தனது காயங்களைக் கூடக் காட்டினார். ஆனால் இதுவல்ல முக்கிய செய்தி. முக்கியமான விஷயம் என்னவென்றால், நாமனைவருமே எமது தனித்தன்மைகளுடனும், ஞாபகங்களுடனும் இறப்பைத் தாண்டிப் பிழைக்கிறோமென்பதேயாகும். இதனையே இயேசு சிலுவையிலே மரித்ததன் மூலம் உலகிற்கு உணர்த்தினார். என்றுமே சாஸ்வதமான அவரின் ஒரு பகுதியானது - அதாவது கிறிஸ்துவானவர் - என்றுமே இருந்து கொண்டிருக்கும் ஆத்மாவின் ஒரு பகுதியாக எங்கள் பூதவுடல் இல்லையென்பதை நிரூபிப்பதற்காக உயிர் வாழ்ந்தார். நாம் யேசுபிரான் என்ற பெயரில் எமது நினைவில் இருந்துகொண்டேயிருக்கும் அந்தக் கிறிஸ்துவானவரின் பற்பல பிறவிகளைப் பற்றி இன்று பார்ப்போம். அந்த அவதாரமெடுப்பதற்கு முன் வேறுபட்ட பல மனிதர்களாக அவர் பிறந்திருக்கிறார். அவை அனைத்திலுமே அவர் மனிதனின் பூரணத்துவத்தையே நாடினார். அவர் தனது தந்தைக்கும், அனைவருக்கும், பூதவுடலுடன் இருக்கையிலேயே சபலத்தூண்டுகைகளை எதிர்த்து நின்று, ஒரு பூரணமான வாழ்க்கையை வாழமுடியுமெனக் காட்ட விரும்பினார். யேசுவும் எம்மைப் போல ஒரு மனிதர்தான் என்பதனைச் சில நேரங்களில் நாம் மறந்து விடுகிறோம். அவருள்ளே வாழ்ந்த கிறிஸ்துவே அவரை மேன்மையானவராக ஆக்கியது. பூவுலகில் வாழும் எந்தவொரு மனிதனுக்கும் இருக்கக்கூடிய உடல் சார்ந்த அதே சபலங்களும், மயக்கங்களும் யேசுவைத் தொந்தரவு செய்திருந்தாலும் அவற்றையெல்லாம் அவர் எதிர்த்து நின்றார். எனவே அவர் விரும்பியவாறே நேர்மையாக நாம் ஒவ்வொருவரும் வாழமுடியுமென்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளவேண்டும். ஏனெனில் பூதவுடலோடு இருக்கும் மனிதனாலும் பூரணத்துவம் பெறமுடியுமென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது."
அவர் தொடர்கையில் பின்வருமாறு சொன்னார்: "இப்போ பூவுலகில் ஒரு பிறவியிலேயே பூரணத்துவம் பெற முயன்ற ஒரு மனிதரைப் பற்றிப் பார்ப்போம். அவர் கூடுதலான முன் கர்மவினைப் பயன்களைத் தீர்க்க வேண்டிய நிலையில் இருந்ததால் அது சாத்தியமில்லாதது போலிருந்தது. 'அது சாத்தியமில்லையா?' என்று நீ கேட்கலாம். ஆமென்றும் சொல்லலாம், இல்லையென்றும் சொல்லலாம். பல கூடாத முன் ஜென்ம வினைகளிருப்பின், அவர் நிச்சயம் தானே தனக்குப் பரிகாரம் செய்யவேண்டும். ஆனால் ஏனைய அனைவரையும் மன்னித்துவிட்டுப் பின் தன்னையும் மன்னித்து விட்டால், அவர் கருணையின் விதிகளுக்குக் கீழே கொண்டு வரப்படுவார். கருணையின் விதியென்பது, நாம் உண்மையிலேயே மனம் வருந்தினால், கடந்த காலப் பாவங்கள் அனைத்தையுமே துடைத்து அழித்து விடும். இதைத் தான் நாஸரேத்தின் யேசுவானவர் தன்னுள்ளே வந்திறங்கக் கூடிய பரிசுத்த ஆவியென்றுரைத்தார். இந்தக் கருணையினால் உருவான பரிசுத்த ஆவியினாற் பலன் பெறுங்கள். இந்தப் பரிசுத்த ஆவியுடன் தொடர்பு கொள்வதற்கு, முக்கியமாக மற்றவர்களை மன்னித்தால் மட்டும் போதாது, எம்மை நாமே மன்னிக்கவும் வேண்டுமென்பதை நினைவில் கொள். 'அன்பு' என்பது தான் முக்கியமான சொல். மற்றவர்களை உன்னைப் போல் நேசி. அத்துடன் உன்னையும் நேசிக்கப் பழகிக்கொள்."
எனது 'ஹியர் அண்ட் ஹியராஃப்டர்' (இங்கும் இதற்குப்பின்னரும்) என்னும் புத்தகம் எழுதுவதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், நான் இவ்வுலகில் பிறப்பதற்கு முந்தைய எனது வாழ்வை அறிவதற்காக ஹிப்னாட்டிஸம் மூலம் எனது வாழ்க்கையில்  பின்னோக்கிச் செல்கையில் (prenatal hypnotic regression), எனது பல முந்தைய பிறவிகளை மறுபடியும் நான் வாழ்ந்து பார்த்தது போல் தோன்றியது. அவற்றுள் இரண்டை இங்கு விபரிப்பது பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன். ஏனெனில் அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள், நான் ஹிப்னாட்டிஸத்தின் போது கண்டவற்றுக்கு நம்பகத்தன்மையைக் கொடுத்தன. அதில் ஒன்றில், நான் இமயமலைச்சாரலில் ஒரு ஆச்சிரமத்தில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டேன் (sitting in the lotus position at an ashram in the lower Himalayas). எனது கைகள் சிறியதாகவும், சற்றுக் கறுப்பாகவுமிருந்தன. கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், ஆச்சிரமத்தில் எனது உணவை விபரித்தேன் - சிறு கனிகள் (berries), பழங்கள், கொட்டை வகைகள் (nuts) - அத்துடன் கீழேயுள்ள கிராமத்திலிருந்து வரும் சிறுவர்களுக்கு நான் ஒரு குருவாக இருப்பதாகவும், ஆனால் அதேநேரம் மலையில் மேலே வசிக்கும் ஒரு உயர்ந்த குருவின் கீழ் நான் பயின்று வருவதாகவும் சொன்னேன்.
என்னை ஹிப்னாட்டிஸம் செய்தவர் (hypnotist) - எனது 'ஹியர் அண்ட் ஹியராஃப்டர் என்ற புத்தகத்தில் ஜேன் வின்த்ரோப் (Jane Winthrop) என்று அழைக்கப்பட்ட பெண் விஞ்ஞானி - என்னை இருபத்தைந்து வருடங்கள் முன்னோக்கி அழைத்துச் சென்றபின், நான் இன்னும் ஆச்சிரமத்திலே தான் இருக்கிறேனா எனக் கேட்டார். முதலில் நான் கலவரத்துடன் காணப்பட்டேன். பின்னர் தான் அதற்கான காரணம் புரிந்தது. எனக்கு மேலிருந்த குருவானவர் இறந்துவிட்டதாகவும் நான் அவரது கடமைகளைப் பொறுப்பெடுத்துக் கொண்டதாகவும் நான் விளக்கமளித்தேன். ஜேன், எனக்கென்று ஒரு மந்திரம் (mantram) இருக்கிறதாவெனக் கேட்டதற்கு, நான், "நிச்சயமாக, ஒவ்வொருவருக்கும் ஒரு மந்திரமுள்ளது" என உரத்த குரலில் சத்தமிட்டேன். எனது மந்திரத்தை உரைக்கும்படி சொன்னதற்கு, நான் முன்னர் எப்போதுமே கேள்விப்பட்டிராத, இரு சத்தங்கள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு உச்சாடனத்தைத் திரும்பத்திரும்ப உச்சரித்தேன். வெளிப்படையான காரணங்களுக்காக நான் ஒருவருக்குமே இந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லவில்லை. இதனது நம்பகத்தன்மையைச் சோதித்தறிவதென்பது மிகவும் கடினம். இரு மாதங்களின் பின்னர், எனக்கு முன்னர் அறிமுகமில்லாத ஒரு மனிதர் வேர்ஜீனியாக் கரையிலிருந்த (Virginia Beach) எனது வீட்டுக்கு வந்தார். அவர் இந்தியாவிலிருக்கும், உதய்பூர் நகரத்தைச் சேர்ந்த டாக்டர் ஐ. ஸி. ஷர்மா எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் வேர்ஜீனியாவிலிருக்கும் சிறிய பல்கலைக்கழகத்தில் பரிமாற்றம் செய்யப்பட்ட (exchange) தத்துவவியல் பேராசிரியராக அப்போ இருந்தார். அவர் எனது மறைவியல் சம்பந்தமான (psychic) புத்தகங்களை வாசித்திருக்கிறார். அவர் அவற்றைப் பற்றி என்னுடன் கலந்துரையாட விரும்பினார். அவர் கிளம்புகையில், எனது மந்திரம் என்ன என நான் அறிய விரும்புவதாகச் சொன்னேன். ஏனென்றால் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இறைவனுக்குமிடையில் ஒவ்வொரு தனிப்பட்ட அலையதிர்வு இருக்கவேண்டுமெனக் கருதப்படுகிறது. அதற்கு அவர் எனது மந்திரத்தை வேண்டித் தான் தியானம் செய்வதாகச் சொன்னார்.
இரு கிழமைகளின் பின்னர் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மீண்டுமொரு முறை அவர் வந்தார். அவர்கள் புறப்பட ஆயத்தமாக, நான் சற்று ஆவலுடன், "எனது மந்திரத்தை எண்ணித் தியானம் செய்வதற்கு உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லைப் போலும் " எனக் கேட்டேன். டாக்டர் ஷர்மா, "உண்மையில் கிடைத்து விட்டது. நான் அதனை உங்களுக்கு எழுதித் தருகிறேன்" என்று சொல்லி என்னிடம் ஒரு சிறிய காகிதத்தை நீட்டினார். அதில் இரு ஒலிகள் ஒன்று சேர்ந்து எழுதப்பட்டிருந்தன. அவை எனது வியப்புக்கேற்ப, நான் ஹிப்னாட்டிஸம் செய்யப்பட்டிருக்கையில் மீண்டும் மீண்டும் உரைத்த அதே மந்திரமாக ஒரு வித்தியாசமும் இன்றியிருந்தது. அன்றிலிருந்து நான் நாளாந்தம் தியானம் செய்கையில் அந்த மந்திரத்தையே உபயோகித்துக் கொண்டு வருகிறேனென்று சொல்ல வேண்டியதில்லை.
நான் இந்த விஷயத்தை மீண்டும் சொல்லியதற்குக் காரணம், மறுபிறப்பைப் பற்றிச் சொல்கையில் ஆர்தர் போர்ட்டின் ஆத்மாவானது, "நீ இந்தியாவின் இமயமலையில் முன்னொரு தரம் ஒரு குருவாக இருந்தாய். அந்தப் பிறவியில் நான் உன்னையறிவேன். ஏனெனில் நான் உனது குருவாகவிருந்தேன். நான் அவ்வுலகை விட்டு ஆத்ம உலகுக்குச் செல்லும் வரையும் என்னுடன் நீ கற்றறிந்தாய். பின்னர் நீ எனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டாய். நீ ஒரு நல்ல தகுதியான மாணாக்கனாக இருந்தாய். நீ ஒரு இளைஞனாகவும், நானொரு வயதானவராகவும் நாமிருவரும் ஒருவரில் ஒருவர் மிக அன்பாகவும் இருந்தோம்." என்றது.
எனது இரண்டாவது 'மறுபிறப்பு' அனுபவத்தைப் பற்றி மீளவும் சொல்கையில் எனக்குச் சற்றே சங்கடமாகவுள்ளது. ஆனால் சிலவேளை அது மற்றவர்கள் தங்களது ஆழ்மனத்தின் எண்ணங்களை ஆய்ந்தறிவதற்கு ஊக்குவிக்கக் கூடும். இந்த நினைவு கூரலானது ஐந்து வருடங்கட்கு முன், நான் தியானத்தில் இருக்கும் போது தான் ஆரம்பித்தது. அதில் நான் ஒரு ஐந்து அல்லது ஆறு வயதுச் சிறுமியாக இருக்கக் கண்டேன். பெத்தலஹேமிலிருக்கும் (Bethlehem) எமது குடிலுக்குச் சற்றுத் தொலைவிலிருந்து சில விவேகமுள்ள மனிதர்கள் வருவதைக் கண்டேன். அருகில் ஒரு இடத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது எனக்குத் தெரிந்துள்ளது. சிறிது நேரத்தில் அந்தக் குழந்தைக்கு பெத்தலஹேமுக்கும், ஜெருஸலேமுக்குமிடையிலே உள்ள ஒரு குளத்தில் ஸ்நானம் செய்விப்பதைப் பார்ப்பதற்கு அந்த மனிதர்களைப் பின் தொடர்ந்து செல்வதற்கு என்னை அனுமதிக்குமாறு நான் எனது தந்தையைக் கெஞ்சிக் கேட்கிறேன். அவர் முதலில் என்னைத் தடுத்தார். ஆனால் நான் அவ்வளவு தீவிரமாக அவரைக் கெஞ்சிக் கேட்டதனால் கடைசியில் நாம் தெரு வழியே நடக்கத் தொடங்கினோம். அப்போது நான் எனது சிறு கரத்தை அவரது கரத்துள் செலுத்துகையில், அவர் தான் ஆர்தர் போர்டின் அதே ஆத்மா என்பது எனக்குத் தெரிய வந்தது.
மறுநாள் தியானம் செய்கையில், நான் என்னை ஒரு பெண்மணியாகக் கண்டேன். அக்குழந்தை இப்போ வளர்ந்து பெரியவனாகி சாக்கடலின் (Dead Sea) அருகே உபதேசம் செய்து கொண்டிருப்பதாக அப்போது தான் அறிந்திருக்கிறேன். நான் அவர் சொல்வதைக் கேட்பதற்கு மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் எனது கணவர் நான் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை. எனவே நான் எனது கைக்குழந்தையையும் விட்டு விட்டுப் பாலைவனத்தினூடே ஓடுகிறேன். பின்னர் ஜேன் வின்ராப் என்னை ஹிப்னாடைஸ் செய்த பொழுது இவற்றுள் சிலவற்றை நான் மறுபடியும் வாழ்ந்து பார்த்திருக்கிறேன். நான் பாலைவனத்தில் யேசுவைச் சூழ்ந்திருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டுபிடித்து அவரைப் பின்பற்றும் பெரிய கூட்டத்தில் நானும் ஒருத்தியாகச் சேர்ந்து விட்டேன். பின்னர் பெத்தனி (Bethany) என்னும் இடத்திலுள்ள வீடொன்றில் அவருடன் இருக்கையில் நான் லாஸரசின் (Lazarus) ஒரு தங்கையாக இருப்பதை உணர்ந்தேன். ஆனால் எனக்கு நான் மேரியுமல்ல, மார்த்தா(Martha)வுமல்ல என்று தெரிகிறது. ஏனெனில் அவர்களிருவருமே அங்கேயிருக்கிறார்கள்.
இந்த விஷயமானது மேற்கொண்ட சிந்தனைக்கிடமின்றி நகைப்பிற்கிடமாக இருந்ததால், நான் இதை எனக்குள்ளேயே வைத்திருந்தேன். ஆனால் எனது 'இங்கும், இதன் பின்பும்' (Here and Hereafter) என்ற புத்தகத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ஆரம்பத்தில் வந்த விசிறிகளின் கடிதங்களில் ஒன்று எனக்குத் தெரியாத ஒருவரிடமிருந்து வந்திருந்தது. அக்கடிதத்தில்  நான் முன்னர் லாசரசின் ஒரு தங்கையாக இருந்திருக்கிறேன் என்று தனது உள்ளுணர்வு மூலம் (psychically received the impression) தெரிய வந்ததாக எழுதியிருந்தார். மேலும் சில வாரங்கள் கடந்த பின் ஒரு நாள் நான் அகத்தூண்டுதலால் உந்தப்பட்டு, லீவை (Levi) என்பவர் எழுதிய, யேசு கிறிஸ்துவின் அக்குவாரியஸ் காலத்துக்கான நற்செய்தி (The Aquarian Gospel of Jesus the Christ) என்ற புத்தகத்தின் பிரதியொன்றை வாங்கினேன். இப்புத்தகமானது நூற்றாண்டின் தொடக்கத்தில் அமானுஷ்யமான முறையில் (psychically) லீவை என்பவருக்குச் சொல்லப்பட்டது. அப்புத்தகமானது விவிலிய வேதத்தின் பாணியில் எழுதப்பட்டிருந்ததனால், நான் மெதுவாகவே அதனை வாசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் எனது குழப்பத்தை அதிகரிக்குமுகமாக அதில் ஒரு இடத்தில் லாஸரசையும், அவரது மூன்று சகோதரிகளையும் பற்றி - மார்த்தா, மேரி, ரூத் - சொல்லப்பட்டிருந்த பகுதியை நான் வாசிக்கையில் சொல்லொணா வியப்பில் ஆழ்ந்தேன். அப்புத்தகத்தில் அதன் பின்னர் பல இடங்களில், இந்த, பைபிளில் உரைக்கப்படாத, மூன்றாவது சகோதரியைப் பற்றிச் சொல்கையில், லீவை, அப்பெண் யேசுவைப் பின்பற்றுவதற்காகத் தனது கணவரையும், இரு பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றதாகவும், ஏனெனில் அப்பெண்ணின் கணவருக்கு யேசுவின் இயக்கத்தில் எந்தவொரு அனுதாபமும் இருக்கவில்லை எனவும் எழுதியிருந்தார். ஆனால் இறுதியில் யேசு அவளை மனதை மாற்றிக் குடும்பத்துடன் சேர அனுப்பிவைத்ததாகவும், அவள் அப்படிச் செய்ததனால் அவளது கணவர் மனம் மாற்றமடைந்து பின்னர் இருவருமே அவரது சீடர்களில் தீவிரமானவர்களாகச் செயற்பட்டார்கள் எனவும் அப்புத்தகத்தில் எழுதியிருந்தார்.
1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் திகதி ஆர்தர் போர்ட், எனது டைப்ரைட்டரில் பின்வருமாறு எழுதினார்: "நீ எனது முந்தைய பிறவிகளில் உன்னுடன் எனக்கு இருந்த சம்பந்தங்களைப் பற்றி அறிய ஆர்வமாக உள்ளாய். அவற்றுள் சிலவற்றை என்னால் ஞாபகப்படுத்த முடியும். அதாவது ஆர்தர் போர்டாக நான் வாழ்ந்த வாழ்வில் நேரடியாகத் தம் தாக்கங்களை ஏற்படுத்தியவற்றை ஆவது என்னால் நினைவுபடுத்த முடியும். ஒன்றில் நான் தாய்லாந்தில் பௌத்த பிக்குவாகவிருந்தேன். இன்னொரு பிறவியில் நான் பிரான்ஸ் நாட்டில் எங்கோ ஒரு இடத்தில் டொமினிக்கன் துறவியாகவிருந்தேன். இவை ஒரு சில பிறவிகளுக்கு முன்னர் தான் நடந்தவை. அத்துடன் நான் புண்ணிய பூமியில் (Holy Land) ரூத் என்னும் பெயர் கொண்ட ஒரு சிறுமியினதும், அத்துடன் மேரி, மார்த்தா, லாஸரஸ் என்பவர்களினதும் தந்தையாகவும் இருந்திருக்கிறேன். அது ஒரு கடினமான, ஆனால் அதே நேரம் உயர்வான வாழ்க்கை (அப்போது என்னால் எனது முழு வல்லமையையும் - யேசுவின் பாதிரியாராவதன் மூலம் - வெளிக்கொணர முடியாமற் போனாலும் கூட). ஆனால்  நான் யேசுவிற் பார்க்கக் கணிசமாக வயதிற் பெரியவனாக இருந்தேன். அத்துடன் அவர் சிலுவையில் மரிக்கும் போது நான் உயிருடனில்லை. அவர் பிறக்கையில் நீ சிறுமியாகவிருந்தாய். எனது ஏனைய பிள்ளைகளும் அதே போல சிறுவர்களாகவிருந்தார்கள். சிலர் உன்னில் பார்க்க மூத்தவர்களாகவும் சிலர் இளையவர்களாகவுமிருந்தார்கள். நாம் பெத்தலஹேமிலிருந்து பெத்தனிக்கு இடம் (Bethany) பெயர்ந்தோம். ஆனால் அதன் பின் நீண்ட நாட்கள் நான் உயிர் வாழவில்லை. மகன் லாஸரஸ் குடும்பப் பொறுப்பை ஏற்கும்படி விட்டு விட்டு நான் இறந்து விட்டேன்.
லாஸரஸ் உயிருடன் புதைக்கப்படவில்லை. நையாண்டி செய்பவர்கள் என்ன தான் நையாண்டி செய்தாலும் அவர் உண்மையிலேயே இறந்து பின் உயிர்ப்பிக்கப்பட்டார். நான் இந்தப் பக்கத்தில் அவருடனிருந்தேன். பின்னர் அவர் மீண்டும் பூதவுடலுக்குத் திரும்புவதைப் பார்த்தேன். இறைவனின் சங்கற்பம் இருப்பின் இதுவும் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் முகமாகத்தான் அவர் திரும்பினார். ஒருவரும் என்னை இம்முறை அங்கு மீண்டும் அழைக்காததில் எனக்கு மிக மகிழ்ச்சியே. ஏனென்றால், நான் பூதவுடலினுள் இருப்பதிலும் பார்க்க ஆத்ம உலகில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தக் கடைசித்தரத்தில் இருந்த பூதவுடலைப் பொறுத்தவரையிலாவது அப்படித்தான் சொல்லவேண்டும். நீ மார்த்தா போலவோ, அல்லது மேரி போலவோ கூடக் கீழ்ப்படிவான பெண்ணாக இருக்கவில்லை. உன் கணவன் யேசுவைப் பின்பற்றுவதற்காக அனைத்தையும் விட்டு விட்டு வர மறுத்ததால், நீ உனது கணவரை விட்டு விட்டு ஓடி விட்டாய். இப்போ இருப்பது போலவே அப்போதும் எதுவும் உனது விருப்பப்படியே நடக்க வேண்டுமென நினைப்பாய். இந்த உனது கட்டுக்கடங்காத தன்மையைத் தள்ளிவைத்து விட்டுக் குடும்பத்தை முன்வைக்கும் படி யேசுவே உனக்குப் புத்தி சொல்லி உனது மனதை மாற்றிய பின்னர் தான் நீ உனது குடும்பத்துடன் சென்று மீண்டும் சேர்ந்து கொண்டாய். இந்தப் படிப்பினையானது இன்னமும் உனக்குக் கற்பதற்குக் கஷ்டமாகவுள்ளது, ஏனெனில் நீ, 'நாம்', 'நீங்கள்' என்பவற்றில் பார்க்க 'நான்' என்பதற்கே எப்போதும் முதலிடம் கொடுப்பதாகத் தெரிகிறது. இந்தப் போக்கை மாற்றுவது நல்லது அல்லது நீ உயர்ந்த தீர்மானங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டு அதே தவறுகளை என்றும் இழைத்துக் கொண்டிருப்பாய்."
பின்னர் ஆர்தர், 'நான்' என்பதற்கு முன்னால் 'நாம்' அல்லது 'நீங்கள்' என்பவற்றை வைப்பதைப் பற்றிச் சற்றுக் கடுமையாக எடுத்துரைத்தார் பின்வருமாறு: "சிறிது காலத்துக்கு பாப் (Bob) இடம் கடிவாளங்களைக் கொடுத்துவிட்டு ஒரு ஜப்பான் மனைவியைப் போல இருந்துபார். சிறிது காலத்துக்கு அவரை நடத்த விட்டு விட்டு, நீ அவரைப் பின்பற்று. இதன்மூலம் நீ பணிவைப் பயிலலாம். அத்துடன் அது கருணைக்கான சோதனையாகும்." அவர் எனது முகத்தை வெட்கத்தில் எரியும்படி செய்தார். ஏனெனில் எனக்குத் தெரியும் அவர் எனது மிகவும் மோசமான குறைகளைச் சுட்டிக்காட்டுவது. எனக்குத் தலைமை தாங்குவதென்றால் மிக மிக விருப்பம்.
ஏப்ரல் மாதத்தில், எமது டைப்ரைட்டர் அமர்வுகளில் ஒருநாள், எமது பாலஸ்தீன வாழ்க்கையைப் பற்றி வேறு ஏதாவது இருந்தால் சொல்லமுடியுமா என நான் ஆர்தரைக் கேட்டேன். அதற்கு அவர், "உனக்கு முதலிலேயே தெரிந்தது போலவே தான் - நீ லாஸரசின் சகோதரி, நான் அந்தச் சிறார்களுக்குத் தந்தையாகவும் இருந்தேன். நாம் லாஸரஸ் மாதிரியோ, மேரி மாதிரியோ அல்லது மார்த்தா மாதிரியோ அவ்வளவு உயர் சிந்தனையுள்ளவர்களாக இருக்கவில்லை. அதனால்தான் பைபிளில் நாம் குறிப்பிடப்படவில்லை. அது எப்போதும் ஒரு குறைதான். ஏனெனில் ஏனையவர்களைப் போலவே எமக்கும் அதே மாதிரியான வாய்ப்புகளிருந்தும், நாம் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டோம். யேசுவின் போதனைகள் நான் இறந்ததன் பின்னரே ஆரம்பித்ததனால், நான் அவரின் சீடர்களில் ஒருவனாக இருக்கவில்லை. ஆனால் சேவை செய்யும் சந்தர்ப்பங்கள் பல இருந்தும், நான் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தவில்லையென நினைக்கிறேன். சரியான வழிகளை விடப் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றும் ஒரு கடுமையான கட்டுக்கோப்பான யூதனாக நான் இருந்ததும் அதற்கு ஒரு காரணமாகும்.
நீ ஒரு குதூகலமான பெண்ணாக இருந்தாய். அத்துடன் எனது மற்றப் பிள்ளைகளில் பார்க்க எனக்கு உன்னைத்தான் நிரம்பப்பிடிக்கும். ஆனால் நீ உனது கணவரையும் குழந்தைகளையும் விட உனக்கே முதலிடம் கொடுத்ததனால் அளப்பரிய சேவைகளுக்கான சந்தர்ப்பங்களை இழந்துவிட்டாய். கிறிஸ்துவாகிய யேசு என்னும் மனிதருடைய சிஷ்யையாக வருவதற்கு நீ மிகவும் விரும்பியது உண்மையே. ஆனால் அவரைப் பின் தொடர்ந்து, அவரின் விவேகம் நிறைந்த உரைகளைச் செவிமடுத்து மகிழ்ந்ததற்குப் பதிலாக நீ உனது குழந்தைகளின் நலனைக் கருத்திற் கொண்டிருந்தால், நீ நன்றாக இருந்திருப்பாய். யேசுவுக்கு நிச்சயமாக இது தெரிந்ததனால் தான் கடைசியில் உன்னை உனது வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அங்கு உனது திறமையினால் நீ கொஞ்சம் கொஞ்சமாக உனது கணவனின் மனத்தை அவரது போதனைகளின் பக்கம் திருப்பினாய். பின் யேசுவின் இறுதி வாழ்நாட்களில் நீங்களிருவரும் உங்கள் சிறு குழந்தைகளுடன் அவரின் சீடர்களாகி விட்டீர்கள்" என்று பதிலிறுத்தார். ஆர்தர் உண்மையில் எனது ஏனைய பல பிறவிகளைப் பற்றியும், அவரது பிறவிகளைப் பற்றியும், அத்துடன் இப்போ வாழ்ந்து கொண்டிருக்கும் சில உறவினர்கள், நண்பர்களுடனான முன்னைய தொடர்புகள் பற்றியும் எழுதியிருந்தார். ஆனால் இப்புத்தகமானது பொதுவானதாக எழுத இருப்பதால், அவற்றை இங்கு சேர்க்கவில்லை. நாம் பிறவியெடுக்கையில் நாம் பிறக்கப்போகும் இனத்தையும், பூகோள வரைபடத்தில் பிறக்கப் போகும் நாட்டையும் எப்படித் தீர்மானிக்கிறோம் என்று ஒரு நாள் நான் கேட்டேன். அதற்கு அவர், "உண்மையில் இது மிக உணர்வு பூர்வமான பிரச்சனைகளில் ஒன்றுக்கு வழிவகுக்கும். ஏனெனில் எமது பழைய கர்மவினைகளைக் களையகூடிய விதமாகவும், அத்துடன் உயர் குணங்களை அபிவிருத்தி செய்யக்கூடிய விதமாகவும் என்று எல்லாவற்றையும் அடக்கக்கூடிய ஒரு சூழ்நிலையாக அது அமையவேண்டும். சிறுபான்மை இனங்களான கறுப்பு இனமக்களோ, அல்லது யூத மக்களோ சம்பந்தமாக நாம் சகிப்புத்தன்மையிழந்து இனத்துவேஷத்துடன் நடந்திருந்தால், அந்த இனத்திலேயே அடுத்த முறை பிறந்தால் எமக்கு நல்லதா? பெரும்பாலும் இதுதான் நிலைமை. சிவிலுரிமைப் போராட்டங்களில் முன்னணியிலே நின்ற சில நீக்ரோக்கள் முற்பிறவியில் அடிமைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்த வெள்ளையர்களாகும். அவர்கள் தங்களது அடிமைகளினதும், தங்களுக்குக் கீழே இருந்த மக்களினதும் மனித உரிமைகளை மறுத்தவர்களாகும். எனவே அவர்கள் வெளியே இருந்து மேம்படுத்துவதிற் பார்க்க உள்ளேயிருந்தே உதவுவதற்காக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தாங்களே கறுப்பர்களாக வந்துள்ளார்கள். ஹிட்லர் ஆட்சியில் இறந்த சில யூதர்கள் முன்னர் விட்ச் ஹண்ட் (witch hunts) எனப்படும் படுகொலைகளின் போது யூதர்களைக் கொடுமைப்  படுத்தியவர்கள். தங்களது தவறுகளைத் திருத்தத் தாமாகவே அவர்கள் முன்வந்து யூதர்களாகப் பிறந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது உயிர்களை இழந்ததன் மூலம் மிகக் கடுமையான தண்டனையை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் அதன் மூலம் மனிதகுலத்தின் மனச்சான்றைத்  தூண்டிவிட்டிருக்கிறார்கள். அத்துடன் அதன் மூலம் பல மைல் கற்கள் ஆத்மீகத்தில் முன்னேறிவிட்டனர். இது ஒரு இனத்துக்கான கர்மவினையுமாகும் (race karma). ஏனெனில் பழைய ஏற்பாடே (Old Testament) சில இடங்களில் பழைய யூதர்களை யுத்தகுணம் கொண்டவர்களாகச் சித்தரிக்கிறது. அதாவது தங்கள் மதத்தின் பெயரால் மற்றவர்களை அடக்கியதாகச் சித்தரிக்கிறது. எனவே இனத்துக்கான கர்மவினையும், தனிப்பட்ட கர்மவினைகளும் ஒரே நேரத்தில் அங்கே நிறைவேற்றப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஆனால் அதற்காக ஹிட்லரதும், அவரது லெப்டினென்ட்களினதும் செய்கைகள் சிறிதளவும் மன்னிக்கக் கூடியனவல்ல. அவர்கள் தாமிழைத்த பாவங்களுக்கான விலையைத், (தீர்ப்பானது எங்களால் வழங்கப்படுவதல்ல என்பதன் காரணமாகப்) பல நூறு அல்லது சிலவேளை ஆயிரம் வருடங்களுக்கு அடைய வேண்டிவரும்" என்று பதிலிறுத்தார்.
"நாம் ஒவ்வொருவரும் எம்மைப் பூவுலகிலும், அதே போல இந்த மிக இயல்பான ஆத்ம தளத்திலும் சந்திக்கவேண்டிவரும். அப்போது நாமே எமது மிக மிகக் கடுமையான நீதிபதியுமாகும். பூவுலகிலிருக்கையில் அபாயகரமான பாவங்களென நாம் நினைப்பவை இங்கு வந்தபின் மிக அபூர்வமாகத் தான் உண்மையான பாவங்களாக இருக்கும். எமது செய்கைகளால் யாருக்குத் தீங்கு விளைவித்தோமென எம்மை நாமே கேட்டுக் கொள்வோம். அந்தச் செய்கைகள் எமது தன்னலத் தேவைகளுக்காகச் செய்யப்பட்டனவா அன்றிப் புலன் இன்பங்களுக்காகச்  செய்யப்பட்டனவா அல்லது வேறொருவருக்காகச் செய்யப்பட்டனவா? உண்மையில் அவருக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கில் செய்யப்படவில்லையா? தன்னலமறுப்பானது இங்குள்ள பல சிறந்த நற்பண்புகளில் ஒன்றாகும். ஏனெனில் அது எம்மிலுள்ள அன்பிற் பார்க்க மற்றவர்களின் மேலுள்ள அன்பை  முன்னே வைக்க எமக்குக் கற்றுத்தருகிறது. நல்லொழுக்கமானது என்றும் ஆத்மாவுக்கு நன்மை பயக்கும். அது எமக்கு எப்பொழுதும் அவசியமாகும். ஆனால் இங்கே அதனைப் பயில்வதற்கான சந்தர்ப்பங்கள் மிக மிகக் குறைவாதலினால், எமது சுய தேவைகளைப் பூர்த்தி செய்யும் பழக்கங்களை அடியோடு துடைத்தெறிந்து, தன்னலமின்மையைப் பழகுவதற்காக நாம் மீண்டும் மீண்டும் பூவுலகுக்குத் திரும்புகின்றோம்.
எமது முந்தைய பிறவிகளைப் பற்றிய நினைவுகள் எமக்கு இருப்பதில்லை என்ற விடயத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் போர்ட் பின்வருமாறு எழுதினார்: "எமது பூதவுடலின் நினைவுகளுக்குக் கூடுதலாக நாம் கொண்டு வருபவையாவன இந்த ஆத்ம உலகின் சில நினைவுகளும், சிலவேளைகளில் முந்தைய பிறவிகளின் திடீர் நினைவுக்கீற்றுகள் - கூடுதலாக நாம் அப்படி நடக்க வேண்டுமென்று எண்ணியிருந்தாலும், அத்துடன் முந்தைய பிறவியிலே தொடர்ந்த அதே பாதையிலே இப்பிறவியிலும் தொடர வேண்டுமென்று முடிவு செய்திருந்தாலும் தான். இந்த நினைவுகள் எமது செய்கைகளையும், எண்ணங்களையும் நாம் அங்கிருக்கையில் பாதிக்கும். இந்தப் பின்னோக்கிய நினைவுகளானவை (ப்ளாஷ் பேக் ) பெரும்பாலும் கனவுகளின் போது, அதாவது எமது உடல் இயக்கங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் போது வரும். இந்தக் கனவுகளானவை பெரும்பாலும் கடந்த காலத்துடன் தொடர்புள்ளவையாக இருக்கும். நாம் அவற்றில் கவனம் செலுத்தும் போது எமது முன்னேற்றங்கள் மேலும் இலகுவாக்கப்படலாம். அவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மாயத்தொற்றங்களல்ல. ஆனால் உணர்வு நிலையின் அல்லது எண்ண அலைகளின் ஒரு சீரான பிரவாகமாகும். இந்த எண்ண அலைகளானவை ஒன்றில் எம்முடன் இருந்து கொண்டேயிருப்பவைகளாகவோ அல்லது பழைய தவறுகளுக்கு நாம் சரியான பரிகாரங்களைக் காலப்போக்கிற் செய்திருந்தால் எமது நினைவிலிருந்து அழிக்கப்பட்டவைகளாகவும் இருக்கலாம். உங்களைப் போலவே நாமும் எமது ஆத்மாவைப் பூரணமானதாக்க முயன்று கொண்டேயிருக்கிறோம். பல ஆத்மாக்கள் நற்பண்புகளின் காரணமாக உருவெளித்தோற்றங்களில் அப்படி ஒரு மாறுதலடைந்ததை நாம் கண்ணுற்றதன் காரணத்தால், நாமும் அவர்களைப் போல மாறுவதற்கு மிகவும் விரும்புகிறோம். ஆனால் இன்னொருவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதென்பது முன்னேற்றத்துக்குகந்த வழியல்ல. ஒவ்வொரு ஆத்மாக்குள்ளும் நல்லது, தீயது என்பவை பற்றிய அறிவுகளிருக்கின்றன. அத்துடன் நாம் ஒவ்வொருவரும் சபலத்தூண்டுகைகளாலும், நற்கருணைகளாலும் வெவ்வேறு விதமாகவே பாதிப்படைகின்றோம். அதனால் நாமனைவரும் அந்த முழுமுதலின் ஒரு பகுதியாகவிருந்தாலும், கைரேகையடையாளங்கள் எப்படி ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றனவோ, அவ்வாறே நாமும் ஒவ்வொருவரிலிருந்து மற்றவர் வேறுபடுகின்றோம். கால்விரலின் செயற்பாடானது கைவிரலின் செயற்பாட்டை விட வேறுபடுவது போல எம் ஒவ்வொருவருக்கும் எமக்குரிய பங்குகளிருக்கும். அத்துடன் நாம் பூரணத்துவமடைவதற்குரிய எமது சொந்தப்பாதையைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். விரற்கணுவானது மூக்கினது வேலையைச் செய்ய முயலக்கூடாது. எனவே எதுவும் எமது கையிலே தானுள்ளது. எமக்கு எது சரி எது பிழையென நன்றாகத் தெரியும். எனவே ஏன் நாம் அதற்கேற்றபடி நடக்கக்கூடாது?"
பூவுலகில் மீண்டும் பிறப்பெடுப்பதைத் தெரிவு செய்யும் 'மேலுலகக் கணனி'களைப் பற்றிய ஆர்தரின் முந்தைய கலந்துரையாடலைப் பற்றி இன்னும் வியப்புக் குறையாத நான் அவரை அதனைப் பற்றி மேலும் விபரிக்கக் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு எழுதினார்: "அதைப் பற்றி ஆரம்பத்தில் இருந்து சொல்வதானால், பூவுலகப் பிறவிகளுக்கிடைப்பட்ட காலமானது உலகநேரப்படி, ஆயிரம் அல்லது நூறு வருடங்களாக இருக்கலாம் அல்லது சில மணித்தியாலங்களாகவோ, நாட்களாகவோ, வாரங்களாகவோ, வருடங்களாகவோ இருக்கலாம். சிலருக்கு அவசரமாகப் பரிகாரம் தேட வேண்டியிருக்கும். உலகவாழ்க்கையின் இன்னல்களில் களைத்துப்போன வேறு சிலரோ நீண்ட நாட்களுக்கு ஓய்வெடுக்க விரும்புவார்கள். எப்படியென்றாலும் ஒருவருக்குத் தான் எப்போ பூவுலகுக்குத் திரும்புவதென்று தானே தனியே முடிவெடுக்க இயலாமலிருப்பார். ஏனெனில் வேறு சில விஷயங்களையும் கருத்திற் கொள்ள வேண்டும். உதாரணமாகத் தாயாவதற்குத் தயாராகும் ஒரு பெண்ணிடம் திரும்புவதற்கு ஒருசில வாய்ப்புகளே இருக்கும். ஏனையவர்கள் தங்கள் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருப்பதால், சொல்லப்போனால், மீண்டும் பிறப்பதற்கு விரும்பும் ஆத்மாக்களிடையே தாய்மார்களைப் பங்கீடு செய்வதற்கு ஒரு ஒழுங்கு முறை (சிஸ்டம்) உள்ளது. ஒரு பெண் கருத்தரிக்கும் ஒவ்வொரு தடவையும் அந்த சிஸ்டமானது தொழிற்படத் தொடங்கும்.    
"அப்பெண்ணானவள் ஒரு உயர்ந்த ஆத்மாவாக இருக்கும் பட்சத்தில் ஒரு உயர்ந்த ஆத்மாவைப் பூவுலகப் பிள்ளையாக வளர்க்கும் உரிமையும், தகுதியும் அவளுக்கேயுள்ளது. வெறும் உடலின்பத்தைப் பற்றி மட்டும் நினைப்பவளிலும் பார்க்க இப்பெண்ணுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இந்த உயர்வான ஆத்மாக்களுக்காக இங்கே ஓருவிதமான வகைப்படுத்தும் முறைமை (சிஸ்டம்) அமைக்கப்படும். அந்த சிஸ்டமானது தகுதியுடையவர்களில் யார் அந்தப் பூவுலகப் பெற்றோரின் தேவைக்கேற்ற வகையிலும், அதே நேரம் தனது குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையிலும் இருக்கிறார் என்பதைத் தீர்மானிப்பதற்காகச் சிலவேளைகளில் ஒரு பரிசோதனைக் காலம் நடாத்தக்கூடும். இவையெல்லாம் உங்களால் கொம்பியூட்டர் முறைத் தொழிற்பாடுகள் என்று உங்கள் உலகில் அழைக்கப்படக்கூடிய ஒரு முறையிற் தான் செயற்படுத்தப்படுகின்றன. ஆனால் இங்கே அது ஒரு தானாகவே நடைபெறும் தொழிற்பாடாகும். அதாவது பெற்றாரும், பிறப்பெடுக்கப் போகும் ஆத்மாவும் சம்பந்தமான எல்லாவிதமான தகவல்களையும் ஒரு சேரப் பொருத்தும் ஒரு முறையாகும். எந்த இரு ஆத்மாவும் ஒரே மாதிரி இருப்பதில்லையாதலினால், அந்தக் குறிப்பிட்ட பூவுலகப் பிறவியில் யார் பூரணமான பலனை அடைவார்களென்பதில் அரிதாகவே சந்தேகம் எழும். பெற்றாராக வரப்போகும் அந்த இரு ஆத்மாக்களையும் ஏற்கனவே தெரிந்திருந்தால் அல்லது அன்புக்குரியவர்களாக இருந்தால், அத்துடன் குறிப்பிட்ட அந்தத் தம்பதிகளுடன் தீர்ப்பதற்கு ஏதாவது பூர்வ ஜென்ம கர்ம வினைகள் இருந்தால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
"பிறக்கும் உரிமையைப் பெற்ற அதிர்ஷ்டசாலியான அந்த ஆத்மா அந்தக் கருவுள், பிறக்கும் தருணத்தில் அல்லது அதற்கு சற்று முன்னர் புக, அதே நேரத்தில் ஏனையவர்கள் ஏனைய சந்தர்ப்பங்களைத் தேடுவார்கள். தங்களது குறிக்கோள்களுக்குப் பொருத்தமான சந்தர்ப்பம் வரும் வரையும் அவர்களின் தேடல் இருக்கும். அதற்கான சாத்தியக்கூறு இப்போ  அதிகரித்திருக்கும். ஆத்மீக வளர்ச்சி அதிகம் அடையாதவர்களோ அன்றிக் கூடுதலான கர்ம வினைகள் ஈடு செய்யவேண்டி இருப்பவர்களோ வனப்புக் குறைவான சூழ்நிலைகளில் பிறப்பார்கள். சிலபேர் பணிவுடைமையைப் பயிலவோ அன்றித் துன்பத்தையறியவோ சேரிப் பகுதிகளிலோ அல்லது பின்தங்கிய நாடுகளிலோ தாமே விரும்பிப் பிறப்பார்கள். அவர்கள் இந்தத் தடைகளை வென்று, மேன்மேலும் ஆத்மீக முன்னேற்றமடைந்து உயரிய நிலையையடையும் உறுதியான தீர்மானத்துடன் அப்படியான இடங்களிற் பிறப்பார்கள். பூவுலகுக்குத் திரும்பும்படி ஒருவரையும் கட்டாயப்படுத்துவது இல்லையென்பதை அழுத்தமாகச் சொல்கிறேன். இங்கே முன்னேறுதல் கடினமென்றாலும் கூட நாம் விரும்பினால் காலகாலமாக இங்கேயே வேண்டுமென்றாலும் இருக்க முடியும். ஆனால் அதி சீக்கிரத்தில் மீண்டும் பூதவுடலை எடுப்பவர்கள், அதாவது கிடைக்கக்கூடிய எந்தச் சந்தர்ப்பத்திலென்றாலும் பிறப்பவர்கள் பூவுலகில் அதிகமாகக் கஷ்டப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் இங்கே பெரிதாக ஒன்றுமே கற்காததுடன், இன்னொரு பூவுலகப் பிறவிக்கான காரணங்களை அவர்கள் சீர்தூக்கி ஆராயவில்லை. இதன் காரணமாகத் தான் பல ஊனமுற்ற, முடமாகிய பிச்சைக்காரர்களும், திருடர்கள், கொள்ளைக்காரர்களும் கூடக் காணப்படுகிறார்கள். அவர்கள் பொருத்தமான பௌதீக உடல் கிடைக்கும் வரையில் காத்திருக்க முடியாமல் கண்ணில் படும் ஏதாவதொரு கருவியைப் பற்றிக் கொள்கிறார்கள்".
ஆர்தர் ஒரு நாள், ஒரு தாய் தன் இளம் வயதில் தன் குழந்தைகளையெல்லாம் விட்டு விட்டு இறந்து போன விடயத்தைப் பற்றி விபரிக்கையில், இவ்விஷயத்தில் கர்மா எப்படிச் சம்பந்தப்படுகிறது என்று நான் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "இதனை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அப்பெண்ணானவள் முதலொரு பிறவியில் தனது பிள்ளைகளை விட்டு விட்டு இன்னொரு ஆணுடன் ஒடியிருந்திருப்பாள். இந்தக் கடைசிப் பிறவியில் அதற்குரிய தண்டனையாகத் தன் குழந்தைகளுடன் இருப்பதற்கு மிகவும் ஆசைப்படுகையில் அவர்களை விட்டு விட்டு நீங்கவேண்டி வந்துவிட்டதெனலாம். இது தான் தன் பேரேட்டைச் சரி செய்வதற்குரிய அவளின், அவளின் ஆத்மாவின் வழியாகும். ஆனால் அப்பிள்ளைகள் என்ன செய்தவர்கள்? அவர்களும் முன்னொரு பிறவியில் தம்மைக் கண்காணிப்பவர்களை இகழ்ந்திருக்கலாம். அன்பான பெற்றோரின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படாமல் அவர்களை எதிர்த்திருக்கலாம். இந்தக் கடைசிப் பிறவியில் அவர்கள் தம் தாயை அன்புடன் நேசித்தாலும், தாய் இப்பக்கத்துக்கு வருகையில் அவர்கள் தாயில்லாமல் தனித்தியங்கும் படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கர்மாவின் விதிகள் மாற்றமுடியாதவை. நாம் உண்மையிலேயே மனம் வருந்தினால் இறைவனின் கருணையால் அதனது பிடியிலிருந்து சற்றே விடுபடலாமே தவிர முற்றாகத் தவிர்க்க இயலாதவை.
"இந்த உதாரணமானது நிச்சயமாக இதே போன்ற எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் சரியென்பதல்ல. சிலவேளைகளில் ஒரு தாயானவள் வெறுமனே மேலதிகமான கர்ப்பங்களாலும், அதீதமான பாசத்தாலும் அதிகமான சுமைகளை ஏற்றியிருக்கலாம். அதனால் அவளது உடலெனும் கோவிலானது அழுத்தங்களைத் தாங்கக்கூடிய வல்லமையை இழந்திருக்கலாம். சில சமயம் ஒரு விபத்து அவளின் இறப்பிற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இப்படியான சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் கர்மவினைகள் தான் அதற்கான காரணிகளாக இருப்பதுண்டு. ஏதாவது முற்பிறவியொன்றில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு இளம் தாயில் இவர் பரிவு காட்டாதிருந்திருக்கலாம். அல்லது அப்பிறவியில் அவர் தனது உடலை அவ்வளவு தூரத்துக்கு உதாசீனப்படுத்தியிருப்பதால், இப்பிறவியின் அழுத்தங்களைத் தாங்கக்கூடிய வல்லமை அவளுடலுக்கு இல்லாமலிருந்திருக்கலாம். இப்போ இந்தத் தாய் முற்பிறவியில் ஒருவரின் உயிரைத் தெரிந்தே கொன்றிருந்தால் இப்பிறவியில் தன்னுயிரைத் தியாகம் செய்ய வேண்டி வந்திருக்கலாம். இது ஆராய்வதற்கு சற்று மனச்சோர்வான விஷயம் தான் ஆனாலும் மிக அவசியமாகக் கற்க வேண்டிய பாடமிது.
இன்னொரு நாள் அவர் பின்வருமாறு எழுதினார்: "தாய் பிள்ளைகளின் உறவுகளின் நோக்கங்கள் என்னவென்று சொல்லமுடியுமா? சில தாய்மார்களுக்குத் தங்களின் சில பிள்ளைகளுடன், அவர்களாற் போற்றப்படுமளவுக்குக் கூடுதல் நெருக்கமும் பிணைப்பும் இருந்துகொண்டிருக்கும் அதேவேளையில் மற்றப் பிள்ளைகளுடன் தொடர்ச்சியான முரண்பாடுகள் காணப்படுகின்றன.  அதன் காரணம் என்ன? ஒருவர் பலமான அன்புப் பிணைப்புகளின் காரணங்களால் அந்தப் பெண்ணின் வயிற்றில் பிறப்பதற்குத் தீர்மானித்திருக்கலாம். அதே நேரம் வேறொருவர் தனது பழைய எதிராளியிடமோ, எதிரியிடமோ வந்து பிறப்பதன் மூலம் பழைய கர்மவினைகளைத் தீர்ப்பதற்கு உடன்பட்டிருக்கலாம். அல்லது இருவருக்குமிடையில் முன்பின் தொடர்பொன்றுமில்லாமலும் அத்துடன் இருவருக்கும் பொதுவான விஷயமொன்றும் இல்லாமலுமிருக்கலாம்.
"சரி, இந்த வகையான அறிவானது வயோதிப வயதென்று சொல்லப்படும் வயதில் உங்களை இங்கு வருவதற்கு எப்படித் தயார் செய்கிறது? 'வீடடைதல்' எனத் துதிப்பாடல்கள் உரைக்கின்றன. உண்மைதான். இங்கே நாம் வீட்டை அடைந்துள்ளோம். அங்கே தான் நாம் சாகசங்கள் புரியும் அதே நேரத்தில் எமக்கு அந்நியமான வழிமுறைகளைக் கைக்கொள்வோம். ஆத்மீக முன்னேற்றமடைவதற்காக இப்படியாக நாம் எல்லாவற்றையுமே பணயம் வைக்கிறோம். இங்கேயெடுக்கப்பட்ட உயரிய உறுதிமொழிகளும், மற்றும் விரைவாக முன்னேறுவதாகவும், அதே நேரம் பூமியின் இழுவிசைகளாலும், சலனங்களாலும் பாதிப்புறுவதில்லையென எடுக்கப்பட்ட தீர்மானங்களும் கேட்பதற்கு இனிமையாகத்தானிருக்கும். அந்தோ பரிதாபம், ஆத்மாக்கள் கூடுதலாகத் தாம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வேதனைப்பட்டுக் கொண்டே தான் இங்கே வந்து சேர்கிறார்கள். தாம் நிறைவேற்றுவதாக உறுதியெடுத்துக்கொண்டு வந்தவற்றை நிறைவேற்ற முடியாமற் போனதையிட்டு மிகவும் மன வேதனையுறுவார்கள். தமது முன்னேற்றத்தில் தடங்கல் ஏற்பட்டதற்கு அவர்கள் சூழ்நிலைகளையோ அல்லது ஏனையவர்களையோ தான் ஆரம்பத்தில்  குற்றம் சாட்டுவார்கள். ஆனால் காலப்போக்கில் இங்கே அந்த ஆத்மாவானது உள்ளார்ந்த அக்கறையுடன் தியானத்தில் தன்னை ஈடுபடுத்த ஈடுபடுத்தத் தானே தான் சிக்கலை ஏற்படுத்தியதென உணரத்தலைப் படுவார்கள். 
"அப்போ என்ன செய்யலாம்? பூதவுடலுடன் நீங்கள் இருக்கையிலேயே உங்களால் இழைக்கப்பட்ட ஒவ்வொரு தவறுகளையும் நேர்மையான முறையில் மறுபரிசீலனை செய்ய உறுதியெடுங்கள். இந்தப் புறத்தில் உறுதியாக நீங்கள் செய்ய இருக்குமாப்போல, அங்கேயிருக்கையிலேயே உள்ளார்ந்த அக்கறையுடன் மறுபரிசீலனை செய்யுங்கள். இங்கு வந்ததன் பின் மறுபரிசீலனை செய்வதாயிருந்தாலும் கூட அங்கிருக்கையில் மறுபரிசீலனை செய்வதன் மூலம் நீங்கள் சென்று கொண்டிருக்கும் பாதையில் மாற்றத்தையேற்படுத்தி அதன் மூலம் மேன்மையான உயரங்களுக்குச் செல்லகூடிய வாய்ப்புக்களை நீங்கள் ஏற்படுத்தலாம். இந்தப் புறத்தில் ஒரு ஆத்மாவால் மிஞ்சி மிஞ்சிச் செய்யக்கூடியது என்னவென்றால் மறுபரிசீலனை செய்தல், மதிப்பீடு செய்தல், கற்று அறிதல், தீர்மானங்களெடுத்தல், பின்னர் பூவுலகில் அடுத்த சுற்று வருவதற்காகத் தன்னைத் தயார் செய்தல் அவ்வளவுதான். அங்கேயென்றால், எந்த விஷயத்தை மேற்கொள்ளவென்று ஆரம்பத்தில் நீங்கள் திட்டமிட்டீர்களோ, அப்பணியை நிறைவேற்றுவதற்குப் போதுமான நிறைய வாய்ப்புகள் இருக்கும். அல்லது இன்னொருவரின் வாழ்க்கைப் பாதையில் ஒளியை உண்டாக்கவாவது இயலும். அப்படிச் செய்யும் போது நிச்சயமாக உங்களுக்கு முன்னேற்றமேற்படும்"
அப்போது லிலி இடையிற் புகுந்து பின்வருமாறு சொன்னார்: "மனிதவுடலின் சபலங்களையெல்லாம் வென்று எப்படி நாம் வளர்ச்சியுறலாம்? உங்களுக்குள்ளிருக்கும் சிறு குரலைச் செவிமடுப்பதன் மூலமே."

No comments: