இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Tuesday, January 26, 2021

ஆறாவது அத்தியாயம் - இறப்பின்பின் நடப்பது என்ன? (What Happens After Death)


ஆர்தர் ஃபோர்டின்  பூவுலக வாழ்வின் இறுதியான சில மாதங்களின் போது அவர் மீண்டும் ஒரு புத்தகம் எழுதத்தொடங்கி இருப்பதாக நான் அறிந்திருந்தேன். ஆனால் அது எதைப்பற்றி என்று எனக்குத் தெரியாது. அவர் இறந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இருக்கையில் அவருக்கும் எனக்கும் தெரிந்த ஒரு நண்பர் வில்லியம் ராஸ்சர் அடிகளார் (Reverend William v. Rauscher) மூலமாக ஆர்தர் தனது புத்தகத்தின் தலைப்பைத் தெரிவு செய்து விட்டிருந்தார் என அறிந்து கொண்டேன். அந்தத் தலைப்பு என்னவென்றால் 'இறப்பின் பின் நடப்பது என்ன' என்பதாகும். அவரின் ஈமச்சடங்கு முடிந்த சில நாட்களிலேயே (காலை வேளைகளில்) என்னுடைய தட்டச்சு இயந்திரத்தைப் பதினைந்து நிமிடங்களுக்கு அவர் ஆட்கொள்கையில் இறப்பு என்கிற வாயிலின் மறுபக்க வாழ்வு எப்படியிருக்குமென்று விபரித்து நானும் அவரும் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதப்படவேண்டும் என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். அதாவது ஆர்தர் ஃபோர்ட் எனும் ஆத்மா ஒரு தீர்மானம் எடுத்தால் அதை நிறைவேற்றியே தீருமென்று காட்டிவிட்டார்.
புத்தகம் எழுதத்தொடங்கியதுமே அவர் பலவிதமான ஆத்மாக்களின் குணநலன்களைப் பற்றி விபரிக்கத் தொடங்கினார். ஃபெப்பிரவரி பதினான்காம் திகதியன்று அவர் பின்வருமாறு எழுதினார்: "இன்று ஒருவர் உயிருடனிருக்கையில் இறப்பின் பின் என்ன நடக்கும் என்பதைப் பற்றி எள்ளளவும் சிந்திக்காதவரும் ஆனால் அதில் நம்பிக்கையோ நம்பிக்கையின்மையோ கொள்ளாத, ஒரு பக்கமும் சாராத, உலக வாழ்க்கையின் இயந்திரத் தன்மையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் இதைப் பற்றி எண்ணுவதற்குக் கூட நேரமில்லாத ஒருவர் இங்கே வரும் போது எப்படிப்பட்டதோர் இடத்தைப் பார்ப்பார் என்பதைப் பார்ப்போம். அவர் விட்டுவிட்டு வந்த இடத்தைப் போலவே சற்று வித்தியாசமான ஓர் இடத்தில் தான் இருப்பதைக் கண்டார். பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை. அனைத்தும் சற்றுக்கூடுதல் பிரகாசத்துடன் தெளிவாக இருந்தன. அத்துடன் ஆகாயமானது மேகங்கள் இல்லாமல் இருந்தது. மற்றும் படி வேறு ஒரு மாற்றமும் இல்லாததால் அவர் தான் இன்னும் உயிருடன் இருப்பதாகவே எண்ணினார். எனவே அவர் தனது வழமையான காரியங்களைப் பார்க்க எண்ணி, அவரின் நினைவில் வந்த முதல் விஷயத்தைப் பார்ப்பதற்குச் சென்றார். அங்கே பலர் இருந்தாலும் கூடத் தன்னை ஏன் ஒருவரும் கவனிக்கவில்லையென அவருக்குப் புரியவில்லை. தான் அவர்களுக்கு ஏதாவது தீங்கிழைத்து இருப்பேனோ என மூளையைப் பிழிந்து யோசித்தார். அப்படி ஒன்றும் அவருக்குத் தெரியவில்லை. ஒரு சிலர் இவரின் நண்பர்களாகவே இருந்தார்கள். அவர்களுடன் ஒரு மனஸ்தாபமும் இவருக்கில்லை. அவர் பெரிய குழப்பத்துக்கு ஆளானார். பின் இங்கே இருக்கும் அவரைப் பூவுலகில் நன்கு தெரிந்த ஒருவர் அவருக்கு விஷயத்தை விளக்கி ஆறுதலளிக்க வந்தார். ஆனால் அவரோ இதென்ன இறந்தவரின் ஆவி தன் முன்னே தோன்றுகிறது என எண்ணி அஞ்சினார். வந்தவர், தானும் அவரும் இருவருமே இப்போ ஆவியுலகில் இருப்பதை அவருக்குப் புரிய வைக்க முயல அவரோ தான் ஒரு கெட்ட கனவு காண்பதாக எண்ணினார். அவர் தனது வீட்டுக்குத் தனது மனைவியைக் காணச்சென்றார். ஆனால் மனைவியோ சர்ச்சில் கறுப்பு உடை உடுத்திக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டார். அவர் தனது நண்பர்களில் யாரோ இறந்து விட்டார்கள்; அது யாராக இருக்குமென (அது தானாக இருக்கக் கூடுமென சற்றும் சந்தேகப்படாமல்) வியந்தார். பின் அவர் முன்னே சென்று யாரென்று அறிவதற்குப் பிரேதப் பெட்டியுள் குனிந்து பார்த்தார். அப்போது தான் முதல் தடவையாகத் தனது உடல் அங்கே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 'இப்படியிருக்காது இப்படி இருக்காது' எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், அவருடன் கூட வேலை செய்தவர்கள் அனைவரும் அவரது மரணத்தைப் பற்றி (தான் அவர்களுக்கு அருகே நின்று தொண்டைத் தண்ணீர் வற்றக் கத்திக் கொண்டிருந்தாலும் கூட) கவலைப்பட்டுப் பேசிக்கொண்டிருந்தனர். இப்போ அவரது நிலை உனக்குப் புரியுமென நினைக்கிறேன். சிறிது சிறிதாக அவருக்குத் தான் சிக்கலில் மாட்டிக்கொண்டது புரியத் தொடங்கியது. தான் பேசுவதை அவர்களுக்குப் புரியும்படி செய்ய முடியாவிடின் அவர்கள் தன்னை உயிருடன் புதைத்து விடுவார்களென அஞ்சினார். தான் பேசுவது அவருக்குத் (தனக்குத்) தெளிவாகக் கேட்டது. ஆவியுலகிலிருக்கும் தனது உறவினர் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள இயலாமல் தான் உயிருடன் புதைக்கப்படப் போகிறேனோ என வருந்தினார். 
