இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Tuesday, January 26, 2021

ஆறாவது அத்தியாயம் - இறப்பின்பின் நடப்பது என்ன? (What Happens After Death)


ஆர்தர் ஃபோர்டின்  பூவுலக வாழ்வின் இறுதியான சில மாதங்களின் போது அவர் மீண்டும் ஒரு புத்தகம் எழுதத்தொடங்கி இருப்பதாக நான் அறிந்திருந்தேன். ஆனால் அது எதைப்பற்றி என்று எனக்குத் தெரியாது. அவர் இறந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இருக்கையில் அவருக்கும் எனக்கும் தெரிந்த ஒரு நண்பர் வில்லியம் ராஸ்சர் அடிகளார் (Reverend William v. Rauscher) மூலமாக ஆர்தர் தனது புத்தகத்தின் தலைப்பைத் தெரிவு செய்து விட்டிருந்தார் என அறிந்து கொண்டேன். அந்தத் தலைப்பு என்னவென்றால் 'இறப்பின் பின் நடப்பது என்ன' என்பதாகும். அவரின் ஈமச்சடங்கு முடிந்த சில நாட்களிலேயே (காலை வேளைகளில்) என்னுடைய தட்டச்சு இயந்திரத்தைப் பதினைந்து நிமிடங்களுக்கு அவர் ஆட்கொள்கையில் இறப்பு என்கிற வாயிலின் மறுபக்க வாழ்வு எப்படியிருக்குமென்று விபரித்து நானும் அவரும் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதப்படவேண்டும் என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். அதாவது ஆர்தர் ஃபோர்ட் எனும் ஆத்மா ஒரு தீர்மானம் எடுத்தால் அதை நிறைவேற்றியே தீருமென்று காட்டிவிட்டார்.
புத்தகம் எழுதத்தொடங்கியதுமே அவர் பலவிதமான ஆத்மாக்களின் குணநலன்களைப் பற்றி விபரிக்கத் தொடங்கினார். ஃபெப்பிரவரி பதினான்காம் திகதியன்று அவர் பின்வருமாறு எழுதினார்: "இன்று ஒருவர் உயிருடனிருக்கையில் இறப்பின் பின் என்ன நடக்கும் என்பதைப் பற்றி எள்ளளவும் சிந்திக்காதவரும் ஆனால் அதில் நம்பிக்கையோ நம்பிக்கையின்மையோ கொள்ளாத, ஒரு பக்கமும் சாராத, உலக வாழ்க்கையின் இயந்திரத் தன்மையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் இதைப் பற்றி எண்ணுவதற்குக் கூட நேரமில்லாத ஒருவர் இங்கே வரும் போது எப்படிப்பட்டதோர் இடத்தைப் பார்ப்பார் என்பதைப் பார்ப்போம். அவர் விட்டுவிட்டு வந்த இடத்தைப் போலவே சற்று வித்தியாசமான ஓர் இடத்தில் தான் இருப்பதைக் கண்டார். பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை. அனைத்தும் சற்றுக்கூடுதல் பிரகாசத்துடன் தெளிவாக இருந்தன. அத்துடன் ஆகாயமானது மேகங்கள் இல்லாமல் இருந்தது. மற்றும் படி வேறு ஒரு மாற்றமும் இல்லாததால் அவர் தான் இன்னும் உயிருடன் இருப்பதாகவே எண்ணினார். எனவே அவர் தனது வழமையான காரியங்களைப் பார்க்க எண்ணி, அவரின் நினைவில் வந்த முதல் விஷயத்தைப் பார்ப்பதற்குச் சென்றார். அங்கே பலர் இருந்தாலும் கூடத் தன்னை ஏன் ஒருவரும் கவனிக்கவில்லையென அவருக்குப் புரியவில்லை. தான் அவர்களுக்கு ஏதாவது தீங்கிழைத்து இருப்பேனோ என மூளையைப் பிழிந்து யோசித்தார். அப்படி ஒன்றும் அவருக்குத் தெரியவில்லை. ஒரு சிலர் இவரின் நண்பர்களாகவே இருந்தார்கள். அவர்களுடன் ஒரு மனஸ்தாபமும் இவருக்கில்லை. அவர் பெரிய குழப்பத்துக்கு ஆளானார். பின் இங்கே இருக்கும் அவரைப் பூவுலகில் நன்கு தெரிந்த ஒருவர் அவருக்கு விஷயத்தை விளக்கி ஆறுதலளிக்க வந்தார். ஆனால் அவரோ இதென்ன இறந்தவரின் ஆவி தன் முன்னே தோன்றுகிறது என எண்ணி அஞ்சினார். வந்தவர், தானும் அவரும் இருவருமே இப்போ ஆவியுலகில் இருப்பதை அவருக்குப் புரிய வைக்க முயல அவரோ தான் ஒரு கெட்ட கனவு காண்பதாக எண்ணினார். அவர் தனது வீட்டுக்குத் தனது மனைவியைக் காணச்சென்றார். ஆனால் மனைவியோ சர்ச்சில் கறுப்பு உடை உடுத்திக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டார். அவர் தனது நண்பர்களில் யாரோ இறந்து விட்டார்கள்; அது யாராக இருக்குமென (அது தானாக இருக்கக் கூடுமென சற்றும் சந்தேகப்படாமல்) வியந்தார். பின் அவர் முன்னே சென்று யாரென்று அறிவதற்குப் பிரேதப் பெட்டியுள் குனிந்து பார்த்தார். அப்போது தான் முதல் தடவையாகத் தனது உடல் அங்கே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 'இப்படியிருக்காது இப்படி இருக்காது' எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், அவருடன் கூட வேலை செய்தவர்கள் அனைவரும் அவரது மரணத்தைப் பற்றி (தான் அவர்களுக்கு அருகே நின்று தொண்டைத் தண்ணீர் வற்றக் கத்திக் கொண்டிருந்தாலும் கூட) கவலைப்பட்டுப் பேசிக்கொண்டிருந்தனர். இப்போ அவரது நிலை உனக்குப் புரியுமென நினைக்கிறேன். சிறிது சிறிதாக அவருக்குத் தான் சிக்கலில் மாட்டிக்கொண்டது புரியத் தொடங்கியது. தான் பேசுவதை அவர்களுக்குப் புரியும்படி செய்ய முடியாவிடின் அவர்கள் தன்னை உயிருடன் புதைத்து விடுவார்களென அஞ்சினார். தான் பேசுவது அவருக்குத் (தனக்குத்) தெளிவாகக் கேட்டது. ஆவியுலகிலிருக்கும் தனது உறவினர் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள இயலாமல் தான் உயிருடன் புதைக்கப்படப் போகிறேனோ என வருந்தினார். 
"இது உதாரணத்துக்குச் சொல்லப்பட்ட ஒரு காட்சி. இதைப் போல சிலர் மிகவும் கஷ்டப்படுவார்கள். இறந்தபின் ஆத்மாவுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிச் சற்றேனும் சிந்தியாமல் இருப்பவர்கள் கிட்டத்தட்ட இந்நிலையில் தான் வருவார்கள். மூக்கைப் பிடித்தால் வாயைத் திறக்கத் தெரியாதவர்கள் போல் தான் இவரின் நிலை. அவருக்கு உண்மையைப் புரிய வைக்க மிக மிக நீண்ட நாட்கள் எடுக்கும். அதாவது அவர் நிரந்தரமானவர்; ஆத்மா வடிவில் உயிர் வாழ்வார்; பூதவுடல் மட்டும் தான் அழிந்தது என்பதைப் புரிய வைப்பதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும். அவரது விதவை மனைவியின் துயரிலும் பார்க்க அவரின் துயரம் மிகப்பெரிதாக இருக்கும். ஏனெனில் அவரது மனைவி அவரை ஒரு நாள் சந்திப்போமென ஆறுதல் கொள்வாள். ஆனால் அவரோ நடந்தது நிஜமல்ல என எண்ணுவார்.
மறுநாள் ஃபோர்ட் பின்வரும் விதமாகத் தொடங்கினார்: "இப்போ வேறொரு விதமான மனிதரைப் பார்ப்போம். அவர் சொர்க்க புரியில் நம்பிக்கை கொண்டவர். தேவ குமாரர்களும் தேவதைகளும் யாழ் வாசித்துக் கொண்டிருக்கும் பளிங்காலான மாடமாளிகைகள், கூட கோபுரங்களுடன் கூடிய சொர்க்கத்தில் ஒரு உயரமான சிம்மாசனத்தில் ஆண்டவன் அமர்ந்து கொண்டு இரவு பகலாக மகிழ்ச்சியான ஆத்மாக்களைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்பவை போன்ற கற்பனையில் உள்ளவர். இப்படியான மனநிலையில் தான் அமெரிக்கா மற்றும் ஏனைய இடங்களிலுள்ள சிறிய கிராமங்களைச் சேர்ந்த தேவாலயங்களைச் (சர்ச்) சார்ந்து வாழும் குறுகிய எண்ணம் கொண்ட பலர் உள்ளனர். ஆனால் உண்மை அதுவல்ல. இங்கே வரும் ஆத்மாக்கள் பளிங்காலான மாடமாளிகைகளில் இருக்க விரும்பினால் அவர்கள் அப்படிப்பட்ட இடங்களில் இருப்பார்கள். ஏனெனில் அப்படிப்பட்ட கட்டிடங்கள் பூவுலகில் நிறையவே உள்ளன. அத்துடன் ஆத்மாக்களுக்குத் தாங்கள் நினைக்கும் இடங்களுக்குச் செல்லக்கூடிய சக்தி வந்து விடும். ஆனால் தேவதைகளையும் தேவகுமாரர்களையும் சிறகுகளுடன் தோற்றுவிப்பது கடினமாகும். அப்படி அவர்கள் இருக்கும் பட்சத்தில் நான் இப்போ இருக்கும் இடத்தில் காணவில்லை என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் இங்கே பல ஆத்மாக்கள் ஒளி வடிவங்களாக உள்ளன. நல்ல ஆத்மாக்கள் ஒளி ரூபமாக இருக்கின்றன. ஆனால் நாம் சிறகுகளுடன் இருக்கவேண்டும் என்று எண்ணவில்லை. நாம் எங்காவது செல்ல எண்ணினால் அந்த எண்ணம் தான் எம்மை அந்த இடத்துக்குக் கொண்டு சேர்க்கும். சிறகுகளல்ல. அத்துடன் பூவுலகிலிருக்கும் எல்லாச் சடப்பொருட்களும் எண்ண வடிவம் என்பதால் நாம் அவற்றினூடே செல்லமுடிகிறது.
மற்றொரு நாள் அவர் பின்வருமாறு எழுதினார்: "நான் இன்று உனக்கு இங்கே இருக்கும் இன்னொரு இடத்தைப் பற்றிச் சொல்லப் போகிறேன். இதை ஒரு தங்கும் இடமென்று சொல்லலாம். சிலர் இங்கே மிக நீண்ட காலங்கள் தங்கி இருப்பார்கள். அவர்களுக்குத் தங்களால் முன்னேற முடியுமென்ற விழிப்புணர்ச்சியை ஏதேனும் ஒன்று உணர்த்தும் வரை அவர்கள் இப்படித் தங்கி இருப்பார்கள். கத்தோலிக்கர்கள் இதனைப் 'பேர்கேட்டறி' (Purgatory) என அழைப்பார்கள். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமானது. எல்லோரும் அங்கே சில காலம் தங்கியிருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அப்படியல்ல. இந்த இடைப்பட்ட நிலையிலிருக்கும் ஆத்மாக்களுக்காகக் கத்தோலிக்கர்கள் ஆண்டவனைப் பிரார்த்திப்பார்கள். உண்மையில் அங்கே பிரார்த்திப்பது இங்கே எமக்கு நன்மை செய்கிறது. அந்தப் பிரார்த்தனைகளால் உருவாக்கப்படும் அன்பு உணர்வலைகளை எங்களால் நிச்சயமாக உணரமுடிகிறது. இறப்பின்பின் வரும் இந்த உடனடி நிலையானது ஆத்மா இரு உலகங்களுக்கிடையில் இருக்கும் நிலையைக் குறிக்கும். கிட்டத்தட்டத் திரிசங்கு சொர்க்கம் (nebulism) போன்ற நிலையென்று சொல்லலாம். இது கெட்ட ஆத்மாக்களுக்கு மட்டும் உரிய நிலையல்ல. பெரும்பாலும் உலகமாயையில் முழுவதும் ஆழ்ந்து, ஆத்மீகமாக எந்த ஒரு ஆயத்தமும் இல்லாத ஆத்மாக்களுக்கும் தங்களது மேலுலக வாழ்வைத் தொடர விருப்பம் இல்லாதவர்களுக்குமான நிலையாகும். அவர்களில் சிலர் உறக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள். மற்றும் சிலர் ஒரு விதமான மனச்சோர்வுடன் திரிவார்கள். அவர்கள் முன்னேறுவதற்கு ஒரு விதமான முயற்சியும் எடுக்க மாட்டார்கள். ஒன்றையும் அறிவதற்கும் முயலமாட்டார்கள். அவர்கள் தங்களது உடலை நிரந்தரமானது, அழிவில்லாதது என எண்ணியிருந்ததால் அந்த உடலை விட்டுப் பிரிந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல் இருப்பார்கள்.
அப்படிப்பட்ட ஆத்மாக்களைப் பற்றி ஆர்தர் விபரிக்கையில், அங்குமில்லாமல், இங்குமில்லாமல் இடைப்பட்ட நிலையில் நீண்ட நெடுநாட்கள் மகிழ்ச்சியின்றி, மனஉளைச்சலுடன் திரிந்து கொண்டிருப்பார்கள் எனவும் தங்களது ஆத்ம ஈடேற்றத்துக்குத் தாங்களே முட்டுக்கட்டையாக இருப்பதாக உணரும் வரை அப்படியே இருப்பார்களெனவும் சொன்னார். தாமாக ஏதாவது முயற்சி எடுக்கும் வரை எவரும் எதுவும் செய்ய இயலாது என அப்போது உணர்வார்கள். அப்போது தான் உண்மையில் விழிப்புற்றவராவார். அவர்கள் அதை உணர்ந்ததும் அவர்களுக்கு உதவுவதற்கு அநேக மகிழ்ச்சியான ஆத்மாக்கள் காத்திருக்கும். அவ்வாத்மாக்கள் அவர் தடைகளைக் கடப்பதற்கு அவருக்கு உதவிகள் செய்யும். ஆர்தர் மேலும் தொடர்கையில், "சாதாரணமாக ஆத்ம உலகிற்குப் புதிதாக வரும் ஆத்மாக்களை முதலில் அவர்களது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், கூடப்படித்தவர்கள் போன்றோர் வரவேற்பார்கள். இதனால் அந்த நேரத்தில் தங்களது நைந்து போன உடல் நழுவிப்போக மீண்டும் யௌவனப் பருவமடைவதால் அவர்களுக்கு உண்டாகும் மனஅழுத்தத்தை அப்போதே உணர்ந்து முடிக்கக்கூடியதாக இருக்கும். நாம் எந்த வயதில் இறப்பைத் தழுவியிருப்பினும் இங்கே நாம் இளமையாகவே இருப்போம். குழந்தைகளும் கூடப் பொறுப்பான வழிநடத்தலின் காரணமாக அதி விரைவில் வளர்ச்சியடைந்து விடுவார்கள். ஏனெனில் ஆத்மாக்கள் எல்லாமே படைப்பின் ஆதியிலே தோன்றியவையே. எனவே இங்கே வயதான ஆசிரியர்களோ கெடுபிடியான பெற்றோர்களோ இருந்து கொண்டு ஏனைய ஆத்மாக்களைக் கட்டுப்படுத்த மாட்டார்கள். இங்கே ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையே நிலவுகிறது. இது முற்றிலும் உண்மையே.
"ஆரம்ப வணக்கங்கள் நிறைவு பெற்றதும் ஆத்மாக்களுக்கு இங்கே எப்படிப் பிரயாணம் செய்வது, எப்படி ஒருவர் மற்றவருடன் உரையாடுவது என்பவை போன்றனவும் அது சம்பந்தமான விதிமுறைகளும் விளக்கப்படும். உண்மையில் ஏற்கனவே அவர்கள் மனதால் தொடர்பு கொள்ளத் தொடங்கி இருப்பார்கள். எனவே அவ்விஷயங்களில் பெரிய விளக்கங்கள் ஒன்றும்  தேவையில்லை. பூவுலகில் சுவாசிப்பது எவ்வளவு இயற்கையானதோ அதை விடவும் இங்கே இம்முறைகள் இயற்கையானவை. பூவுலக வாசிகளுக்குச் சுவாசிக்கச் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. அதே போலத்தான் இங்கே உள்ளவர்களுக்கு ஒருவர் மற்றவருடன் எண்ணங்களின் மூலம் தொடர்பு கொள்வதும் நாம் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தில் இருப்போம் என்பதும் ஆகும். ஆத்மாக்கள் தமது நிலையை உணர்ந்து சந்தேகங்களைக் கேட்கத் தொடங்குகையில் தமது முந்தைய பிறவிகளின் ஞாபகங்களும் (முக்கியமாகக் கடைசியாக முடிந்த பிறவியின் ஞாபகங்கள்) வரத்தொடங்கும். தான் இப்போ முடித்து வந்த பிறவியில் நிறைவேற்ற என எடுத்துக் கொண்டவற்றில் ஏன் சிலவற்றை நிறைவேற்றவே இயலவில்லை என வியப்பார். அந்தந்த நேரங்களில் தனது நோக்கங்கள் எப்படியெப்படி இருந்தன என்பதை இப்போ எண்ணிப் பார்ப்பார். கடந்து போன அந்த வாழ்வைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது எந்தெந்த இடங்களில் பிழைகள் விட்டோமெனப் புரிந்து கொள்வார். அந்தப் பிறவியை எடுக்கும் போது என்னென்ன நிறைவேற்ற வேண்டுமெனப் பிறவி எடுத்தோமோ அது தனது ஆழ்மனதுக்குத் தெரிந்தேயிருக்க ஏன் தனது வெளிமனதுக்கு மட்டும் மறந்து போனது என வியப்பார்.
"இப்போ நாம் தெருவில் கார் அடிபட்டு இறந்ததால் திடீரென இங்கே வந்த ஒரு குழந்தையைப் பற்றிப் பார்ப்போம். அக்குழந்தை இந்தப் பிறவியில் ஒரு பாவமும் செய்தறியாதது. எனவே ஏன் அந்தப் பச்சிளம் குழந்தைக்கு அப்படி நடந்ததென்று ஒருவருக்கும் புரியாது. ஆனால் கொஞ்சம் பொறு! அக்குழந்தையின் ஆத்மாவும் அதன் பெற்றோரினதும் தாத்தா, பாட்டியினது ஆத்மாக்களும் ஒரே வயதுடையதாகத்தான் இருக்கும் இல்லையா? எனவே அக்குழந்தையும் தனது முந்தைய பிறவிகளில் செய்த தவறுகளால் தனது ஆத்மாவைக் களங்கப்படுத்தியிருக்கும் இல்லையா? அந்தக் கடனை அது அடைக்க வேண்டாமா? தற்செயலான நடவடிக்கையென்று ஒன்றுமில்லை. ஏனெனில் இங்கே போடப்படும் திட்டமானது என்றும் எல்லாவற்றையுமே சரிவர நடைபெறச் செய்யும். ஆனால் படுபயங்கரமான கெட்ட தன்மையானது கெட்டமனிதனின் மனதில் வெகு வேகமாக வளர்ந்து, சில விடயங்களை அங்கே நிறைவேற்ற என்று ஆரம்பத்திலே இங்கிருந்து போடப்பட்ட திட்டத்தை மீறச்செய்கிறது. ஹிட்லரின் விஷயத்தை எடுத்தோமெனில் பிறக்கும் போது தான் ஒரு ஓவியனாகத் தனது ஆத்மாவின் கலையார்வத்தை நிறைவேற்ற வேண்டுமெனத் திட்டமிட்டுப் பிறந்தாலும் ஜெர்மன் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியதும் காலகாலமாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஆத்மாவின் மனதிலே சேமிக்கப்பட்டிருந்த கெட்ட தன்மைகள் அனைத்தும் விஸ்வரூபமெடுத்து அவனை ஒரு அரக்கனாக மாற்றி விட்டன."
