இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Tuesday, February 16, 2021

நான்காவது அத்தியாயம்: மேலுலகக் கணனிகள் (Heavenly Computers)

மீன்பிடிக்கும் அந்த மனிதரையும் அவரது செய்கையை ஒருவரும் பாராட்டாமல் போனதையும் நினைக்கப் பரிதாபமாக இருந்தது. ஆனால் ஆர்தர் ஃபோர்ட் இவரிலும் பார்க்க அதிகப் பிரச்சினை உள்ளவர்களும் மேலுலகில் உள்ளனர் என்றார். இங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றுவதற்குச் சிரமப்படுபவர்கள் மறு உலகவாழ்வு ஒன்று இருப்பதை நம்ப மறுத்தவர்களாகவோ அல்லது இதற்குக் கொஞ்சம் கூடத் தங்களைத் தயார் செய்யாதவர்களாகவோ இருக்க வேண்டும். எனவே எதிர்பாராத இந்தச் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்களை மாற்ற முயலாதிருப்பர். உதாரணமாக இறை நம்பிக்கையற்ற நாத்திகவாதி ஒருவர் தனது வாழ்வு முழுவதும் மறு உலகமொன்று இல்லையென வாதிட்டார். தன் இறப்பின் பின் மறு உலகில் கண்விழித்தார். ஆரம்பத்தில் அவருக்கு வியப்பாகவிருந்தது. பின்னர் கோபமுற்றார். ஏனெனில் இது தனது மனப்பிரமை அல்லது கற்பனை என எண்ணினார். அவருக்கு உதவுவதற்கு வந்தவர்களையும் தனது விபரீதக் கற்பனையின் விளைவுகளென எண்ணினார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தயங்கித் தயங்கித் தனது பிழையை ஏற்றுக் கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு எல்லாமே புரிபடத் தொடங்க இம் மேலுலகினைப் பற்றிய அனைத்து விடயங்களையும் அறிவதற்கு வெகு ஆவலானார். அவரைப் பொறுத்தவரையில் முன்னர் இப்படியான ஒன்றே இல்லையென்று இருந்தவர்.
இன்னொரு உதாரணத்தை எடுப்போம். இம்மனிதர் கடவுள் இல்லையென்றே மனதில் திடமாக நம்பியவர். இறப்புக்குப் பின் வாழ்வு இல்லையென்றே இருந்தவர். அவர் பூவுலகில் ஏனையவர்களுக்கு எல்லாம் கொடுமை இழைத்தார். ஏனையவர்களுக்கு உதவும் மனப்பான்மையே அவரிடமில்லை. மொத்தத்தில் அவர் ஒரு நல்ல பிரஜையாக இருக்கவில்லை. அவர் மேலுலகுக்கு வந்த போது கடுங்கோபமுற்றார். ஏனெனில் அவர் தானே உருவாக்கிய ஒரு உலகில் இருந்தார். அவரைச் சூழ்ந்து பேராசை கொண்ட ஆத்மாக்களிருந்தன. அவைகளும் அதே சூழ்நிலையில் தான் அங்கு வந்திருந்தன. ஒத்த கருத்துள்ளவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பதற்கிணங்க அவர் அவைகளின் நடுவேயிருந்தார். அந்த ஆத்மாக்கள் தாங்களே உருவாக்கிய நரகத்துக்கு இவரை வரவேற்றனர். அவர் அதிர்ச்சியுற்றார். அவர் இப்படிப்பட்ட மனிதர்களிடையே இருக்க விரும்பவில்லை. அவர்கள் குரூரம் நிறைந்தவர்களாகக் காட்டுமிராண்டித் தனமான பழக்க வழக்கங்களுடன் காணப்பட்டனர். அவர் யாருக்காகவும் விட்டுக்கொடாதவர், படித்தவர், உடை நுனியில் கூட அழுக்குப் படாத மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர். தன்னைத் தவிர வேறு எவரைப் பற்றியுமே கவலைப்படாதவர். அந்தத் துஷ்டர்கள் கூட்டத்திலிருந்து விலகுவதற்கு முயன்றார். ஆனால் அவர்கள் இவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர் உதவிக்கு யாரையாவது அழைத்தார். நல்ல குணமுடைய ஒருவராலும் அந்தத் தீயவர்கள் வட்டத்துள் புக முடியாததனால் அவரைக் காப்பாற்ற ஒருவராலும் முடியவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அவருடைய சவக்குழியை அவரே தோண்டிக் கொண்டார். அதற்குள் அவர் சிறிது நாட்கள் இருக்க விடப்பட்டுள்ளார். 
இப்போ அவருக்குத் தான் புரிந்த முட்டாள் தனமான காரியங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிபடத் தொடங்கின. இதிலிருந்து எப்படி விடுபடுவதென்று தெரியாமல் மனம் கலங்கினார். அவர் தனது தவறை உணர்ந்து உள்ளூர மனம் வருந்தி, அரிதாகக் கிடைத்த இந்த மானுடப் பிறவியைத் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்ததால் வீணாக்கி விட்டதாக உணர்ந்து கொள்ளும் வரை அங்கேயே விடப்படுவார். அவர் முழுவதுமாகப் பச்சாதாபப்பட்டு உணர்ந்து திருந்தியதன் பின் திருந்தாத ஆத்மாக்களின் பிடியிலிருந்து தானே தன்னை விடுவித்துக் கொள்ளலாம். அதன் பின்னர் அவர் தனது முந்தைய தவறுகளை மறுபரிசீலனை செய்யும் முகமாக நீண்ட காலத்துக்கு ஆத்மீகத் தேடலில் ஈடுபடுவார். அது சில சமயங்களில் மிக மிக நீண்ட பணியாக அமைவதுண்டு. ஏனெனில் அவர் அந்தப் பாதையில் தனியே செல்ல வேண்டும். அவர் மட்டுமே தனது குற்றங்களைச் சரியாகக் கணிப்பிடவும் அதற்கு மன்னிப்புக் கேட்கவும் இயலும். அதே நேரம் அவர் நாடும் பட்சத்தில் அவருக்கு உதவுவதற்கு இங்கே பல கரங்கள் காத்திருக்கின்றன.
ஃபோர்ட் அடுத்ததாகத் தனது கவனத்தை அகால மரணங்களில் செலுத்தினார். "இன்று நாம் விபத்து, கொலை, போர் போன்றவற்றினால் எந்தவிதமான ஆயத்தமுமில்லாமல், அவர்கள் தரப்பில் ஏதும் பிழையுமில்லாமல் திடுமென மேலுலகில் நிற்பவர்களைப் பற்றிப் பார்ப்போம். முதலில் தாம் மேலுலகில் இருப்பதையும் பூவுலகில் இருப்பவர்களால் தங்களை அடையாளம் காண இயலாமல் இருப்பதையும் அறிந்து அதிர்ச்சியுறுவார்கள். ஆனால் அவர்கள் பூவுலகில் இருக்கும் போது மறுவுலக வாழ்வை மறுப்பவராயில்லாமல் இருந்தால், ஓரளவு விரைவாக இச் சூழ்நிலைக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்வார்கள். நீண்ட நாட்களுக்குச் சுகயீனமுற்று இறப்பை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தவர்களிலும் பார்க்க இவர்கள் சில நேரங்களில் நீண்ட காலத்துக்குத் தூக்கம் கொள்வார்கள். ஆனால் அவர்கள் பெரும் பிழையேதும் புரியவில்லை என்றால் இங்குள்ள சூழ்நிலைக்கு அவர்களைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கு இங்கு பல உதவும் கரங்கள் காத்திருக்கின்றன. அதனால் அவர்கள் விரைவில் புரிந்து கொள்ளத் தொடங்குவார்கள். சில சமயங்களில் இவர்கள் ஏனையோரிலும் பார்க்க மிக ஆர்வமாக இங்குள்ள பணிகளைச் செய்வதற்கு சித்தமாவார்கள்."
"மனதில் கசப்பான உணர்வுகளை அதிகம் கொண்டவர்கள் இச்சூழலுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள மிகவும் கஷ்டப்படுவார்கள். போருக்குத் தாங்கள் அனுப்பப்படுவதை வெறுக்கும் படைவீரர்களும் இதிலே அடங்குவர். தாங்கள் அனுபவித்துக் கொண்டிருந்த இளமையான பலம் நிறைந்த உடலை இழந்து விட்டதை அறிந்து ஆத்திரமடைவர். இது எல்லாப் படை வீரர்களுக்கும் சேவை செய்பவர்களுக்கும் பொருந்தாது என்பதைத் தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். நான் இப்போ சொல்வது மனித குலத்தின் விடுதலைக்காகத் தங்களது உயிரைக் கொடுக்க விரும்பாத, போர்களை வெறுப்பவர்களைப் பற்றியே சொல்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை போரென்பது அவசியமற்றது. அவர்கள் பூவுலகிலிருக்கும் போதும் மேலிடத்தில் எடுக்கப்படும் முடிவுகளை எதிர்த்தார்கள். இங்கு வந்ததன் பிற்பாடும் அதே மனநிலையிலேயே இருப்பார்கள். அதாவது இங்கிருக்கும் அன்பான ஆத்மாக்கள், அவர்கள் தங்களது ஆத்ம முன்னேற்றத்தைத் தாங்களே தடுத்துக் கொண்டிருப்பதை அவர்களுக்கு உணர்த்தும் வரை அவர்கள் அப்படியே இருப்பார்கள். எங்களால் மாற்ற முடியாத விஷயங்களுக்காக வீணாக மனஉளைச்சல் பட்டுக் கொண்டு வாழ்க்கையை வீணடிப்பதில் அர்த்தமேயில்லை."
"நாம் இப்போ வாழ்க்கையை வெறுத்துத் தற்கொலை செய்து கொண்டவர்களைப் பற்றிப் பார்ப்போம். இங்கு வருகையில் அவர்கள் மனப்போராட்டதுடன் இருப்பார்கள். ஏனைய உயிர்களைக் கொல்வது போல் தன்னுயிரைத் தான் எடுப்பதற்கும் ஒருவருக்கும் உரிமையில்லை. ஏனெனில் அனைவரும் இறைவனின் ஒரு பகுதியே. தற்காலிக மூளை மாறாட்டத்தில் தற்கொலை செய்தவர்கள் வெகு விரைவில் தங்களைத் தற்கொலைக்குத் தூண்டிய போலியான காரணிகளை உணர்ந்து அவற்றிலிருந்து விடுபடுவார்கள். அவர்களது உணரும் திறன்மூலம் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு இப்படி நடந்ததற்கான காரணிகளை விளங்கிக் கொள்ளும் போது விபத்தினால் இங்கு வந்தவர்களைப் போலவே இவர்களும் மிக விரைவில் புதிய சூழலுக்குத் தங்களைத் தயார் செய்து கொள்வார்கள்.