"இது உதாரணத்துக்குச் சொல்லப்பட்ட ஒரு காட்சி. இதைப் போல சிலர் மிகவும் கஷ்டப்படுவார்கள். இறந்தபின் ஆத்மாவுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிச் சற்றேனும் சிந்தியாமல் இருப்பவர்கள் கிட்டத்தட்ட இந்நிலையில் தான் வருவார்கள். மூக்கைப் பிடித்தால் வாயைத் திறக்கத் தெரியாதவர்கள் போல் தான் இவரின் நிலை. அவருக்கு உண்மையைப் புரிய வைக்க மிக மிக நீண்ட நாட்கள் எடுக்கும். அதாவது அவர் நிரந்தரமானவர்; ஆத்மா வடிவில் உயிர் வாழ்வார்; பூதவுடல் மட்டும் தான் அழிந்தது என்பதைப் புரிய வைப்பதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும். அவரது விதவை மனைவியின் துயரிலும் பார்க்க அவரின் துயரம் மிகப்பெரிதாக இருக்கும். ஏனெனில் அவரது மனைவி அவரை ஒரு நாள் சந்திப்போமென ஆறுதல் கொள்வாள். ஆனால் அவரோ நடந்தது நிஜமல்ல என எண்ணுவார்.
மறுநாள் ஃபோர்ட் பின்வரும் விதமாகத் தொடங்கினார்: "இப்போ வேறொரு விதமான மனிதரைப் பார்ப்போம். அவர் சொர்க்க புரியில் நம்பிக்கை கொண்டவர். தேவ குமாரர்களும் தேவதைகளும் யாழ் வாசித்துக் கொண்டிருக்கும் பளிங்காலான மாடமாளிகைகள், கூட கோபுரங்களுடன் கூடிய சொர்க்கத்தில் ஒரு உயரமான சிம்மாசனத்தில் ஆண்டவன் அமர்ந்து கொண்டு இரவு பகலாக மகிழ்ச்சியான ஆத்மாக்களைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்பவை போன்ற கற்பனையில் உள்ளவர். இப்படியான மனநிலையில் தான் அமெரிக்கா மற்றும் ஏனைய இடங்களிலுள்ள சிறிய கிராமங்களைச் சேர்ந்த தேவாலயங்களைச் (சர்ச்) சார்ந்து வாழும் குறுகிய எண்ணம் கொண்ட பலர் உள்ளனர். ஆனால் உண்மை அதுவல்ல. இங்கே வரும் ஆத்மாக்கள் பளிங்காலான மாடமாளிகைகளில் இருக்க விரும்பினால் அவர்கள் அப்படிப்பட்ட இடங்களில் இருப்பார்கள். ஏனெனில் அப்படிப்பட்ட கட்டிடங்கள் பூவுலகில் நிறையவே உள்ளன. அத்துடன் ஆத்மாக்களுக்குத் தாங்கள் நினைக்கும் இடங்களுக்குச் செல்லக்கூடிய சக்தி வந்து விடும். ஆனால் தேவதைகளையும் தேவகுமாரர்களையும் சிறகுகளுடன் தோற்றுவிப்பது கடினமாகும். அப்படி அவர்கள் இருக்கும் பட்சத்தில் நான் இப்போ இருக்கும் இடத்தில் காணவில்லை என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் இங்கே பல ஆத்மாக்கள் ஒளி வடிவங்களாக உள்ளன. நல்ல ஆத்மாக்கள் ஒளி ரூபமாக இருக்கின்றன. ஆனால் நாம் சிறகுகளுடன் இருக்கவேண்டும் என்று எண்ணவில்லை. நாம் எங்காவது செல்ல எண்ணினால் அந்த எண்ணம் தான் எம்மை அந்த இடத்துக்குக் கொண்டு சேர்க்கும். சிறகுகளல்ல. அத்துடன் பூவுலகிலிருக்கும் எல்லாச் சடப்பொருட்களும் எண்ண வடிவம் என்பதால் நாம் அவற்றினூடே செல்லமுடிகிறது.