மற்றொரு முறை ஆர்தர் இறப்பின் பின் என்ன எதிர்பார்க்கலாம் என்று தெரிந்து கொண்டவர்கள், தங்களது பூதவுடலை நீக்கி விட்டு ஆத்ம உலகுக்கு முழு உணர்வோடு பயணமாகும் போது என்ன நடக்கும் என்பதைப் பற்றி விளக்கினார். அவர்கள் தாங்கள் தங்களது பூதவுடலை விட்டு விட்டதையும் தங்களின் உறவினர்கள் தங்களைப் பார்க்க இயலாது என்பதையும் புரிந்து கொள்வார்கள். தங்களது மரணச்சடங்குகளைக் காணச் செல்வார்கள் (இறுதியாகத் தங்களது உடலுக்கு வணக்கம் செலுத்த). அதன் பின்னர் அவர்களின் உறவினர்கள் அவர்களை எண்ணி வருந்தித் தங்களையும் வருத்திக் கொண்டிராவிடின் பாசவலைகளால் பின்னி இழுக்கப்படாமல், சுதந்திரமாகத் தங்களது மேலுலகப் பணிகளைச் செய்ய முனைவார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் இங்கே உண்மையாக முன்னேற்றம் காண்பார்கள். அவர்கள் தங்களை எண்ணங்களாலும் கருத்துகளாலும் அலங்கரித்துக் கொள்வார்கள். புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து உற்சாகமாக முன்னேற்றப் பாதையில் செல்வதில் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வழிகள் நிச்சயமாக முன்னோக்கியும் மேல்நோக்கியும் அவர்களை அழைத்துச் சென்று, அவர்கள் எம்மைப் படைத்தவனுடன் சேர வழி வகுக்கும். ஆரம்பத்தில் அவர்கள் பாடசாலைக்குச் செல்வார்கள். அங்கே ஆசிரியர்கள் சில சமயங்களில் ஆத்மாக்களின் காலடியில் அமர்ந்து கொண்டும் சில சமயங்களில் அவர்களுக்கு மேலே மிதந்து கொண்டும் பாடங்களை நடத்துவார்கள். ஆனால் அவர்களும் பூவுலகில் ஆத்மாக்களுக்குத் தெரிந்த ரூபங்களைப் போன்றே உண்மையான ரூபத்துடன் தான் காணப்படுவார்கள். 
"அந்த ஆசிரியர்கள் அடிப்படை அறிவுகளையும் கீழைத்தேய நாடுகளின் தத்துவங்களையும் மற்றும் புதிய தத்துவங்களான கிறிஸ்துவம், இஸ்லாம் போன்றவற்றையும் பற்றி விளங்கப் படுத்துவார்கள். இவற்றையெல்லாம் கற்பவர்கள் உணர்ந்து கொண்ட பின், அவர்களுக்குக் கிறிஸ்துவானவர் பூவுலகில் யேசு எனும் மனிதனாக நடைபயில்கையில் அறிந்திருந்ததைப் போன்ற சிறப்புக் கல்வியானது கற்பிக்கப்படும். அவர்கள் இறைவன் சந்நிதானத்தில் உழைக்க மட்டும் செய்யவில்லை. அவர்கள் பேரானந்தத்தை அடையும் பாதையில் ஸ்திரமாகக் கால்களைப் பதித்துச் செல்பவர்களாகும். பூவுலகில் நாம் உபயோகிக்கும் 'தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்' என்பது போன்ற சொல்லால் இவர்களை நாம் அழைக்கலாம். அவர்கள் இங்கே கண் விழிக்கையில் தங்களது கடந்து போன பிறவிகளைப் பற்றியும் இனித் தாங்கள் எடுக்கப் போகும் பிறவிளைப் பற்றியும் முழுவதுமாக உணர்ந்தேயிருப்பார்கள். இவர்கள் கூர்மையான நினைவுத் திறனுள்ளவர்கள். அவர்கள் பிறவிகளின் இடையே இங்கே அறியப்படுகின்ற ஆத்மீக அறிவுகளைப் பூவுலக வாழ்க்கையின் போது பறிகொடுக்காமல் காப்பாற்றுவார்கள். நாம் இங்கே அறிந்து கொண்டவற்றில் இருந்து உதாரணத்துக்கு, இங்கே முன்னேறுவதற்குரிய சிறந்த வழியானது அன்பு செலுத்துவதாகும் என்று அறிவோம். வேறொரு ஆத்மாவுக்கு நாம் தீங்கு நினைத்தால், அந்த எண்ணமே எமது முன்னேற்றத்தைப் பெரிதும் பாதிக்கும். அந்த எண்ணமே (அந்த எண்ணத்தால் எழுந்த கறையைப் போக்குவதற்குச்) சில சமயம் எமக்குப் பல பிறவிகள் எடுப்பதற்கு வழிகோலும். தீயனவற்றை உரைக்காதே. தீயனவற்றை நினைக்காதே. நாம் தான் பாவங்களை உருவாக்குகிறோம். இங்கே சாத்தான் இருப்பதற்கான எந்த ஒரு சுவடும் இல்லை. நமது  எண்ணங்களாலும் அவற்றைத் தொடரும் எமது செய்கைகளாலும் நாம் தான் சாத்தானை உருவாக்குகிறோம். 
நான் ஆர்தர் ஃபோர்டிடம் 'சாத்தான்' என்ற கருத்தை விளக்குமாறு கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "மனிதனுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரிந்ததும் ஆனால் உலக விருப்பு வெறுப்புகளால் நாம் மறந்து போனதுமான ஞானமானது எமக்கு இங்கே போதிக்கப்படும். அது ஆதியிலிருந்தே இருக்கும் ஞானமாகும். இந்த உலகுக்குரிய ஆசை அபிலாஷைகள், வெறுப்புகள், காமம் போன்றவற்றைத் தள்ளி வைப்பதன் மூலம் பூதவுடலுக்குரிய வரையறைகளை உயிரோடு இருக்கையிலேயே மீறலாம் என்பதை நாம் அறிவோம். இந்த உலக மாயையில் நாம் ஆழ்ந்து போவதற்குக் காரணம் நம் உள்ளத்தே தூண்டுவிக்கப்படும் ஆசை அபிலாஷைகளே. அப்படித் தூண்டுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசை அபிலாஷைகளை வெற்றி கொள்வதே உயர்நிலையை எய்துவதற்குரிய விரைவான வழியாகும். முடிவற்ற வாழ்வின் ஒரு மின்னலான கணமே இப்பூவுலக வாழ்வென்பதைப் புரிந்து கொண்டால் மனத்தின் இச்சலனங்களை வெற்றி கொள்வது இலகுவாகும். அந்த மின்னலான கணப்பொழுதில் (பூவுலகில்) தூண்டுவிக்கப்படும் ஆசைகளுக்காக ஏன் ஒருவரின் முன்னேற்றங்களைத் தடுக்க வேண்டும்? இந்தச் சிந்தனையை என்றும் மனதில் வைத்திருக்க வேண்டும். மனிதனைச் சூழ்ந்து நின்று ஆசை வேட்கைகளால் அவன் தன்னைப் படைத்தவனையே மறக்கும்படி செய்யும் இந்தத் தீய சக்திகளை வெல்வது மிக மிக முக்கியமானது.
"இந்தத் தீயசக்திகளானவை சில மத போதகர்களால் சொல்லப்படுவது போல சைத்தானின் வேலையல்ல. ஆனால் கெட்ட எண்ணங்களைச் சிலர் எண்ணுவதால் சூழலில் நிலையாக ஏற்படுத்தப்படும் தீய அலைகளாகும். நிலையான கறைகளாகும். 'நிலையான' என்று சொல்வது சிலவேளை உண்மை இல்லாமலும் இருக்கலாம். ஏனெனில் பலர் நல்ல எண்ணங்களை எண்ணுவதால் உண்டாக்கப்படும் நல்ல அலைகள் இந்தத் தீய அலைகளின் சக்திகளை நிர்மூலமாக்கும். அதற்குப் போதுமான அளவு நல்ல அலைகளானது உருவாக்கப்படல் வேண்டும். சைத்தான் என்ற ஒன்று உள்ளது. ஆனால் அது நாம் நினைப்பது போல இல்லை. மனிதனானவன் இப்பூவுலகில் கால் வைத்ததில் இருந்து சேகரிக்கப் பட்டிருக்கும் தீயசக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்ததே இந்தச் சைத்தான் ஆகும். அது தீமைகளின் விளைவேயாகும். மனிதனால் கர்த்தர் போல இருக்க இயலாததால் ஒவ்வொரு தலைமுறையும் அதனது தீய செயல்களால் இந்தத் தீய சக்திக்கு உரம் போட்டு அதன் மூலம் உருவான அந்தத் தீய சக்தியே சைத்தானென நாம் எண்ணுவதாகும்.
சைத்தான் என்பது ஒரு நபரல்ல. எவ்வாறு ஒவ்வொரு கருணையான, நன்மையான செய்கையாலும் நல்ல சக்தியானது பிரகாசிக்கிறதோ அவ்வாறே இந்தத் தீய சக்தி ஒவ்வொரு தீய செய்கையாலும் உரமூட்டப்பட்டு மிகச்சக்தி வாய்ந்த விசையாக உள்ளது. அதுதான் சைத்தான். ஆரம்பத்தில் ஒரு சொல் இருந்தது. அது நல்ல சொல்லாக இருந்தது. நிச்சயமாக அது 'கடவுள்' என்னும் சொல்லாகும். ஆத்மாக்களுக்காக இவ்வுலகினைப் படைத்த தந்தையானவன் தீயசக்திகளைக் கலக்கவில்லை. ஆனால் வழிதவறிய ஆத்மாக்கள் பௌதீக உடலெடுத்துத் தங்களது சொந்த முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காகப் பேராசைப்பட்டுச் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு அதனால் உருவாக்கப்பட்ட தீயசக்திகளின் மொத்த உருவை அவர்கள் சைத்தானென அழைக்கத் தொடங்கினர். சைத்தானை இறைவன் படைக்கவில்லை. மனிதன் தான் படைத்தான். அது ஒரு கெட்ட ஆத்மாவல்ல. ஆனால் மனிதனின் தீய குணங்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பு. அதற்கு எமது கீழான எண்ணங்களினாலும் செயல்களினாலும் உயிரூட்டிக் கொண்டிருக்கிறோம். எண்ணங்களும் செயல்களே என்பதனை நாம் உணரவேண்டும். ஒவ்வொரு கெட்ட சிந்தனையும் செயலும் அன்பான, கருணையான சிந்தனையாலும் செயலாலும் இடமாற்றப்பட்டால் சைத்தானின் வடிவம் சிறியதாகிக் கொண்டே வரும். சைத்தானை அழிக்க வேண்டுமெனில் நாம் இதனை உணரவேண்டும். எனவே நாம் எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த இரண்டாயிரமாம் ஆண்டை அண்மிக்கையில், பூவுலகில் வாழும் அனைவரது இதயங்களிலும் கெட்ட எண்ணங்களுக்குப் பதிலாக நல்ல எண்ணங்களே நிறைந்திருக்கும். பூவுலகில் மட்டுமல்ல நாம் இப்போ செய்வது போல ஆத்ம உலகிலும் நல்லனவே நிறைந்திருக்கும்."
விலங்குகளுக்கும் கூட இறப்பில்லையா என அறிய விரும்பினேன். அதற்கு ஆர்தர் பின்வருமாறு பதிலளித்தார்: "இங்கே நேரம் என்பதற்கு அர்த்தமில்லை. எங்களுக்கு வயதாவதில்லை. நாம் ஆரம்பத்திலிருந்தே இருந்து கொண்டிருக்கிறோம். எமக்கு முடிவில்லை. நாம் இங்கே இருப்பதே நேரம் என்பதை விளக்கப் போதுமானது. இந்த உண்மையைச் சரிவரப் புரிந்து கொள்வோமெனில் ஏன் தேவையற்ற விஷயமென்று ஒன்றுமில்லை எனப் புரிந்து கொள்ளமுடியும். ஒன்றுமே இறப்பதில்லை. மீண்டும் அதனை அழுத்திச் சொல்கிறேன். ஒன்றுமே இறப்பதில்லை. இறப்பு என்று ஒன்றுமே இல்லை. படைப்பின் ஆரம்பத்திலிருந்தே எல்லாம் இருந்து கொண்டே இருக்கின்றன. எவையும் அழிவதில்லை. ஆனால் அவைகளின் நிலைகள் மாறுதலடையும். ஒரு கூட்டுப்புழு வண்ணாத்திப் பூச்சியாய் மாறிப் பின் அதன் ஆத்மா வேறொரு நிலைக்கு மாறியவுடன் அதனுடல் மீண்டும் அதனது மூலப் பொருட்களுக்குத் திரும்பும். ஆத்மா என்றும் மாறாதது. அநாதியானது. ஆனால் அதன் நிலைகள் மாறுதலடையும். பௌதீக உலகில் எமது கையால் அடிபடும் ஈயானது வேறொரு உலகில் நிலை மாற்றமடையும். ஆனால் ஈயான அதனது தன்மையானது மாறாது. காரில் அடிபட்டு இறக்கும் நாயின் நிலையும் இதே தான். அதனது பூதவுடல் பூமிக்குச் சென்றடையும். அதனது ஆத்மா ஏனைய ஆத்மாக்களைப் போலவே அழிவற்றதாகையால் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும். இது ஒரு மாறாத நியதியாகும். நாம் ஆரம்பத்தில் இருந்தது போலவே என்றும் இருப்போம். ஆனால் ஆத்மீக வழிகளில் முன்னேறிக்கொண்டு இருப்போம். சில நேரங்களில் ஒரு உண்மையான செல்லப்பிராணி (நாய் போல) பூவுலகில் மிக மிக முன்னேறினால் அது மீண்டும் பூவுலகிற்குத் திரும்ப வேண்டியிருக்காது. ஆனால் மேலுலகிலும் அது நாயாகவே இருக்கும். தனது முழு வாழ்க்கையையும் மற்றவருக்கு உதவக்கூடியதாகவும் அவர்களைக் காப்பாற்றக் கூடியதாகவும் முழுமையாக அர்ப்பணிக்கக் கூடியதான ஒரு அன்பான ஆத்மாவாக இருப்பதிலும் பார்க்க உயர்வான நிலை தான் வேறு என்ன? தன்னலம் கருதாது எப்போதும் எஜமானனின் நலனை முன்னே வைத்ததனால் அந்த நாயானது கடவுளின் பார்வையில் பூரணமாகிவிட்டது. எங்கள் எல்லோருக்கும் எவ்வளவு சிறந்ததொரு உதாரணமென்று பார்த்தாயா நாமும் எப்பொழுதும் எம்முடைய நலனைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிராமல் ஏனையோரின் நலனைப் பற்றியும் கருத்தில் கொண்டோமாயின் பூரணமானவர்கள் ஆவோம். நாம் எந்த விதமான பிறவி எடுத்திருந்தாலும் எங்கள் நலனிலும் பார்க்க மற்றையோரின் நலனைக் கருத்தில் கொண்டால் முன்னேறலாம்."
அவர் தொடர்ந்து எழுதுகையில், "நாய்களோ, பூனைகளோ அல்லது வேறு எந்த வகையான செல்லப் பிராணிகளோ சில மாறுபட்ட குணாதிசயங்களைக் காட்டும். சில விரும்பத்தக்கதாக இருக்கலாம். சில விரும்பத்தகாததாகவும் இருக்கலாம். விலங்குகள், தாவரங்கள், கனிமங்கள், பறவைகள் போன்றவற்றின் ஆத்மாவானது மனிதர்களின் ஆத்மாவிலும் பார்க்க வித்தியாசமான இறைசக்தியாகும். ஒரு அணுவானது உடைந்து சிற்றணுக்களாக மாறுவதைப் போல் அவை ஆத்மாவின் பகுதிகளாகப் பிரிந்து முழுமையில்லாத பகுதி ஆத்மாக்களாக, சிற்சில விடயங்களை மட்டும் நிறைவேற்றும். முழுமையான மனித ஆத்மாவாக மாறக் கூடிய வல்லமையை இழந்தவைகளாகச் செயற்படும். இந்த மரங்கள், பறவைகள், பாறைகள், மிருகங்கள், காட்டு விலங்குகள், மண் போன்ற எல்லாவகையான உயிரினங்களுக்கும் ஒரு தனித்தன்மையும் ஆத்மாவும் உள்ளன. ஆனால் அவை பூவுலகில் வாழும் மனிதனின் ஆத்மாவை விட முற்றிலும் வேறுபட்டவை. இவையும் சுவாசிக்கும், உயிர் வாழும் பிறவிகளாகும். இவையும் கடவுளின் ஒரு பகுதியேயாகும். அவை பூவுலகில் வாழும் மனிதனின் ஆத்மாவைப் போல் மிக முன்னேற்றம் அடையாவிடினும் எம்மைப் படைத்தவனையே என்றும் பிரதிபலிப்பனவாகும். அதாவது மனிதர்களாகிய நாம் எப்படி அன்புக்குக் கட்டுப்படுகிறோமோ அவையும் அதே போலவே கட்டுப்படும். அவற்றுக்கு வேறுபட்ட விருப்பு வெறுப்புகளிருக்கும். அவற்றின் விளையாட்டுத் தனங்களும் கோபதாபங்களும் வேறுபட்டவை. அவை தங்களுக்கென அமைந்த செயற்பாடுகைச் செய்து ஒன்றில் நல்லவையாகவோ, கேட்டவையாகவோ அவைகளுக்கென்று அமைந்த தனிப்பட்ட குணநலன்களின் படி வரும். அந்தத் தனிப்பட்ட தன்மைகள் ஆத்மாவின் தன்மைகளாகும். அதனால் தான் சில வளரும் தாவரங்கள் பிரார்த்தனைக்குப் பதிலளிப்பதாகத் தெரியும்; சில என்னதான் அன்புடன் பராமரித்தாலும் ஒத்துழைக்கமாட்டா. சில மனிதர்களும் அவ்வாறே நடப்பதைக் கண்டிருப்பாயென நினைக்கிறேன். சிலர் சற்றும் ஏனையவர்களைப் பற்றிச் சிந்திக்காமல், கடமைகளை மறந்து திரிவார்கள். சிலர் மற்றையவர்களின் நிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவார்கள். மற்றையவர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள்.
"இங்கே ஞானாலயத்தில் ஒவ்வொரு உயிரினத்துக்காகவும் செய்யப்படும்  பிரார்த்தனைகளின் பலன்களைப் பற்றி அறிகிறோம். அவை உடல் உபாதைகளைப் போக்கும் சிகிச்சையாகவும் இருக்கலாம் அல்லது ஆத்மீக முன்னேற்றத்துக்குரிய முயற்சிகளாயும் இருக்கலாம். தாவரங்கள், பிராணிகள், கற்பாறைகள், பூச்சிபுழுக்கள் போன்ற எம்மால் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய, உணரக்கூடிய, சுவைக்கக்கூடிய எல்லாப்பொருட்களும் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்கக் கூடியன என நாமறிகிறோம். எல்லாம் வல்ல இறைவன் தனது படைப்புகளில் நிறைந்திருப்பதோடு அவைகளின் முன்னேற்றத்துக்கான உண்மையான பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்க்கிறான். மரங்களிடையே உலவும் காற்றின் குரலும் பறவைகளின் ஒலியும் பூச்சியினங்களின் ஒலியும் மனிதனின் கூக்குரலும் இறைவனுக்கு ஒரே விதமாகவே கேட்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு விதமாக இறைவனுடன் தொடர்பு கொள்ளும். இறைவன் எல்லா விதமான முனகல், ரீங்காரம், கூக்குரல் போன்ற எல்லாவற்றுக்கும் (அது இறைவனுக்கு விடும் அழைப்போ அல்லது ஒன்றுடனொன்று தொடர்பு கொள்ளும் ஒலியோ) செவி சாய்ப்பார். இதை ஒரு கற்பனைக் கதையென்று எண்ணிவிடாதே. இவையெல்லாம் உண்மையே ருத். நாம் எல்லா உயிரினங்களுடனும் (ஆத்ம வடிவிலோ அல்லது பௌதீக வடிவிலோ) தொடர்பு கொள்ளக்கூடியதாக வரும் வரையும் நாம் இறைவனுடன் இரண்டறக் கலக்கக்கூடிய நிலையை அடையமாட்டோம். உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதனை எண்ணிப்பார். பாறைகள், மரங்கள், கற்கள் போன்றவற்றின் குரல்களையும் பூச்சியினங்களினது ரீங்காரங்களையும் அதேபோல எல்லாவகையான உயிர்வகையினதும் ஒலிகளையும் கவனிக்கக் கற்றுக்கொள். எம் எல்லோரையும் ஒன்றிணைக்கும், எம் ஒவ்வொருவரையும்  இறைவனின் வடிவங்களாக்கும் அந்த இணைப்பின் மூலம் அவற்றுடன் தொடர்பு கொண்டு அவற்றின் ரகசியங்களை அறி. நாம் சடப்பொருட்களென்று எண்ணுபவை எல்லாம் எம்மைப் போன்றவையே. ஒவ்வொன்றுக்கும் அதனதன் வழியில் உயிர் வாழ்க்கைகள் உள்ளன. கற்பாறைகளும் பறவைகள், வண்டினங்கள், மனிதர்கள் போலவே இறைவனின் மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியே. ஒவ்வொரு உயிரினத்துக்கும் இறைவனின் மாபெரும் திட்டத்தில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய குழப்பத்துடன் நான் "எமக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சியினங்களை அழிக்கலாமா" எனக்கேட்டேன். அதற்கு அவர், "பூச்சி புழுக்களானவை தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து விலகி வந்தால் அவை மனிதனால் அழிக்கப்படுவார்கள். எல்லா உயிரினத்துக்கும் இப்பூவுலகில் இடம் வேண்டும். டைனசோர் வகையைச் சேர்ந்த பிரம்மாண்டமான விலங்குகள் ஏனைய விலங்குகள், பறவைகள், மனிதரின் இடங்களை அபகரிக்கப் பார்த்ததனால் பூமியின் பரப்பிலிருந்து மறைந்து விட்டன. இது மனிதனுக்கு ஒரு பாடமாக அமையட்டும். மனிதனும் பல்கிப்பெருகி, அழிவுப்பாதையில் சென்று ஏனைய உயிரினங்களின் அழிவுக்கும் காரணமானான் எனில் மனிதகுலமும் அழிவை சந்திக்க வேண்டிவரும். நீ குறிப்பிட்ட இந்தப் பூச்சியினங்களும் பல்கிப்பெருகி மனிதனுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தால் அவையும் அழிய வேண்டியவையே. இப்பூவுலகில் எமக்கென உள்ள இடத்தை மீறி நாம் அமைதியைக் குலைப்போமாயின் நாம் இங்கிருந்து அகற்றப்படுவோம். ஆனால் ஆன்மீக ரீதியில் உண்மையில் ஒன்றுமே எப்போதும் அழிவதில்லை.
பூச்சிபுழுக்களையும் டைனசோர்களையும் மனிதனுடன் ஒப்பிட்டதனை எண்ணி நான் வியந்தேன்: மனிதன் இந்தப் பிரபஞ்சத்தையே குப்பை மேடாக்குபவனே. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதன் நீரோடை, ஏரி, குளங்களை அசுத்தமாக்குகிறான். தூய்மையாக இருந்த காற்றை அசுத்தப்படுத்திவிட்டான். கனிப்பொருள் நிறைந்த மண்ணை ஆயிரக்கணக்கான ஏக்கர்களாகக் காங்கிரீட்டைப் பாவி மூடிவிட்டான். காடுகளை அழிக்கின்றான். இவற்றின் மூலம் பழைய அழிந்துபோன விலங்குகள் போல் நாமும் எமது அழிவை எழுதிச்செல்கிறோமா?

Thursday, January 14, 2021

ஏழாம் அத்தியாயம் - குறிப்பிட்ட சிலரைப் பற்றி.. (Specific Cases)


ஆர்தர் ஃபோர்ட் எனது டைப்ரைட்டரைக் காலை வேளைகளில் சில மணி நேரம் ஆக்கிரமிக்கத் தொடங்கியதிலிருந்து சுமார் பத்து வாரங்களின் பின்னர் ஒருநாள் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஹியூஸ்டன் நகரைச் சேர்ந்த திரு, திருமதி வில்ஃபிரட். ஏ. செக்ரைஸ்ட் (Wilfred A. Sechrist) மெக்சிகோவில் உள்ள குவேர்ணவாகா நகரிலிருக்கும் எமது வீட்டிற்கு வந்தார்கள். திருமதி எல்ஸி செக்ரைஸ்ட் கனவுகளின் அர்த்தங்கள் பற்றியும் மற்றும் எம் அறிவுக்கப்பாற்பட்ட சூட்சுமமான விஷயங்கள் பற்றியும் மிகவும் ஸ்திரமான எண்ணங்கள் கொண்டவர். அவர் ஆர்தர் எழுதியுள்ளவற்றை ஆவலுடன் படித்து விட்டுச் சில குறிப்பிட்ட நபர்களைப் பற்றி அவர்கள் இறப்பு என்ற வாயிலின் ஊடாக மறு உலகத்தினுள் பிரவேசித்த பிற்பாடு அவர்களின்  நிலைமைகளை அறியலாமா எனக்கேட்டார். ஆர்தர் மகிழ்வுடன் சம்மதித்தார். மறுநாள் காலை அவர் பின் வருமாறு ஆரம்பித்தார்:
"இன்று நான் கென்னடி சகோதரர்கள் பற்றிச் சொல்லப்போகிறேன். ஜாக் (Jack) சர்வதேச நாடுகளுக்கு இடையேயான சிக்கல்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். மிக முக்கியமாக அவர் இஸ்ரேலியர்களுக்கும் அராபியர்களுக்கும் இடையே ஒரு உடன்பாட்டைக் கொண்டு வருவதற்கு முயல்கிறார். பாபி (Bobby) தங்களது சிவில் உரிமைகளுக்காகப் பொறுமையிழந்து போராடுபவர்களை நிலைமையைச் சுமூகமாக்குவதன் மூலம் சாந்தப்படுத்த முயல்கிறார். 'ப்ளக் பாந்தேஸ்' (Black Panthers) போன்ற தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தீவிரமான சில தலைவர்களுடன் தொடர்பு கொள்ள இயலுமாக உள்ளதென அவர் சொல்கிறார். அவர்களின் மன நிலையில் தன்னால் சில மாற்றங்களை உண்டு பண்ண இயல்கிறது என்கிறார். அப்படிப்பட்ட இயக்கங்கள் தலைவர்களைக் கடத்துவது, பழிக்குப்பழி வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவனவாகும். அப்படிப்பட்ட தீவிரவாதிகள் தங்களது இளமை நிறைந்த அழகான பூதவுடலை நீத்து விட்டு ஆத்மவடிவில் இந்த மேலுலகுக்கு வருகையில் அங்கே அவர்களின் அந்த நடவடிக்கைகளைப் பற்றி இங்கே பேசலாம்.
"ஜாக் இறந்தவுடன் உடனடியாக மேலுலகில் விழித்துக்கொண்டார். சிலர் போல அவர் மயக்கநிலையில் இருக்கவில்லை. தான் தலைமை தாங்கிய நாட்டில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவர் லிண்டனுக்கு (Lyndon) நிலைமைகளைச் சுமூகமாக்குவதற்கும் சட்டங்கள் சிலவற்றைப் பிரச்சினையேதும் இன்றிக் கொண்டு வருவதற்கும் உதவுகிறார். அவர் பூதவுடலுடன் இருக்கையில் பல விடயங்களைச் சரிவர நிறைவேற்றாமல் இருந்தாலும் இப்போதாவது அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்ற விரும்பினார். வியட்நாம் போரில் எல். பி. ஜேயின் (LBJ) அதிகமான தலையீடானது ஒரு மாபெரும் பிழையென அவர் உணர்ந்தாலும் தான் லிண்டனுக்கு உதவாவிட்டால் அரசியலில் மாபெரும் குழப்பங்கள் வரலாமென அஞ்சினார். அவர் தலைவராயிருந்தபோது இவ்வாறான நடவடிக்கையைச் செய்திருந்தாலும் இப்படிப் பெரிய அளவிலான தலையீட்டைச் செய்வதற்கு அவர் ஒருநாளும் எண்ணியதில்லை. அந்தப் போர்பூமியில் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு அவர் விரும்பினார். அத்துடன் அராபியர்களுக்கும் யூதர்களுக்குமிடையே சமாதானத்தை உண்டாக்குவதில் தனது முயற்சிகளை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார். ஏனெனில் அந்த ஆதிகாலத்து எதிரிகளின் இதயங்களில் சகோதர பாசங்களை உண்டு பண்ண முடியாவிடின் எதிர்காலத்தில் அப்புண்ணிய பூமியில் விபரீதமாக ஏதாவது நடக்கக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக உணர்கிறார். வியட்நாம் போரில் சண்டையிட்டு மடிபவர்களைக் காண அவர் இதயம் நொந்து போனாலும் அப்போர் நீண்ட நாட்களுக்குத் தொடராது என்பதை உணர்கிறார். பாலஸ்தீனத்தில் இருக்கும் வெறுப்புணர்வானது ஆதிகாலத்திலிருந்து வருவதால் இஸ்ரேலியர்களுக்கும் அயல் நாடுகளுக்குமிடையே ஒரு புரிந்துணர்வுக்கு இப்போ வராவிட்டால் அங்கு ஒரு மிகப்பெரிய பேரழிவு நடக்கக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக அஞ்சுகிறார்.
"பாபி, சிவிலுரிமைகளுக்காகப் போராடும் இயக்கத்தில் தனது இதயத்தை விட்டுச் சென்றார். மிக வலிமை வாய்ந்த ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர் ஆத்திரமுற்றிருப்பவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி அவர்களின் கோபத்தைத் தணிய வைத்து ஒரு நடுநிலைமை மாநாட்டு மேசையில் அமர வைத்து ஒற்றுமையையும் அதே நேரம் அவர்களின் உரிமையையும் பற்றிப் பேச வைத்தாலன்றி இந்தப் பிரச்சினை தீராதென அவர் உணர்கிறார். அவருக்குத் திடீரென்று ஆத்ம உலகில் கண்விழித்தது மிகப்பெரிய அதிர்ச்சி. அதனால் சகோதரர் ஜாக் அவருக்கு ஆரம்பத்தில் உதவுவதற்கு இருந்த போதிலும் அவர் வலிமையிழந்து காணப்பட்டார். அந்தச் சகோதரர்களிடையே கூடுதலான முற்பிறவித் தொடர்புகள் காணப்படுகின்றன. பற்பல பிறவிகளில் அவர்களிடையே நெருக்கமான பந்தமிருந்து கொண்டு வந்ததால் ஒருவரின்றி மற்றவர் முழுமையாக உணரமாட்டார். பிறப்பதற்கு முன்னரே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் படிதான் அவர்கள் அவ்வளவு நெருங்கிய உறவு முறையுள்ள குடும்பத்தில் பிறந்தனர். ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையை மீண்டும் மற்றையவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினர். அவர்களனைவரும் ஆரம்ப காலத்து இங்கிலாந்தில் ஒரு மிகமகிழ்ச்சியான சூழலில் ஒரு குடும்பமாக இருந்துள்ளனர். அதனால் இனிமேல் பிரிவதில்லை என ஒரு உறுதியான முடிவெடுத்தார்கள். இப்படியாக எடுக்கப்படும் முடிவுகளெல்லாம் ஒரே நிறைவேறுவதில்லை. ஆனால் இம்முறை பூமி நேரப்படி இருபதாம் நூற்றாண்டில் மீண்டுமொரு முறை சரியான ஊடகம் மூலமாக எல்லோரும் மறுமுறை ஒரே ரத்தசம்பந்தமுள்ள குடும்பமாக வரக்கூடியதாக இருந்தது. ஏதெல் (Ethel) கென்னடியும் அந்த ஆரம்பக் குடும்பத்தில் ஒருவராக இருந்திருக்கிறார். ஆனால் இம்முறை ஒரே தாயின் வயிற்றில் பிறக்க முடியாமற் போனாலும் பூவுலகில் பாபியும் (Bobby) அவளும் மீண்டும் ஒருவரையொருவர் சந்திப்பதென்பது கேள்விக்கிடமே இல்லாத ஒரு விடயம். பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்களிருவரும் நெருக்கமாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். ஈருடலும் ஓருயிரும் போல. ஜாக்கி கென்னடி  ஒனாசிஸ் (Jackie Kennedy Onassis) முற்பிறவிகளில் இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரல்ல - அவர் இங்கிலாந்தில் இவர்களறிந்த ஒரு அரசியாவிருந்தார். எனவே அவரை கௌரவிக்க இயலுமாகவும் அதே சமயத்தில் அவரைத் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ள இயலாமலும் இருந்தது."
சிலநாட்களின் பின்னர் ஃபோர்ட் மீண்டும் கென்னடி குடும்பத்தைப் பற்றி ஆரம்பித்தார். அதற்கு முன் அவர் பின்வருமாறு எழுதினார்: நாம் குறிப்பிட்டது போல் பிரார்த்தனையின் சக்தியானது எங்கள் பக்கத்திலும் அதேபோல மனிதனால் இறப்பு என அழைக்கப்படும் திரையின் மறுபக்கமாகிய உங்கள் பக்கத்திலும் முக்கியமானது. எமது அன்புக்குப் பாத்திரமான ஒருவர் பூதவுடலை நீத்துவிட்டு அந்தத் திரையை விலக்கிக் கொண்டு இங்கு வரும் போது கூடுதலாக ஒன்றுமே புரியாதநிலையில் ஏதோ தொலைந்து போனமாதிரியும் கைவிடப்பட்ட நிலையிலும் தான் காணப்படுவார். அவரது கடந்து போன வாழ்க்கையில் அவர் சந்தித்த இடையூறுகளிலும் பார்க்க மேலுலக வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்வதென்பது சில சமயங்களில் அதிக சிரமமாக அவருக்கு இருக்கக்கூடும். சொர்க்கமென்ற இடத்தைப்பற்றி நாம் இங்கே காணும் இடத்தைவிட முற்றிலும் மாறுபட்ட எதிர்பார்ப்பைப் பலர் கொண்டிருப்பதால் அவர்களின் இந்த இக்கட்டான நிலையை இறைவன் நிச்சயமாக அறிந்திருப்பாரோ எனத் தீவிரமாக  அறியத்தலைப்படுவார்கள். பூவுலகில் அவரின் உறவினர்களால் அவரின் ஆத்மசாந்திக்காகச் செய்யப்படும் அன்பான பிரார்த்தனைகள் அவரைச் சாந்தப்படுத்தி அவரின் ஆத்மீக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். சந்தேகமின்றி இறைவனுக்கு எல்லாப் பிரார்த்தனையும் கேட்கும். இப்போ நானிருக்கும் நிலையிலும் கற்றறிதல், வளர்ச்சியுறல் போன்ற முன்னேற்றங்கள் உண்டு. நாமும் உங்களைப் போலவே முன்னேற்றப் பாதையில் மேல் நோக்கி எம்மைப் படைத்தவனுடன் இரண்டறக் கலக்கும் நாளை எதிர்பார்த்து முன்னேறிக் கொண்டிருப்போம். எனவே பிரார்த்தனைகள் மிக முக்கியமானவை. கத்தோலிக்கர்கள் இறந்தவர்களுக்காகப் பிரார்த்திப்பதென்பது மிகவும் சரியான வழி. ஏனைய சமயத்தவர்களும் வேறு நம்பிக்கை கொண்டவர்களும் முடிவற்ற வாழ்வின் அடுத்த கட்டத்தை அடைந்த ஆத்மாக்களின் மேல் அன்பு கொண்ட அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரு வழிமுறையாகும். பூவுலகில் இருந்ததிலும் பார்க்க அதிக அக்கறையுடன் இங்கு நாம் பிரார்த்தனைகள் செய்வோம். அதனால் கிட்டத்தட்ட எம்மைப் படைத்தவனின் நிலைக்கேற்ப மாறக்கூடியதாக இருப்பதனால் பூவுலகில் இருந்தபோதிலும் பார்க்கக் கூடுதல் விரைவில் அதனது விளைவுகளை இங்கே நாம் உணரக் கூடியதாக உள்ளது. சில நேரங்களில் இங்கு வரும் ஆத்மாவானது பூவுலகிலிருப்பவர்களின் பிரார்த்தனைகளின் நிமித்தமே விழிக்கக் கூடியதாகவுள்ளது.
கென்னடி சகோதரர்கள் பிரார்த்தனையின் சக்திக்கு ஒரு மிகப்பெரிய உதாரணமாகும். ஜனாதிபதி கொல்லப்பட்ட போது உடனடியாக எழுந்த பிரம்மாண்டமான பிரார்த்தனைகளின் பலனாக அவர் இங்கே வந்தவுடன் தன்னிலையை மறக்கவேயில்லை. கிட்டத்தட்ட உடனடியாகவே அவர் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப மாறிக்கொண்டார். அந்தப் பிரார்த்தனைகள் அவரை முன்னோக்கியும், மேல்நோக்கியும் தள்ளியதால் பேர்க்கேட்டரி (purgatory)  என்று அவரது சர்ச்சைச் சேர்ந்த பாதிரிமார் குறிப்பிடும் நிலையை அவர் கடுகளவு நேரம் கூட அனுபவிக்கவில்லை. 'பேர்கேட்டரி' என்னும் நிலையானது ஆத்மாக்கள் தொலைந்து போனவர்கள் போல ஒரு இலக்குமின்றி அங்குமிங்குமாக அலைந்து திரியும் நிலையாகும். இந்த நிலையானது அவர்களுக்கு அவர்களின் உண்மையான நிலையையும் அதனது புதிய தன்மைகளையும் ஏதாவது ஒரு விஷயமானது உணர்த்தும் வரையும் தொடரும். பாபியின் விஷயத்திலும் கூடப் பிரார்த்தனைகள் பலித்தன. அவர்களின் மூத்த சகோதர் சகிதமாக மனித உரிமைகளுக்காக இவர்கள் போராடியதை வரவேற்றவர்களுடன்  இங்கே அவருக்காகக் காத்திருந்த அவரது சகோதரரின் அன்பும் அவருக்குக் கூடுதலாக உதவியது எனலாம். நான் அப்பொழுது இங்கே இருக்கவில்லை. ஆனால் ஏனையவர்கள் எனக்கு இந்த விடயங்களைச் சொன்னார்கள். அந்த இரு ஆத்மாக்களும் மனிதகுலத்தின் மாட்சிமையைக் காப்பாற்றப் போராடிய காரணத்தாலும் அவர்கள் நீண்டநாட்கள் சம்சாரசாகரத்தில் கிடந்து உழல வேண்டிய தேவை இல்லாத காரணத்தாலும் இங்கே அவர்கள் வரும் போது கோலாகலமாக வரவேற்கப்பட்டார்கள். உனக்கு நல்லவர்கள் எல்லாம் இளமையிலேயே இறந்து விடுவார்கள் என்ற பழைய பழமொழி ஒன்று நினைவுள்ளதா? எல்லா ஆத்மாக்களிலுமே நல்ல தன்மை தான் கூடுதலாகக் காணப்படுகிறது. ஆனால் எல்லோரும் இளமையில் இறப்பதில்லை. ஆனால் ஒரு ஆத்மா இப்பூவுலகில் தான் நிறைவேற்ற எண்ணி வந்தவைகளைக் குறைவான காலகட்டத்தில் நிறைவேற்ற முடிவதுடன், வயதான காலத்தில் வரும் தளர்வுகளைத் தவிர்த்தால் அவர் ஆசீர்வதிக்கப்பட்டவராவார். சில பெருமை வாய்ந்த ஆத்மாக்கள் தங்களது பழம் பெரும் வயது வரையும் வாழ்ந்து இவ்வுலகுக்குப் பெருமை சேர்க்கிறார்கள். ஆனால் சில ஆத்மாக்களோ அதிர்ஷ்டவசமாகத் தங்களது வாழ்வின் உச்சக்கட்டத்தில் தாங்கள் எண்ணி வந்த கடமைகளை நிறைவேற்றியவுடன் பூதவுடலை விட்டு விட்டு இந்த உலகுக்கு வந்து தங்களது முன்னேற்றத்தைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள். இங்கேயுள்ள ஞானாலயங்கள் எங்கள் ஆத்மீக உணர்வுகளைத் தூண்டி எங்களை வெவ்வெறு வழிகளில் சிந்திக்க வைப்பவையாகும். அதனால் தான் பூவுலகில் நாம் கற்றவையொன்றும் இங்குள்ள கல்வியினால் ஏற்படும் மகிழ்ச்சிகளுக்கு ஈடாகா."
கென்னடி சகோதரர்களாகிய ஜாக், பாபி ஆகியோரைப் பற்றியறிந்தது ஜனாதிபதி ஐசன்ஹவரைப் (Eisenhower) பற்றி அறிவதற்கு வழிவகுத்தது. ஜனாதிபதி ஐசன்ஹவர் எப்படி அந்தப் பக்கத்தில் இருக்கிறாரெனக் கேட்டதற்கு ஃபோர்ட் உடனடியாகப் பின்வருமாறு எழுதினார்: "அவர் ஒரு ஜாலியான நல்ல மனிதர். மிகத் துன்பகரமாகப் பாதிக்கப்பட்ட உலகில் அவர் சமாதானத்தைக் கொண்டு வந்ததன் மூலம் தனது கடமையை நிறைவேற்றிக் கொண்டார். ஆனால் சிறிது காலத்துக்கு முன்னர் அதாவது குழப்பம் குறைவாக இருந்த காலத்தில் அவர் ஜனாதிபதியாக வந்திருந்தால் மனிதகுலத்தின் மேன்மைக்கு மேலும் உதவியிருப்பார். போரின் போது அவர் வழி நடத்தியவர்கள் அவர் இப்பக்கத்துக்கு வந்ததும் மகிழ்ச்சி ஆரவாரமிட்டனர். அவர்களுக்கெல்லாம் அவர் ஒரு தந்தையைப் போல இருந்தார். அவரின் நல்ல இதயத்தை அவர்கள் மதித்தார்கள். அவர்களில் பலபேரை அவர் இன்னும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். ஏனெனில் அவர்கள் தங்கள் காலம் முடியுமுன்னே தங்கள் இளவயதில் உடலை நீத்து இங்கே வரவேண்டி இருந்ததை எண்ணிக் கோபம் கொண்டு பெரியவர்களை எதிர்க்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஐக் (Ike) அவர்களின் எண்ணங்களை மாற்றி மனித இதயத்துடிப்பின் ஒரு பகுதியாக இறைவனின் துடிப்பும் உள்ளதென்றும் எம்மால் புரிந்து கொள்ள முடியாதவை எல்லாம் கூட எம்மைப் படைத்த இறைவனுக்குப் புரியுமென்றும் அவர்களுக்கு எடுத்துரைத்தார். அத்துடன் ஒரு சிறந்த மரணத்தை விட மோசமான பல அழிவுகள் இங்கேயுள்ளன என்பதையும் அவர்களுக்குப்  புரிய வைத்தார்."
 நாஸிசத்தை வெற்றியுடன் எதிர்த்த ஜெனரல் ஐஸன்ஹவரின் மிகப்பெரிய வெற்றியானது இயற்கையாக அடல்ஃப் ஹிட்லரைப் பற்றிய கேள்விக்கு வித்திட்டது. அதற்கு ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: ஹிட்லர், ஒரு பிறவியிலேயே இவ்வளவு தீவினைகளைச் செய்ததனால் தன்னைத் தூய்மைப்படுத்த இயலாமலிருக்கக் கூடும். பூவுலகில் பலரின் வாழ்க்கைகளை, நம்பிக்கைகளை, இலட்சியங்களை நாசம் செய்து விட்டு இங்கே வந்தார். அத்துடன் தன்னளவிலும் கூட வெறுத்து ஒதுக்கப்படக்கூடிய பேர்வழியாக இருந்ததனால் அவரின் இறப்பிற்காக ஒருவரும் வருந்தவில்லை. இங்கேயும் அவர் தனது முட்டாள் தனமான செய்கைகளையும் இராணுவ அதிகாரி போன்ற நடைகளையும் அதிகாரத்திலிருப்பது போன்ற அர்த்தமில்லாத பேச்சுகளையும் தொடரமுற்பட்டார். ஆனால் அவரைக் கவனிக்கவோ அன்றி அவருக்கு மரியாதை செலுத்தவோ இங்கே ஒருவரும் இல்லை. அந்த ஆத்மா இங்கே முற்றாக நிராகரிக்கப்பட்டது. அதாவது அவர் ஒரு ஆளரவமில்லாத இருண்ட தீவில் தனியே விடப்பட்டிருப்பது போல இருந்தார். அவர் குரலை உயர்த்தி ஆரவாரமிட்டும் ஒரு பிரயோசனமுமில்லை. இங்கே அப்படிப்பட்ட இழிநிலையான ஆத்மாவுடன் தொடர்பு கொள்ளக் கூடிய அளவு கீழ்நிலையில் ஒருவருமில்லை. அதிகாரத் தோரணையில் நடப்பதாலும் ஆரவாரம் செய்வதாலும் எதுவும் சாதிக்க முடியாது. கடைசியில் அவர் தானே உருவாக்கிக் கொண்டதொரு ஆழமான பள்ளத்தில் விழத்தொடங்கிவிட்டார். எட்கர் கேசியால் (Edgar Cayce) சொல்லப்பட்ட சனிக்கிரக வாழ்க்கை போல முழு இருட்டினுள் விழுந்து கொண்டே போவார். அங்கே அவர் தன்வழியே அவர் மனிதகுலத்துக்கு எதிராகப் புரிந்த கொடுமைகளின் தீவிரத்துக்கேற்ப பல நூறு வருடங்களோ அல்லது ஆயிரம் வருடங்களோ விடப்படுவார். அவர் மீண்டும் எப்போதாவது விழித்தெழுந்தாலும் அவரது விதி மகிழ்ச்சியாக இருக்கவிடாது. அவர் மற்றையவர்களுக்குத் தான் இழைத்த கொடுமைகளில் சிலவற்றுக்கேனும் மாற்றுச் செய்யும் முகமாக இங்கே மிக நீண்ட கடினமான பயிற்சிகளைப் பயின்றாலொழிய அவருக்கு - குறுகிய காலத்திலேயே முன்னேற்றத்தைத் தரக்கூடியதான - பூவுலகில் பிறப்பதற்கு சந்தர்ப்பம் தரப்படமாட்டாது. காலகாலத்துக்கும் தன்னைத்தானே தனிமைப்படுத்தும் தலையெழுத்தைத் தானே எழுதிக்கொண்டார். இப்போ பூவுலகில் வாழும் ஒருவருக்கும் ஹிட்லரின் விதி தெரியவராது. ஏனெனில் அவரின் தனிமை வாழ்வானது (அவர் தனக்குத்தானே விதித்துக் கொண்ட) சந்தேகமின்றி இப்போ பூவுலகிலிருப்பவர்களால் புரிந்து கொள்ளக்கூடிய காலத்திலும் பார்க்கக் கூடிய காலம் எடுக்கும்."
அடுத்ததாக ஃபோர்ட் அல்பேர்ட் ஐன்ஸ்டைனைப் பற்றிப் பின்வருமாறு எழுதினார்: ஒரு மிகப்பெரிய விஞ்ஞானியான அவர் பூவுலகை விட்டு இங்கு வருகையில் மகிழ்ச்சி ஆரவாரங்களுடன் வரவேற்கப்பட்டார். அவர் தனது திறமைகளைத் தூய விஞ்ஞான வளர்ச்சிக்கும் மனித இனத்தின் நன்மைக்குமாகத் திறம்பட உபயோகித்தார். தனது திறமைகளை அழிவுக்குப் பயன்படுத்தாமல் நல்ல விடயங்களுக்குப் பயன்படுத்திய ஒருவரைப் பற்றி நாமிங்கே பேசுகிறோம். பௌதீக உலகில் மஹா மேதையாகப் போற்றப்பட்ட அவர் உண்மையில் விசேஷ அறிவுகளைப் பயின்று அவற்றைப் பயன்படுத்தியவர். அவர் இப்பக்கத்திலே இருக்கும் விஞ்ஞான அறிவுள்ள ஏனைய ஆத்மாக்களின் உதவியுடன் விஞ்ஞான முன்னேற்றத்தில் மெய்நிகர் அற்புதங்களை நிகழ்த்தக்கூடியதாக உள்ளார். தொலைபேசி, மின்சாரம், நீராவி இயந்திரம் இவை போன்ற பருத்தி இயந்திரம் உட்பட அனைத்துமே (பூவுலகில் சில நல்ல வகையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான) பூவுலகிலும் மேலுலகிலும் இருக்கும் திறமை வாய்ந்தவர்களின் கூட்டு முயற்சியேயாகும். ஐன்ஸ்டைன் ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் சிற்சில நிமிடங்களுக்குச் சிறுதூக்கம் கொள்வதனால் இங்கேயுள்ள சில சக்திகளுடன் இசைவாக்கம் கொள்ள இயலுமாக இருந்ததனால் அவரது நோக்கங்கள் புதுப்பிக்கப்பட்டு அவரது பரிசோதனைகளின் அடுத்த கட்டங்களை அறியக்கூடியதாக இருந்தது. சிறிய தூக்கங்களின் போது பௌதீக உலகிலிருக்கும் நீங்கள் இங்கேயுள்ள ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்கையில் உங்கள் சக்திகள், நோக்கங்கள், இலட்சியங்கள் எல்லாம் புதுப்பிக்கப்படுகின்றன."
எல்ஸி செக்ரைஸ்ட் (Elsie Sechrist) பாதிரிமார்கள், விஞ்ஞானிகள், பழமைக்கோட்பாடுகளைச் சார்ந்தவர்கள், தற்கொலை செய்தவர்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள், காட்டுமிராண்டித்தனமானவர்கள் போன்ற பல்வேறு வகையானவர்களைப் பற்றிக் கேட்டார். மார்ச் மாதம் இருபத்தாறாம் திகதி ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: "இன்று நாம் ஒரு பாதிரியாரைப் பற்றிப் பார்ப்போம். இவர் பில்லி சண்டே (Billy Sunday) போன்றவர். அதாவது பைபிளில் சொல்லப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் நம்பியவர். நரகத்திலிருக்கும் நெருப்பு, கந்தகக்குளம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் உபதேசித்தவர். அவர் இங்கே வருகையில் இறைவன் பெரிய அரியாசனத்தில் தேவதேவதைகள் சூழ அமர்ந்திருக்கவில்லை என்பதைக் கண்டதும் அது அவருக்கு முதலாவது அதிர்ச்சி. அதன் பின்னர் அவர் எங்களை மேலும் தாமதிக்காமல் எங்கள் பிழைகளுக்காக வருந்தச் சொல்லி வலியுறுத்தினார். தான் இந்தப் புதிய சூழலுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் வரையும் தற்காலிகமாகத் தான் அங்கே மிகக்குறுகிய காலத்துக்குத் தங்கியிருப்பதாகவும் நாமெல்லோரும் கடவுளின் அன்புக் கரங்களை அடைய இயலாத பாவிகளாயிருக்க வேண்டுமெனவும் தீர்மானித்தார். அவரது பிரசங்கங்கள் உண்மையிலேயே சில ஆத்மாக்களை அதாவது தாம் தமது சிற்றறிவில் உருவாக்கிக் கொண்ட சொர்க்கத்தைத் தேடிக் கொண்டிருந்த ஆத்மாக்களை ஈர்த்தது உண்மை. அவர்கள் இந்தப் பெரியவர் தங்களை சொர்க்கபூமிக்கு வழிநடத்திச் செல்லப் போகிறாரென எண்ணினார்கள். அவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு அவரது பிரசங்கங்களைச் செவிமடுத்தார்கள். அத்துடன் அவர் மிகக்குறுகிய நேரத்தில் எல்லோரும் யாழ் (harps) மீட்டிக்கொண்டிருக்கும் தேவதைகளால் சூழப்பட்டிருக்கும் சொர்க்கபுரிக்கு முன்னேறிச் செல்வோமெனச் சொன்ன போது 'ஆமென்' எனக் கூச்சலிட்டனர். கடைசியில் தங்களுக்குரிய ஒருவர் ஆலயக் கதவுகளைத் திறந்துவிட வந்துவிட்டதை நன்றியுடன் எண்ணி மீண்டும் 'ஆமென்' எனக் கூச்சலிட்டனர். இப்போதகர் (இப்போதைக்கு அவரை 'பில்லி' என்றே அழைப்போம்) ஆரம்பத்தில் உரத்த குரலில் இங்கேயுள்ள பழைய ஆத்மாக்களிடம் கடவுளின் அரியாசனத்துக்குப் போகும் வழியைக் காட்டும்படி வலியுறுத்திக் கேட்டார். நாம் அவ்வழியை மாயமாக மறைத்து வைத்திருப்பதாக அவர் உண்மையில் நம்பினார். கடைசியில் பழைய ஆத்மாக்கள் ஒன்று கூடி பில்லிக்கு அவர் உண்மைக்குப் புறம்பான போதனைகளைச் செய்வதாகவும் சொர்க்கமென்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருப்பதெனவும் அதேபோல ஒவ்வொருவருக்குள்ளும் அவரவர் பிரத்தியேக நரகமிருப்பதாகவும் அவருக்கு ஒன்றையும் மறைக்கவில்லை எனவும் விளங்கப்படுத்தினர். அவருக்குரிய ஆத்மீக முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்குவது அவரில் தான் தங்கியுள்ளது எனவும் சத்திய பூமியென்ற பொய்யான நம்பிக்கையை மற்றையவர்களுக்குக் கொடுத்து அவர்களைப் பிழையாக வழிகாட்டுவதன் மூலம் அவர்களின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துகிறார் எனவும் சொன்னார்கள். உண்மையில் இது தான் சத்தியபூமி. நாம் எமது சிந்தனைகளினாலும் முயற்சிகளினாலும் தான் அதனை உருவாக்குகின்றோம். ஞானவான்கள் பில்லியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். உண்மையில் பில்லி ஒரு நல்ல ஆத்மா. ஆனால் பிழையாக வழிகாட்டப்பட்டவர். அவர்கள் அவரை ஞானாலயத்துக்குச் சென்று பயின்று முழுமுதல் உண்மையை அறியும்படி ஆலோசனை கூறினார்கள். அதாவது நாமனைவருமே கடவுள். இவ்வுண்மையை நாமனைவரும் உணரும் வரை மனிதனுடைய அடிப்படை நிலையிலிருந்து மேலே முன்னேற முடியாது.
"எம்மைப் போலவே ஏனையோரும் இறைவனின் ஒரு பகுதியே என்பதனை நாம் கிரகித்துக் கொள்கையில் இறைவனின் அந்த ஏனைய பகுதிகளுக்கு உதவுவதன் மூலம் நாம் அனைவரும் ஒன்றாக உயரிய விழிப்பு நிலைகளுக்கு முன்னேறலாமென்ற அரிய செய்தியை உலகுக்கு எடுத்துரைக்கலாம். அப்போது எமது கண்களை இவ்வளவு காலமும் மறைத்துக் கொண்டிருந்த மாயத்திரை விலகும். அத்துடன் நாம் இங்கே எதற்காக வந்தோமென்பது சரியாகப் புலப்படத் தொடங்கும். ஏனையவர்களுக்கு உதவுவது தான் மந்திரச் சொல்லாகும். இந்தப் பிரபஞ்ச ரகசியத்தின் சிறிய ஒளிக்கீற்று பில்லிக்குத் புலப்படத் தொடங்கியது. சிறிது நாளிலேயே அவர் எவ்வாறு நரகத்தில் எரியும் நெருப்பையும் கந்தகக்குளத்தையும் பற்றி உபதேசித்தாரோ அதேயளவு உற்சாகத்துடன் இவ்வுண்மையையும் ஏனையவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். உண்மையில் அவர் ஒரு மிகச்சிறந்த ஆத்மா. பிழையான கொள்கைகளினால் அவர் பிழையான செய்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தவர். இப்போ அதேயளவு நாவன்மையுடன் உண்மையைப் பரப்பி வருகிறார். கூடிய சீக்கிரத்தில் அவர் தனது முந்தைய பிறவியினைப் பற்றி ஆராயத் தொடங்குவார். தனது பழமை வாய்ந்த இறுக்கமான சமயக் கோட்பாடுகளிலும் பார்க்கக் கொஞ்சம் மாறுபட்ட நம்பிக்கை கொண்டோரின் நம்பக்கூடிய வாதங்களுக்குச் செவிசாய்த்துத் தன் கண்களைத் திறக்காததன் மூலம் எங்கே எப்படி மற்றையவர்களுக்குப் பிழையான முறையில் வழிகாட்டினார் என்பதைக் கண்டு கொள்வார். அவர் தனது பிழைகளைத் திருத்த விரும்பினார். அதேபோல நம்பிக்கை கொண்ட, பூவுலகில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் சமயவாதிகளின் மனதில் நன்கு பண்பட்ட மண்ணில் போடப்படும் விதைபோல ஞானத்தைப் பயிர்செய்வதன் மூலம் இறுக்கமான நம்பிக்கை கொண்டோரிடம் உண்மையைப் பரப்ப முயல்கிறார். அடிப்படையில் அவர் ஒரு நல்ல ஆத்மாவானதால் பூவுலகில் இருக்கையிலேயே இவ்வுண்மைகளை அறிந்திருந்தும் ஒரு முயற்சியுமின்றி இவரைப்போல ஏனையோருக்கு உதவி அவர்களையும் முன்னேற்ற முயலாமல் இருப்பவர்களிலும் பார்க்க இங்கே அவர் வெகு விரைவாக முன்னேறுவார்."
மறுநாட்காலை ஃபோர்ட் பின்வருமாறு எழுதினார்: இன்று ஒரு கைக்குழந்தையின் கதைக்கு வருவோம். அக்குழந்தை பிறந்து சற்று நேரம் உயிர்வாழ்வதற்காகப் போராடிய பின்னர் அது பின்வாங்கி ஆத்மநிலைக்கே மீண்டும் வந்தது. நிச்சயமாக அக்குழந்தை உயிர்வாழ விரும்பியிருக்கும். தனது பெற்றோரைத் தேர்ந்தெடுக்கவாவது உதவியிருக்கும். பின் இந்த மாறுதலுக்குக் காரணம் தானென்ன? சிலவேளைகளில் அக்குழந்தையின் உடல் குறைபாடுகளால் பலவீனமுற்று உயிர்வாழ்வற்குரிய தன்மையை இழந்திருக்கலாம். ஆனால் கூடுதலாக இப்படியான சந்தர்ப்பங்களில் ஆத்மாவானது பின்வாங்குதல் தான் சரியான காரணியாயிருக்கும். உதாரணத்துக்கு ஒரு நல்ல குடும்பத்தில் தவமிருந்து பெற்ற குழந்தையாகப் பிறந்த ஒரு குழந்தை சில நாட்களோ, வாரங்களோ, மாதங்களோ வாழ்ந்து பின் உயிர் நீத்தது என எடுத்துக்கொள்வோம். கிட்டத்தட்ட நிச்சயமாகப் பின்வாங்குகின்ற இந்த முடிவில் அக்குழந்தையின் பங்கும் ஏதோ இருந்திருக்க வேண்டும். சிலவேளைகளில் உடலுக்குள் செல்லுவதற்கு ஆத்மா தயக்கம் காட்டியிருக்கலாம். அல்லது தனது ஆத்மீக வளர்ச்சியைத் தடை செய்து கொண்டிருக்கும் கர்மவினையைப் போக்குவதற்குரிய சரியான ஊடகம் அதுவல்லவென அந்த ஆத்மா தீர்மானித்திருக்கலாம். எது எப்படியாயினும் அப்பூவுலகக் குழந்தையின் உயிர் அது சற்றுமுன்னே எங்கிருந்து புறப்பட்டதோ அந்த இடத்திற்கே உடனே வந்துவிட்டது. சிலவேளைகளில் சிறிது நேரம் உறங்கவேண்டிவரும். ஆனால் சாதாரணமாக ஆத்மவுலகை விட்டு இவ்வளவு குறுகிய நேரத்திற்கு மட்டுமே வெளியேறியிருந்தால் மீண்டும் வருகையில் சிறிதளவே அனுசரிக்க வேண்டிவரும். மீண்டுமொரு முறை அந்த ஆத்மாவானது நடந்தவைகளைச் சீர்தூக்கிப் பார்த்துச் சற்று முன் என்ன நடந்தது என்பதனை ஆராய்ந்து தனது கர்மவினைகளைக் களைவதற்காகப் பிறவியெடுத்த அந்தச் சந்தர்ப்பத்தைத் தான் ஏன் நழுவவிட்டேன் என ஆராய்ந்து உணரும்.
"அக்குழந்தையானது உண்மையில் குழந்தையல்ல. அதாவது ஆத்மவுலகைப் பொறுத்தவரையிலாவது அது குழந்தையல்ல. ஏனெனில் எல்லா ஆத்மாக்களும் ஆரம்பத்திலிருந்தே இருந்து கொண்டிருக்கின்றன. சில ஆத்மாக்கள் இங்கேயும் பூவுலகிலும் பெற்ற அனுபவங்களினால் பரிணாம வளர்ச்சியடைந்து ஞானவான்களாக இருப்பதன் மூலம் அவர்களின் இருப்புக் கூடுதலாக அறியப்பட்டாலும் இங்கே ஒருவரும் குழந்தையல்ல. இன்று உதாரணமாகச் சொல்லப்பட்ட கைக்குழந்தையானது சற்றே போராடிப் பார்த்த பின் மீண்டும் எம்மிடம் வந்து சேர்ந்தது. அக்குழந்தையின் பூவுடலின் இருதயமானது பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் அதனால் உயிர்பிழைக்க முடியவில்லை. இங்கு மீண்டும் வந்தபோது முதலில் அந்த ஆத்மாவானது ஏமாற்றமடைந்த நிலையிற் காணப்பட்டது. குழந்தைப் பருவமானது அவ்வளவு சிறப்பான நிலையல்ல என்றாலும் தனது பெற்றோரை விருப்பத்துடன் தேர்ந்தெடுத்துக் கொண்டதனாலும் அந்தச் சூழலானது தனது சில கர்மவினைகளைப் போக்குவதற்கு உகந்த சூழலென அவ்வாத்மா எண்ணியதாலும் அது சற்று ஏமாற்றமடைந்தது. பௌதீக உடற் கோளாறினால் இச் சந்தர்ப்பமானது அவ்வாத்மாவுக்கு மறுக்கப்பட்டது கூட உண்மையில் ஒரு கர்மவினைப் பயனாகும். அவ்வாத்மா தனது முந்தைய ஒரு பிறவியில் ஒரு பிறந்த குழந்தையின் தேவைகளைப் புறக்கணித்ததன் மூலம் அக்குழந்தையின் இறப்புக்குத் தான் காரணமாக இருந்ததை உணர்ந்து கொண்டது. எனவே நிறைவாகத் தோன்றிய இப்பிறவியை முழுதாக வாழ்ந்து முடிப்பதற்கு அவ்வாத்மா மிகவும் விரும்பியிருந்தாலும் அச்சந்தர்ப்பத்திலிருந்து பின் வாங்கியதன் மூலம் தனது கர்மவினைக்குப் பரிகாரம் தேடிக்கொண்டது. அக்குறிப்பிட்ட குழந்தையானது இங்கே வந்த பின் சற்றே தன்னை மாற்றியமைத்துக் கொண்டு மீண்டும் ஞானாலயத்தில் இணைந்து இறைவனுடன் இரண்டறக் கலக்கும் இலட்சியத்தை அடையும் பாதையில் செல்வதைப் பற்றிப் பயில ஆயத்தமாகிறது. அவர் சற்று நேரத்துக்கே இங்கிருந்து சென்றிருந்ததால் சிறிது மீள் வழிகாட்டலே போதுமானது. இதுவே அவர் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குப் பூவுலகில் குழந்தையாய் இருந்திருந்தால் இங்கே அவருக்கு உளவியல் ரீதியாக உதவுவதற்கு ஆத்மாக்கள் இருக்கின்றன. அவர்கள் இவரைக் குழந்தைப் பருவத்து மனநிலையிலிருந்து விடுவித்து வயது வந்தவராய் மாற்றி விடுவார்கள்.
அடுத்ததாக ஆர்தர் ஃபோர்ட் சற்றே வளர்ந்த குழந்தையொன்றை மேற்கோள் காட்டிப் பின்வருமாறு எழுதினார்: "காக்கை வலிப்பு நோயுள்ள ஒரு குழந்தையின் விஷயத்துக்கு வருவோம். அக்குழந்தையில் அன்பு கொண்ட அனைவரும் அவனுக்கு வலிப்பு வரும் போதெல்லாம் மனவேதனைக்கு ஆளாவார்கள். அவனுக்குக் கட்டுப்படுத்த முடியாத அளவு வலிப்பு வரும். அந்த நேரத்தைத் தவிர ஏனைய நேரங்களில் அவன் சாதாரண குழந்தையாகவே இருப்பான். வலிப்பு வருகையில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வானென்ற பயத்தின் காரணமாக ஏனையவர் போல சாதாரண வாழ்வை வாழ அனுமத்திக்கப் படாதவனாக இருந்தான். வாழ்க்கை அவனுக்குப் பெரும் பாரமாக இருந்ததனால் வாழவேண்டிய வயதுவரை வாழாமல் அந்த உடலை விட்டுவிட்டுப் பின்வாங்கி வந்துவிட்டான். அவன் இங்கே கண்விழிக்கையில் முன்பின் தெரியாதவர்களிடையே தனக்கு மீண்டும் வலிப்பு வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்துவிட்டான். எனவே தனது தாய், தந்தை, பாட்டி இவர்களைத் தேடியழுதான். இவர்கள் தான் அவனைப் பூவுலகில் அன்பாகப் பார்த்துக் கொண்டவர்கள். அன்னியர்கள் தன்னைப் பிடித்தாலும் என்ற பயத்தில் அவன் தனது ஆத்மாவின் கண்களைத் திறக்க அஞ்சினான். அவனது மனவேதனை எல்லா விதத்திலும் உண்மையாகவே இருந்தன.
"இறுதியில் ஒரு பிரபல வைத்தியருக்கு அவனது பரிதாபநிலை எட்டியது. அவர் அந்தப் பையனுக்கு முழுமையான ஆதரவுடன் தான் அவனுடைய வியாதிக்கு மிகச்சிறந்த வைத்தியம் பார்ப்பதாக உறுதியளித்தார். அவர் பூவுலகில் எவ்வாறு அவனுடைய உடலைப் பேணிப் பாதுகாப்பாரோ அதேயளவு மென்மையான லாவகத்துடன் அவனது மனத்தை மாற்றத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய மனதில் நம்பிக்கையை வளர்த்து அவனுடைய அச்சத்தைப் போக்கினார். பின்னர் அந்த டாக்டர் மற்ற மென்மையான ஆத்மாக்களை அறிமுகம் செய்து வைத்தார். அவ்வாத்மாக்கள் கைவிடப்பட்ட உடலினில் ஏற்படும் தொல்லைகள் பற்றி அவன் இனிமேல் வருந்தத் தேவையில்லையென நம்பிக்கையூட்டினர். அச்சிறுவன் சுற்றும் முற்றும் பார்த்தான். ஒருவர் கூடத் தனக்குப் பரிச்சயமான பாரமான உடலைச் சூடிக்கொண்டிருக்கவில்லை என்பதனைக் கண்டு கொண்டான். அவர்களனைவரும் பூவுடல்களிலும் பார்க்க மிக அழகான ஆன்மீகவடிவிலான உடைகளைச் சூடிக்கொண்டிருந்தனர். அத்துடன் உடல் உபாதைகள், வருத்தங்கள் பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல் இருந்தனர். அவன் தன்னுடைய வீட்டைச் சென்று பார்வையிட்டான். அவனுடைய பெற்றார் கவலை உற்றவர்களாகக் காணப்பட்டாலும் அவனை நினைத்து வேதனைப் படவில்லை என்பதனைத் தெரிந்து கொண்டான். அவர்கள் மிக முன்னேறிய ஆத்மாக்கள் என்பதால் தங்கள் மகன் இப்போ கடவுளின் அன்பில் முழுவதும் ஆழ்ந்திருப்பான் எனவும் அவனுக்கு உடல் உபாதைகளொன்றும் இருக்காது எனவும் உணர்ந்து கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.
"அவன் தனது பெற்றோரைத் தன் அன்பினால் ஆசீர்வதித்தான். அதன்பின் இங்கிருக்கும் ஆசிரியர்களின் உதவியுடன் அவன் மிக வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கினான். அவ்வாசிரியர்கள் அவனும் ஏனையோரைப் போல் வளர்ந்தவனே என்பதனை அவனுக்கு உணர்த்தினார்கள். அவன் தன்னுடைய கடந்த வாழ்வைப் பற்றி மதிப்பிடுகையில் தானே தான் அந்த வலிப்புகளை முன் வந்து ஏற்றுக்கொண்டதாகவும் முந்தைய ஒரு பிறவியிலே அவன் வேறு சிலரின் உடல் உபாதைகளை உணராமல் இருந்ததனால் அவர்கள் அனுபவித்த வேதனையை விளங்கிக் கொள்ளுமுகமாகத் தானே அக்கஷ்டங்களை அனுபவிக்க விரும்பியதாகவும் உணர்ந்தான். அவன் கூடிய விரைவிலேயே மிக முன்னேறிய ஆத்மாவாக மாறினான். இப்போ அவன் தனது கர்மவினைப் பயனை அனுபவித்துத் தன் தலையிலிருந்து பெரும் பாரத்தை இறக்கி வைத்ததனால் அப்பாரமில்லாமல் தனது அடுத்த பிறவியானது எப்படியிருக்கும் என்பதைத் தீர்மானிக்க வல்லவனாக இருக்கிறான். அவன் பணிவு என்பதைப் பற்றி அறிய விரும்பினான். கடந்துபோன பிறவியில் அவனுடைய பெற்றோர் வசதி படைத்தவர்களாகவும் நன்கு கற்றவர்களாகவும் இருந்ததனால் அவனுக்குத் தன் பிறப்பை எண்ணிப் பெருமையாயிருந்தது. அத்துடன் எந்நேரமும் அவர்கள் தன்னைக் கவனிக்க வேண்டுமென எதிர்பார்த்தான். அதனால் தனது அடுத்த பிறவியில் அவன் எளிமையான, அன்புள்ள, ஆனால் அதே நேரம் ஏனையோருக்கு உதவுவதற்கென்று தம்மை முழுமையாக அர்ப்பணித்த பெற்றோருக்கு மகனாகப் பிறக்க வேண்டுமெனத் தெரிவு செய்வான். சேவை செய்யும் மதபோதகர்களின் மகனாகப் பிறப்பதன் மூலம் அவன் பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றி அறிவான். இவ்வாறு எளிமையாகத் தொடங்கி ஒரு முழுமை பெற்ற ஆத்மாவாக ஆவான். இப்படித்தான் இந்தச் சுழற்சியானது எமது முன்னேற்றத்துக்கு உதவுகிறது. பிறவிகளின் இடையே ஆத்ம உலகில் எடுக்கும் சரியான மாற்று வழிகளின் மூலம் நம் உணர்வுகள் வளர்ந்து படிப்படியாக முன்னேறி இறைவனுக்கு இனியவர்களாக மாற முயற்சிப்போம். 
எல்ஸி, நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனமானவர்களைப் பற்றியும் கேட்டிருந்தார். ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: ஒரு ஆதிவாசியின் கதையைப் பார்ப்போம். நாகரீகத்தின் சுவடுகள் சற்றும் புகாத பின்தங்கிய பகுதியில் தனது முழு வாழ்நாளையும் கழித்த ஒருவன் ஆத்ம உலகுக்கு வந்தான். கலாச்சாரப் பகுதிகளில் வாழ்ந்து கிறிஸ்தவ மதத்தைத் தழுவியிருந்த எம்மைப் போன்றவர்களிலும் பார்க்க அவனுக்கு இங்கே குறைந்த அளவு அதிர்ச்சியே காணப்பட்டது. அவன் சில அதீத நம்பிக்கைகளுக்குப் பழக்கமாகியிருந்தான். அவனுடைய பிரதேசத்தில் ஆத்மாக்களே எங்கும் நிரம்பியிருப்பதாக எண்ணுவார்கள். இறைவன் எல்லாவற்றுக்கும் மேலாக இருந்து கொண்டு சூரிய சந்திரர்கள் மற்றும் ஆகாயத்தில் அனைத்தையும் ஒழுங்காக வழிநடத்திக் கொண்டிருப்பான் என நம்புவார்கள். முதலில் அவன் தன்னைப் போன்றவர்களையே சந்தித்தான். ஆத்மாக்களில் நல்ல விடயங்களுக்காக இருக்கும் நல்லவற்றில் அன்பு செலுத்தியும் தீயனவற்றுக்கு அஞ்சியும் வந்தவர்கள் அவனைச் சேர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களையே அவன் முதலில் சந்தித்தான். அவர்கள் தங்களது பூர்வீகப் பிரதேசத்தைப் பற்றி முதலில் விளக்கமாக அறிந்து கொண்டனர். பெற்றாரின் கண்டிப்பான வழி காட்டலாலும் புத்தகங்களின் மூலமும் ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்ளுதல் சாத்தியமில்லை என நம்பும் எம்மைப் போன்றவர்களிலும் பார்க்க அவர்களால் மிக விரைவில் பூவுலகிலிருக்கும் தமது உறவினர்களுடன் தொடர்பு கொள்ள இயலுமாக இருந்தது. அவன் தனது பழைய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டான். அவர்களுக்கு மழை வேண்டுமென்று தெரிய வந்தபோது மற்றைய ஆத்மாக்களுடன் சேர்ந்து வழிமண்டலத்தின் சுழற்சியில் மாற்றங்களை உண்டாக்கி அவர்களுடைய பிரதேசத்தில் மழை பொழியச் செய்தான். நாகரீகத்தில் முன்னேற்றம் அடைந்துள்ள சமூகத்தில் பிறப்பவர்களிலும் பார்க்க இந்த ஆதிவாசிகள் மிகக்குறைந்த பிறவிகளே எடுப்பார்கள். சில சமயங்களில் அவர்கள் பிறவிகளின் இடையே பல ஆயிரம் வருடங்கள் துயில் கொள்வதனால் அந்த நேரத்தில் பூவுலகில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களைப் பற்றிக் கொஞ்சமும் அறியாமலிருப்பார்கள். இதனால் அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் அந்த நேரத்தில் பிறப்பவர்களிலும் பார்க்கப் பின் தங்கியவர்களாய் இருந்தாலும் இறைவனும் மனிதனும் கைகோத்துக் கொண்டு உலகில் ஒன்றாக நடந்த அந்தக் காலத்தை அவர்கள் என்றும் நினைவில் வைத்திருப்பதால் ஆத்மீகத்தில் முன்னேறியவர்களாகவே இருப்பார்கள்.        
"ஏன் முன்னைய பிறவிகளோ அல்லது ஆத்ம உலகமோ அவை உண்மையாக இருந்தும் கூட மனிதருக்கு நினைவில் நிற்பதில்லை?  ஏனெனில், குழந்தைப்பருவம் முதலே அனைவரும் எமக்கு, 'உண்மைக்குப் புறம்பான விஷயங்களைப் பற்றிப் பிதற்ற வேண்டாம்' எனக் கண்டித்து வளர்த்தது தான் காரணமாகும். பின்னர் விரைவில் 'நாகரீகக்கூண்டில்' அடைக்கப்படுகிறோம். சிறுவயதில் கிரேக்க, ரோமானியர்களின் தொன்மைக்காலப் புராண வரலாறுகளில் உலகிலே பண்டைய காலங்களில் இருந்த விசித்திரமான  உயிரினங்களைப் பற்றிப் படித்தாலும் தமக்கும் அதே போன்ற மங்கிய நினைவுகள் இருக்கின்றன என அவர்கள் சொல்லுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த மறக்க வைக்கும் தன்மையானது வலிந்து புகுத்தப்படும் ஒன்றென்றாலும் சிலநேரங்களில் தேவையானதும் கூடத்தான். முந்தைய எமது பிறவிகளிலே நடந்த திகிலூட்டக் கூடிய சம்பவங்கள் எமது வெளிமனத்துக்கு நினைவு வந்தால் அவை இப்பிறவியில் தேவையற்ற மனவேதனைகளை உண்டாக்கலாம். அவர்கள் பிறருக்குச் செய்த சில தீய செயல்களின் பலன்களைக் களைவதற்காகத் தாங்களாகவே முன்வந்து இப்பிறவியினை எடுத்திருக்கலாம். ஆனால் தாங்கள் இப்பிறவியில் அனுபவிக்கும் துன்பங்களுக்கான காரணங்களை மிகத்தெளிவாக நினைவு கொள்வதென்பது தாங்க முடியாத சுமையாக இருக்கும்."
அடுத்தநாள் ஆர்தர் ஃபோர்ட் இன்னொரு நாகரீகமற்றவனைப் பற்றிச் சொன்னார்: அவன் காட்டுத் தர்பாரைத் தவிர கிறிஸ்தவ மதத்தையோ அல்லது வேறு எந்த வகையான ஒழுங்கு முறையான வழிபாடுகளையோ அறியாதவன். நாகம் தீண்டியதனால் தான் அவன் இறந்திருந்தான். அவன் இறப்பைக் கடந்து இங்கே வருகையில் அவனுக்கு ஒன்பது வயதாகியிருந்தது. எந்தவிதமான சுகாதாரமோ, நாகரீகமோ இல்லாத ஒருவனாக அவன் இருந்தான். அவனது இதற்கு முந்தைய பிறவிக்கும் இந்தப் பிறவிக்கும் இடையில் பல ஆயிரம் வருட இடைவெளியிருந்ததும் தனது முன்னேற்றத்துக்கு ஆத்ம உலகில் அவன் ஒரு முயற்சியும் எடுக்காததும் காரணங்களாக இருக்கலாம். பலநூறு வருடங்கள் துயில் கொண்டதனாலும் இங்கிருக்கும் ஏனைய ஆத்மாக்களைப் பற்றிச் சற்றும் அக்கறைப்படாமல் இருந்ததனாலும் அவன் கடைசியில் பூவுலகில் மீண்டும் பிறப்பதாகத் தீர்மானித்த பொழுது அவன் தண்ணீரிலிருந்து வெளியில் எடுத்துப் போட்ட மீனைப் போல இருந்தான். அவன் உண்பதற்காகவும் உறங்குவதற்காகவுமே உயிர் வாழ்ந்தான். அவன் பூவுலகில் செய்த ஒரேயொரு வேலை என்னவென்றால் அடி வாங்குதலையும் பேச்சு வாங்குதலையும் தவிர்த்தது தான். அவன் அறியாமையில் வாழ்ந்திருந்தான். அதே முறையில் இறந்தான். அதனால் அப்பிறவியில் சற்றும் கூட முன்னேறவில்லை. இதன் காரணத்தினால் பூவுலக வாழ்க்கையைத் தொடர்வதில் ஒரு அர்த்தமுமில்லை. இங்கே அன்பான ஆத்மாக்கள் அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முயற்சித்தாலும் அவன் தொடர்ந்து உறங்கினான். விழிப்பான நேரங்களில் தன்னைப் பற்றியும் தனது சந்தோஷங்களைப் பற்றியும் மட்டுமே எண்ணினான். அவனுக்கு சந்தோஷமான விஷயங்கள் மிகச்சிலவே (மிருங்கங்களைச் சித்திரவதை செய்வதைத் தவிர). அரவம் தீண்டி இறந்ததும் கூட அவனுடைய கர்மவினைப் பயனே. மனிதரிலும் பரிணாம வளர்ச்சி குன்றிய மிருகங்களுக்கு அவன் செய்த கொடுமைகளுக்கான பயனே.
"இப்படிப்பட்ட ஆத்மாவானது பூவுலகில் இருப்பதிலும் பார்க்க இங்கே மிகச் சோர்வடைந்தே காணப்படும். ஏனெனில் ஆத்மீக வளர்ச்சிக்குரிய பொறுப்புகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு மிகச்சிறிய சந்தர்ப்பங்களே உள்ளன. ஆனால் இன்று நாகரிக உலகில் உண்ணுவதற்கு ஏராளமான உணவும் நிறைவேற்றுவதற்குரிய கடமைகள் ஏராளமாக இருந்தும் அதை விடுத்துக் கலவரங்களை உண்டாக்கிப் பேரழிவுப் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்களிலும் பார்க்க இப் பையனின் நிலைமை ஒன்றும் மோசமானதல்ல எனலாம். அப்படிப்பட்டவர்கள் அவர்களின் அடுத்த பிறவிகளில் இப்பையன் பிறந்த மாதிரியான சூழ்நிலைகளில் பிறக்க வாய்ப்புகள் இருக்கலாம். இப்பையனும் சிலவேளைகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இதேபோல அழிவுப்பாதையில் போயிருந்து இப்போ தனது கர்மவினைகளைக் களைவதற்குப் பிறவியெடுக்க விரும்பாமலிருக்கலாம். வளர்ச்சி, முன்னேற்றம், அன்பு, ஆக்கபூர்வமான நடவடிக்கை, அத்துடன் மற்றையோரைப் பற்றி நினைத்தல் இவைதான் சொர்க்க வாசலுக்குரிய திறவுகோலாகும். அன்பைக் கட்டியெழுப்பாமல், ஏனையோரைக் கட்டாயப்படுத்தல், ஆத்திரமுற்று அழிவுக்கு வழிகோலல் இவையெல்லாம் ஆத்மா உலகிலும், பின்வரும் பிறவிகளிலும் கடுமையான எதிர் விளைவுகளை உண்டாக்கும்".

Thursday, January 7, 2021

எட்டாம் அத்தியாயம்: கதைசொல்வதில் வல்லுநர் (Storyteller Extraordinary)

தான் புனிதத்தொண்டர் (sainthood) அந்தஸ்துக்குப் பொருத்தமானவர் எனத் தன்னைப் பற்றி எண்ணிய ஒருவரைப் பற்றி மார்ச் முப்பதாம் திகதி எழுதுகையில் ஆர்தர் ஃபோர்ட் தனது கதைசொல்லும் திறமையை நிரூபித்துக்காட்டினார். இரண்டு நாட்கள் நடந்த அந்த உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இறப்பைக் கடந்து அம்மனிதர் அங்கே சென்றதும் தன்னை இறைவனின் சிம்மாசனத்துக்கு புனித காப்ரியால் (Saint Gabriel) அழைத்துச் செல்வாரென எதிர்பார்த்தார். பின்வருமாறு அமைந்தது அக்கதை:
"அம்மனிதர் தான் ஒரு தவறும் இழைக்கவில்லை என அனைவருக்கும் சொன்னார். களவெடுத்தலோ கொள்ளையடித்தலோ அடுத்தவரை ஏமாற்றுதலோ அல்லது கற்பழித்தலோ போன்ற ஒரு பாவங்களையும் அவர் இழைத்ததில்லை. ஆதலால் தான் ஒரு தவறும் செய்யவில்லை எனத் திடமாக நம்பினார். அவர் சர்ச் ஒன்றிலும், சில தொண்டு நிறுவனங்களிலும் வேலை செய்தவர். அத்துடன் சொர்க்கத்தில் இறைவனை அடைவதற்கு முன் இந்தப் பிறவி தான் ஒரேயொரு பிறவியென நம்பியவர். கடைசியில் குணப்படுத்த முடியாத ஆனால் குறுகிய ஒரு நோய் வந்ததால் தனது உறவுகளுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளைச் சரிவர ஒழுங்காக நிறைவேற்றக் கூடியதாக இருந்தது. அவர் தன்னுடைய சொத்தில் மனைவி, பிள்ளைகளுக்குச் சேரவேண்டிய பங்குகளைச் சரியாகப் பகிர்ந்து விட்டுப் பின்பு சில தொண்டு நிறுவனங்களுக்கும் பண உதவிகள் செய்திருந்தார். அவர் இறப்பை அமைதியான இதயத்துடன் தழுவிக்கொண்டார். இறந்த பின் சிலருக்கு ஆத்மஉலகில் திடீரென விழிக்கையில் ஏற்படும் மிகநீண்ட அதிர்ச்சிக் காலமொன்றும் இவருக்கு இருக்கவில்லை. இறந்தவுடனேயே இங்கே கண்விழித்துவிட்டார். ஏனென்றால் அவர் இறப்புக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். இங்கே விழித்ததும் அவர் ஒரு அழகான இயற்கை வனப்பு நிறைந்த பூமியைக் கண்டார். சற்றே தொலைவில் சில ஒளிரும் உருவங்கள் அலை அலையான வெள்ளையாடையில் நிற்பதைக் கண்டார். அவர்களெல்லாம் தன்னைத் தீர்ப்பு வழங்கும் ஆசனத்துக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்களென அளப்பரிய ஆவலுடன் எதிர்பார்த்தார். அந்தத் தீர்ப்பு வழங்கும் ஆசனத்தைப் பற்றித் தான் எதுவும் பயப்படுவதற்கில்லை என நினைத்தார். அந்த உருவங்கள் அவரை அணுகின. ஆனால் அவர்களோ அவரை வரவேற்பதற்குப் பதில் அவரைக்கடந்து நீரோடையொன்றின் மறுபக்கத்துக்குச் சென்று விட்டார்கள். அப்போதுதான் அவர் அந்த நீரோடையைக் கவனித்தார். அவர்கள் தன்னைக் காணவில்லையென நினைத்த அவர் அவர்களை அழைக்கக் குரல் கொடுக்க முயன்றார். அவருக்குக் குரல் வரவில்லை. அவர் தனது கைகளை ஆட்டினார். ஆனால் அவர்கள் இப்பக்கம் பார்க்கவில்லை. பின்னர் அவர்களும் பார்வையிலிருந்து மறைந்து விட்டனர்.
"சற்று நேரத்தில் சில சிறுவர்கள் கண்ணில் பட்டனர். ஏன் அவர்கள் தன்னைக் கவனிக்கவில்லை என வியந்தார். எவ்வளவுக்கு எவ்வளவு நிச்சயமாக அவர்களைத் தான் பார்க்கக் கூடியதாக உள்ளதோ, அவ்வளுவுக்கு அவ்வளவு நிச்சயமாக அவர்களும் தன்னைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. மீண்டும் அவர் குரல் கொடுத்தார். ஆனால் தனது எண்ணங்களை அவர்களின் மனதில் பதிய வைப்பது ஒன்றுதான் தான் செய்யவேண்டியது என அவர் உணரும்வரை அவர்கள் அவரைக் கவனிக்கவில்லை. இப்போ அவர்கள் அவரைச் சூழ்ந்து அவரை வரவேற்பது போல் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அவர் அவர்களிடம் புனித கப்ரியால் (Saint Gabriel) எங்கே எனக் கேட்டார். அதற்கு அவர்கள் தாங்கள் ஒரு தேவதைகளையும் இன்னும் சந்திக்கவில்லை என்றனர். அவர்கள் எவ்வளவு காலம் இங்கே இருக்கிறார்கள் எனக் கேட்டதற்குச் சரியான பதிலைச் சொல்ல ஒருவராலும் இயலவில்லைப் போல் இருந்தது. ஒரு சிறுமி அவரை நீரோடைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கையை நீட்டினாள். அங்கே மீனினங்கள் நீரோடையில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. அவர் தனக்கு மீன் பிடிப்பதற்கு இப்போ நேரமில்லை என்றார். அவர்கள் அவருக்கு ஒரு புதுவிதமான விளையாட்டைச் சொல்லித்தருவதாக அழைத்தார்கள். தனது பொன்னான நேரத்தைச் சிறு பிள்ளைத்தனமான விளையாட்டுகளில் செலவழிக்க இயலாதென்றார். அவர் அவ்விடத்தை விட்டுச் செல்வதற்கு அவசரப்பட்டார். அவர் ஒரு தெருவைக்கடந்து எங்காவது ஏதாவது உறைவிடம் தெரிகின்றனவா என ஆவலுடன் தேடினார். கடைசியில் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாழியின் குடிலைக் கண்டார். அங்கே ஒரு வயதானவர் நீண்ட தாடி வைத்துக் கொண்டு மும்முரமாகச் செருப்புகள் தைத்துக் கொண்டு இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்துக்காகவே அவர் இளவயதிலும் பார்க்க முதிய பருவத்தைப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்.
"ஆத்ம உலகில் உடலுக்குத் தேவையான உடைகளை உடல் தானே வழங்கிக் கொள்வதால் புதிதாக வந்தவர் அச் செருப்புத் தைப்பவரைப் பார்த்து அக்காலணிகளை அவர் எங்கே விற்பதற்கு உதேசித்திருக்கிறார் எனக்கேட்டார். அதற்கு அவ்வயதானவர் எதையும் விற்பதில் அர்த்தமில்லை என்றும் தான் சிறுவர்களுக்கு உறுதியான திடமான காலணிகளை அவை தேய்ந்து பழுதாகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை ஆராய்ந்து, அதனைப் பூரணமாக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். புதிதாக வந்தவர் புனித பீட்டர் அல்லது புனித கப்ரியாலிடம் போவதற்குரிய வழி எப்படி எனக் கேட்டார். அதற்கு அந்த வயதானவர் வழி உள்ளே இருக்கிறது என்றார். நிலக்கீழ் வழித்தடத்தைத் தான் அவர் கருதுகிறார் என இவர் முதலில் எண்ணினார். ஆனால் அவர் அதற்குப் போகும் வழியைத் தேடுவதற்கு முன் அவ்வயதானவர், 'சற்றே பொறுங்கள். அச்சிறுவர்கள் உங்களுக்குப் பணிவைப் பற்றிச் சொல்லித்தரட்டும்' என்றார். புதிதாக வந்தவர் சுற்றும் முற்றும் பார்த்தார். ஆனால் அங்கே அந்த வயதானவரைத் தவிர வேறு ஒருவரும் கண்ணில் படவில்லை. சிறுவர்கள் போய் விட்டிருந்தனர்.
"அவர் வயதானவரை விழித்து 'வயதானவரே, கடவுளிடம் போவதற்குரிய வழியை எனக்குச் சொல்வதற்கு ஏன் ஒருவரும் இங்கே இல்லை?" என்றார். செருப்புத்தைப்பவர் தனது வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். அவர் பதில் சொல்ல நீண்ட நேரம் எடுத்ததனால் புதியவர் பொறுமையிழந்து, "எனக்குச் சொர்க்கத்தில் தந்தையுடன் அவசரமான அலுவல் இருக்கிறது, அவரை நான் எங்கே காணலாம்?" என்றார்.
"அந்தச் செருப்புத்தைப்பவர் ஒரேயொரு கணம் இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு, 'உள்ளே பார்' என்றார். அவர் செருப்புத்தைப்பவரின் குடிலைச் சுற்றிப்பார்த்தார். தம்மிருவரைத் தவிர வேறொரு ஆத்மாவையும் அவர் காணவில்லை. "என்ன பகிடி விடுகிறாயா? நான் தீர்ப்பு வழங்கும் ஆசனத்தைத் தேடுகிறேன்" என்று கடுப்பாகச் சொன்னார். 
"எனக்குத் தெரியும். அதனால் தான் உங்களை உள்ளே பார்க்கச் சொன்னேன். நாம் ஒவ்வொருவரும் எம்மைப் படைத்தவனுடன் இணைவதற்குமுன் எம்மை நாமே பரிசீலிக்க வேண்டும்" என்று அந்த வயதானவர் பதிலிறுத்தார். புதியவர் ஆச்சரியமாகப் பார்த்தார். ஆனால் பிடிவாதமாக, 'நானொரு பிழையும் செய்யவில்லையே. எனது வாழ்வு ஒரு மாசுமறுவற்ற வாழ்வு. இப்போ நான் எனது இறைவனைச் சந்திக்க ஆயத்தமாக உள்ளேன்.' என்றார். அச்செருப்புத்தைப்பவர் பதில் சொல்லு முன் சிலகணங்கள் மௌனமாக இருந்துவிட்டுப் பின், 'நண்பனே, உனது கர்வத்தைப்பற்றி என்ன சொல்கிறாய்? நீ ஒரு பாவமும் செய்யவில்லையென்று திடமாக நம்புவதைப் பற்றி என்ன சொல்கிறாய்?' என்றார். புதியவர் குழம்பினார். 'ஆனால் நிச்சயமாக, நான் குற்றமற்ற வாழ்வு வாழ்ந்தேனென்பதை ஒத்துக்கொள்வதில் ஒரு பிழையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் குற்றமற்ற வாழ்வு வாழ மிகக்கடினமாக உழைத்தேன். எனவே இப்போ சொர்க்கத்தில் அதற்குரிய வெகுமதியை எதிர்பார்க்கிறேன்' என்றார்.
"இங்கே உங்களுக்கு அவை கிடைக்கும்' என்றார் செருப்புத்தைப்பவர். மேலும் அவர், 'பூவுலகில் எதற்கு நாம் எம்மைத் தயார் செய்தோமோ, அப்படியே அவை இங்கே எமக்குக் கிடைக்கும். நான் இப்போ உனக்கு ஒரு கதை சொல்கிறேன். எனது கடைசிப் பிறவியில் நான் ஒரு மத போதகராய் இருந்தேன். நான் சிறுவர்களுக்குக் கற்பித்தல், செபமாலை உருட்டுதல், பிரார்த்தனை செய்தல், பிரார்த்தனைக் கூட்டங்கள் வைத்தல் தவிர்ந்த ஏனைய நேரங்களில் சேரிகளில் உள்ள வறியவர்களுக்கு உதவிவந்தேன். நானும் எனது வாழ்க்கை ஒரு முழு நிறைவான, இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வென்று நினைத்தவன் தான். நான் ஒரு பெண்ணையும் தீண்டவில்லை. எனக்குச் சொந்தமில்லாத ஒரு சதநாணயத்தையும் நான் எடுத்ததில்லை. வெள்ளிக்கிழமைகளிலும் புனித நாட்களிலும் நான் மாமிசம் உண்டதில்லை. கடவுளின் எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தேன். கற்பனைகூடச் செய்யமுடியாத அளவுக்கு எனது வாழ்வு குற்றமற்றதாய் இருந்தது. பூதவுடலை நீத்து மேலுலகுக்கு நான் வரும் நேரம் வந்தபோது தீர்ப்பு வழங்கும் ஆசனத்தில் புனித மும்மூர்த்தியை (Holy Trinity) நான் நேருக்குநேரே காணப்போகிறேன் என்ற நினைப்பில் இறுமாப்படைந்தேன். உலகநேரப்படி நான் எழுபது வருடங்கள் காத்திருக்கிறேன். இன்னும் பற்பல பிறவிகளின் பின்தான் எனக்கு இறைவனைக் காணும் பாக்கியம் கிடைக்குமென விளங்கிக்கொண்டேன். 
"'ஆனால் ஏனப்படி?' புதியவர் அதிர்ச்சியாகக் குரல் கொடுத்தார். 'கடவுளின் ஆசிகளைப் பெறமுடியாதபடி அப்படியென்ன செய்துவிட்டோம்? நானும் எனது வருமானத்தில் பத்திலொரு பங்கைத் தேவாலயத்துக்கு அளித்தேன். நீங்களும், உங்களைப் போன்ற ஏனைய நல்லவர்களும் அப்படிச் செய்திருப்பீர்களென  எனக்கு நிச்சயமாகத் தெரியும். எனது சிந்தனை முழுவதும் எனது ஆத்மாவைப் புனிதமாக்குவதைப் பற்றித்தான் இருக்கும். நான் வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் அருந்தியது உண்மையேயெனினும் அது எமது சர்ச்சின் போதனைகளுக்கு எதிரானதல்ல. நாம் எங்கே பிழைத்தோம்?' என்றார் அவர். "
"அச்செருப்புத்தைக்கும் முதியவர் தனது கருவிகளைக் கீழே வைத்துவிட்டுப் புதியவரின் கைகளைத் தன் கைகளிலெடுத்துக் கொண்டார். 'மகனே உனக்கு இன்னும் விளங்கவில்லையா?' என ஆதரவாகக் கேட்டார். மேலும் அவர், 'நாம் எமது ஆத்மாவைப் பற்றிய சிந்தனையில் துரதிர்ஷ்டசாலிகளின் வேதனையைக் குறைப்பதைப் பற்றி சிந்திக்கவில்லை. நான் சிறுவர்களுக்குக் கிறிஸ்தவ வினா விடைகளைச் சொல்லிக்கொடுத்தேன். ஆனால் அவர்களின் தாய் தந்தையரின் கவலைகளைப் பங்குபோட்டுக் கொண்டேனா? அந்த முடக்கிலே பசியால் வாடிக்கொண்டிருந்த ஏழைக்கிழவனுக்காக எனது உணவைத் தியாகம் செய்தேனா? உனக்குக் கீழே வேலை பார்த்தவர்களின் சொந்தப் பிரச்சினைகளைக் காதுகொடுத்துக் கேட்டாயா? உனது மனைவியின் நிர்மலமான மனத்துக்கான தேடுதல் வேட்கையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? அவளின் கைகளை உனது கைகளிலே எடுத்துக் கொண்டு 'வா நாமிருவரும் சேர்ந்து தேடுவோம்' என்றிருக்கிறாயா? அல்லது உனது சொந்த விடயங்களைப் பற்றிய ஓயாத சிந்தனையில் அவளது கலங்கிய மனதைச் சாந்தப்படுத்தத் தோன்றவில்லையா? நீ உயிருடன் இருக்கையில் உன்னை ஒரு புனிதத்தொண்டராக மரியாதை கொடுத்து நடத்த வேண்டுமென நீ எதிர்பார்ப்பதாக அவள் எண்ணியதால் நீ உயிருடன் இருந்த போதிலும் பார்க்க அவள் இப்போ மகிழ்ச்சியாக இருக்கிறாள். உனது மனைவி என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று ஒரு தரம் சென்று பார்' என்றார்.
"செருப்புத்தைப்பவர் அவர் பார்வையிலிருந்து மறைய இப்போ அவர் கலிஃபோர்ணியாவில் இருக்கும் தனது வீட்டின் உள்முற்றத்தில் தான் நிற்பதை உணர்ந்தார். இன்னொரு மனிதர் உள்முற்றத்திலிருக்கும் தனக்குச் சொந்தமான சாய்கதிரையில் (Sunning Chair) கால் நீட்டிப் படுத்திருக்க அவரது மனைவி ஒரு தட்டத்தில் கண்ணாடித் தம்ளர்களைக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். அவள் ஆசுவாசமாகவும் ஆரோக்கியமாகவும் காணப்பட்டாள். அந்த இன்னொரு மனிதர் எழுந்து அவளை முத்தமிட்டு விட்டு 'நாம் மகிழ்ச்சிகரமாக வாழப்போகிறோம்' எனத் தனது ஆண்மையின் பலத்தை வெளிப்படுத்திக் கொண்டு சொன்னான். அதற்கு அவரது மனைவி, 'ஆம், ஆனால் துக்கம் அனுஷ்டிக்கும் காலம் முடியட்டும்' என்றாள். அம்மனிதர், 'அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமா?' என அவசரப்பட்டார். அதற்கு அவரது விதவை மனையாள் பெருமூச்சுடன், 'அப்படித்தான் நினைக்கிறேன். நாம் உடனே திருமணம் புரிந்தால் ஆட்கள் கதைக்கக்கூடும். ஜான் இதைப்பற்றிக் கவலைப்படுவாரென நான் எண்ணவில்லை' என்றாள். மேலும் தொடர்ந்து, 'அவர் தனது ஆத்மாவைப் பாதுகாத்துக் கொள்வதில் தான் தனது முழுக் கவனத்தையும் செலுத்தினார். இங்கே கீழே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர் கவலைப்படுவாரென நான் எண்ணவில்லை' என்றாள். 'அவர் இப்போ சொர்க்கத்தில் இருப்பாரென நீ நம்புகிறாயா?' என அம்மனிதர் கேட்டார். அவள் பெருமூச்சு விட்டுக் கொண்டு, "நிச்சயமாகச் சொல்வேன். ஆனால் அதே சமயத்தில் அவர் இவ்வளவும் கடவுளையே திருத்துவதற்குத் தொடங்கியிருப்பாரோ எனவும் எண்ணுகிறேன். ஒரு புனிதத் தொண்டருடன் அதுவும் குறிப்பாகத் தனக்குத் தானே சுயநியமனம் செய்து கொண்டவருடன் வசிப்பதென்பது மிகவும் கொடூரமானது" என்றாள்.
அத்துடன் அது முடிவடைந்ததனால் தானும் புனிதத்தொண்டர் வரிசையில் வரலாமென எதிர்பார்த்த அந்தத் தூரதிர்ஷ்டசாலியைப் பற்றி அவ்வளவு தான் நாம் அறியமுடியுமென நான் நினைத்திருந்தேன். ஆனால் உண்மையில் கதைசொல்லும் ஆர்ட்டை (Art) நான் குறைத்து எடை போட்டு விட்டேன். மறுநாட்காலை லிலி "இப்போ ஆர்ட் தனது கதையைத் தொடர்வார்" என எழுதினார். உடனே ஃபோர்ட் (Ford) தொடங்கினார். "காலை வந்தனம் ரூத். தான் கண்ணைப் போல பாதுகாத்து வந்த தனது மனையாள் ஏன் தன்னைப் பற்றி இவ்வாறு பேசுகிறாளென ஆரம்பத்தில் அம்மனிதருக்கு விளங்கவில்லை. தானே அதனைக் கண்டு உணரட்டுமென அச்செருப்புத் தைக்கும் முதியவர் இவரிடமே விட்டு விட்டார். தன்னைப் பரிபூரணமானவனென நினைக்கும் ஒரு மனிதனுடன் கூடி வாழ்வதென்பது நமது சிந்தனையை உருக்குலைக்கும் ஒன்று என அவரது மனைவி கூறிக் கொண்டிருக்கையில் தான் தனக்குச் சரியென்று பட்டவைகளை மற்றவர்களிடம் வலிந்து திணித்ததனை அவர் உணர்ந்து கொண்டார். அவர்கள் தாங்களாகவே புரிந்து கொள்வதற்கு உரிமையுள்ள தனிப்பட்ட ஆத்மாக்களாகும் என உணர்ந்தார். தனது மனைவியின் வாழ்வைத் தன்னலமற்ற அன்பினால் நிரப்புவதை விட்டுவிட்டுத் தன்னைப் போன்ற ஒரு எடுத்துக்காட்டாக அவளும் வரவேண்டுமெனத் தான் முயற்சித்ததையும் உணர்ந்தார். சமூகத்தில் நல்ல பெயர் வரவேண்டும் என்பதற்காகவும் சர்ச் வாடிக்கையாளர்களிடம் தனது பெயரை நிலை நாட்டவும் பிறரைக் கவரக்கூடியதான நல்ல காரியங்களைச் செய்யும்படி அவளைத் தான் வற்புறுத்தியதனையும் உணர்ந்தார்.
"இப்போ அவர் தனது ஆத்மாவைப் பரிசீலனை செய்து தான் கடவுளுக்கும் ஏனையோருக்கும் சேவை செய்ததிலும் பார்க்கக் கூடிய அளவு தன்னை ஒரு புண்ணிய ஆத்மாவாகக் காட்ட வேண்டும் என்பதிலேயே கூடிய கவனம் செலுத்தியதையும் உணர்ந்தார். அத்துடன் பூவுலகிலே தனது நல்ல செய்கைகளுக்கு மக்களிடையே பேரும் புகழும் பெற்று அவற்றுக்குரிய பலனை அனுபவித்ததனால் ஆத்மவுலகுக்கு ஒரு பலனையும் கொண்டு வரவில்லை என்பதனையும் மிக வேதனையுடன் உணர்ந்தார். பிறருக்குக் கொடுப்பதும் உதவிகள் செய்வதும் மற்றவருக்குத் தெரியாமல் செய்வதுதான் சொர்க்கமென மனிதனால் அழைக்கப்படும் இடத்தின் ஆசிகளைப் பெறுவதற்குரிய வழியென அவர் உணரத் தொடங்கினார். திருத்தொண்டர்போலத் தான் நடத்திய வாழ்க்கையானது பூவுல வாழ்வை வளப்படுத்தியதைப் போல் ஒன்றும் தனது ஆத்மாவுக்கு நன்மை பயக்கவில்லை என்பதை உணர்ந்தபோது அவரது ஆத்மா மிகுந்த வேதனையால் பாதிக்கப்பட்டது. கொடுப்பவரின் சுயநலமில்லாத அன்பின்றி அவர் விளம்பரப்படுத்திச் செய்த சமூகப்பணிகளானவை வெறுமனே நேரத்தைச் செலவழிக்கச் செய்த செய்கைகளாயின.
"அச்செருப்புத்தைக்கும் முதியவருக்குப் புதியவரின் மனநிலையைப் புரிந்துகொள்ள இயலுமாக இருந்தது. அவர் தான் மதகுருவாக இருக்கையில் நாளாந்தம் தான் தொடர்பு கொள்பவர்களுக்குச் சுயநலமின்றிச்  சேவை செய்வதிலும் பார்க்கத் தனது ஆத்மமுன்னேற்றத்திலேயே அதிக அக்கறை காட்டியதாகச் சொன்னது சரியே. இப்போ அவ்விரு மனிதர்களும் ஒன்றாகப் பிரார்த்தனை செய்தனர். அத்துடன் பூவுலகில் இருப்பவர்கள் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தபோது மிகமகிழ்ந்தனர். ஏனெனில் தாம் எலும்பும் சதையுமாக இருந்த போதிலும் பார்க்க இப்போ தான் அப்படிப்பட்ட பிரார்த்தனைகள் அதிகம் தேவைப்படுகின்றன என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். வெவ்வேறு விதமான வாழ்க்கை வாழ்ந்த இருவரும் இப்போ மிக நெருக்கமாக உணர்ந்தனர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து உண்மையை முழுமையாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதென முடிவெடுத்தனர். அம்மதபோதகர் தனது முந்தைய வாழ்க்கையின் தவறுகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த அந்தச் செருப்புத் தைக்கும் குடிலை விட்டு விட்டு அவ்விருவரும் ஞானாலயத்துக்குச் செல்லும் ஒரு குழுவுடன் தங்களையும் இணைத்துக்கொண்டனர். அவ்விருவரும் இப்போ இங்கே கற்கின்றனர். எமது ரட்சிப்பின் ரகசியமானது வெள்ளிடைமலை போல மிகவும் வெளிப்படையானது என இப்போ புரிந்து கொண்டனர். அவையாவன: சுயநலமின்றிய ஈகை, ஏனையோரின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்தல், ஒருவருக்கொருவர் அன்புடன் உதவுதல் என்பனவாகும்.
ஆத்ம உலகில் நாம் இருக்கையில் கற்றறிந்த பிரபஞ்சத்தின் பிரதான விதியைப் பூவுலகில் நாம் செயற்படுத்துகிறோமா என்பதனைக் கண்டறிவதற்காகவே முக்கியமாக நாம் மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கின்றோம். ஆத்மவுலகில் அது மிகவும் இலகுவாகவும் எளிதாகவுமுள்ளது. இங்கே எம்மைப்போலவே இயல்புகள், எண்ணவலைகள் கொண்டவர்களுடன் நாம் இணக்கமாகக் கலந்திருப்போம். ஆனால் நாம் மீளவும் எலும்பும் தசையுமாக வருகையில் எம்முடன் நல்லிணக்கம் இல்லாதவர்களுக்கு இடையிலும் நாம் அவர்களுடன் நல்லிணக்கம் இல்லாத நிலையிலும் விடப்படுகிறோம். அது தான் உண்மையான சோதனைக்களம். அதுதான் எங்களது விருப்பங்களுக்கு மாறுபட்ட விருப்பங்களைக் கொண்ட குடும்பத்தில் சிலநேரங்களில் நாம் வேண்டுமென்றே வந்து பிறக்கின்றோம். அவர்களை அனுசரித்துக் கொண்டோ அல்லது மற்றையோரைப் பாதிக்காத வகையிலும் எரிச்சலூட்டாத வகையிலும் அவர்களுக்கும் எமக்கும் ஒத்து வரக்கூடியதான ஒரு வாழ்க்கை முறையைக் கைக்கொண்டோ வாழப் பழகவேண்டும். எமது சிருஷ்டிகர்த்தாவின் ராச்சியத்தில் அப்படித்தான் நாம் ஆத்மீகமுன்னேற்றம் அடைகிறோம்.
"நாம் மேற்சொன்ன அந்த மனிதர் கடைசியில் அப்பாடத்தைக் கற்றபிற்பாடு தனது மனைவி பூவுலகில் தனது எஞ்சிய வாழ்நாளைக் கழிப்பதற்கு மனதுக்கு உகந்த ஒரு ஆத்மாவைக் கண்டு பிடித்ததை எண்ணி மகிழ்ந்தார். அவர் உண்மையாகவே தன் குடும்பத்தில் அன்பு செலுத்தியதனால் (தன் சொந்த வழியில்) அவர் அவர்களுக்கு இசைவான எண்ணவலைகளையும் அன்பையும் அனுப்பி அவர்களின் பாதையை சுமூகமாக்கினார். இப்போ அவர் துரிதமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். சாஸ்வதமான வாழ்வை நோக்கிய எமது பாதையின் ஒரு படியைத் தாண்டி இங்கே வருகையில் தேவதைகள் புடைசூழ பொன்னாலான மண்டபத்தில் இறைவனைக் காணலாமென அவரைப் போலவே எதிர்பார்த்து வந்த ஆத்மாக்கள் ஆத்மீக முன்னேற்றத்துக்கு ஆர்வத்துடன் உழைக்கிறார்கள். இவர் அவர்களில் மிக முக்கியமானவராகும்"
ஒரு சில நாட்களின் பின் ஃபோர்ட் பின்வருமாறு அறிவித்தார்: "இன்று தனக்கு அருட்தொண்டர் தன்மைகளிருப்பதாக நம்பிய ஒரு பெண்ணின் இதயத்தையும் மனதையும் பற்றி ஆராய்வோம். அவர் தான் இறைவனின் கரங்களுக்கே நேரடியாகக் கொண்டு செல்லப்படுவாரென எதிர்பார்த்தார். அதிகாரம் கொண்டவர்களுக்கு அவர் மதிப்பளித்தது போல வேறெவர்க்கும் அவர் மதிப்பளிக்கவில்லை. தீர்ப்புவழங்கும் ஆசனத்தில் தான் அமர்கையில் ஒரு தவறும் ஏற்படாமலிருக்க அவர் தனது நற்செய்கைகளின் மூலம் செயின்ட் பீட்டரைக் கவரநினைத்தார். அவர் இந்தப்பக்கத்திலே கண்விழிக்கையில் செயின்ட் பீட்டரால் அனுமதிக்கப்பட்ட பின் தான் நுழையப்போகும் முத்துக்களாலான வாயிற்கதவைத் தேடித் தன்னைச்சுற்றிலும் பார்வையிட்டார். அவர் கண்டது ஒரு மேடையில் கால்நீட்டிப் படுத்துக்கிடந்த ஒரு பழைய ஆத்மாவையே. அவர் இங்கே பல்லாண்டுகளாக இருக்கிறார். அவரை செயின்ட் பீட்டரென எண்ணிக் கொண்டு அப்பெண்மணி அவரை அணுகி, 'சேர், இங்கே பாருங்கள் நான் மேரி ப்ளங் (Mary Blunk). என்னை இறைவனிடம் அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
"அந்தப் பழைய ஆத்மா அவரை அனுதாபத்துடன் பார்த்தார். அவர் அப்பெண்மணியைச் சற்றுநேரத்துக்கு ஓய்வெடுக்கும்படி பரிந்துரைத்தார். ஆனால் அது அப்பெண்மணியின் காதில் விழவில்லை. அவரது பௌதீகவுடல் நோயுற்றிருந்தது. இப்போ அவ்வுடலை நீத்ததால் தந்தைக்கருகில் தனக்குரிய இடத்தைப் பற்றிப் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தார். அவர் மேலும் தாமதிக்க விரும்பாததால் அந்தப் பழைய ஆத்மா அவரை முன்னோக்கி நகரச்சொல்லிச் சைகை செய்தார். சீக்கிரத்தில் அப்பெண்மணி ஒரு வாயிற்கதவருகில் வந்தார். ஆனால் அந்த வாயிற்கதவு அவர் எதிர்பார்த்தது போல் ஒன்றும் மேன்மை வாய்ந்ததாக இருக்கவில்லை. அக்கதவுக்குப் பூட்டோ அல்லது வாயிற் காவலனோ ஒன்றும் இருக்கவில்லை. எனவே அவர் கதவிற்குள்ளால் நுழைந்து பூந்தோட்டத்தால் சூழ்ந்திருந்த வழியொன்றில் ஏறிச்சென்றார். வழியில் கொள்ளை கொள்ளையாக மலர்கள் மலர்ந்திருந்தன. அவர் இறைவனின் இருப்பிடத்தை எவ்வளவு விரைவில் அடையமுடியுமோ அவ்வளவு விரைவில் அடைய விரும்பியதனால் அவற்றில் கவனம் செலுத்தவில்லை. போகும் வழியில் அவர் பலரைச் சந்தித்தார். அவர்கள் அப்பாதையில் ஒன்றில் ஏறிக்கொண்டோ அல்லது இறங்கிக்கொண்டோ இருந்தனர். எங்கள் கதாநாயகி அவர்களைப் பார்த்துத் தலையை அசைத்துக் கொண்டே விரைந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னே கஷ்டப்பட்டு முன்னேறிக் கொண்டிருந்த சிலரைத் தாண்டிச் செல்லும் நோக்குடன் அவர் விரைந்தார். இறங்கிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டவர்கள் எனவும் அவர்கள் நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் எனவும் அவர் அனுமானித்துக்கொண்டார்.
"அவருக்கு முன்னே சென்று கொண்டிருந்தவர்களை விலக்கிக் கொண்டு கடைசியில் அவர் ஒரு உயரமான மேடையை அடைந்தார். அதன் உச்சியில் தன்னை வரவேற்கும் கரங்களுடன் தனக்காகக் காத்திருக்கும் இறைவனைக் காணப்போவதாக எண்ணினாள். இப்போ அவள் தனது உடைகளையும், தலையையும் சரிசெய்து கொண்டார். தனது உடைகளைத் தொட்டு உணர்ந்து மீளவும் உறுதி செய்துகொண்டார். ஏனெனில் இங்கேயிருக்கின்ற அவ்வுடைகளும் அவரது வீட்டில் திங்கட்கிழமைகளில் அவர் தோய்த்துக் கொண்டிருந்த அவரது உடைகளைப் போலவே அவருக்கு உண்மையாகவே தென்பட்டன. அங்கேயொரு அழகிய வாலிபன் நிற்கக்கண்டார்.  அவர் அவ்வாலிபனை ஒரு தேவதூதனென எண்ணிக்கொண்டு அவனிடம் இனிமையாகத், "தயை கூர்ந்து எனது வரவை நீ அறிவிப்பாயா? ஏனெனில் நான் அவசரமாக இறைவனின் முழந்தாழ்களில் எனது சிரசைத் தாழ்த்தி வணங்கல் வேண்டும்" என்றார். அவ்வாலிபன் மெதுவாகச் சூழ்நிலையை அளந்தான். கடைசியில் அவன் பின்வருமாறு பதிலளித்தான்: "ஆனால் அம்மணி நீங்கள் ஏறிவந்த மலைப்பாதையில் புதிதாக வந்த சில ஆத்மாக்கள் இன்னமும் கஷ்டப்பட்டு ஏறிக் கொண்டிருக்கிறார்கள்' என்றான். அப்பெண்மணி பொறுமையின்றி நெருங்கிக் கொண்டிருக்கும் நீண்ட வரிசையில் தன்னைக் காக்க வைக்காமல் தன்னைப் பற்றி இறைவனின் கவனத்துக்குக் கொண்டு வரும்படி வேண்டினாள். அவ்வாலிபன் புன்னகைத்துக் கொண்டு அவளுக்குப் பின்வருமாறு பதிலளித்தான்: 'ஆனால் அம்மணி, கீழே அந்தப் பாதாளத்திலிருந்து மேலே வரத்துடிக்கும் அந்த ஏனையோரைக் காப்பாற்றாமல் நீங்கள் எப்படிக் காப்பாற்றப்படுவீர்கள்?' என்றான். அதற்கு அப்பெண்மணி அந்நியர்களாகிய அவர்களுக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்றாள்.
இறுதியாக இன்னொரு மனிதன் அவளை அணுகினார். அம்மனிதனின் முகம் அப்பெண்மணிக்குச் சற்றே பரிச்சயமாக இருந்தது. தெருவோரத்தில் எந்நேரமும் ஒரு தகரக் கோப்பையை ஏந்திக்கொண்டு நின்றுகொண்டிருக்கும் பிச்சைக்காரன் என அவனை அடையாளம் கண்டு கொண்டாள். 'நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?' என அதிகாரத் தொனியில் அவனை அவள்  கேட்டாள். அதற்கு அவன் தான் தனது அடிபட்டு நொந்த உடலை அண்மையில் தான் நீத்ததாகவும் தான் இப்போ தனது அடுத்தகட்ட முன்னேற்றத்தில் இருப்பதாகவும் பதிலளித்தான். அப்பெண் அப்பிச்சைக்காரன் இருப்பதற்குரிய இடமாக இது படவில்லையெனச் சீற்றத்துடன் சொன்னாள். அப்போ அங்கே வேறு படிகள் இருப்பதைக் கண்டு அவள் அப்படிகளில் ஏறத்தொடங்கினாள். அது ஒரு மண்டபத்தின் நுழைவாயிலில் முடிவடைந்தது. அங்கே இறைவன் தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதாக எண்ணினாள். ஆத்மீக முன்னேற்றமடைந்தவரைப் போலத் தென்பட்ட ஒரு மனிதரைக் கடைசியில் அவள் அங்கே கண்டாள். அவரின் முன் பெண்கள் வணங்கும் முறைப்படி முழங்கால்களை மடித்து உடலைத் தாழ்த்தி வணங்கிக் கொண்டு தன்னை நேரடியாக இறைவனின் பால் இட்டுச் செல்லுமாறு அவள் கேட்டுக் கொண்டாள். அதற்கு அம்மனிதர், 'அம்மணி! நாமெல்லோரும் கடவுளே' எனப் பதிலளித்தார். அவள் சுற்றிலும் கோபமாகப் பார்த்தாள். அம்மனிதர் கைகளால் எல்லோரும் என்று சேர்த்துக் காட்டுகையில் அப்பிச்சைக்காரக் கிழவனையும் சேர்த்துத் தான் காட்டுகிறான் என்பதைக் கவனித்தாள். அது அவளுக்கு வெறுப்பேற்றியது. அப்பிச்சைக்காரன் என்றும் குளித்த மாதிரித் தெரியவில்லை அவளுக்கு. அவனது தலைமுடியும் எப்பொழுதும் சடையாகக் காணப்படும். ஆனால் இப்பொழுது அவனைப் பார்க்கையில் சற்றுத் தூய்மையாகக் காணப்பட்டது போலிருந்தது அவளுக்கு. 'கேலி செய்வதை நிறுத்தி விட்டு என்னைப் படைத்தவனிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்' என்றாள் அவள்.
அவ்வழகிய வாலிபன், 'ஆனால் அம்மணி அவர் உங்களை மட்டுமல்ல எம் எல்லோரையுமே அவர் தான் படைத்தவர். முன்னேற்றப் பாதையின் இத்தற்காலிக நிலையில் மீண்டும் உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் நின்று வரவேற்பதற்கு அவருக்கு நேரமில்லை. நீங்களும் மற்றவர்களும் உயரிய நிலையை அடைவதற்கு உங்களுக்கு உதவுவதற்கேற்ற நிலை வரும் வரை இடைப்பட்ட இக்காலகட்டத்தில் அங்கே நின்று கொண்டிருக்கும் நீங்கள் பிச்சைக்காரனென்று நினைக்கும் நபர் உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருப்பார்' என்று பதிலளித்தான். அப்பரிதாபத்துக்குரிய பெண்ணோ அவருடன் அப்படி வாதிட்டாள்! அப்பிச்சைக்காரனை எவ்விதத்திலும் தான் வழிகாட்டியாக ஏற்க இயலாதென்றும் வேறெவரையும்கூட அந்த விதத்தில் ஏற்கவியலாதென்றும் தனக்கு இறைவனுடன் மட்டும் தான் அலுவலென்றும் எங்கே அவரைக் காணலாமென அதிகாரம் தொனிக்கக் கேட்டாள். ஏனையவர்களும் இப்பொழுது வந்து சேர்ந்ததில் கூட்டம் சூழ்ந்து விட்டிருந்தது. வந்தவர்களிலும் சிலர் இறைவனெங்கே எனக் கேட்டனர். அவர்களெல்லோரும் இறைவன் எங்கே இருக்கிறானென அறிய விரும்பினர். வேறு பலரும் மேலே வந்து சேர்ந்து விட்டிருந்ததனால் இப்போ அப்பெண் முதலாவது ஆளாக நிற்கமுடியாமல் போய்விட்டது. அதுவும் அவளுக்குக் கோபம் விளைவித்தது.
"கடைசியில் அவ்விளைஞன் புதிதாக வந்துள்ள அவ்வாத்மாக்களின் கூட்டத்தினரை அணுகி மிக இனிமையான குரலில், 'கவனியுங்கள், இறைவன் எங்குமிருக்கிறான். அவன் அன்பு வடிவானவன். நிச்சயமாக நீங்கள் ஒவ்வொருவரும் மற்றைய ஒவ்வொருவரிலும் அன்புசெலுத்தவும், ஒவ்வொருவருக்கும் உதவிகள் செய்யவும்  கற்று உணர்வீர்களாதலால் இறைவன் நிச்சயமாக உங்களிடையே வேலை செய்வான். நீங்கள் உங்களைச் சூழவுள்ளவர்களிலும் பார்க்க ஆத்மீக முன்னேற்றம் அடைந்துள்ளீர்களா என்பதைக் கவனித்துப் பாருங்கள்' என்றான். ஆனால் அப்பெண்ணோ பொறுமையிழந்து, 'எங்கே தீர்ப்பு வழங்கும் ஆசனம்?' என வற்புறுத்தினாள். 'நீங்கள் அதில் இருந்து கொண்டிருக்கிறீர்கள் அம்மணி' என அவ்விளைஞன் பதிலளித்தான். அவள் சுற்றிலும் கோபமாகப் பார்த்து அங்கே எந்த விதமான ஆசனமும் இல்லை என்பதைக் கண்டு கொண்டாள். இறுதியாக அவன் என்ன சொல்ல வருகிறானென அவளுக்குச் சற்றே பிடிபட்டது. அவள் மட்டுமே அவளது நீதிபதி. அவள் குற்றமற்ற, தூய்மையான வாழ்வு வாழ்ந்தவளா இல்லையா என்பதை வேறெவரும் சொல்லமாட்டார்கள். அவளே அதனைக் கண்டறிய வேண்டும். அவள் தனது இதயத்தை ஆராய்ந்து பார்க்கையில் இந்தப் பயங்கரமான உண்மையைக் கண்டுபிடித்தாள்: குற்றமற்ற வாழ்வு வாழ்வதற்கான தனது முயற்சியில் அவள் தன்னைப் பற்றியும் தனது ஆத்மீக முன்னேற்றத்தைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அவள் தனது நல்லியல்புகளைப் பற்றி அதிக அக்கறை கொண்டதில் தனது தகுதிக்குக் கீழ்ப்பட்டவர்களுடன் ஒரு ஆறுதல் வார்த்தையைப் பகிர்ந்து கொள்ள மறந்து விட்டாள். தான் ஆத்மீகக் காரணங்களுக்காக அணியும் வெள்ளை ஆடையில் கறை படிந்துவிடும் என்பதற்காகத் தனக்குக் கீழே இருந்தவர்களினால் அவ்வாடைகள் அழுக்காவதைத் தவிர்த்தாள். பின்பு பிறரில் எப்படி அவள் அன்பு காட்டியிருக்கமுடியும்? விடைகள் அவளுக்கு உள்ளேயே இருந்தன. இறைவனால் கூடத் தீர்ப்பு வழங்குகையில் இப்படி நேரே நின்று பார்த்தது போல அவள் தன்னைத் தானே அலசி ஆராய்ந்தவாறு  ஆராய்ந்திருக்க முடியாது. தனது இதயத்தை நன்றாக அறிந்த அவள் தனது குறைபாடுகளை மதிப்பிட்டாள். வேறெவரும் அவளை மதிப்பிட இயலாது, ஏனெனில் தானே தனது ஒரேயொரு நீதிபதியாகும். அவள் தனதருகில் நின்ற பிச்சைக்காரனின் தன்மைகளை அலசி ஆராய முற்படுகையில் பத்தாயிரம் ஆண்டுகளானாலும் அவனது இதயத்தை ஆராய்ந்து அவன் செய்த செய்யாத தவறுகளைக் கண்டு பிடிக்கத் தன்னால் இயலாது என உணர்ந்தாள். ஏனெனில் அவன் மட்டும் தான் அவனுக்குரிய ஒரேயொரு நீதிபதியாகும்.
மறுநாட்காலை, ஃபோர்ட் புதிதாக வருகை தந்திருந்த பூவுலகிலிருக்கும் தனது குடும்பத்தினரை எண்ணி வருந்திக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் கதையைச் சொன்னார். அப்பெண் இறுதியில் வந்த வியாதியின் போது தன்னால் இனி உயிர்வாழ இயலாதென நினைத்திருந்தாள். ஆனால் இப்போ தனது கணவரையும் குழந்தைகளையும் பிரிந்து வந்ததை எண்ணி மனங்கலங்குவதால் ஆத்மநிலையில் தொடரும் வாழ்வுக்குத் தன்னைத் தயார் செய்ய மறுக்கின்றாள். அவரே சொல்லட்டும்:
"அவள் தனது கணவரையும் பிள்ளைகளையும் விடாமல் தொடர்ந்து கொண்டு அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் தனது தாக்கத்தை உண்டாக்க முயல்கிறாள். அத்துடன் தனது இருக்கையை அவர்களுக்கு உணர்த்தத் தீவிரமாக முயல்கிறாள். இங்கே ஆத்மவுலகில் அவளது ஆத்மீக வளர்ச்சியைத் தொடரும் வண்ணம் நாம் உரைக்கும் சொல்லொன்றும் அவளைக் கவரவில்லை. பூவுலகில் தனது உறவினர்களுடன் தனது வாழ்க்கையைத் தொடர்வதற்கு மட்டுமே அவள் விரும்பினாள். அவர்களுக்குத் தனது வழிகாட்டல் நிச்சயமாகத் தேவையென அவள் எண்ணுகிறாள். அவர்களின் மகிழ்ச்சிகளினூடாக அவள் வாழ்ந்தாள். ஆனால் பிள்ளைகளின் ஒவ்வொரு விதமான சிறிய ஆசைகளின் தூண்டுதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க விரும்பினாள். அவளின் எச்சரிக்கைகள் அவர்களுக்கு விளங்கவில்லைப் போலத் தோன்றினாலும் கூட 'தாய் எல்லாம் அறிவாள்' என்பதே அவளின் வேத வாக்காக இருந்தது. இங்கே இருக்கும் இப்படிப்பட்டவர்களுடன் பணி புரிந்து பழக்கப்பட்டவர்கள் அதற்குரிய வழிகளில் அவளது பயங்களைப் போக்கி அவளை சாந்தப்படுத்தத் தம்மாலான முயற்சிகளைச் செய்கிறார்கள். அவர்கள் அவளுக்கு பூமியில் உயிர் வாழும் ஒவ்வொரு உயிரும் தங்களது சொந்த உளநிலைமை ஆற்றல்களுக்கு ஏற்பத்தான் வாழவேண்டுமென்றும் இத்தளத்திலிருந்தோ அன்றிப் பௌதீகத் தளத்திலிருந்தோ எந்தவிதமான ஆதிக்கமும் இருக்கலாகாது என்றும் கற்பித்தனர். அவளது முன்னேற்றமானது கொஞ்சம் கொஞ்சமாகத் தடைப்பட்டது. வளர்ச்சியடையாத எதுவும் வீணாகப் போய்விடும். அவளது ஆத்மாவானது சுருங்கி அவள் நம்பிக்கையும் பொலிவும் இழந்து, பரிதாபத்துக்குரியவள் ஆனாள். பூவுலகில் இருப்பவர்களிடம் தனது ஆசையைத் திணிப்பதற்கு முயற்சிக்கும் அதே நேரத்தில் இங்கேயுள்ள ஆத்மாக்களின் விவேகம் நிறைந்த வார்த்தைகளைச் செவிமடுக்க மறுத்து உணர்ச்சியற்ற ஜடமானாள்.
"கடைசியில் அவள் மனக்கலக்கத்துடன் ஆழ்ந்த உறக்கத்தில் படிப்படியாக வீழ்ந்தாள். இந்த உணர்ச்சியற்ற நிலையானது கிழமைக் கணக்கிலோ மாதக் கணக்கிலோ அன்றி வருடக் கணக்கிலோ தொடரலாம். கடைசியாக அவள் விழிக்கையில் தனது பூவுலகிலிருக்கும் குடும்பத்தினர் தானின்றியே செழித்தோங்கியதை அறியத்தலைப்பட்டாள். அவர்கள் தானின்றியே வாழப்பழகிக்கொண்டார்கள். தான் நினைத்தது போல தான் ஒன்றும் அவர்களுக்கு அத்தியாவசியமாக இல்லையென்பதையும் கண்டு கொண்டாள். இப்போ இங்கேயுள்ள ஆத்மாக்களின் சொற்களுக்குச் செவிமடுக்கக்கூடியதாக உள்ளாள். அவ்வாத்மாக்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது பல்லாயிரமாண்டுகட்கு முன்போ இதே போன்ற அதிர்ச்சிகரமான அனுபவங்களினூடாக மீண்டு வந்தவர்களே. எனவே அவர்கள் அவளது உணர்ச்சியற்ற தன்மையிலிருந்து அவள் வெளியில்வர வழிகாட்டக் கூடியவர்கள். நல்ல அறிவுரைகளால் அவர்கள் அவளைத் தனது சொந்த ஆத்மீக விழிப்புணர்வுக்குத் தூண்டுவார்கள். தான் பூவுலகிலிருக்கையில் ஆக்க பூர்வமாய் இருந்ததிலும் பார்க்கக் கூடுதலாக அழிவு பூர்வமாகவே வேலை செய்திருப்பதை இப்போ உணர்ந்து கொண்டாள். தனது பிள்ளைகளைத் தனது அதிகாரத்தால் ஆண்டாள். தனது தாயன்பால் அவர்களை அடக்கியாண்டாள். அவள் தனது பிழைகளை ஆய்வு செய்தபின் அவற்றுக்கு ஈடு செய்ய விரும்பினாள். மீண்டுமொரு முறை பூவுலகில் பிறக்கும் சந்தர்ப்பம் தனக்களிக்கப்பட்டால் தான் தாயன்பு என்ற பெயரில் பிள்ளைகளில் அவர்கள் தாங்கமுடியாத சுமைகளையேற்றி அவர்களை முழுக்கமுழுக்கத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்காமல் அவர்கள் சுதந்திரமாக இயங்கக்கூடிய முறையில் அவர்களில் மென்மையான அன்பைச் செலுத்துவேனென அவள் உறுதிமொழி பூண்டாள். சுயநலத்துடன் கூடிய அன்புக்கும் சுயநலமற்ற அன்புக்குமுள்ள வித்தியாசத்தை எமக்குக் கற்றுத்தரும் கல்விக்கூடங்களில் அவள் சேர்ந்து பயில்கிறாள்.
"இப்போ அவள் தனது பிள்ளைகளைப் பூவுலகில் காண்கையில் அவர்களில் ஆதிக்கம் செலுத்த முயலாமல் தன் அன்பையும் அன்னையின் ஆசிகளையும் அவர்களுக்கு அனுப்புகிறாள். அந்தப் பிள்ளைகளில் நாம் இப்பக்கத்திலிருந்து மாற்றங்களைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு முன்பெல்லாம் அவர்கள் கைகளைக் கட்டிவிட்டதைப் போல உணர்ச்சி வயமாகத் தாயை அதிருப்தியூட்ட வேண்டி வருமோ என்ற பயத்தில் எந்த ஒரு விஷயத்தையும் செய்யத் தயங்குவார்கள். இப்போ அவர்களால் தாயின் பிரகாசிக்கும் அன்பை உள்ளூர உணரமுடிகிறது. தாய் விடுதலையடைந்து மகிழ்ச்சியாக இருக்கிறாளென்று அவர்களால் உணரமுடிவதால் (அவர்கள் இதைப்பற்றி எண்ணுவதை வேண்டுமென்றே நிறுத்திவிட்டார்களோ இல்லையோ) அவர்களால் இலகுவாகத் தீர்மானங்கள் எடுக்கக் கூடியதாகவுள்ளது. அவர்களது முன்னேற்றங்களைப் பார்த்து அவர்களின் வளர்ச்சியால் ஆத்மவுலகிலிருக்கும் தாயார் மகிழ்வுறுகிறாள். அதேநேரம் தான் அவர்களில் ஆதிக்கம் செலுத்தியதை எண்ணி வருந்துகிறாள். அவள் படிப்படியாக முன்னேறி ஒரு விவேகமுள்ள, சுயநலமற்ற பிறவியாக மீண்டுமொரு நாள் பூவுலகிற் பிறப்பாள்.
ஆர்தர் ஃபோர்ட் ஒரு நியமிக்கப்பட்ட சமயக்குருவாக இருந்ததாலோ என்னவோ அவர் மதபோதகர்களைப் பற்றிக் கூறுகையில் கூடுதலாக அனுபவித்துக் கூறுவதைப் போன்றிருக்கும். எல்ஸி செக்ரைஸ்ட் (Elsie Sechrist) அவரிடம் குறிப்பிட்ட நபர்களைப் பற்றிக் கேட்டுப்பார்க்கச் சொல்லிச் சில நாட்களின் பின் அவர் ஒரு கிறிஸ்தவ மார்க்க போதகரைப் பற்றிச் சொன்னார். அவர் பலரை நல்ல கிறிஸ்தவனாக மாற்றியவர். அவர் தனது போதனைகளின் போது உயிர்த்தெழுந்த பாலகனைப் பற்றியும் இறப்பின் பின் உள்ள வாழ்வைப் பற்றியும் உபதேசித்திருக்கிறார்.
"அப்போதகருக்குச் சிலநேரங்களில் பைபிளில் விபரிக்கப்பட்ட தீர்ப்புகள் வழங்கும் நாள் (Judgement Day) மற்றும் இறந்தவர்கள் எல்லாம் கல்லறைகளிலிருந்து மீண்டும் உயிர்பெற்று எழுவார்கள் என்பவை போன்றன உண்மையிலேயே சரியான முறையில் அர்த்தம் கற்பிக்கப் பட்டிருக்கின்றனவா என்று சந்தேகங்கள் வரப்பார்க்கும். ஆனால் அவர் அவற்றை எதிர்க்காமல் ஏற்றுக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர் உண்மையிலேயே தேடுதல் உள்ள ஒருவராகும். தந்தையை அடையும் வழியை அறிவதற்கு சர்ச் ஒன்று தான் சிறப்பான வழியென்று நம்புபவர். தனது திருச்சபையில் நோயாளிகட்குத் தாராளமாக உதவிகள் செய்தார். அத்துடன் மக்களை நல்வாழ்வு வாழ்வதற்குத் தூண்டினார். அவர் தனது எதிர்காலத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவது கிடையாது. ஏனெனில் சரியான முறையில் வாழ்ந்தால் இறைவனின் அரியாசனத்துக்கு அருகில் இருப்பதற்குத் தானும் தேர்ந்தெடுக்கப் படுவேனென எண்ணினார்.
"தனது நம்பிக்கையில் உறுதியாக வாழ்ந்து அவர் இறுதியில் பூவுடலை நீத்தபின் மேலுலகில் லேசான ஒரு தூக்கம் கொண்ட பின் ஒரு கோபுரமும் அதனருகில் கல்லறைகளுடன் கூடிய இடுகாடும் கொண்ட  அழகிய ஒரு இடத்தின் முன் கண்விழித்தார். அவர் தனது வீட்டிலிருப்பது போல உணர்ந்தார். ஏனெனில் அவர் போதனை செய்த இடமும் இதைப் போன்றதே (அதாவது சர்ச்சும் அதற்கருகே இடுகாடும்). அவர் அந்தக் கட்டடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார். அதனுள்ளே நன்றாக உடைகள் உடுத்திய பலர் ஆராதனைக் கூட்டத்துக்கு ஆயத்தமாக நிறைந்திருக்கக் கண்டார். ஆர்கனின் இசை கேட்டது. அவர் நடைபாதையால் சென்று பிரசங்க மேடையை அடைந்தார். தன் தலையைத் தாழ்த்தி வணங்கியபின் பிரார்த்தனையைத் தொடங்கினார். மீண்டும் இசையொலி கேட்டது. சபையிலே நிறைந்திருந்தவர்களை உற்றுக் கவனிக்கையில் சிலமுகங்களே பரிச்சயமாகத் தெரிந்தன. அதாவது வேறொரு வட்டாரப் பகுதியின் திருச்சபைக்குத் தான் அழைக்கப்பட்ட போதகரைப் போல இருந்தது. ஆனால் அவர் பின்னர் தனது போதனையை வழங்குகையில் 'நீங்களனைவரும் பாவிகளே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்' என்று ஆரம்பித்தார். தான் எதற்காக அந்தக் குறிப்பிட்ட விஷயத்தை இன்று தேர்ந்தெடுத்தேன் எனவும் அது இந்த முன்பின் தெரியாதவர்களைப் பற்றித் தான் மதிப்பீடு செய்வது போலுள்ளது எனவும் ஆச்சரியப்பட்டார். அவர் சங்கடப்பட்டார். ஆனால் வேறெவருக்கும் அது ஆச்சரியத்தைத் தரவில்லைப் போலிருந்தது. கடைசியாக அவர் அவர்களுக்குத், 'தீர்ப்பு வழங்கும் நாளன்று எம்மெல்லோர்க்குமே தீர்ப்புகள் வழங்கப்பட்டுப் பின்னர் சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ அனுப்பப்படுவோம்' என்றார்.
"சபையோர்கள் அனைவரும் கனிவாகப் புன்னகை புரிந்தனர். இப்படிப்பட்ட விசித்திரமான எதிர்விளைவு அவரை ஆச்சரியப்படவைத்தது. அவர் நரகத்தினுடைய எரிக்கும் சித்திரவதையைப் பற்றி நினைப்பூட்டி அவர்களை எச்சரித்தார். அதற்கு அவர்கள் இரக்கத்துடன் கூடிய புரிந்துணர்வுடன் புன்னகை புரிந்தனர். அவர் மேலும் குழப்பமுற்றார். பின்னர் சபையிலிருந்த ஆத்மாக்கள் அனைவரும் ஒரு சேர எழுந்து அவரை வரவேற்றனர். அத்துடன் அவர்கள் அவரது உபதேசத்தைக் கண்டு களித்ததாகவும் அவரின் நிலையைச் சரிசெய்யத் தாம் இப்போ தயார் என்றும் உரைத்தனர். போதகர் அதிர்ச்சியால் வாயடைத்து நின்றார். ஒருநாளும் சபையோரிடமிருந்து இப்படிப்பட்ட எதிர்விளைவை அவர் சந்தித்ததில்லை. அவர் தான் கனவு கண்டு கொண்டிருப்பதாகவும் கனவிலிருந்து விழித்து விடுவேனெனவும் நினைக்கத் தலைப்பட்டார். ஆனால் அப்படி நடக்கவில்லை. இப்போ அவர்கள் அவரை சர்ச்சுக்கு வெளியே அழைத்துச் சென்று சுடலையை அடைந்தார்கள். அங்கே அவரது கல்லறையை அவருக்குக் காட்டினார்கள். அக்கல்லறையில் அவரது பெயரும் பிறந்த திகதியும் இறந்த திகதியும் செதுக்கப்பட்டிருந்தன. 'இப்போ நீங்களும் எங்களில் ஒருவரே. இங்கே எம்மைத் தவிர வேறு எவரும் எம்மை மதிப்பீடு செய்யமாட்டார்கள். எம்மாலான உதவிகளை உங்களுக்குச் செய்யவும் உங்களுக்குப் போதனை செய்யவேண்டும் போலிருந்தால் அதனைச் செவிமடுக்கவுமே நாம் இங்கேயுள்ளோம். அதேநேரத்தில் நீங்கள் உங்களின் மதிப்பாய்வுகளைத் தொடங்குங்கள். அமைதியாக ஓய்வெடுங்கள்' என்றனர் அவர்கள்.
ஆர்தர் ஃபோர்ட்டிடம் எல்ஸி செக்ரைஸ்ட்டின் மற்றுமொரு கோரிக்கை என்னவென்றால் திருமணம் புரிய இயலாத இரு காதலர்களைப் பற்றியதாகும். அதற்கு அவர், 'ஒரு மனநோயாளியான மனைவியுடன் திருமணபந்தத்திலே சிக்குண்ட ஒரு மனிதனைக் காதலித்த ஒரு பெண்ணைப் பற்றிப் பார்ப்போம். அப்பெண்ணுக்கு அவனைத் திருமணம் செய்வதே எந்த ஒரு விஷயத்திலும் பார்க்க முக்கியமாகப் பட்டது. இருவரும் ஒருவரையொருவர் மனதாரக் காதலித்தனர். அம்மனிதனின் மனைவி மனநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் இருப்பதனால் அவளை விவாகரத்துச் செய்து விட்டுத் தனது இதயம் கவர்ந்த உண்மையான நண்பியைத் திருமணம் செய்ய மனிதன் வகுத்த சட்டங்கள் இடம் கொடுக்கவில்லை. அவ்விருவரும் ஒருவரையொருவர் மனதார விரும்பினாலும் இணையமுடியாமல் தம் வாழ்நாளைக் கழித்தனர். அந்த மூளை பாதிப்படைந்த பெண் அவர்களிருவரிலும் பார்க்கக் கூடியகாலம் வாழ்ந்தாள். அக்காதலர்களிருவரும் சிலமாத  இடைவெளியில்  உடலை நீக்கி இங்கே வந்த போது உடனேயே மெய்மறந்த இன்பத்தில் இருவரும் இணைந்து கொண்டனர். பலகாலமாக ஒருவர் மற்றவரின் அண்மை தரக்கூடிய மகிழ்ச்சிக்காகவும் ஆறுதலுக்காகவும் ஏங்கியிருந்தவர்கள் ஆதலினால் அவர்களிருவரும் ஒரே ஆத்மாவைப் போலானார்கள். பூவுலகில் நன்னெறி சார்ந்து வாழ்ந்த இவ்விருவரும் இங்கே எம்மாற் கற்பனையில் கூடக் கருதவியலாத அளவு மிகச் சிறப்பான முறைகளில் ஒரு முறையில் ஐக்கியமாவார்கள். இங்கே திருமணமென்னும் அமைப்பு முறை இல்லாவிடினும் ஆத்மாக்கள் ஒன்றுடனொன்று கலந்து ஒன்றுபடுவதென்பது எல்லையற்றதோர் உன்னத நிலையாகும். அவ்விரு ஆத்மாக்களும் சிலவேளைகளில் முற்பிறவிகளில் இரட்டை ஆத்மாக்களாக (twin souls) இருந்திருக்கலாம். அதனால் மிகச் சமீபத்தைய பிறவியிலும் ஒருவரையொருவர் சந்திக்கவென இருந்திருக்கலாம். ஆனால் ஏதோவொரு தவறு நேர்ந்து விட்டது. அந்த ஆணானவன் தான் விரும்பிய பெண்ணைப் பற்றிய உள்ளுணர்வைத் தொலைத்து விட்டதனால் வேறொரு பெண்ணைச் சந்தித்துத் திருமணமும் புரிந்த பின் தான் தனது மனதுக்குரியவளைக் கடந்த பிறவியில் சந்தித்தான். அதனால் தான் பௌதீக உலகில் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பிரிந்திருக்க வேண்டிய சோகநிலை ஏற்பட்டது. ஆனால் அது பிழை என்பதல்ல. அவர்கள் இருவருமே அந்தத் தியாக அனுபவத்தின் மூலமாக வளர்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் இப்பிரிவானது உத்தேசிக்கப்படவில்லை என்றாலும் அம்மனிதன் மிக இளமையில் திருமணம் புரிந்த காரணத்தினால் இப்படியானது.
"அவர்களிருவரும் இப்போ ஒன்றாக இருக்கிறார்கள். அவர்களாக விரும்பினாலே அன்றி எந்தவொரு சக்தியாலும் அவர்களைப் பிரிக்கமுடியாது. அவர்கள் பிரிய விரும்புவதற்கும் சாத்தியங்கள் மிகமிகக் குறைவென்றே சொல்லலாம். ஏனெனில் கிட்டத்தட்ட ஆதியிலிருந்தே அவர்கள் ஒன்றாக இருந்திருக்கிறார்கள். இரட்டையாத்மாக்கள் (twin souls) என்றால் என்ன? அது இரு ஆத்மாக்கள் மிகவும் நாட்டம் கொண்டு கலந்து ஒன்றாவதேயன்றி வேறல்ல. அங்கே ஒவ்வொரு ஆத்மாவும் மற்றைய ஆத்மாவின் அண்மையினால் பலமாக உணரும். சில ஆத்மாக்கள் மற்றையவற்றிலும் பார்க்கச் சுதந்திரமானவை. அதாவது எமது இதயமானது தனியே செயல்படும்.  ஆனால் அதே நேரத்தில் கைவிரல்களோ கால்விரல்களோ மற்றவற்றினால் உறுதிப்பட்டோ சமநிலைப்பட்டோ இருக்கும். ஆத்மாக்களிலும் அப்படியே. சில ஆத்மாக்கள் சுதந்திரமானவை. சில மற்றவற்றைச் சார்ந்திருக்கும். இவற்றுள் எந்தவகை சிறந்ததென்று நாம் எப்படித் தீர்மானிக்க முடியும்? எம் உடல்களெல்லாம் எம்மைப் படைத்தவனின் எண்ணங்களின் வெளிப்பாடுகளே. அவன் சில பாகங்களைச் சுதந்திரமாகவும் சிலவற்றைச் சார்ந்திருக்கும் வண்ணமும் படைத்துள்ளான். ஆனால் முழுமையாகப் பார்க்கும் போது அந்த முழுமையின் பூரணத்துவத்துக்கு இன்றியமையாத வகையில் ஒவ்வொன்றும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன".
ஆவி நிலையிலுள்ள ஆத்மாக்களுக்கு ஆண் பெண்ணென்ற பாகுபாடு உள்ளதாவென நான் கேட்டேன். அதற்கு ஆர்தர், "இல்லை, ஆனால் இருபாலும் சேர்ந்தவர்கள் நாம் - மேலும் விளக்கமாகச் சொன்னால் நாம் இரண்டுமல்ல. ஒரு தனித்துவமான ஆணவமாகும் (ego). ஒவ்வொன்றும் மற்ற ஆத்மாவை விட வேறுபட்டதாகும். ஆனால் வகுக்கப்பட்ட பாலியலிலும் பார்க்க முழுமைத் தன்மையின் பூரணத்துவத்தைக் கொண்டுள்ளவையாகும். இங்கு நாம் சொன்னது போல பால் பாகுபாடில்லாத காரணத்தால் பாலுறவுகளில்லை. ஆனால் நாம் விரும்புபவர்களுடன் மிக உயர்வான முறையில் எம்மால் இணைய முடியும். அந்த இணைவானது பௌதீக நிலையிலிருக்கும் இணைவிலும் பார்க்க மிகவும் பரிபூரணமாக இருக்கும்" என்றார்.
நான் ஓரினச்சேர்க்கை (homosexuality) எதனாலேற்பட்டதென அறிய விரும்பினேன். அதற்கு அவர், "இங்கே தான் ஆணாகப் பிறப்பதா பெண்ணாகப் பிறப்பதாவென ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பவர்கள் தான் பாலியல் குழப்பங்களுடன் பௌதீக உடலுக்குத் திரும்புபவர்களாகும். அதனால் இந்த விதமாகவோ அந்த விதமாகவோ என்று ஏதும் முழுமையாக வரையறுக்கப்படாத உந்துகைகளுடன் பிறப்பதால் அவர்களுக்கு இப்படிப்பட்ட குழப்பங்களிருக்கும். இருபாலுறுப்புகளுடன் கூடிய உடலானது குழப்பமான எண்ண வடிவங்களாகும். ஏறக்குறைய விசித்திரமான சூழ்நிலைகளில் தாங்கள் எந்தப் பாலினத்தைத் தேர்வு செய்வதென்று முடிவெடுக்க முடியாமலிருக்கும் ஆத்மாக்கள் இவ்வாறு பிறக்கின்றன" என்றார்.