ஆனால் எல்லோரும் அப்படி அதிர்ஷ்டம் செய்தவர்களல்ல. ஏனெனில் சிலர் தாமே சிந்தித்துத் தம் பிரச்சனையிலிருந்து தப்புவதற்குத் தங்கள் உடலை அழித்தால் ஆத்மாவும் அழியும் என எண்ணித் தங்கள் உடலைத் தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் ஆத்மாவை அவர்களால் அழிக்க முடியாதாகையால் அவர்களின் பிரச்சனை முன்னிலும் பார்க்க இப்போ மிகக் கூடுதலாக இருக்கும். ஏனெனில் எந்தப் பிரச்சனையும் தற்கொலை செய்வதால் தீராது. ஆனால் அடுத்த பிறவி வரும் வரை தள்ளிப் போடப்படும். இங்கே அவர்களை மிகத்துன்பப்படும் ஆத்மாக்கள் என அழைப்போம். அவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொண்டதை எண்ணி ஒவ்வொரு கணமும் வெட்கப்பட்டுக் கொண்டும் உடலுடன் இருக்கும் போதே பிரச்சனையைத் தீர்க்காததை எண்ணித் தங்களிலேயே கோபப்பட்டுக் கொண்டும் இருப்பார்கள். இங்கிருப்பதிலும் பார்க்க அங்கிருக்கையில் பிரச்சனையைத் தீர்ப்பது எளிது. பௌதீக உலகின் பிரச்சனைத் தீர்ப்பதற்கு இங்கே வழிகள் கைவசமில்லை என்பது தெரியும் தானே. அதனால் மறுபிறவி எடுக்கும் போது கூடுதலாக என்னென்ன பொறுப்புகளைச் சுமக்க வேண்டி வருமென அறிவதற்காகத் தனது தவறுகளை மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கும் மிக நீண்ட மனவாதையான காலங்களைக் கடக்க வேண்டியிருக்கும்."
"கொலையாளிகளுக்கும் இதே போன்ற மனவாதைகள் தான் இருக்கும். தன்னால் கொலையுண்டவரும் அதேயிடத்தில் இருப்பார் ஆதலால் அவருடைய வாழ்க்கையை அவருக்குத் திருப்பிக் கொடுக்க இயலாத பயங்கர நிலையில் அவர் இருப்பார். கொலையுண்டவரின் பூவுலக வாழ்க்கையில் அவரது சொந்தக் கர்மாவை உரிய காலத்தில் முடிப்பதற்குரிய சந்தர்ப்பத்தைக் களவாடிய குற்ற உணர்வினால் மனவாதைகளுக்கு உள்ளாவார். இறைவனது படைப்புகளுக்கு எதிரான இப்படிப்பட்ட பாவச்செயல்களுக்கு  அவ்வளவு எளிதாகப் பரிகாரம் செய்ய இயலாது. எனவே இன்னொரு பிறவி எடுப்பதற்கான மனதிடம் வரும் வரையில் அவர் மனவாதைகளினால் துன்புறுவார். இறுதியில் அவர் அடுத்த பிறவியில் தனது கர்மவினைகளைத் தீர்ப்பதாக மனத்திடம் கொள்வார்."
"இப்போ நாம் நோயுற்று, நலிந்து, அனுபவித்த வேதனைகளிலிருந்து விடுபடுவதற்காகச் சாவை ஆவலுடன் எதிர்நோக்குபவர்களைப் பார்ப்போம். இவர்கள் இங்குள்ள நிலைமையை மிக இலகுவாக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள். அவர்கள் இங்கே மிக மகிழ்ச்சியாக உள்ளனர். மிக நிச்சயமாக நானும் அவர்களில் ஒருவனே. அங்கே இருக்கையில் இறப்பின் பின்னரான எமது வாழ்க்கையை நிரூபிப்பதற்கு நான் ஆவலாயிருந்தாலும் நோய்வாய்ப்பட்ட எனது உடலின் வேதனை என்னை இறப்பை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தது. இங்கு வந்ததன் பின் ஒவ்வொரு கணத்தையும் மிக மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி இயல்பாக இங்கு வருபவர்களைப் பார்க்கையில் களிப்பாக இருக்கும், ஏனெனில் அவர்களின் இதயம் ஏனையோரில் உள்ள அன்பால் நிறைந்திருக்கும். எவர்க்கும் எந்த நேரமும் உதவிடத் தயாராக இருப்பார்கள். சிலர் புதிதாக வந்திருக்கும் குழந்தைகளை (அவர்களின் அன்னையர் இங்கு இல்லாததால்) கவனித்துக் கொள்வார்கள். மேலும் சிலர் இங்கு புதிதாக வருபவர்கள் இப்புதிய சூழ்நிலைக்கு மனதளவிலும் ஆத்ம அளவிலும் இணைந்து போவதற்கு உதவுவார்கள். அதே நேரத்தில் மேலும் சிலர் பூவுலகில் உற்றவர்களை இழந்து வருந்துபவர்களுக்கு அன்பான எண்ணங்களை அனுப்பி ஆறுதல் படுத்துவார்கள்.
அடுத்ததாக, தான் வேறொரு இடத்தில், வேறொரு சமயத்தில் இருப்பதை உணர்ந்தாலும் எங்கே, எப்போ என்பது புரியாமல் இருப்பவர்களைப் பற்றிப் பாப்போம். அவர் மறு உலக வாழ்வைப் பற்றி எந்த ஒரு விதமான எண்ணமுமின்றி, அவ்வாழ்க்கைக்கு எவ்விதமாகவும் தயாரில்லாமல் இருந்திருக்கிறார். இங்கு வந்தவுடன் முதலில் திகைப்பில் ஆழ்வார். ஆனால் பின்னர் ஆவல் மிகுந்த வியப்புடன் காணும் அனைவரிடமும் கேள்விக்கணைகள் தொடுப்பார்: 'எங்கே இருக்கிறோம்?', 'ஏன் நான் பேசினாலும் சிலர் என்னிடம் பேசுகிறார்களில்லை', 'ஏன் எனது மனைவி நான் சொல்வதை கவனிக்காமல் தன் பாட்டில் தனது வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாள்?'. இறப்புக்குப் பிறகான மறுவாழ்வைப் பற்றிய உண்மைகள் இங்கே எப்போதுமே இருந்திருந்தாலும் அவர் உடலுடன் இருக்கையிலேயே வெகு இலகுவாக அறியக்கூடியதாக இருந்த அவ்வுண்மைகள் அவரை வியப்பிலாழ்த்த அவர் இப்போது தான் விடைகளைத் தேடி அங்குமிங்கும் அலைந்து திரிவார். 
அவர் வேறொரு முன்னேற்றமான வாழ்க்கை முறைக்குத் தன்னைத் தயார் செய்யவில்லை என்றால் படிப்படியாக நம்பிக்கை இழந்தவராக ஆகிவிடுவார். அவர் தனது பழைய வாழ்க்கை முறையான வெற்றியைக் குறிவைத்தல், பணம் சேர்த்தல் என்பனவற்றில் ஈடுபட விரும்புவார். சில காலத்தின் பின்னர் இங்கிருக்கும் சில பழைய ஆத்மாக்கள் அவரை வழி நடத்தத் தொடங்குவார்கள். அவர்கள் அவருக்குப் பல விஷயங்களைப் புரியவைப்பார்கள். இன்னமும் இப்பூவுலகில் அலைந்து திரியவைக்கும் அவரது ஆணவத்தை விட்டொழித்து, சமாதானமானார் என்றால் அதன் மூலம் அவருக்குக் கிடைக்க இருக்கும் ஆச்சரியமளிக்கக் கூடிய அனுபவங்களைப் பற்றிச் சொல்வார்கள். சிலவேளைகளில் அவருக்குப் புரியவைப்பதற்குக் கூடுதல் காலம் தேவைப்படலாம். அதாவது பூவுலகில் நேரத்தை வீணடிப்பதிலும் பார்க்க மேற்சொன்ன வழிகளைக் கையாள்வதில் முன்னேறுவதற்கு கூடிய சந்தர்ப்பம் இருப்பதை அவருக்குப் புரியவைக்கக் கூடுதல் காலம் தேவைப்படலாம். அவர் படிப்படியாகப் பூவுலகத் தளைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்.
"அதன் பின் அவர் தன் நிலையை உணர்ந்து இங்கேயுள்ள வழிமுறைகளைக் கையாள்வார். அவையாவன: தனிமையில் தன்னைத்தானே உணர்தல், ஏனையோருக்கு உதவுதல், தியானம், இப்போ கடைசியாகக் கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றிய ஆழ்ந்த மறுபரிசீலனை என்பவை போன்றன. இந்த நிலையானது அவர் தனது கடந்த காலத் தவறுகளை ஆராய்ந்தறிந்து அடுத்து வரும் பிறவியில் சிறப்பாகச் செய்வதற்கு உறுதியான தீர்மானம் எடுக்கும் வரையிலும் தொடரும். இதன் பின்பும் அவர் நிம்மதியின்றித் தான் தனது தவறுகளை உணர்ந்து விட்டதை நிரூபிக்க விரும்பின் முதலாவதாக வரக்கூடிய சந்தர்ப்பத்தில் மீண்டும் பிறவியெடுக்க விரும்பலாம். அப்படிப்பட்ட பட்சத்தில் அவர் சந்தர்ப்பம் வரும் போது அவரது குறைகளைக் களையக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை உருவாக்கக்கூடியதான பல தாய்மார்களில் ஒரு தாயை அவர் தேர்வு செய்யக்கூடியதாக இருக்கும்."
ஒரு ஆத்மா பிறவி எடுப்பதற்குரிய வழிமுறைகளைப் பற்றி மேலும் விபரிக்குமாறு நான் அவரைக் கேட்டேன். அதற்கு அவர், "ஒரு ஆத்மாவுக்கு மிகவும் அவசியமாக விட்டொழிக்க வேண்டிய கர்மாக்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து அறிவதற்கும் மேலும் முன்னேறுவதற்கு என்னென்ன குணாதிசயங்கள் அதிகமாகத் தேவைப்படுமோ என்பதைத் தீர்மானிப்பதற்கும் போதுமான அளவு கால அவகாசம் தேவை. அதன் பின்னரே அவ்வாத்மா பிறவி எடுப்பதற்குரிய சந்தர்ப்பம் வருவதுண்டு" என்றார்.
அவர் தொடர்ந்து, "இவற்றைத் தீர்மானித்ததன் பின் முற்பிறவிப் பாவங்களைத் தீர்த்து முன்னேறுவதற்கு ஏற்ற வகையிலான குணாதிசயங்களைப் பெறக்கூடிய அனுபவங்கள் வரக்கூடியதான சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் கண்டுபிடிக்க வேண்டும். பொறுமை என்னும் குணாதிசயம் தேவைப்படின் அவரது பொறுமையின்மையைச் சோதிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளைத் தேடிப்பிடிப்பார். அன்பு செலுத்துவதைப் பற்றி அறியவேண்டுமெனில் அன்பு குறைவான ஒரு சூழ்நிலையைத் தெரிவு செய்ய வேண்டும். அப்படியென்றால் தான் அன்பு செலுத்தாதவர்களிடையே தனது அன்பு செலுத்துவதற்கான பரீட்சையை செய்து பார்க்கலாம். இவ்வாறே வேறு குணாதிசயங்களுக்கும் ஏற்ற சூழ்நிலைகள் தெரிவு செய்யப்படும். அவர் தனது பெற்றோரைத் தெரிவு செய்யும் தகைமையைப் பெற்றிருந்தால் முந்தைய பிறவிகளில் தன்னோடு தொடர்புள்ளவர்கள், தளைகள் உள்ளவர்களிடையே பொருத்தமானவர்ளைத் தேடிப்பார்ப்பார். அத்தளைகள் நல்லவிதமாகவும் இருக்கலாம் அல்லாததாகவும் இருக்கலாம்.
"பிள்ளைகளைக் கருத்தரித்திருக்கும் தாய்மார்களிடையே ஆண்பிள்ளை, பெண்பிள்ளைகளைக் கருத்திற் கொண்டு தான் எடுக்கப் போகும் பிறவியில் ஆணாகவோ, பெண்ணாகவோ பிறப்பதென்பதைப் பொறுத்து எந்தத் தாயைத் தெரிவு செய்ய இயலுமோ அதற்கேற்ப தெரிவு செய்வார். உயர்தரமான எண்ண ஓட்டங்கள் இருந்தால் கல்வி கற்பதற்குரிய சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் பார்ப்பார். ஆத்மாவானது பிறவியெடுக்க எத்தனிக்கையில் தான் பிறக்கப் போகும் சூழ்நிலைகள் சம்பந்தமான விடயங்களை இங்கேயுள்ள, நாம் நகைச்சுவையாக 'மேலுலகக் கணனி' (heavenly computer) என அழைக்கும் ஒருவித கொம்பியூட்டர் அமைப்பு முறையுடன் தொடர்பு கொண்டு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். அது மனித மூளைக்குக் கொஞ்சமும் எட்டாத மிக மிகச் சிக்கலான ஒரு பதிவு முறையாகும். ஆனால் இங்கு இது மிகச் சரியான முறையாகும். ஒரே நேரத்தில் பல ஆத்மாக்கள் பிறவி எடுக்க விரும்புவதால் இப்பதிவு முறை ஏற்புடையதாகும். ஒரு குறிப்பிட்ட தாய்க்குப் பலர் போட்டியிட்டால் இங்கே பதியப்பட்டிருக்கும் அவர்களின் தகைமைகளின் அடிப்படையில் அந்தத் தாய்க்குப் பொருத்தமானவர் தீர்மானிக்கப்படுவார்.
பூவுலகிலிருக்கும் கொம்பியூட்டர் முறையானது இங்கிருக்கும் கொம்பியூட்டரின் பகுதிகளில் வேலை செய்தவர்களின் மனங்களின் மூலம் அங்கு கொண்டு வரப்பட்டு உருவானதே. இங்கேயுள்ள எல்லையில்லாத அறிவுப்புலனின் ஒரு பகுதியைப் பெற்றே உருவானதாகும். அதே போலவே எடிசன் போன்ற ஏனைய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும். நினைவு படுத்திப்பார், "இந்த இடம் ஒளிரட்டும்" என்றவுடன் ஒளிவரவில்லையா? இங்கேயிருக்கும் அதே வடிவத்தையே மனித இனத்தின் பாவனைக்காக என்றே இருக்கும் இயற்கை மூலதனங்களைக் கொண்டு எடிசன் பெளதீகமாக உருவாக்கினார்.
"பிறவி எடுக்கப் போகும் ஆத்மாவானது தனது விருப்பத்தை மேலும் உறுதி செய்து கொள்ளத் தனது வருங்காலப் பெற்றோருக்கு அண்மையில் சிறிது காலம் சார்ந்திருக்கும். பின்னர் நேரகாலம் கூடி வரும் போது குழந்தை பிறக்கும் தருணத்தில் ஆத்மாவானது உடலுள் புகும். சாதாரணமாகப் பிறக்கும் சமயத்தில் தான் இது நிகழும். சில தருணங்களில் பிறப்பதற்குச் சற்று முன்னரோ அல்லது சற்றுப் பின்னரோ புகலாம். ஆத்மா கூடுதல் நேரத்திற்குத் தயங்கினால் அக்குழந்தை உயிர்வாழாது".
இறந்தே பிறக்கும் குழந்தைகளின் விஷயத்தில் என்ன நடக்கிறதென்பதைக் கேட்டேன். அதற்கு அவர், "குழந்தையின் உடல் வளர்ச்சி முற்றுப் பெற்றிருக்காது. அதனால் ஆத்மா அவ்வுடலினுள் புகாது. அப்படியான சந்தர்ப்பத்தில் அந்த ஆத்மா மீண்டும் ஒரு ஊடகத்தைத் தேட வேண்டும். அந்தக் குறிப்பிட்ட பெற்றோருடனேயே வாழ விரும்பின் சரியான தருணத்துக்குக் காத்திருக்க வேண்டும். குழந்தை கென்னடியின் விஷயத்தில் அதுவே நிகழ்ந்தது. அவர் தன்னுடைய பழைய உறவினர்களுடன் மறுபடியும் சேர்வதற்கு முயன்ற வேளையில் அக்குறிப்பிட்ட உடல் முற்றாக வளர்ச்சியுறாத காரணத்தால் உயிர் வாழ இயலாமல் போனதால் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்க முடிவு செய்தார். ஆனால் அச்சந்தர்ப்பம் வரவேயில்லை. எனவே அவர் இன்னும் இங்கேயே இருக்கிறார். இப்போதெல்லாம் அவர் தனது தந்தையாருடனும் சிறிய தந்தையாருடனும் அதிகம் காணப்படுகிறார்.
அன்று முழுவதும் பெற்றோரைத் தெரிவு செய்யும் இந்த முறையினை எண்ணியெண்ணி நான் வியந்து கொண்டிருந்தேன். மறுநாட் காலை ஆர்தர் தனது பேருரையைப் பின்வருமாறு தொடங்கினார்: "இன்று, உன்னை வெகுவாகக் கவர்ந்த மேலுலகக் கம்பியூட்டரைப் பற்றிப் பார்ப்போம். ஒரு ஆத்மாவானது மறுபிறவி எடுக்க விழைகையில் அவ்வாத்மா தனது தகைமைகளையும் (அவர் விளங்கிக் கொண்ட மாதிரி) அதே நேரத்தில் அந்தக் குறிப்பிட்ட ஊடகத்தினைத் தனது பூவுலகப் பிரவேசத்துக்குத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் எண்ண அலைகளாகப் பதிவார். அதைப் போலவே ஏனையவர்களும் தங்களது தேர்வுகளை விண்ணப்பித்திருக்கும் பொதுவான எண்ண வடிவத்துள் இவரது எண்ண அலையும் வந்து சேரும். பின்னர் அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் தன்னைத் தக்க வைக்க மிகவும் பொருத்தமானவர் தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவருக்கு அது தானாகவே தெரியவரும். ஏனையோருக்கும் தங்களது கர்மவினைகளுக்கு ஏற்ற விதமாக வேறு சாத்தியக் கூறுகளைத் தேட வேண்டும் என்பதும் தெரியவரும்.
"பூவுலகில் இருப்பவர்களுக்கு நான் சொல்வதைப் புரிந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் கடினம் என எனக்குத் தெரியும். ஆனால் இங்கே இருப்பவர்களுக்கு இது மிகவும் யதார்த்தமான வழியே. இங்கேயிருப்பவர்கள் இயங்கும் விதமானது உங்களது வழக்கப்படி பார்த்தால் கிட்டத்தட்ட எண்ணங்கள் மூலமாகவோ அல்லது அதீத புலனுணர்வுகள் மூலமாகவோ தான் என்பதை மறந்துவிடாதே. நாங்கள் ஒலிகள் மூலமாகவோ அல்லது கருவிகள் மூலமாகவோ தொடர்பு கொள்ள வேண்டிய தேவையில்லாததால் இயல்பாகவே எண்ண வடிவங்கள் மூலமாகத் தொடர்பு கொள்ள வேண்டுமென்பது வெளிப்படை."
நான் அவரை இடை மறித்து ஊனமுற்ற உடலுடன் பிறப்பவர்களைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், "ஆச்சரியப்படும் விதமாக சாதாரண ஆரோக்கியமான உடலுடன் பிறக்கும் குழந்தைகளைப் போலவே உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் ஏறத்தாழ ஒரேயளவு ஆத்மாக்களே இங்குள்ளன. இது இங்கே அறியப்படும் ஒரு முக்கியமான பாடமாகும். பௌதீக உடலில் எவ்வளவு குறைகள் இருக்கின்றனவோ அவ்வளவு விரைவில் அந்த ஆத்மா தனது கர்மவினைகளைப் போக்கி ஆத்மீக முன்னேற்றம் அடைய முடியும். 'இடையூறுகள்' எல்லாம் 'வெற்றிகரமாகக் கையாளப்படின்' அவை உயர்வுக்கான படிகளே. ஊனமுற்ற உடலை மகிழ்வுடன் ஏற்று வாழ்வை வெற்றிகரமாக வாழ்பவர் எல்லா வளங்களுடனும் வாழ்பவரிலும் பார்க்க விரைவாக முன்னேற்றமடைந்து விடுவார். வெகுமதியானது சடப்பொருள் வடிவிலில்லை ஆனால் ஆத்மீக ரீதியில் தான் உள்ளது. ஒரு வாழ்க்கைக் காலத்தில் எவ்வளவுக்கெவ்வளவு இடையூறுகளை ஒரு ஆத்மா தாண்டிச் செல்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு அந்த ஆத்மா அதன் பின் (தனது கர்மவினைகளைக் கழிப்பதற்குப்) பிறவியெடுக்க வேண்டிய தருணங்கள் குறைவு."
அடுத்ததாக நான், பிறக்கும் போதோ அல்லது சிறு வயதிலேயோ மனநிலை பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "இந்த நிலைமையானது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும். நாம் அவர்களைப் பற்றி நினைப்பதைக் கூட விரும்புவதில்லை. இவையெல்லாம் தங்களை முன்னேற விடாமல் தடுக்கும் முன்செய்த வினைகளைப் போக்குதற்கு மிகவும் போராடும் ஆத்மாக்கள் தாம் ஆன்மீகத்தில் முன்னேறுவதற்காக இப்படியான சித்திரவதைகளையும் ஏற்பதற்கு விரும்புவார்கள். சிலசமயங்களில் முற்பிறவிகளில் செய்த கர்மவினைகளைக் கழிப்பதற்கான காரணத்துடன் இம்மாதிரியான பாதிக்கப்பட்ட உடல்களுடன் பிறப்பார்கள். மேலும் சில சமயங்களில் முற்பிறவிகளில் தங்களால் இழைக்கப்பட்ட கர்மவினைகளுக்காக உண்மையிலேயே கழிவிரக்கப்பட்டுத் தாங்களாகவே இப்படிப்பட்ட உடல்களை எடுப்பார்கள். ஆனால் மிகக்கூடுதலான சந்தர்ப்பங்களில் முந்தைய பிறவிகளில் இழைக்கப்பட்ட மிகப்பெரிய பாவங்களால் மனவாதைக்கு உட்பட்டுத் தங்களுக்குரிய முடிவுகளைத் தாங்களே எடுக்க இயலாமலிருக்கும் ஆத்மாக்களில் கருணை கூர்ந்து உயர்ந்த சக்திகள் அவர்களுக்காக அப்படிப்பட்ட உடலைத் தீர்மானிப்பார்கள். மருத்துவமானது இப்படிப்பட்ட மூளைப் பாதிப்பானது கரு உருவாகையில் ஏற்படும் குறைபாடு என்றோ அல்லது குழந்தை பிறக்கையில் நிகழ்ந்த பாதிப்பென்றோ சொல்லலாம். அதுவே உண்மையுமாகும். ஆனால் அந்த உடலில், பிறக்கும் தருணத்திலோ முன்பின்னோ நுழையும் ஆத்மாவானது இந்தப் பாதிப்பை உணர்ந்தே இருக்கும். அதனால் அது தனது முன்செய்த வினைகளுக்குரிய தண்டனையைத் தானே அனுபவிக்கிறது.
பருவவயதில் அல்லது பருவமுதிர்ச்சி அடைந்த பின்னர் உடலில் ஏற்படும் மிகப் பெரிய காயங்களைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், "சில வேளைகளில் அப்படிப்பட்ட விபத்துகள் எந்தவிதமான முன் எச்சரிக்கயுமின்றி அந்த ஆத்மாவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலையில் நடப்பதால் தவிர்க்க முடியாமலிருக்கும். ஆனால், கூடுதலாக அந்த உடலில் வதியும் ஆத்மா தன்னையறியாமலே தனது கர்மவினைகளைத் தீர்க்குமுகமாக அப்படிப்பட்ட விபத்துகளை வலியவே வர அனுமதிக்கிறது.
பூவுலகிற்கு வரும் ஆத்மா எப்படி ஆண், பெண் பாலைத் தீர்மானிக்கிறதென கேட்டதற்கு அவர், "கூடுதலாக ஆத்மா முந்தைய பிறவிகளில் தான் தீர்மானித்த அதே பாலையே எடுப்பதற்கு விழையும். ஆனால் சில சமயங்களில் சில குணாதிசயங்களை அறிவதற்காக அது மற்றைய பாலுக்கு மாறலாம். ஏனெனில் சில குணாதிசயங்கள் ஒருவகைப் பாலிலும் பார்க்க மற்றையதில் உணர இலகுவாக இருக்கும். மென்மைத் தன்மை. முந்தைய பிறவிகளில் முரடாக இருந்த ஒரு ஆண் சில சமயங்களில் வரும் பிறவியில் மென்மையான குணங்களைப் பெறுவதற்காக மென்மைத் தன்மை தேவைப்படும் சந்தர்ப்ப சூழ்நிலைக்காகப் பெண்ணாகப் பிறக்கலாம். தைரியம். முந்தைய பல பிறவிகளில் கோழையாக இருந்த ஒரு பெண் தனது பூவுலகப் பயங்களைப் போக்குவதற்காக ஒரு ஆண் குழந்தையாகப் பிறக்கலாம்.
இப்போ, 'பால்ஸி' எனப்படும் கைகால் நடுக்கமுள்ள ஒரு பெண்ணைப் பற்றிப் பார்ப்போம். தன்னுடைய இவ்வுலக வாழ்க்கையில் தான் ஒரு குற்றமுமே இழைக்காத போது ஏன் தனக்கு இப்படியொரு கஷ்டம் வந்ததென அவர் எண்ணினார். 'ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ்' எனப்படும் வான் படிமங்களை நாம் பார்வையிட்ட போது அவர் முந்தைய பிறவியொன்றில் பழைய ரோமாபுரியில் ஒரு கொடிய போர்வீரனாக இருக்கையில் மற்றையவர்களைப் பயத்தால் நடுங்க வைத்து அதில் இன்பம் கண்டிருக்கிறார். காட்டு விலங்குகளைச் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களின் முன் ஏவிவிட்டு அவர்கள் நடுங்குவதைப் பார்ப்பார். கடைசியில் இப்பிறவியில் பலவீனமான நடுக்கமுள்ள ஒரு பெண்ணாகப் பிறந்து அக்குறையுடனும் நல்லதொரு வாழ்க்கையை வாழ்வதன் மூலம் ஆத்மீகத்தில் பெரிய முன்னேற்றமடைவார்."
"எல்லோரும் தன் மீது அன்பு பாராட்ட வேண்டுமென எண்ணும் ஒரு மனிதனைப் பார்ப்போம். அவர் அனைவரது அன்பைப் பெறுவதற்காகவும் பலருக்குப் பல உதவிகள் புரிவார். அவருக்கு முகத்திலும் கழுத்திலும் பெரிய தழும்புகள் இருப்பதால் ஏனையோர் அவரைப் பார்த்து ஒதுங்கினாலும் அவருடைய உபசரிப்பினால் அவரைச் சகித்துக் கொள்வார்கள். இவ்வளவு அன்பான மனிதன் இவ்வளவு பாரமான சிலுவையைச் சுமக்க வேண்டி இருக்கிறதே என எல்லோரும் அவர் மீது இரக்கப்படுவார்கள். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் அவர் அப்படிப்பட்ட குறைபாடுள்ள உடலைத் துணிவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஏனெனில் முந்தைய பிறவியொன்றில் ஒரு சிறு பிள்ளையை அதன் முகத்திலும் கழுத்திலும் கடுமையாகத் தாக்கியதில் அக்குழந்தையின் எலும்புகள் நொறுங்கி அது இறந்து விட்டது. கண்ணுக்குக் கண்ணென்று உயர்ந்த நூல் சொல்கிறது. அதைத்தான் நாமுணர்ந்து நமது பாவங்களைக் கழித்து இறைவனை அடைவோமாக."

Sunday, February 7, 2021

ஐந்தாவது அத்தியாயம்: ஞானாலயம் (Temple of Wisdom)


ஆர்தர் ஃபோர்டின் இறுதிச் சடங்குகள் நிறைவு பெற்றன. அவரது இறுதி ஆசையாக அவரது சாம்பல் மையாமிக்கு அருகே அத்திலாந்திக் சமுத்திரத்தினுள் தூவப்பட்டது. ஒரு மாதம் முடிவடைவதற்குள் அவர் தன்னுடைய தொடரும் வாழ்க்கையின் இன்னொரு புதிய அம்சத்தைப் பற்றிப் பின்வருமாறு விளக்கத் தொடங்கினார்: "எனது பழைய நண்பர்களைச் சந்தித்து உரையாடி, ஃப்ளெட்சருடனும் பல நாட்கள் உரையாடி மகிழ்ந்த பின் நான் ஒரு முக்கியமான இடத்தைத் தேடத் தொடங்கினேன். எனது முந்தைய பிறவிகளின் இடையே இங்கு வசிக்கையில் சற்றே நினைவில் உள்ளதும், எனக்குள் ஃப்ளெட்சரின் ஆத்மா வந்த போது நான் சற்றே உணர்ந்ததுமான அந்த ஞானாலயத்தைத் தான் தேடத்தொடங்கினேன் ."
"நான் அதிக நேரம் தேடவேண்டிய தேவையிருக்கவில்லை. யாரிடமேனும் அதற்கு வழியறிய வேண்டிய தேவையின்றி நானே அங்கு நின்றேன். எனது நினைவில் இருந்ததைப் போலவே அது ஒரு மலைச்சரிவுக்கு அப்பால் மறைவாயிருந்த குன்றிலிருந்து வரும் அருவிக்கருகில் இருந்தது. அது பழமை வாய்ந்ததாக இருந்தாலும் அந்த இயற்கை அழகுடன் மிக அழகாகப் பொருந்தியிருந்தது. அது நமது வாழ்க்கைப் பாதையின் ஒரு பகுதி போல இருந்தது. அங்கு ஆசிரியர்கள் எனக்காகக் காத்திருந்தனர். என்னைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதனுடைய அற்புதங்களையும் எண்ணங்களின் அழகையும் நான் மறக்கவில்லை என்பதையறிந்து மிகவும் மகிழ்வுற்றனர். வட்டமாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நான் எனக்குப் பரிச்சயமான இடத்தில் அமர்ந்ததும் அவர்களில் வயதில் மூத்தவர் என்னைப்பார்த்து, 'ஆர்தர் நீங்கள் மிகக்குறுகிய காலமே இங்கிருந்து சென்றிருக்கிறீர்கள்' என்றார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் பூவுலக வாழ்க்கையை வாழ்ந்தது எனக்கு மிக நீண்ட பயணமாகவிருந்தது. ஆனால் இங்கே அது கண்மூடித் திறப்பதற்குள் முடிந்து விட்டது போலுள்ளது. முக்கால்வாசி நூற்றாண்டுக்கு முன் விட்ட இடத்திலிருந்து பாடத்தைத் தொடர்ந்தோம். காலம் மாறாமல் அப்படியே நின்றது போலிருந்தது."
"தியானத்தைப் பற்றிய உரையாடலுடன் ஆசிரியர் பாடத்தைத் தொடங்கினார். தியானம் பூவுலகிலும் இங்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எனக்கு நினைவுபடுத்தினார். தியானம் என்பது இறைவனின் இதயத்துடன் எம்மைத் தொடர்புபடுத்தும் ஒரு வசீகரமான பாதையாகும். அதனால் தான் பூவுலகிலிருக்கும் போதே தியானம் செய்வது மிக மிக அவசியமானதாகும். ஏனெனில் பூவுலகில் அறிவது இங்கிருக்கும் சாராம்சத்தைத்தான். தியானம் செய்து கொண்டிருந்தால் தான் ஒரு தொடர்ச்சியிருக்கும். அத்தொடர்ச்சி உடைந்து விடக்கூடாது. பிறந்த குழந்தையே அங்கு தொடர்ந்து தியானம் செய்து படைத்தவனுடனான ஒருமையை உணர்ந்து கொண்டிருக்கும்."
"ரூத், காலைவேளைகளில் உன்னுடன் நான் நடத்தும் இந்த உரையாடலுக்கு ஞானாலயத்தில் எமது கலந்துரையாடலை முன்னின்று நடத்தும் பழைய ஆத்மாக்கள் ஒரு கணமேனும் யோசிக்காமல் அனுமதி தந்துவிட்டனர். அவர்களும் என்னைப் போலவே இச்செய்தி பரப்பப்பட்டு அதனால் அனைவரும் பயன் பெறவேண்டும் என ஆர்வத்தோடு உள்ளனர். இப்புத்தக வேலை முடியும் வரை இந்தக் காலை வேளைகளில் நடைபெறும் உரையாடலைத் தொடரும்படி என்னிடம் சொன்னார்கள். இது ஒரு தற்காலிகமான ஏற்பாடு தான். இவ்வேலை முடிந்ததும் நான் வேறு வேலைகளுக்குச் சென்று விடுவேன். இங்கே இருக்கும் உயரிய ஆசிரியர்களுடன் சேர்ந்து, இங்கு வரும் ஒத்த மனநிலையில் உள்ள மாணாக்கருக்கு நான் பயிற்சியாளராக வரக்கூடிய விதமாக என்னைத் தயார் செய்யக் கூடிய வேறு கடமைகளுக்கு நான் செல்வேன். நான் பூவுலகில் இருக்கையில் நம்பிக்கைக்கு உண்மையுள்ளவனாக இருந்ததற்கும் தினமும் தவறாமல் தியானம் செய்ததுடன் எனது பேருரைகள், கலந்துரையாடல்கள் மூலம் தியானத்தின் மகிமையை உலகமெல்லாம் பரப்பியதற்குமான வெகுமதியின் ஒரு பகுதியே இது. இல்லையெனில் நான் மீண்டும் கீழ்மட்டத்தில் இருந்து மாணாக்கனாகத் தொடங்கியிருக்க வேண்டும். அது எவ்வளவு காலமோ தெரியாது. இங்கு நேரத்தை அறியும் வழிமுறைகள் இல்லாததால் எவ்வளவு காலம் பிடிக்குமென்று யாரால் சொல்லமுடியும்?"
"இந்த ஞானாலயத்தைப் பற்றி உனக்கு மேலும் சொல்ல விரும்புகிறேன். காலங்காலமாக இந்த ஞானாலயமானது இப்படியே இருந்து வருகிறது. தீப்ஸ் என்ற பழங்கால ராஜ்யத்திலும் அதே போலப் பழங்காலக் கிரேக்க ராஜ்யமான ஏதென்சு நகரிலும் கிட்டத்தட்ட இதே போன்ற சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. இங்கேயிருக்கும் புனிதமான எண்ணவடிவிலான ஞானாலயத்தைப் போலவே பூவுலகில் உருவாக்க வேண்டுமென்று சில பழைய ஆத்மாக்கள் விரும்பி ஞானாலயத்தைப் பற்றிய போதிய அளவு நினைவினைக் கொண்டு பூவுலகில் பிறந்ததனால் உருவாக்கப்பட்டதே அவைகளாகும். இங்கு வழங்கப்படும் அறிவுரைகள் மனத்தாலேயே வழங்கப்படும். ஆனால் தெய்வீகமானது இங்கு வழங்கப்படும் கல்வியின் ஒவ்வொரு அணுத்துகளிலும் ஊடுருவியிருப்பதால் ஒவ்வொரு நாளும் ஒருவரது வாழ்க்கைச் சரிதத்தைப் பற்றிய மிகவும் இனிமையான சமயச் சொற்பொழிவைக் கேட்பது போலிருக்கும். எம்மை இறைவனின் மகிமைகளாலும் அண்டசராசரங்களின் வியப்புகளாலும் நிறைப்பதால் எமக்கேற்படும் ஆத்ம எழுச்சியானது சொல்லிலடங்கா."
"மரங்கள் அடர்ந்த சோலையுள்ள சாய்வான ஒரு மலைத்தொடரைக் கற்பனை செய்து கொள். மரங்களின் இலைகளினிடையே சூரியக்கதிர்கள் புகுந்து வந்து விழ மரங்களின் இலைகள் ஒன்றோடொன்று சேர்ந்து அழகான சித்திர வேலைப்பாடாய்த் தெரியும் அந்த வனத்திலுள்ள சிறிய ஒரு வெளியில் தான் எமது ஞானலயமுள்ளது. ஒதுக்குப்புறமாக, அமைதியாக இறைவனின் ஆடைகளான வெயிலாலும் நிழல்களாலும் சூழப்பட்டுள்ளது. நாம் எமது தூய எண்ணங்கள் மூலம் எமது கல்வியைத் தொடங்குகையில் பறவைகளின் இன்னிசை நிற்பாட்டப்பட்டிருக்கும். ஆனால் தியானம் செய்கையில் அவைகள் சொர்க்கலோக கீதங்களைத் தங்களது கூக்குரல்களால் எழுப்பும். அது இந்த அகிலமெல்லாம் நிலவும் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் சூழ்ந்து நிற்பதைப் போன்றிருக்கும். ரூத், அந்த ஒலியானது உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டி எனது ஆத்மாவின் அடி ஆழம் வரை ரீங்கரிக்கச் செய்கிறது. அத்துடன் அது ஒவ்வொரு உயிரினத்துடனும் என்னை இணைப்பதைப் போன்றிருக்கிறது. இந்த அதிசயங்களை எல்லாம் புரியவைப்பது கஷ்டம். ஆனால் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் பூவுலகில் இருக்கையிலே தெரிந்தவற்றுக்கும் இவற்றுக்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடில்லை. இங்கிருக்கும் ஒளியானது தூய்மையானது மட்டுமல்ல தொடர்ச்சியானதும் கூட. ஏனெனில் இந்த ஒளியானது சூரியனிலிருந்து வருவதல்ல. மலைகள் சாஸ்வதமாகத் தாங்களே ஒளி வட்டங்களால் சூழப்பட்டிருக்கின்றன. மரங்களும் வியத்தகு விதத்தில் இந்தச் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டன போலும். அவை தங்கள் பாஷையில் கருத்துப் பரிமாற்றம் செய்வதைப் போலுள்ளன. ஊர்வனவற்றின் மற்றும் பறப்பனவற்றின் பாடல்கள் இனிமையானவை. இப்பிரபஞ்சத்தின் வேகத்தினால் உருவாகும் அதிர்வலைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை பூவுலகிலிருக்கும் ஒருவரால் புரிந்து கொள்ள இயலாது."
"ஞானாலயத்தின் இன்னொரு வடிவை இப்போ பார்ப்போம். இங்கே ஒவ்வொருவரும் தத்தமது தேவைகளுக்கு ஏற்றவாறு தங்களுக்குப் பொருத்தமான நிலையில் ஆத்மீக முன்னேற்றம் அடைந்தவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள். அங்கே பூவுலகில் ஞாயிற்றுக் கிழமைகளில் நாம் ஒன்று கூடி ஓரிரு மணித்தியாலங்கள் இறைவனின் புகழைப் பாடிய பின் பணத்தட்டை அனுப்புவதைப் போல அல்ல இங்கே. இங்கே அங்கு நடைபெறுவது போல தனியே ஒரேயொரு பூசையல்ல. இங்கே ஒவ்வொருவரும் தனது தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் எடுத்துக் கொள்வார்கள். கிண்ணத்தைத் திருப்பி நிரப்ப வேண்டிய தேவையில்லை. ஏனெனில் அது அந்தந்த நேரங்களில் ஆத்மாக்களின் தாகங்களுக்கேற்ப ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும். நாம் எமது ஆன்மீகத் தேவைகளைச் சரியாகக் கண்டு கொண்டோமெனில் ஞானக் கிண்ணத்திலிருந்து விரைவாக ஞானத்தை அருந்தலாம். அவரவரின் தேவைக்கு அதிகமாக ஒருவராலும் அதை அருந்த இயலாது. சிறிது சிறிதாக எமது ஆன்மீகத் தகைமைகளுக்கேற்ப நாம் எமது முன்னேற்றத்தைத் திட்டமிட இந்த ஞானப்பங்களிப்பில் நாம் பங்கெடுத்து அதனாலேயே எமது ஆத்மாவைச் சுத்திகரிப்போம். ஏனென்றால் இந்த ஞானாலயத்துக்கு வெகு அருகிலிருக்கும் இறைவன் எம் ஒவ்வொருவருக்கும் பேரானந்தப் பேரலையாக இருக்கிறான்."
பத்து வருடங்களுக்கு முன் 'லிலி' என் மூலமாக எழுதுகையில் நடந்தது போலவே ஆர்தர் என் மூலமாக எழுதுவதையும் என்னால் பல நாட்களின் பின் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக மீளப் பார்க்கும் வரை நினைவுக்குக் கொண்டு வர இயலாதிருந்தது. ஆனால் ஆர்தரின் நினைவுச்சக்தி கூர்மையாக இருந்தது. மறுநாட்காலை அவர் பின்வருமாறு தொடங்கினார். "ரூத் நான் நேற்று உனக்குச் சொன்ன ஞானாலயமானது எல்லோருக்கும் உரியதல்ல. பூவுலகிலிருக்கையில் ஆத்மீக முன்னேற்றத்தில் நீண்ட அனுபவம் பெற்றுத் தியானமிருந்து உலகை இயக்கும் மஹாசக்தியுடன் தொடர்பு கொள்ளக் கூடியவர்களுக்கு மட்டும் தான். இங்கு வரக்கூடிய தகைமையைப் பெற்ற நாமெல்லோரும் உண்மையிலேயே பாக்கியசாலிகள். ஏனெனில் உலக பந்தங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்குவதைத் தவிர்ப்பதன் மூலம் இங்கே வெகு விரைவாக முன்னேற முடியும். இதனை என்றாவது ஒருநாள் வாசிப்பவர்கள் இதனது முக்கியத்துவத்தை உணர்வார்களென நான் நம்புகிறேன். பூவுலகில் மனிதனின் ஆத்மாவைப் பற்றிய அறிவை அடைந்தவர்கள் இங்கே அடையப்பெறும் ஆனந்தமும் திருப்தியும் எண்ணிலடங்கா. இங்கே முன்னேறுவதற்கு அவர்களுக்கு மிகக்குறைவான பிறவிகளே போதுமானது. 
பூவுலகில், இறந்தவர்களின் ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் ஆத்மா நிரந்தரமானது, அழிவில்லாதது என்பதை நிரூபிப்பதற்காக நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் தமக்கு எல்லாம் தெரியும் என்பவர்கள் சிலர் நம்பாமல் கேலி செய்து சிரித்தார்கள். நாம் அதனையெல்லாம் பொறுத்துக் கொண்டு எமது நம்பிக்கைக்கு உண்மையாயிருந்தோம். ஏனெனில் இப்படி நம்பாமல் இருக்கும் நிலையும் எமது மிக நீண்ட முன்னேற்றப் பாதையின் ஒரு படிக்கல்லே என்பதனை  நாம் அறிவோம். அப்படிக் கேலி செய்பவர்கள் மீது இரக்கம் காட்டவேண்டும். ஏனெனில் ஆத்மா நிரந்தரமானது, என்றும் இருந்து கொண்டேயிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவு தங்கள் மனதை விரிய விடாமல் வைத்திருக்கிறார்கள்."
ஒருநாட்காலை எனக்கு ஜலதோஷம், தொண்டை நோ இருந்ததால் நான் வழமையான நேரத்துக்கு டைப்ரைட்டருக்கு முன் சென்று அமரவில்லை. இரு மணித்தியாலங்களின் பின் தான் ஓரளவு உடல் நிலை சரியான பின் சென்று அமர்ந்தேன். வழமையாக 'லிலி' தான் டைப்ரைட்டரில் உரையாடலைத் தொடங்குபவர். அன்று ஆர்தர் தான் தொடங்கினார். "ரூத், நான் ஆர்ட். மற்றையவர்கள் சென்று விட்டார்கள். ஆனால் உனக்கு உடல் நிலை சரியில்லாததால் குறிப்பிட்ட நேரத்துக்கு உன்னால் வர முடியவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனக்கும் அங்கிருக்கையில் அப்படி நேர்ந்திருக்கிறது. உடல்நிலை சரியில்லை என்றால் முக்கியமான விடயங்களை நான் மறந்து விடுவேன். லிலி இங்கே நீண்ட காலமிருப்பதால் உடலின் தன்மைகளை அவர் மறந்துவிட்டார். ஆனால் நான் நீ ரெடியாகும் வரை காத்திருந்தேன்.
"இன்று நானுனக்கு இவ்வளவு காலமும் தெரியாத ஒரு விஷயத்தைச் சொல்லப் போகிறேன். இங்குள்ளவர்கள் ஒருவரையொருவர் பற்பல பிறவிகளில் சந்தித்திருப்பார்கள். உலகின் உயிரினங்களின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் சிலர் ஒன்றாக இருந்திருப்பார்கள். ஏதோ ஒரு கட்டத்தில் பூவுலகிலோ அல்லது மேலுலகிலோ எந்த இருவரின் பாதைகளும் நிச்சயம் சந்தித்திருக்கும். அதன் காரணமாக எந்த ஒருவரும் மற்றையவருக்குப் புதியவரல்ல. நாமெல்லோரும் ஒருவரின் பகுதியே மற்றையவர் என்பதையும் நாமெல்லோரும் இறைவனின் ஒரு பகுதியே என்பதையும் இதனால் இலகுவில் புரிந்து கொள்ளலாம். எல்லா ஆத்மாக்களும் இறைவனின் உருவாக்கங்களே. அது போலவே மரங்களும் பூக்களும் அருவிகளுமாகும். ஆனால் அவர் எம்முள் தனது ஆத்மாவை சுவாசித்ததால், அவர் தனது வடிவில் எம்மை உருவாக்கியதால் நாம் சிந்திக்கக் கூடிய வல்லமையையும் அதனால் சரி, பிழைகளை அறியக் கூடிய வல்லமையையும் பெற்றுள்ளோம்.
"சரி, பிழை என்பது வெவ்வேறு இன மக்களுக்கு வெவ்வேறு விதமாக இருக்கும். ஆனால் இன்னொரு உயிரை வருத்துவதென்பது தன்னையும் இறைவனையும் வருத்துவதற்குச் சமமாகுமென்பது வெளிப்படை. அது பிரதான குற்றமாகும். மற்றையவர்களுக்கு உதவினோமெனில், அது பிழையான வழிகளில் என்றாலும் நாம் பொதுவான இலட்சியமான இறைவனுக்கு உதவுவது என்ற வழியை நோக்கிச் செல்கிறோம். அந்தப் பிழையான வழிகள் சில சமயங்களில் சட்டத்துக்கு முரண்படலாம். உதாரணமாக அமெரிக்காவில் சில சமயம் நாம் சட்டத்தை மீறிச் செயற்பட்டாலும் இறைவனின் வழிகளுக்கு அது எதிராக இருக்க வேண்டிய அவசியமில்லை. சட்டங்களெல்லாம் பொதுவாகப் பெரிய அளவிலான மக்கள் தொகை ஒன்றாக நிம்மதியாக வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்டவையே. அடிப்படைப் பாவமானது இன்னொருவரை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ வேண்டுமென்றே வருத்துவதாகும். நல்லதோ, கெட்டதோ எமது எண்ணங்களெல்லாம் செயல்களே. மற்றையவருக்கு எதிராக நாம் எதையாவது எண்ணினோமெனில் அது அவர்களின் தட்டிலிருந்து உணவையெடுத்து உண்பதைப் போல பாவமானதே.
மறுநாட்காலை லிலியின் அறிமுகத்துடன் ஆர்தர் தொடர்ந்தார். "ஹாய் ரூத், நீ சுகமானதையிட்டு மகிழ்ச்சி. இன்றைய பேச்சுக்கு வருவோம். நான் மறு உலகைப் பற்றி நிரம்பவே வாசித்து அறிந்திருந்ததாலும் எனக்குள் ஆத்மா வந்த நேரங்களில் மறு உலக அனுபவங்கள் இடையிடையில் வந்ததாலும் முன்பே சொல்லியது போல் நான் இங்கு வரும் போது இங்கு எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியுமென்று நான் நினைத்தேன். ஆனால் எனக்கும் இங்கே சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. உதாரணமாக நாம் முயற்சி எடுத்தால் தான் எவரது அறிவுரையையும் கேட்க முடியும். நாம் எண்ணுவதன் மூலமே எந்த இடத்துக்கும் சென்று எவரையும் பார்க்க முடியுமென்பது உண்மை. ஆனால் அதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன: ஒருவர் உங்களைப் பார்க்க விரும்பவில்லை என்றால் நீங்கள் அவரை அணுகவோ அவரது நடவடிக்கைகளைப் பார்க்கவோ முடியாது. அது இருவழிப் பாதையாக இருக்க வேண்டும். நான் ஃப்ளச்சருடன் பல மணி நேரங்களுக்கு உரையாட விரும்பலாம். ஆனால் நான் பூவுலகிலிருந்த போது அவர் என் மூலமாக நடத்திக் கொண்டிருந்த பணியை விடவும் அவருக்கு வேறும் பல பணிகளுள்ளன. எனவே எனது விருப்பங்களை அவரில் திணிக்க இயலாது. அவரும் என்னுடன் தத்துவ விஷயங்களைப் பற்றி சம்பாஷிக்க விரும்ப வேண்டும் அல்லது எனக்கு இடங்களைச் சுற்றிக் காட்ட விரும்பவேண்டும். உண்மையில் இங்கும் பார்ப்பதற்கு இடங்களுள்ளன.
"நான் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதாவது சொல்ல விரும்பினால், சில சமயங்களில் அவருக்கு அப்போ நேரமில்லாமல் போகலாம். இங்கே எந்த நேரத்திலும் பல்வேறு வகையான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னொரு ஆத்மா எம்மைச் சந்திக்க விரும்பின் நாமும் சில வேளைகளில் அவருக்கு உதவமுடியாமற் போகலாம். நான் சொல்வது உனக்குப் புரியுமென நினைக்கிறேன். இதனால் எங்களது தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது. அங்கேயும் கூட நீங்கள் ஒருவருடன் பேசவிரும்பாவிடின் தொலைபேசியைத் தவிர்ப்பதைப் போன்றதே இதுவும்."
"சிலர் இங்கு புதிதாக வரும் ஆத்மாக்களுக்குக் கற்றுத் தருகிறார்கள். சிலர் பூவுலகிலிருக்கும் போது நன்றாகக் கற்று உணராமல் விட்ட தத்துவவியல் மற்றும் வேறு முன்னேற்றம் தரக்கூடிய பாடங்களைக் கற்க முயல்கிறார்கள். சிலர் கோட்பாடுகளை ஆராய்வதில் முழுமூச்சாக ஈடுபடுகிறார்கள் அல்லது முற்பிறவிகளில் நிறைவேற்ற முடியாமல் போனவைகளைச் சரி செய்யும் முகமாக ஆழ்ந்த தியானத்தில் அல்லது வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். சொர்க்கத்துக்கு உங்களைப் போலவே நாமும் தூரத்திலேயே உள்ளோம். நாம் தூல சரீரத்தை விடுத்து சூக்கும சரீரத்தை எடுத்துள்ளதால் நாம் இறைவனுடன் இரண்டறக் கலந்து விட்டோமென நினைப்பது முட்டாள் தனமாகும். இறைவனுடன் இரண்டறக் கலப்பதானது, பல காலத்திற்கு இறைவனின் வழிமுறைகளுக்கு ஏற்ப நடப்பதற்கான முயற்சிகளுடன் ஏனையவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதனாலும் அடையப்படும். ஏனையோருக்கு நன்றியை எதிர்பாராமல் செய்யும் நற்காரியங்களால் இறைவனை அடையும் பாதையானது இலகுவாகவும் எளிதாகவும் மாற்றப்படும்.
எந்தவிதமான நன்றிக்கடனையோ வெகுமதியையோ எதிர்பாராமல் செய்யப்படும் எந்தவொரு காரியமும் ஆன்மீக முன்னேற்றத்தின் ஏணிப்படிகளே. வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாதிருப்பது நன்றென்பது நினவிலுள்ளதா? எனவே உலகில் வெகுமதிகளையோ நன்றிக்கடன்களையோ எதிர்பாராமல் கொடுப்பனவற்றைப் பிறர் அறியாமற் கொடு. கொடுப்பதிலேயே மகிழ்ச்சியுள்ளது. அதனை ஏனையவர்களுக்குச் சொல்வதிலே அல்ல. மனிதர்களிடமிருந்து வெகுமதி கிடைத்த பின் எப்படி நீ இறைவனிடமிருந்து வெகுமதி எதிர்பார்க்கலாம்? பூவுலகில் ஏனையோர்க்கு உதவுவதால் கிடைக்கும் புகழ்ச்சியும் பெருமையும் வெகுமதிகளே. எமக்கு நாம் உதவுவதற்கு நாம் புகழ்ச்சியை எதிர்பார்க்கிறோமா? இல்லையே. அப்படியாயின் ஏன் எம்மிலும் இறைவனிலும் ஒரு பகுதியாயிருக்கும் ஏனையோருக்கு உதவும் போது மட்டும் புகழ்ச்சியை எதிர்பார்க்கிறோம்?
"ஞானாலயமானது ஒரு இடமல்ல. அது ஒரு மனநிலையே. நிறைவான இனிமையான எண்ணங்களினாலும் உள்ளுணர்வுகளினாலும் ஆன ஒரு உயர்ந்த மனநிலையே. ஒவ்வொருவரும் அதனை எங்களது கண்ணோட்டத்திலேயே பார்ப்போம். எனக்கு அது அழகு நிறைந்த சத்தியங்களால் சூழப்பட்டிருக்கும் ஒரு ஸ்தலமாகும். நம் ஒவ்வொருவருக்கும் சத்தியத்தை உணரும் தன்மை உள்ளது. ஞானாலயமானது அந்தப் பேருண்மையின் ஓர் உயர்ந்த வடிவமே. ஆத்மாவைப் புரிந்து கொள்ளவும் ஆன்மீக முன்னேற்றத்தை அடையவும் விரும்புபவர்கள் இங்கு கற்பதற்கான சந்தர்ப்பத்தை விரும்புவார்கள். உள்ளூர நாம் முயலாவிடின் நாம் நிரந்தரமான எதையும் சாதிக்க முடியாது.
நாம் சிறந்த மனிதகுலமாகப், பண்பட்ட மனிதராக வரவேண்டுமெனில் (இந்த) வளர்ச்சிக்கான முயற்சியானது ஒவ்வொரு கட்டத்திலும் தொடரப்பட வேண்டும். தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். மிக மேன்மையான இனமாக மனித இனம் வருவதற்கான சக்தியும் வலுவும் எமக்கு உள்ளது. அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால்: ஒரு தனிமனிதனோ அன்றி ஒரு குறிப்பிட்ட இனமோ சக்தி வாய்ந்ததாக வர இயலாது. முழு மனித இனத்தின் முயற்சியாலேயே இது முடியும். அதனாற் தான் ரூத், ஏனையோர் கஷ்டப்படும் போது உதவிக்கரங்களை நீட்டுவது அவசியமாகிறது. இது ஒரு அதீதமான கற்பனையாளனின் கற்பனையில் எழுந்த (எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற) கனவுலகமல்ல. ஆனால் மனித சமுதாயத்தின் மறுமலர்ச்சி ஆகும். முன்னொரு காலத்தில் நாம் உயர்ந்த இனத்தின் ஒரு பகுதியாக இருந்தோம். நான் இப்போ உனக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த உண்மைகளை அறியும் தறுவாயில் இருந்தோம். அந்த அறிவை வைத்து என்ன செய்வதென்றும் அறிந்திருந்தோம். ஆனால் பேராசை, அவா, வெறுப்பு இவை போன்ற வேறும் பல கீழான உணர்ச்சிகள் மனித குலத்தைப் பௌதீக உலகில் ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டன"
மறுநாட்காலை சற்றுப் பிந்தி எழுந்தேன். அவசர அவசரமாக டைப்ரைட்டருக்குச் செல்ல ஆர்தர் "ரூத், இது ஆட்ர், மற்றவர்கள் போய்விட்டனர். ஆனால் நீ எப்படியும் வருவாய் என்ற நம்பிக்கையில் நான் காத்திருந்தேன்." என்றார். பின்னர் சற்றே வேடிக்கையாக பேசிய பின் பின்வருமாறு எழுதினார்: "ஞானாலயத்தைப் பற்றி மேலும் சில விஷயங்கள் சொல்கிறேன். இங்கு நாம் தத்துவம் சார்ந்த துறையில் உயர்வானவர்களைப் பற்றி அறியக்கூடியதாக உள்ளது. இங்கே இருப்பவர்கள், மற்றும் மீண்டும் பூவுலகில் பிறந்து விட்டவர்களைப் பற்றியும் கூட. அவர்கள் சென்று விட்டாலும் அவர்களின் பதிவுகள் இங்கே இருக்கும் (உனது முந்தைய பிறவிகளின் பதிவுகளிருப்பதைப் போல). பிரபஞ்சங்களின் இரகசியங்களிலிருந்து எமக்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெற நாம் ஞானாலயத்துக்குச் செல்வோம். எப்படிச் சரியான முறையில் எண்ணுவது எனவும் எப்படித் தியானம் செய்வது எனவும் கற்போம். எமது எண்ணும் கருவியானது எமது ஆத்மாவின் ஒரு பகுதியாகும். அதனால் தான் பூவுலகில் அதனை ஆழ்மனம் என அழைக்கிறார்கள். அது எப்போதும் எம்முடனேயே இருக்கும். ஆனால் எமது வெளி மனமானது எமது பௌதீக உடலினால் மட்டுமே இயக்கப்படுகிறது.
"உலகம் உருவாக்கப்பட்டதில் இருந்து நாம் கிரகிக்கும் எல்லா விடயங்களும் எமது ஆழ்மனதில் பதிந்திருக்கும். எமது ஆழ்மனதை படிவங்கள் நிறைந்த கோப்புகளைச் சேகரித்து வைக்கும் ஒரு மிகப்பெரிய அலமாரிக்கு ஒப்பிடலாம். எமக்குத் தெரிந்த எல்லா அலமாரிகளிலும் பார்க்க மிகப்பெரிய அலமாரி இதுவாகும். ஆனால் நாம் பௌதீக உடலுடன் இருக்கையில் சாதாரண வழிகளில் எமது ஆழ்மனதை உணர்வது கஷ்டமாகும். ஏனெனில் ஆழ்மனதின் அந்த அறிவுக் களஞ்சியத்தில் இருப்பவை நினைத்தவுடன் வெளியே கொணரமுடியாத உயர்ந்த விஷங்களாகும். கனவுகள் மூலமாகவும் தியானத்தின் மூலமாகவும் அந்த அறிவுடன் அவ்வப்போது தொடர்பு கொள்கிறோம். அதனுடன் ஹிப்னாட்டிசம் எனப்படும் ஆழ்மன அகழ்வின் போதும் அந்த விடயங்கள் சிலவற்றை மேலே கொண்டு வரப்பார்க்கலாம். எந்த வழிகளிலும் எல்லா விடயங்களையும் வெளிக்கொணர முடியாது. ஆனால் இங்கே ஞானாலயத்தில் எந்த நேரத்திலும் அவற்றை அறிய இயலுமாக உள்ளது. அத்துடன் ஆத்மாவின் சில சிறப்பு அம்சங்களை நாம் விருத்தி செய்து கொள்வோமாயின், எம் கடந்த பிறவி, அதற்கு முந்தைய பிறவிகளை மட்டுமல்ல யுகம் யுகமாக நாம் எடுத்திருக்கும் எல்லாப் பிறவிகளையும் நினைவுபடுத்த இயலுமாக இருக்கும்.
"இங்கே ஞானாலயத்தில் சோக்கிரட்டீஸ் இருந்திருக்கிறார். 'கான்ட்' (Kant) இருந்திருக்கிறார். 'ஜங்' (Jung) இருந்திருக்கிறார். மேலும் பூவுலகில் மதிப்பளிக்கும் பலர் இங்கே இருந்திருக்கிறார்கள். இங்கே அவர்கள் வெவ்வேறு தரங்களில் மரியாதைக்கு உரியவர்களாய் இருக்கிறார்கள். இங்கே இருக்கும் சில உயர்வான உள்ளங்கள் பூவுலகிலிருக்கும் போது கவனிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் எளிமையான நம்பிக்கைகளிலிருந்து வளர்ச்சியடைந்து மிகப்பெரிய அறிஞர்களாக, குருவாக மாறி இங்கே ஞானாலயத்திற்குச் சேவை செய்கிறார்கள். பலருக்கு மறுமுறை பிறக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் பிறவியின் பலனை நிறைவேற்றி விட்டார்களென்பது மட்டுமல்ல, இங்கே மேலுலகில் அவர்களின் பங்களிப்பு கணிசமான அளவு உள்ளதால் அவர்களின் பணி பூரணமாக்கப்பட்டு விட்டது. அவர்கள் இங்கே சுதந்திரமாக முன்னேற்றத்தின் பல்வேறு நிலைகளினூடாக மிக உயர்ந்த நிலை வரைக்கும் பிரயாணம் செய்யலாம். இருந்தும் அவர்கள் சேவை செய்வதில் மிக ஆர்வமாக உள்ளதால் இங்கே 'நாள்' என்று அழைப்பதன் சில பகுதியை ஞானாலயத்தில் இருக்கும் எம்மைப் போன்றவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.
"இங்கு வந்ததன் பிற்பாடு பல ஆத்மாக்கள் கற்க ஆசைப்பட்டு அதற்கான முயற்சியும் எடுப்பார்கள். ஆனால் அவர்களெல்லாம் ஞானாலயத்தில் சேர்வதற்கு இன்னும் சிறிது காலம் செல்லவேண்டும். ஏனெனில் ஞானாயத்தின் மறைபொருளான கல்வியை அவர்கள் விளங்கிக் கொள்வது கடினம். அது ஆன்மீகத்தில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் அடைந்தவர்களுக்குத் தான் புரியும். முந்தைய பிறவிகளில் ஆன்மீக முன்னேற்றம் அடையாதவர்களுக்கு இக்கல்வியை விளங்கிக் கொள்வது கொஞ்சம் கடினமாகும். அப்படிப்பட்டவர்களுக்கு இங்கே பல முன்னேற்றத்துக்குரிய பாடசாலைகள் உள்ளன. அவர்கள் அங்கு தத்துவவியலின் அடிப்படை உண்மைகளை மட்டுமல்லாது எமது வாழ்வின் நோக்கங்களையும் அறியமுடியும். நாம் இறைவனின் வடிவத்தை மட்டுமல்ல அவரின் தன்மைகளையும் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறோம். எனவே எமது யாத்திரையை நிறைவு செய்து கொண்டு இறைவனை அடைவதற்கு நாம் இப்பிரபஞ்சத்தின் தத்துவத்தையும் அதனது நியதிகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால் தான் நாம் இறைவனால் உருவாக்கப்பட்ட இவ்வுலகிலிருந்து முரண்பட்டு நிற்க மாட்டோம்.
"தொடக்கநிலைப் பாடசாலைகளில், ஆத்மாக்களுக்கு நேரத்தை எவ்வாறு உள்வாங்கிக் கொள்வது என்று கற்பிக்கப்படும். நாமே காலமாக மாறுவோம். அப்போ எந்த ஒரு விஷயமும் எமது ஒத்துழைப்பில்லாமல் நடைபெறாது. எம்மைப் பொறுத்தவரையில் என்றாலும் அப்படியாக இருக்கும். எனவே முயற்சி எடுக்காமல் சோம்பேறிகளாக இருந்தால் நாம் காலம் ஸ்தம்பித்து நிற்பவர்களாக இருந்து விடுவோம். ஆனால் நாம் முன்னேறி வளர்ச்சியடைய எண்ணினால் எமக்குள் உள்ள காலமானது சீரான வேகமொன்றில் நாம் கற்க வேண்டிய பாடம் முடிவடைந்து அடுத்தது தொடங்கும் வரை முன்னேறும். நேரமானது வேறுபடும் தன்மையுடையது. அது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஏனெனில் எந்த இரு ஆத்மாவும் ஒரு போதும் ஒரே விதமான ஆத்மீக முன்னேற்ற நிலைமையில் இருக்கமாட்டார்கள். அறிவறிந்த பழம் பெரும் ஆத்மாக்கள் எங்களின் அறிவுச்சாரங்களைத் திறந்து எம்மைப் புதிய பாதைகளின் மூலம் செல்ல வைப்பதன் மூலம் எமக்குள் இருக்கும் காலத்தை முன்னே செல்ல வைக்க உதவுகிறார்கள். இம்மேலுலகானது வளர்வதற்கும் முன்னேறுவதற்குமுரிய ஆவலைத் தூண்டக்கூடிய உலகாகும். பல தளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவு நிறைந்த ஞானவான்கள் இறைவனின் அருளால் எமது நன்மை கருதி நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தத் தளத்துக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு எமக்கு உதவுவதற்காக வருகை தருவது ஒரு அரிய சந்தர்ப்பமாகும். சில ஆத்மாக்கள் அநியாயமாக இதனை வீணடிப்பது அறியாமையாகும்.
இப்பிரபஞ்சத்துடன் ஒன்றிய நிலையிலிருந்து நாம் முரண்பட்டு நிற்பதை, இறப்பு எனும் வாயிலினூடாக மறுஉலகில் அடியெடுத்து வைக்கையில் அனைவரும் உணர்வோம் என்பதை ஃபோர்ட் வலியுறுத்தினார். "முதலில் இதனை உணர்பவர்கள் அதிகம் ஒன்றியிருப்பவர்களாகும். ஏனெனில் அவர்கள் அதிகமாக இணைந்திருப்பதால் சற்றே வேறுபாடு இருந்தாலும் அது வெளிப்படையாகத் தெரியும். இங்கிருக்கையில் சற்றுக் கூடுதலாக முரண்பட்டு இருப்பவர்களுக்குத் தாம் அப்படியிருப்பது தெரிவதற்குச் சற்றே அதிகநேரம் எடுக்கும் ஏனெனில் அவர்கள் அந்நிலைக்குப் பழகியிருப்பார்கள். ஆனால் எப்படியும் அதனை உணர்வார்கள். அதன்பின் அவர்கள் தமது இணைப்பை அதிகரித்துக் கொள்வார்கள். இவ்வாத்மாக்கள் தம்மைத் தாமே தயார் செய்து கொண்டபின் தங்களை வழிநடத்த ஒரு குருவைத் தேடுவார்கள். தேடுதல் தொடங்கிய அக்கணத்திலேயே குருவானவர் தோன்றுவதற்குத் தயாராவார். குருவானவர் அழைப்புக்காகவே காத்துக் கொண்டிருந்தவர். விருப்பமானது எண்ணத்தின் தந்தையாதலால் எண்ணம் உருவெடுத்த மறுகணமே தோன்றுவார்.
"குருவானவர், ஆர்வமுள்ள மாணவனை அதே போன்ற ஒத்த நிலையிலுள்ள ஏனைய மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒன்று கூடியிருக்கும் ஒரு இல்லத்துக்கு அழைத்துச் செல்வார். ஒரு தோழமையான சூழ்நிலையில் அவர்கள் தங்கள் கல்வியைக் கற்பார்கள். இங்கும் சில பின்னடைவுகள் இருக்கலாம்.  இங்கேயுள்ள சில ஒழுங்கு முறைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டலோ அல்லது ஆத்மீக முன்னேற்றத்துக்குத் தேவையான சில பயிற்சிகளை தொடரா விட்டாலோ சில பின்னடைவுகள் ஏற்படுவதுண்டு. இருந்தும் அவர்கள் அந்தக் கடினமான மேல் நோக்கிய பாதையில் உற்சாகத்துடன் தொடர்வார்கள். அங்கு இறைவனின் மாபெரும் திட்டத்தின் அடிப்படை உண்மைகள் விளக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கும். தெய்வீக உள்ளுணர்வில் மாறாத நம்பிக்கை கொண்டு நாம் செயற்படுவதில் உள்ள நன்மைகளும் இறைவன் வகுத்த நியதிகளை நம்பிக்கையுடன் பின்பற்றுவதன் முக்கியத்துவமும் அறிவிக்கப்பட்டிருக்கும். இங்கே முன்னேற்றமடைந்துள்ள ஆத்மாக்கள் எதைப்பற்றியும் கேள்வி கேட்கமாட்டார்கள். ஏனெனில் இயற்கையின் விதிகளை மீறுவதால் நாம் மீண்டும் கீழ்நிலைக்குச் செல்வோம் என்பது தெரிந்ததே.
நியதிகள் உள்ளதே எமக்குப் போதுமானது. பூவுலகில் எதையும் தங்கள் எண்ணப்படியே நடாத்தியவர்கள் (உண்மையில் அது அவர்கள் கற்பனையே) ஆரம்பத்தில் இங்குள்ள நியதிகளை எதிர்க்க முற்படுவார்கள். ஆனால் அது அவர்களின் ஆத்மீக முன்னேற்றத்துக்குத் தான் தடையாக அமையும். பூவுலகிலிருக்கும் போதே ஆன்மீக நூல்களை வாசிப்பதன் மூலம் இறைவனின் வழிகளை அறிய முயன்றிருந்தால் அவர்களுக்கு இங்கு வந்ததன் மேல் சீரான முன்னேற்றம் இருக்கும். ஒழுக்கம், பணிவு போன்ற நற்பழக்கவழக்கங்கள் ஆன்மீக முன்னேற்றத்துக்கு நிச்சயமாக உதவும். இறைவனின் விருப்பப்படி நடப்பது மற்றும் உலக நியதிகளுக்கு இணங்க நடப்பது என்பன போன்றனவும். உலக நியதிகள் எல்லோரும் நிம்மதியாக, சந்தோஷமாக உயிர் வாழ்வதற்கே உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆன்மீக ஒழுக்கமானது ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் பிறக்கும் போதே புகுத்தப்பட்டுத் தொடர்ந்து அதனது வாழ்நாள் பூராவும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் ஆன்மீக ஒழுக்கமானது மேலுலகில் மிகமிக முக்கியமான ஒன்று. பூவுலகிலும் பார்க்க இங்கே அதற்குப் பெரிய முக்கியத்துவம் உள்ளது.