மற்றொரு நாள் அவர் பின்வருமாறு எழுதினார்: "நான் இன்று உனக்கு இங்கே இருக்கும் இன்னொரு இடத்தைப் பற்றிச் சொல்லப் போகிறேன். இதை ஒரு தங்கும் இடமென்று சொல்லலாம். சிலர் இங்கே மிக நீண்ட காலங்கள் தங்கி இருப்பார்கள். அவர்களுக்குத் தங்களால் முன்னேற முடியுமென்ற விழிப்புணர்ச்சியை ஏதேனும் ஒன்று உணர்த்தும் வரை அவர்கள் இப்படித் தங்கி இருப்பார்கள். கத்தோலிக்கர்கள் இதனைப் 'பேர்கேட்டறி' (Purgatory) என அழைப்பார்கள். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமானது. எல்லோரும் அங்கே சில காலம் தங்கியிருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அப்படியல்ல. இந்த இடைப்பட்ட நிலையிலிருக்கும் ஆத்மாக்களுக்காகக் கத்தோலிக்கர்கள் ஆண்டவனைப் பிரார்த்திப்பார்கள். உண்மையில் அங்கே பிரார்த்திப்பது இங்கே எமக்கு நன்மை செய்கிறது. அந்தப் பிரார்த்தனைகளால் உருவாக்கப்படும் அன்பு உணர்வலைகளை எங்களால் நிச்சயமாக உணரமுடிகிறது. இறப்பின்பின் வரும் இந்த உடனடி நிலையானது ஆத்மா இரு உலகங்களுக்கிடையில் இருக்கும் நிலையைக் குறிக்கும். கிட்டத்தட்டத் திரிசங்கு சொர்க்கம் (nebulism) போன்ற நிலையென்று சொல்லலாம். இது கெட்ட ஆத்மாக்களுக்கு மட்டும் உரிய நிலையல்ல. பெரும்பாலும் உலகமாயையில் முழுவதும் ஆழ்ந்து, ஆத்மீகமாக எந்த ஒரு ஆயத்தமும் இல்லாத ஆத்மாக்களுக்கும் தங்களது மேலுலக வாழ்வைத் தொடர விருப்பம் இல்லாதவர்களுக்குமான நிலையாகும். அவர்களில் சிலர் உறக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள். மற்றும் சிலர் ஒரு விதமான மனச்சோர்வுடன் திரிவார்கள். அவர்கள் முன்னேறுவதற்கு ஒரு விதமான முயற்சியும் எடுக்க மாட்டார்கள். ஒன்றையும் அறிவதற்கும் முயலமாட்டார்கள். அவர்கள் தங்களது உடலை நிரந்தரமானது, அழிவில்லாதது என எண்ணியிருந்ததால் அந்த உடலை விட்டுப் பிரிந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல் இருப்பார்கள்.
அப்படிப்பட்ட ஆத்மாக்களைப் பற்றி ஆர்தர் விபரிக்கையில், அங்குமில்லாமல், இங்குமில்லாமல் இடைப்பட்ட நிலையில் நீண்ட நெடுநாட்கள் மகிழ்ச்சியின்றி, மனஉளைச்சலுடன் திரிந்து கொண்டிருப்பார்கள் எனவும் தங்களது ஆத்ம ஈடேற்றத்துக்குத் தாங்களே முட்டுக்கட்டையாக இருப்பதாக உணரும் வரை அப்படியே இருப்பார்களெனவும் சொன்னார். தாமாக ஏதாவது முயற்சி எடுக்கும் வரை எவரும் எதுவும் செய்ய இயலாது என அப்போது உணர்வார்கள். அப்போது தான் உண்மையில் விழிப்புற்றவராவார். அவர்கள் அதை உணர்ந்ததும் அவர்களுக்கு உதவுவதற்கு அநேக மகிழ்ச்சியான ஆத்மாக்கள் காத்திருக்கும். அவ்வாத்மாக்கள் அவர் தடைகளைக் கடப்பதற்கு அவருக்கு உதவிகள் செய்யும். ஆர்தர் மேலும் தொடர்கையில், "சாதாரணமாக ஆத்ம உலகிற்குப் புதிதாக வரும் ஆத்மாக்களை முதலில் அவர்களது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், கூடப்படித்தவர்கள் போன்றோர் வரவேற்பார்கள். இதனால் அந்த நேரத்தில் தங்களது நைந்து போன உடல் நழுவிப்போக மீண்டும் யௌவனப் பருவமடைவதால் அவர்களுக்கு உண்டாகும் மனஅழுத்தத்தை அப்போதே உணர்ந்து முடிக்கக்கூடியதாக இருக்கும். நாம் எந்த வயதில் இறப்பைத் தழுவியிருப்பினும் இங்கே நாம் இளமையாகவே இருப்போம். குழந்தைகளும் கூடப் பொறுப்பான வழிநடத்தலின் காரணமாக அதி விரைவில் வளர்ச்சியடைந்து விடுவார்கள். ஏனெனில் ஆத்மாக்கள் எல்லாமே படைப்பின் ஆதியிலே தோன்றியவையே. எனவே இங்கே வயதான ஆசிரியர்களோ கெடுபிடியான பெற்றோர்களோ இருந்து கொண்டு ஏனைய ஆத்மாக்களைக் கட்டுப்படுத்த மாட்டார்கள். இங்கே ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையே நிலவுகிறது. இது முற்றிலும் உண்மையே.
"ஆரம்ப வணக்கங்கள் நிறைவு பெற்றதும் ஆத்மாக்களுக்கு இங்கே எப்படிப் பிரயாணம் செய்வது, எப்படி ஒருவர் மற்றவருடன் உரையாடுவது என்பவை போன்றனவும் அது சம்பந்தமான விதிமுறைகளும் விளக்கப்படும். உண்மையில் ஏற்கனவே அவர்கள் மனதால் தொடர்பு கொள்ளத் தொடங்கி இருப்பார்கள். எனவே அவ்விஷயங்களில் பெரிய விளக்கங்கள் ஒன்றும்  தேவையில்லை. பூவுலகில் சுவாசிப்பது எவ்வளவு இயற்கையானதோ அதை விடவும் இங்கே இம்முறைகள் இயற்கையானவை. பூவுலக வாசிகளுக்குச் சுவாசிக்கச் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. அதே போலத்தான் இங்கே உள்ளவர்களுக்கு ஒருவர் மற்றவருடன் எண்ணங்களின் மூலம் தொடர்பு கொள்வதும் நாம் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தில் இருப்போம் என்பதும் ஆகும். ஆத்மாக்கள் தமது நிலையை உணர்ந்து சந்தேகங்களைக் கேட்கத் தொடங்குகையில் தமது முந்தைய பிறவிகளின் ஞாபகங்களும் (முக்கியமாகக் கடைசியாக முடிந்த பிறவியின் ஞாபகங்கள்) வரத்தொடங்கும். தான் இப்போ முடித்து வந்த பிறவியில் நிறைவேற்ற என எடுத்துக் கொண்டவற்றில் ஏன் சிலவற்றை நிறைவேற்றவே இயலவில்லை என வியப்பார். அந்தந்த நேரங்களில் தனது நோக்கங்கள் எப்படியெப்படி இருந்தன என்பதை இப்போ எண்ணிப் பார்ப்பார். கடந்து போன அந்த வாழ்வைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது எந்தெந்த இடங்களில் பிழைகள் விட்டோமெனப் புரிந்து கொள்வார். அந்தப் பிறவியை எடுக்கும் போது என்னென்ன நிறைவேற்ற வேண்டுமெனப் பிறவி எடுத்தோமோ அது தனது ஆழ்மனதுக்குத் தெரிந்தேயிருக்க ஏன் தனது வெளிமனதுக்கு மட்டும் மறந்து போனது என வியப்பார்.
"இப்போ நாம் தெருவில் கார் அடிபட்டு இறந்ததால் திடீரென இங்கே வந்த ஒரு குழந்தையைப் பற்றிப் பார்ப்போம். அக்குழந்தை இந்தப் பிறவியில் ஒரு பாவமும் செய்தறியாதது. எனவே ஏன் அந்தப் பச்சிளம் குழந்தைக்கு அப்படி நடந்ததென்று ஒருவருக்கும் புரியாது. ஆனால் கொஞ்சம் பொறு! அக்குழந்தையின் ஆத்மாவும் அதன் பெற்றோரினதும் தாத்தா, பாட்டியினது ஆத்மாக்களும் ஒரே வயதுடையதாகத்தான் இருக்கும் இல்லையா? எனவே அக்குழந்தையும் தனது முந்தைய பிறவிகளில் செய்த தவறுகளால் தனது ஆத்மாவைக் களங்கப்படுத்தியிருக்கும் இல்லையா? அந்தக் கடனை அது அடைக்க வேண்டாமா? தற்செயலான நடவடிக்கையென்று ஒன்றுமில்லை. ஏனெனில் இங்கே போடப்படும் திட்டமானது என்றும் எல்லாவற்றையுமே சரிவர நடைபெறச் செய்யும். ஆனால் படுபயங்கரமான கெட்ட தன்மையானது கெட்டமனிதனின் மனதில் வெகு வேகமாக வளர்ந்து, சில விடயங்களை அங்கே நிறைவேற்ற என்று ஆரம்பத்திலே இங்கிருந்து போடப்பட்ட திட்டத்தை மீறச்செய்கிறது. ஹிட்லரின் விஷயத்தை எடுத்தோமெனில் பிறக்கும் போது தான் ஒரு ஓவியனாகத் தனது ஆத்மாவின் கலையார்வத்தை நிறைவேற்ற வேண்டுமெனத் திட்டமிட்டுப் பிறந்தாலும் ஜெர்மன் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியதும் காலகாலமாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஆத்மாவின் மனதிலே சேமிக்கப்பட்டிருந்த கெட்ட தன்மைகள் அனைத்தும் விஸ்வரூபமெடுத்து அவனை ஒரு அரக்கனாக மாற்றி விட்டன."
மற்றொரு முறை ஆர்தர் இறப்பின் பின் என்ன எதிர்பார்க்கலாம் என்று தெரிந்து கொண்டவர்கள், தங்களது பூதவுடலை நீக்கி விட்டு ஆத்ம உலகுக்கு முழு உணர்வோடு பயணமாகும் போது என்ன நடக்கும் என்பதைப் பற்றி விளக்கினார். அவர்கள் தாங்கள் தங்களது பூதவுடலை விட்டு விட்டதையும் தங்களின் உறவினர்கள் தங்களைப் பார்க்க இயலாது என்பதையும் புரிந்து கொள்வார்கள். தங்களது மரணச்சடங்குகளைக் காணச் செல்வார்கள் (இறுதியாகத் தங்களது உடலுக்கு வணக்கம் செலுத்த). அதன் பின்னர் அவர்களின் உறவினர்கள் அவர்களை எண்ணி வருந்தித் தங்களையும் வருத்திக் கொண்டிராவிடின் பாசவலைகளால் பின்னி இழுக்கப்படாமல், சுதந்திரமாகத் தங்களது மேலுலகப் பணிகளைச் செய்ய முனைவார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் இங்கே உண்மையாக முன்னேற்றம் காண்பார்கள். அவர்கள் தங்களை எண்ணங்களாலும் கருத்துகளாலும் அலங்கரித்துக் கொள்வார்கள். புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து உற்சாகமாக முன்னேற்றப் பாதையில் செல்வதில் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வழிகள் நிச்சயமாக முன்னோக்கியும் மேல்நோக்கியும் அவர்களை அழைத்துச் சென்று, அவர்கள் எம்மைப் படைத்தவனுடன் சேர வழி வகுக்கும். ஆரம்பத்தில் அவர்கள் பாடசாலைக்குச் செல்வார்கள். அங்கே ஆசிரியர்கள் சில சமயங்களில் ஆத்மாக்களின் காலடியில் அமர்ந்து கொண்டும் சில சமயங்களில் அவர்களுக்கு மேலே மிதந்து கொண்டும் பாடங்களை நடத்துவார்கள். ஆனால் அவர்களும் பூவுலகில் ஆத்மாக்களுக்குத் தெரிந்த ரூபங்களைப் போன்றே உண்மையான ரூபத்துடன் தான் காணப்படுவார்கள். 
"அந்த ஆசிரியர்கள் அடிப்படை அறிவுகளையும் கீழைத்தேய நாடுகளின் தத்துவங்களையும் மற்றும் புதிய தத்துவங்களான கிறிஸ்துவம், இஸ்லாம் போன்றவற்றையும் பற்றி விளங்கப் படுத்துவார்கள். இவற்றையெல்லாம் கற்பவர்கள் உணர்ந்து கொண்ட பின், அவர்களுக்குக் கிறிஸ்துவானவர் பூவுலகில் யேசு எனும் மனிதனாக நடைபயில்கையில் அறிந்திருந்ததைப் போன்ற சிறப்புக் கல்வியானது கற்பிக்கப்படும். அவர்கள் இறைவன் சந்நிதானத்தில் உழைக்க மட்டும் செய்யவில்லை. அவர்கள் பேரானந்தத்தை அடையும் பாதையில் ஸ்திரமாகக் கால்களைப் பதித்துச் செல்பவர்களாகும். பூவுலகில் நாம் உபயோகிக்கும் 'தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்' என்பது போன்ற சொல்லால் இவர்களை நாம் அழைக்கலாம். அவர்கள் இங்கே கண் விழிக்கையில் தங்களது கடந்து போன பிறவிகளைப் பற்றியும் இனித் தாங்கள் எடுக்கப் போகும் பிறவிளைப் பற்றியும் முழுவதுமாக உணர்ந்தேயிருப்பார்கள். இவர்கள் கூர்மையான நினைவுத் திறனுள்ளவர்கள். அவர்கள் பிறவிகளின் இடையே இங்கே அறியப்படுகின்ற ஆத்மீக அறிவுகளைப் பூவுலக வாழ்க்கையின் போது பறிகொடுக்காமல் காப்பாற்றுவார்கள். நாம் இங்கே அறிந்து கொண்டவற்றில் இருந்து உதாரணத்துக்கு, இங்கே முன்னேறுவதற்குரிய சிறந்த வழியானது அன்பு செலுத்துவதாகும் என்று அறிவோம். வேறொரு ஆத்மாவுக்கு நாம் தீங்கு நினைத்தால், அந்த எண்ணமே எமது முன்னேற்றத்தைப் பெரிதும் பாதிக்கும். அந்த எண்ணமே (அந்த எண்ணத்தால் எழுந்த கறையைப் போக்குவதற்குச்) சில சமயம் எமக்குப் பல பிறவிகள் எடுப்பதற்கு வழிகோலும். தீயனவற்றை உரைக்காதே. தீயனவற்றை நினைக்காதே. நாம் தான் பாவங்களை உருவாக்குகிறோம். இங்கே சாத்தான் இருப்பதற்கான எந்த ஒரு சுவடும் இல்லை. நமது  எண்ணங்களாலும் அவற்றைத் தொடரும் எமது செய்கைகளாலும் நாம் தான் சாத்தானை உருவாக்குகிறோம். 
நான் ஆர்தர் ஃபோர்டிடம் 'சாத்தான்' என்ற கருத்தை விளக்குமாறு கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "மனிதனுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரிந்ததும் ஆனால் உலக விருப்பு வெறுப்புகளால் நாம் மறந்து போனதுமான ஞானமானது எமக்கு இங்கே போதிக்கப்படும். அது ஆதியிலிருந்தே இருக்கும் ஞானமாகும். இந்த உலகுக்குரிய ஆசை அபிலாஷைகள், வெறுப்புகள், காமம் போன்றவற்றைத் தள்ளி வைப்பதன் மூலம் பூதவுடலுக்குரிய வரையறைகளை உயிரோடு இருக்கையிலேயே மீறலாம் என்பதை நாம் அறிவோம். இந்த உலக மாயையில் நாம் ஆழ்ந்து போவதற்குக் காரணம் நம் உள்ளத்தே தூண்டுவிக்கப்படும் ஆசை அபிலாஷைகளே. அப்படித் தூண்டுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசை அபிலாஷைகளை வெற்றி கொள்வதே உயர்நிலையை எய்துவதற்குரிய விரைவான வழியாகும். முடிவற்ற வாழ்வின் ஒரு மின்னலான கணமே இப்பூவுலக வாழ்வென்பதைப் புரிந்து கொண்டால் மனத்தின் இச்சலனங்களை வெற்றி கொள்வது இலகுவாகும். அந்த மின்னலான கணப்பொழுதில் (பூவுலகில்) தூண்டுவிக்கப்படும் ஆசைகளுக்காக ஏன் ஒருவரின் முன்னேற்றங்களைத் தடுக்க வேண்டும்? இந்தச் சிந்தனையை என்றும் மனதில் வைத்திருக்க வேண்டும். மனிதனைச் சூழ்ந்து நின்று ஆசை வேட்கைகளால் அவன் தன்னைப் படைத்தவனையே மறக்கும்படி செய்யும் இந்தத் தீய சக்திகளை வெல்வது மிக மிக முக்கியமானது.
"இந்தத் தீயசக்திகளானவை சில மத போதகர்களால் சொல்லப்படுவது போல சைத்தானின் வேலையல்ல. ஆனால் கெட்ட எண்ணங்களைச் சிலர் எண்ணுவதால் சூழலில் நிலையாக ஏற்படுத்தப்படும் தீய அலைகளாகும். நிலையான கறைகளாகும். 'நிலையான' என்று சொல்வது சிலவேளை உண்மை இல்லாமலும் இருக்கலாம். ஏனெனில் பலர் நல்ல எண்ணங்களை எண்ணுவதால் உண்டாக்கப்படும் நல்ல அலைகள் இந்தத் தீய அலைகளின் சக்திகளை நிர்மூலமாக்கும். அதற்குப் போதுமான அளவு நல்ல அலைகளானது உருவாக்கப்படல் வேண்டும். சைத்தான் என்ற ஒன்று உள்ளது. ஆனால் அது நாம் நினைப்பது போல இல்லை. மனிதனானவன் இப்பூவுலகில் கால் வைத்ததில் இருந்து சேகரிக்கப் பட்டிருக்கும் தீயசக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்ததே இந்தச் சைத்தான் ஆகும். அது தீமைகளின் விளைவேயாகும். மனிதனால் கர்த்தர் போல இருக்க இயலாததால் ஒவ்வொரு தலைமுறையும் அதனது தீய செயல்களால் இந்தத் தீய சக்திக்கு உரம் போட்டு அதன் மூலம் உருவான அந்தத் தீய சக்தியே சைத்தானென நாம் எண்ணுவதாகும்.
சைத்தான் என்பது ஒரு நபரல்ல. எவ்வாறு ஒவ்வொரு கருணையான, நன்மையான செய்கையாலும் நல்ல சக்தியானது பிரகாசிக்கிறதோ அவ்வாறே இந்தத் தீய சக்தி ஒவ்வொரு தீய செய்கையாலும் உரமூட்டப்பட்டு மிகச்சக்தி வாய்ந்த விசையாக உள்ளது. அதுதான் சைத்தான். ஆரம்பத்தில் ஒரு சொல் இருந்தது. அது நல்ல சொல்லாக இருந்தது. நிச்சயமாக அது 'கடவுள்' என்னும் சொல்லாகும். ஆத்மாக்களுக்காக இவ்வுலகினைப் படைத்த தந்தையானவன் தீயசக்திகளைக் கலக்கவில்லை. ஆனால் வழிதவறிய ஆத்மாக்கள் பௌதீக உடலெடுத்துத் தங்களது சொந்த முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காகப் பேராசைப்பட்டுச் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு அதனால் உருவாக்கப்பட்ட தீயசக்திகளின் மொத்த உருவை அவர்கள் சைத்தானென அழைக்கத் தொடங்கினர். சைத்தானை இறைவன் படைக்கவில்லை. மனிதன் தான் படைத்தான். அது ஒரு கெட்ட ஆத்மாவல்ல. ஆனால் மனிதனின் தீய குணங்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பு. அதற்கு எமது கீழான எண்ணங்களினாலும் செயல்களினாலும் உயிரூட்டிக் கொண்டிருக்கிறோம். எண்ணங்களும் செயல்களே என்பதனை நாம் உணரவேண்டும். ஒவ்வொரு கெட்ட சிந்தனையும் செயலும் அன்பான, கருணையான சிந்தனையாலும் செயலாலும் இடமாற்றப்பட்டால் சைத்தானின் வடிவம் சிறியதாகிக் கொண்டே வரும். சைத்தானை அழிக்க வேண்டுமெனில் நாம் இதனை உணரவேண்டும். எனவே நாம் எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த இரண்டாயிரமாம் ஆண்டை அண்மிக்கையில், பூவுலகில் வாழும் அனைவரது இதயங்களிலும் கெட்ட எண்ணங்களுக்குப் பதிலாக நல்ல எண்ணங்களே நிறைந்திருக்கும். பூவுலகில் மட்டுமல்ல நாம் இப்போ செய்வது போல ஆத்ம உலகிலும் நல்லனவே நிறைந்திருக்கும்."
விலங்குகளுக்கும் கூட இறப்பில்லையா என அறிய விரும்பினேன். அதற்கு ஆர்தர் பின்வருமாறு பதிலளித்தார்: "இங்கே நேரம் என்பதற்கு அர்த்தமில்லை. எங்களுக்கு வயதாவதில்லை. நாம் ஆரம்பத்திலிருந்தே இருந்து கொண்டிருக்கிறோம். எமக்கு முடிவில்லை. நாம் இங்கே இருப்பதே நேரம் என்பதை விளக்கப் போதுமானது. இந்த உண்மையைச் சரிவரப் புரிந்து கொள்வோமெனில் ஏன் தேவையற்ற விஷயமென்று ஒன்றுமில்லை எனப் புரிந்து கொள்ளமுடியும். ஒன்றுமே இறப்பதில்லை. மீண்டும் அதனை அழுத்திச் சொல்கிறேன். ஒன்றுமே இறப்பதில்லை. இறப்பு என்று ஒன்றுமே இல்லை. படைப்பின் ஆரம்பத்திலிருந்தே எல்லாம் இருந்து கொண்டே இருக்கின்றன. எவையும் அழிவதில்லை. ஆனால் அவைகளின் நிலைகள் மாறுதலடையும். ஒரு கூட்டுப்புழு வண்ணாத்திப் பூச்சியாய் மாறிப் பின் அதன் ஆத்மா வேறொரு நிலைக்கு மாறியவுடன் அதனுடல் மீண்டும் அதனது மூலப் பொருட்களுக்குத் திரும்பும். ஆத்மா என்றும் மாறாதது. அநாதியானது. ஆனால் அதன் நிலைகள் மாறுதலடையும். பௌதீக உலகில் எமது கையால் அடிபடும் ஈயானது வேறொரு உலகில் நிலை மாற்றமடையும். ஆனால் ஈயான அதனது தன்மையானது மாறாது. காரில் அடிபட்டு இறக்கும் நாயின் நிலையும் இதே தான். அதனது பூதவுடல் பூமிக்குச் சென்றடையும். அதனது ஆத்மா ஏனைய ஆத்மாக்களைப் போலவே அழிவற்றதாகையால் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும். இது ஒரு மாறாத நியதியாகும். நாம் ஆரம்பத்தில் இருந்தது போலவே என்றும் இருப்போம். ஆனால் ஆத்மீக வழிகளில் முன்னேறிக்கொண்டு இருப்போம். சில நேரங்களில் ஒரு உண்மையான செல்லப்பிராணி (நாய் போல) பூவுலகில் மிக மிக முன்னேறினால் அது மீண்டும் பூவுலகிற்குத் திரும்ப வேண்டியிருக்காது. ஆனால் மேலுலகிலும் அது நாயாகவே இருக்கும். தனது முழு வாழ்க்கையையும் மற்றவருக்கு உதவக்கூடியதாகவும் அவர்களைக் காப்பாற்றக் கூடியதாகவும் முழுமையாக அர்ப்பணிக்கக் கூடியதான ஒரு அன்பான ஆத்மாவாக இருப்பதிலும் பார்க்க உயர்வான நிலை தான் வேறு என்ன? தன்னலம் கருதாது எப்போதும் எஜமானனின் நலனை முன்னே வைத்ததனால் அந்த நாயானது கடவுளின் பார்வையில் பூரணமாகிவிட்டது. எங்கள் எல்லோருக்கும் எவ்வளவு சிறந்ததொரு உதாரணமென்று பார்த்தாயா நாமும் எப்பொழுதும் எம்முடைய நலனைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிராமல் ஏனையோரின் நலனைப் பற்றியும் கருத்தில் கொண்டோமாயின் பூரணமானவர்கள் ஆவோம். நாம் எந்த விதமான பிறவி எடுத்திருந்தாலும் எங்கள் நலனிலும் பார்க்க மற்றையோரின் நலனைக் கருத்தில் கொண்டால் முன்னேறலாம்."
அவர் தொடர்ந்து எழுதுகையில், "நாய்களோ, பூனைகளோ அல்லது வேறு எந்த வகையான செல்லப் பிராணிகளோ சில மாறுபட்ட குணாதிசயங்களைக் காட்டும். சில விரும்பத்தக்கதாக இருக்கலாம். சில விரும்பத்தகாததாகவும் இருக்கலாம். விலங்குகள், தாவரங்கள், கனிமங்கள், பறவைகள் போன்றவற்றின் ஆத்மாவானது மனிதர்களின் ஆத்மாவிலும் பார்க்க வித்தியாசமான இறைசக்தியாகும். ஒரு அணுவானது உடைந்து சிற்றணுக்களாக மாறுவதைப் போல் அவை ஆத்மாவின் பகுதிகளாகப் பிரிந்து முழுமையில்லாத பகுதி ஆத்மாக்களாக, சிற்சில விடயங்களை மட்டும் நிறைவேற்றும். முழுமையான மனித ஆத்மாவாக மாறக் கூடிய வல்லமையை இழந்தவைகளாகச் செயற்படும். இந்த மரங்கள், பறவைகள், பாறைகள், மிருகங்கள், காட்டு விலங்குகள், மண் போன்ற எல்லாவகையான உயிரினங்களுக்கும் ஒரு தனித்தன்மையும் ஆத்மாவும் உள்ளன. ஆனால் அவை பூவுலகில் வாழும் மனிதனின் ஆத்மாவை விட முற்றிலும் வேறுபட்டவை. இவையும் சுவாசிக்கும், உயிர் வாழும் பிறவிகளாகும். இவையும் கடவுளின் ஒரு பகுதியேயாகும். அவை பூவுலகில் வாழும் மனிதனின் ஆத்மாவைப் போல் மிக முன்னேற்றம் அடையாவிடினும் எம்மைப் படைத்தவனையே என்றும் பிரதிபலிப்பனவாகும். அதாவது மனிதர்களாகிய நாம் எப்படி அன்புக்குக் கட்டுப்படுகிறோமோ அவையும் அதே போலவே கட்டுப்படும். அவற்றுக்கு வேறுபட்ட விருப்பு வெறுப்புகளிருக்கும். அவற்றின் விளையாட்டுத் தனங்களும் கோபதாபங்களும் வேறுபட்டவை. அவை தங்களுக்கென அமைந்த செயற்பாடுகைச் செய்து ஒன்றில் நல்லவையாகவோ, கேட்டவையாகவோ அவைகளுக்கென்று அமைந்த தனிப்பட்ட குணநலன்களின் படி வரும். அந்தத் தனிப்பட்ட தன்மைகள் ஆத்மாவின் தன்மைகளாகும். அதனால் தான் சில வளரும் தாவரங்கள் பிரார்த்தனைக்குப் பதிலளிப்பதாகத் தெரியும்; சில என்னதான் அன்புடன் பராமரித்தாலும் ஒத்துழைக்கமாட்டா. சில மனிதர்களும் அவ்வாறே நடப்பதைக் கண்டிருப்பாயென நினைக்கிறேன். சிலர் சற்றும் ஏனையவர்களைப் பற்றிச் சிந்திக்காமல், கடமைகளை மறந்து திரிவார்கள். சிலர் மற்றையவர்களின் நிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவார்கள். மற்றையவர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள்.
"இங்கே ஞானாலயத்தில் ஒவ்வொரு உயிரினத்துக்காகவும் செய்யப்படும்  பிரார்த்தனைகளின் பலன்களைப் பற்றி அறிகிறோம். அவை உடல் உபாதைகளைப் போக்கும் சிகிச்சையாகவும் இருக்கலாம் அல்லது ஆத்மீக முன்னேற்றத்துக்குரிய முயற்சிகளாயும் இருக்கலாம். தாவரங்கள், பிராணிகள், கற்பாறைகள், பூச்சிபுழுக்கள் போன்ற எம்மால் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய, உணரக்கூடிய, சுவைக்கக்கூடிய எல்லாப்பொருட்களும் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்கக் கூடியன என நாமறிகிறோம். எல்லாம் வல்ல இறைவன் தனது படைப்புகளில் நிறைந்திருப்பதோடு அவைகளின் முன்னேற்றத்துக்கான உண்மையான பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்க்கிறான். மரங்களிடையே உலவும் காற்றின் குரலும் பறவைகளின் ஒலியும் பூச்சியினங்களின் ஒலியும் மனிதனின் கூக்குரலும் இறைவனுக்கு ஒரே விதமாகவே கேட்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு விதமாக இறைவனுடன் தொடர்பு கொள்ளும். இறைவன் எல்லா விதமான முனகல், ரீங்காரம், கூக்குரல் போன்ற எல்லாவற்றுக்கும் (அது இறைவனுக்கு விடும் அழைப்போ அல்லது ஒன்றுடனொன்று தொடர்பு கொள்ளும் ஒலியோ) செவி சாய்ப்பார். இதை ஒரு கற்பனைக் கதையென்று எண்ணிவிடாதே. இவையெல்லாம் உண்மையே ருத். நாம் எல்லா உயிரினங்களுடனும் (ஆத்ம வடிவிலோ அல்லது பௌதீக வடிவிலோ) தொடர்பு கொள்ளக்கூடியதாக வரும் வரையும் நாம் இறைவனுடன் இரண்டறக் கலக்கக்கூடிய நிலையை அடையமாட்டோம். உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதனை எண்ணிப்பார். பாறைகள், மரங்கள், கற்கள் போன்றவற்றின் குரல்களையும் பூச்சியினங்களினது ரீங்காரங்களையும் அதேபோல எல்லாவகையான உயிர்வகையினதும் ஒலிகளையும் கவனிக்கக் கற்றுக்கொள். எம் எல்லோரையும் ஒன்றிணைக்கும், எம் ஒவ்வொருவரையும்  இறைவனின் வடிவங்களாக்கும் அந்த இணைப்பின் மூலம் அவற்றுடன் தொடர்பு கொண்டு அவற்றின் ரகசியங்களை அறி. நாம் சடப்பொருட்களென்று எண்ணுபவை எல்லாம் எம்மைப் போன்றவையே. ஒவ்வொன்றுக்கும் அதனதன் வழியில் உயிர் வாழ்க்கைகள் உள்ளன. கற்பாறைகளும் பறவைகள், வண்டினங்கள், மனிதர்கள் போலவே இறைவனின் மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியே. ஒவ்வொரு உயிரினத்துக்கும் இறைவனின் மாபெரும் திட்டத்தில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய குழப்பத்துடன் நான் "எமக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சியினங்களை அழிக்கலாமா" எனக்கேட்டேன். அதற்கு அவர், "பூச்சி புழுக்களானவை தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து விலகி வந்தால் அவை மனிதனால் அழிக்கப்படுவார்கள். எல்லா உயிரினத்துக்கும் இப்பூவுலகில் இடம் வேண்டும். டைனசோர் வகையைச் சேர்ந்த பிரம்மாண்டமான விலங்குகள் ஏனைய விலங்குகள், பறவைகள், மனிதரின் இடங்களை அபகரிக்கப் பார்த்ததனால் பூமியின் பரப்பிலிருந்து மறைந்து விட்டன. இது மனிதனுக்கு ஒரு பாடமாக அமையட்டும். மனிதனும் பல்கிப்பெருகி, அழிவுப்பாதையில் சென்று ஏனைய உயிரினங்களின் அழிவுக்கும் காரணமானான் எனில் மனிதகுலமும் அழிவை சந்திக்க வேண்டிவரும். நீ குறிப்பிட்ட இந்தப் பூச்சியினங்களும் பல்கிப்பெருகி மனிதனுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தால் அவையும் அழிய வேண்டியவையே. இப்பூவுலகில் எமக்கென உள்ள இடத்தை மீறி நாம் அமைதியைக் குலைப்போமாயின் நாம் இங்கிருந்து அகற்றப்படுவோம். ஆனால் ஆன்மீக ரீதியில் உண்மையில் ஒன்றுமே எப்போதும் அழிவதில்லை.
பூச்சிபுழுக்களையும் டைனசோர்களையும் மனிதனுடன் ஒப்பிட்டதனை எண்ணி நான் வியந்தேன்: மனிதன் இந்தப் பிரபஞ்சத்தையே குப்பை மேடாக்குபவனே. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதன் நீரோடை, ஏரி, குளங்களை அசுத்தமாக்குகிறான். தூய்மையாக இருந்த காற்றை அசுத்தப்படுத்திவிட்டான். கனிப்பொருள் நிறைந்த மண்ணை ஆயிரக்கணக்கான ஏக்கர்களாகக் காங்கிரீட்டைப் பாவி மூடிவிட்டான். காடுகளை அழிக்கின்றான். இவற்றின் மூலம் பழைய அழிந்துபோன விலங்குகள் போல் நாமும் எமது அழிவை எழுதிச்செல்கிறோமா?

No comments: