இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Sunday, October 18, 2020

பதினோராம் அத்தியாயம்: அந்தக் கெட்டபழக்கங்களை வெல்லுங்கள் (Conquer Those Bad Habits)


எனக்கு நினைப்பதற்கே பிடிக்காத விஷயமொன்று உள்ளதென்றால் அது கெட்டபழக்கங்களைப் பற்றியதாகும். ஏனென்றால் எனக்கு அவை நிறையவே உள்ளன. 'எ ஸேர்ச் ஃபோர் தெ ட்ருத்' (உண்மையை தேடி)  என்ற என் புத்தகத்தின் வாசகர்கள், எனது புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தச் சொல்லி லிலி என்னை வற்புறுத்தி அதில் வெற்றியும் கண்டதை நினைவு கூரக்கூடும். ஆனால் இருவருடங்களின் பின்னர், அதனால் உருவான, தேவையற்ற, பத்து இறாத்தல் எடையைக் குறைக்க இயலாத காரணத்தால், மீண்டும் அந்த கெட்ட பழக்கத்துக்குத் திரும்பினேன். இரவுணவிற்கு முன் இன்னமும் ஒன்று அல்லது இரண்டு காக்டெயில் பானம் அருந்துவதும் வழக்கம். எனது வாயில் அடிக்கடி கடுமையான சொற்கள் வருவது எனக்குத் தெரியும். அதனைச் சில      சமயங்களில் கட்டுப்படுத்தத் தவறிவிடுவேன்.
எனது பழைய நண்பர் ஆர்தர் போர்ட் ஒரு சிறந்த மனிதர். ஆனால் தனது பங்குக்கு அவரும் சில கெட்ட பழக்கங்களைச் சேகரித்திருந்தார். அவரது தரப்பில் எந்தத் தவறுமில்லாமலே, சிலகாலம் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்தார். அதிலிருந்து மீள்வதற்காக அவர் மதுவுக்கு அடிமையானார். அவர் மதுவுக்கு அவ்வளவு தூரம் அடிமையானதால் இறுதிக் காலத்திலும் கூடச் சிலநேரங்களில் வேகனிலிருந்து (wagon) உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுந்திருக்கிறார். அவர் அவ்வப்போது சிகரெட் பிடித்திருக்கிறார். ஆனால் அதற்கு அடிமையாகவில்லை. அதனால் எனது கண்டிப்பான 'வழிகாட்டியான' லிலியை விட, ஆத்ம வடிவிலிருக்கும் போர்டிடம் கூடுதல் புரிந்துணர்வை எதிர்பார்த்தேன். ஆனால் ஆர்தர் இந்த உடலின் பலவீனங்களுக்கு முழு மறுப்புத் தெரிவித்தார்.
மார்ச் மாதம் முதலாம் திகதி தான் சிகரெட்டைப் பற்றி முதன்முதலில் குறிப்பிடப்பட்டது. அதாவது லிலி பின்வருமாறு எழுதினார்: "ருத், நீ புகையால் நிரப்பப்படாமல் இருந்தால், நாம் உன்னுடன் தொடர்பு கொள்வதும், நீ அதனைக் கிரகிப்பதும் மிக இலகுவாகவிருக்கும். அது முன்னேற்றத்தைத் தடுக்கிறது. புகையாலான திரை போட்ட உலகத்தில் நீ இருப்பதைப் போலுள்ளது. அந்த மூட்டத்தைத் துளைப்பது எமக்குக் கடினமாகவுள்ளது. அதனால் ஏன் இப்பொழுதே நீ புகைபிடித்தலை நிறுத்திவிட்டு இந்நூலை எழுதும் வேலையில் ஈடுபடக்கூடாது." மேலும் இதுபோன்ற சில குறிப்புகளின் பின், அவர், "சரி, இதோ ஆர்ட், உன்னைக் கண்டிப்பது தானாக இருக்கக்கூடாது என அவர் நினைக்கிறார்" என எழுதினார்.
பத்து நாட்களின் பின், சில பிரபஞ்ச விதிகளைப் பற்றி ஆராய்ந்தபின், போர்ட் பின்வருமாறு எழுதினார்: "ஏன் முந்தின சுற்றில் இழைத்த தவறுகளைப் போதுமான நேரம் சீர்தூக்கிப் பார்த்துப் பின் எதிர்காலத்தில் உருவாகும் சலனங்களைச் சரியாக எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதைத் தீர்மானிக்காமல், மீண்டும் மீண்டும் பிறக்க விரும்புகிறோம் என்பது இப்போ விளங்குகின்றது. தான் தயாராக முன் ஏன் ஒரு ஆத்மா பூவுடலெடுக்க அவசரப்படுகிறது? 'மனித இயல்பின்' தவறுகளுக்கு இங்கே நாம் முகம் கொடுக்கிறோம்: உடல் சம்பந்தமான இன்பங்களில் இருக்கும் பேரார்வம், மதுபானத்தில் இருக்கும் கூடுதல் நாட்டம், பாலுறவு, உடற்கட்டமைப்பில் ஆர்வம் (body-building), போன்ற இனோரன்ன. சிலர் தாம் விட்டுவிட்டு வந்த உடலில் அளவுக்கதிகமாகப் பிரியம் வைப்பதனால், இன்னொரு உடலை உருவாக்கி அதனில் பிரியம் வைத்து வேலை செய்யும் சந்தர்ப்பத்துக்கு அவர்களால் காத்துக்கொண்டிருக்க முடியாது. இந்த ஆத்மாக்கள் உண்மையிலேயே உலகியல் வாழ்வில் சிக்குண்ட ஆத்மாக்களாகும். தசையின் தாகங்களை அவ்வளவாகப் பொருட்படுத்தாமலிருக்கப் பழகும் வரையும் அவர்களால் ஆத்மீக முன்னேற்றமடைய முடியாது. பழக்கமாக மாறக்கூடிய எந்த வகையான சந்தோஷங்களும் (அவை எல்லையற்றன) பூதவுடலுடன் இருக்கையிலேயே அவற்றிலுள்ள தாகங்களை ஒதுக்கித்தள்ளி வைக்கும் வரை, ஒருவரை மீண்டும் மீண்டும் பிறப்பிறப்புச் சுழற்சியில் விழவைக்கும் - பணத்தின் மேலுள்ள ஆசை, அதிகாரத்தின் மேலுள்ள ஆசை, சிற்றின்ப ஆசை, அத்துடன் மது, போதைப்பொருட்கள், புகையிலை போன்றவற்றின் மேலுள்ள இயற்கைக்கு மீறிய நாட்டம், அத்துடன் விடுபட முடியாமலிருக்கும் எந்தவகைப் பழக்கவழக்கங்களும். பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட விரும்பும் எந்தவொரு ஆத்மாவுக்கும் இது ஒரு சரியான அறிவுறுத்தலாகும். நான் சொல்வது புரிகிறதா?"
"இந்தப் பக்கத்திற்கு வரும் குடிகாரர்கள், பூவுலகிலிருக்கும் அதிகமாகக் குடிக்கும் ஆத்மாக்களிடையே அலைந்து திரிந்து, குடிமயக்கத்தினால் உண்டாகும் இன்பத்தை நுகர்ந்து அனுபவிப்பார்கள். இன்னும் பூதவுடலுடன் பிணைக்க வைக்கும் அந்தப் பழக்கத்தின் பிணைப்பை அவர்களால் விடமுடியாமலிருக்கும். அடிக்கடி புகை பிடிப்பவர்கள், போதைப்பொருள் உபயோகிப்பவர்கள், இங்கென்றாலும் அங்கென்றாலும், அல்லது தனது உடலுறவு ஆசையைத் தீர்த்துக்கொள்வதற்காக மற்றவர்களை வருத்தும் பாலியல் வெறிபிடித்தவர் போன்றோருக்கும் இது பொருந்தும். இந்தப் பக்கத்தில் நாம் கற்கும் மிக முக்கியமான ஒரு பாடம் இதுவாகும். பூவுலகிலிருக்கையிலேயே முடிவில்லாத இப்பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட எம்மைப் பூதவுடலுடன் திருப்தியுறச் செய்து பிணைக்கும் கட்டுக்கள், தளைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும். எனவே அங்கிருக்கையிலேயே கெட்டபழக்கங்களை வெல்லுங்கள். அந்தத் தளைகளிலிருந்து விடுபடாமல் இங்கு வருவதிலும் பார்க்க அது இலகுவாகும். மதுவருந்துதல் , புகைபிடித்தல், போதைமருந்துப் பழக்கங்களில்லாதவர்களும், காம இச்சைகளற்றவர்களும் அப்படிப்பட்ட தளைகளேதுமின்றி இந்தப் பக்கத்திலே சுதந்திரமாக இருப்பார்கள்.
"பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு அதனை ஒருவருக்கும் ஈயாத கருமிகளுக்கும் இங்கே அதேமாதிரிப் பிரச்சனை தானுள்ளது என்பதையும் மறக்கக்கூடாது. எந்த ஒரு விஷயத்திலும் கூடுதல் நாட்டம் கொள்பவர்கள், அது அரசியலாக இருக்கலாம், சமயமாக இருக்கலாம், அல்லது வேறு எதுவாகவென்றாலும் இருக்கலாம், அத்துடன் மற்றவர்களின் சமய நம்பிக்கைகளைத் தாங்கும் மனப்பக்குவமில்லாதவர்கள் தங்களது மனோபாவத்தின் குறைபாடுகளை  உடலுடனிருக்கையிலேயே களைந்தாலன்றி இந்தப்பக்கத்திலும் மற்றவர்களுக்கு அவர்கள் என்னவிதமாக நினைக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டுமென்று அறிவுரை வழங்குவது போன்ற தங்களது எல்லாவிதமான செயற்பாடுகளையும் செய்ய முயற்சிப்பார்கள். இன்னொரு விதமாகச் சொல்வதானால், இன்னமும் பூவுடலில் வசித்துக் கொண்டிருப்பவர்களிலும் பார்க்க நாம் எந்த மேல் நிலையிலுமில்லை, கீழ்நிலையிலுமில்லை. நாம் எம்முடன் எமது குணநலன்களிலுள்ள குறைபாடுகளையும் சேர்த்தே கொண்டு செல்கிறோம். அதாவது நீங்கள் இப்போ இருக்கும் நிலையிலிருக்கையில் இருந்த அதே தீவிர நாட்டங்கள், தளைகள் அனைத்தையும் கொண்டு செல்கிறோம். அந்தக் குறைபாடுகளெல்லாம் சரிசெய்யப்படும் வரை நாம் எந்தவொரு குறிப்பிட்ட நிலைக்கும் ஆத்மீகத்தில் முன்னேற மாட்டோம். அதனால் தான் அக்குறைபாடுகளைக் களைந்து எம்மை முன்னேறவிடாமல் தடுக்கும் தளைகளைத் தாண்டும் நம்பிக்கையுடன் நாம் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்.
சபலத்தூண்டுதல்கள் (temptations) ஏதுமில்லாத இப்பக்கத்தில் அந்தத் தளைகளைக் களைவதிலும் பார்க்கப் பூவுடலுடனிருக்கையில் களைவது இலகுவானதாகும். எங்களை வேறு விதங்களில் தூண்டிவிடக்கூடியவை ஒன்றும் ஆத்ம உலகாகிய இங்கே இல்லையாதலால், சரியான முறையில் நடப்பதற்கு இங்கு ஒரு வெகுமதியும் கிடையாது. பூவுலகிலேயே கடினமான பள்ளிகூடமிருக்கிறது. அங்கே தான் நாம் சபலத்தூண்டுதல்களைச் சந்தித்து வெற்றிகொள்ள வேண்டும்."
ஓரிரு வாரங்களின் பின், ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: "இன்று, வாழ்வதற்கு எல்லாம் இருந்தும் போதை மருந்து எடுக்கத் தொடங்கி அதன் காரணத்தினால் தன்னைச் சுற்றியிருப்பவர்களில் அக்கறையை இழந்து இறுதியாகத் தன்னைத்தானே மாய்த்துக்கொண்ட ஒருவரைப் பற்றிப் பார்ப்போம். இறைவனால் அவருக்கு அளிக்கப்பட இந்த உயிரை எடுக்கும் உரிமை கண்டிப்பாக அவருக்கு இல்லை. ஆனால் அவரது மனமானது நிறைந்த குழப்பத்திலிருந்ததால், தான் உயிர்ச்சுடரை அணைப்பதை அவர் முழுவதும் உணர்ந்தாரில்லை. இன்னும் தெளியாத போதை மயக்கத்தில் இங்கே அவர் கண் விழிக்கையில், அடுத்த மோர்ஃபின் (morphine) போதையூசியையோ  அல்லது அவருக்குப் பிடித்த போதை மருந்தை வாங்குவதற்குப் போதைமருந்து விற்பனை செய்பவரையோ  தேடத்தொடங்கினார். பல ஆத்மாக்கள் அவரருகில் உலவித் திரிந்ததைக் கண்டார். ஆனால் ஒருவருக்கும் அவர் எங்கே போதை மருந்து வாங்கலாமென்று தெரியவில்லை. சிலர் அவரைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். ஆனால் ஏனையவர்கள் பூவுலகிலிருக்கும் பலரைப்போல அவரது தேவைகளை அலட்சியப்படுத்தினர். ஏனென்றால் அது ஒரு கீழான நிலையிலுள்ள - பூவுலகப் பிணைப்புகளிலிருந்து விடுபடாத ஆத்மாக்கள் அடுத்த பிறவியெடுக்கும் வரையில் தங்கியிருக்கும் - இடமாகும். அவரது தேவையானது அவரைப் பதற்றத்துடன் அங்குமிங்குமாக அலைய வைத்தது. அவரது மனம் மிகப் போதையில் இருந்ததால், தான் பூதவுடலுடன் இல்லை என்பதைக் கூட அவர் கவனிக்கவில்லை. அவர் பூதவுடலுடன் இருக்கையில் எப்படிப் போதைப் பொருளுக்காகத் திணறி ஏங்கினாரோ அதே போல அவரது ஆத்ம உடலும் ஏங்கியது. அவர் நிலத்தில் தானே விழுந்தார். பின் தரையைத் தனது கைநகங்களால் கீறினார். பூவுடல்களைப் போலவே இந்த எண்ண வடிவங்களெல்லாம் அவருக்கு உண்மையாகவே பட்டன. அவர் சிணுங்கினார், கெஞ்சினார், அழுதார். தனக்குப் போதை மருந்து வேண்டும் இல்லையெனில் தனக்குப் பைத்தியம் பிடித்து விடுமெனத் திடமாக நம்பினார். பின்னர் தன்னில் இரக்கம் காட்டாததற்குக் கடவுளைக் கூக்குரலிட்டுத் திட்டத் தொடங்கினார். பூதவுடலுடன் இருக்கையில் எப்படி முழுப்போதையில் இருந்தாரோ அதே போலவே ஆத்ம நிலையிலும் இருந்தார். அதாவது தன்னைப்பற்றியோ ஏனையோரைப் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படாத முழுப் போதைப் பொருளடிமை. போதைப் பொருளின் மூலமே தனது உடலுபாதைகளைப் போக்கிக் கொண்டிருந்தார். 
"கடைசியாக அவர் உணர்வற்ற நித்திரையில் விழுந்தார். இந்நிலை மாதங்களுக்கும் நீடிக்கலாம் அல்லது காலகாலத்துக்கும் நீடிக்கலாம். ஏனென்றால் மனத்தை நாசம் செய்ததும், பூவுலகில் பௌதீக சக்திகளைப் பலவீனப்படுத்தியதும் சேர்ந்து அவரது ஆத்மாவின் மனத்தை வருத்தமுறச் செய்துவிட்டன. எனவே பலகாலத்துக்கு அவர் ஆத்மீக வளர்ச்சியடைவதற்கு இயலாதவராயிருப்பார். சில சந்தர்ப்பங்களில் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையைப் பற்றி ஒன்றுமறியாமல் அவர் பல நூறு வருடங்களுக்கு தூக்கம் கொள்ளலாம். இறுதியாக அவர் விழித்தெழுகையில் பூவுலகில் அவருக்குத் தெரிந்தவர்கள் ஒருவரும் இருக்கமாட்டார்கள். அவரைச் சுற்றியுள்ள புதிதாக வந்த ஆத்மாக்கள் அவரையோ அல்லது அவரைப்பற்றியோ ஒன்றும் அறியமாட்டார்கள். அவர் உண்மையாகவே ஒரு தொலைந்துவிட்ட ஆத்மா. ஏனெனில் அவருக்கு ஒருவரையும் தெரியாது. அவரது நிலையைப் பற்றியும் ஒரு அறிகுறியுமில்லை. முன்னர் அவரின் அன்புக்குப் பாத்திரமாய் இருந்தவர்களோ அல்லது அவருக்குத் தெரிந்தவர்களோ நீண்ட காலங்களுக்கு முதலே உயரிய நிலைகளுக்கு முன்னேறியோ அல்லது புதிய பெயர்களுடனும் புதிய அடையாளங்களுடனும் மீண்டும் பூவுலகில் பிறந்தோ இருப்பார்கள். அவர் எல்லா விதமான உதவிகளையும் இழந்து நிற்பார். போதை நித்திரையிலிருந்து விழித்தெழுந்து பலகாலமான பின்னரும் அவரது தூக்கமயக்கம் தொடரும். ஏனெனில் அவருக்குள் ஆர்வத்தீப்பொறியை உண்டாக்கக் கூடிய விதமாக ஒருவருமில்லை. அவரது உணர்ச்சியற்ற தன்மையானது அவருக்கு உதவ என்று முன்னே வருபவர்களையும் தடுக்கும். அவரிடமிருந்து ஏதாவது ஒளியோ சுடரோ ஒன்றுமே வெளிப்படாது. அவர் தனக்குள்ளேயே ஒடுங்கிப் போயிருப்பார்.
"இந்நிலையானது மீளவும் சில டஜனிலிருந்து பல நூறு வருடங்கள் வரையிலும் நீடிக்கலாம். அதாவது அவர் கடைசியில் இறைவனை நோக்கித் தன்னைக் காப்பாற்றுமாறு அழும்வரையும் நீடிக்கும். இவர் பல நூறு வருடங்களுக்கு முன்னரே தனது துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டி இறைவனை நோக்கி மிக மெதுவாகவேனும் முனகியிருந்தால் கூடக் கேட்கக்கூடிய அந்த ஆண்டவனுக்கு இவரது அழுகை கேட்கும். நாமாகத்தான் முயற்சியைத் தொடங்க வேண்டும். எமது சொந்தத் தேவைகள் எம்மை இறைவனின் காலடிக்குக் கொண்டு வரும்வரை இறைவன் காத்திருப்பான். உடனடியாகப் பழைய ஆத்மாக்கள் அவரைச் சூழ்ந்து கொள்வார்கள். அவர்கள் அவரை உயர்த்தி அவரைப் போன்ற நிலையிலிருப்பவர்களைச் சுகப்படுத்தும் மறுவாழ்வு இல்லத்துக்குக் கொண்டு செல்வர். அங்கே சிலர் போதைப் பொருளிலிருந்து விடுபடுகையிலேற்படும் உபாதைகளிலிருந்து தணிக்கப்பட்டிருப்பார்கள். ஏனெனில் உடனடியாக இறைவனை வழிநடத்தக் கோரியிருப்பார்கள். சிலர் இவரைப்போலவே பல காலங்களுக்கும் தூக்கத்திலிருந்து போதைப் பொருளின் பிடியிலிருந்து விடுபடும் வேதனைகள் நீங்கப்பெற்றிருப்பார்கள். ஆனால் தம் வாழ்வை மீண்டும் வாழ்வதற்கு உதவி தேவையாக இருக்கும். அவர்களின் உள்ளே உள்ள ஆத்மீகப் பொறியை  மீண்டும் தூண்டுதல் செய்து மீண்டுமொருமுறை நாமனைவரும் கடவுளே என்று அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கடைசியாக அந்த மனிதர் சிகிச்சைக்குப் பிரதிபலன் தரத்தொடங்கி மீண்டும் கருணையும் வலிமையையும் வரப்பெற்று, தான் மிக மிகப் போதையில் இருந்த காரணத்தால், தனது ஆத்மா துயில் கொண்டிருந்ததெனவும் அதனால் தான் தான் முதலில் கடவுளை நாடவில்லையென்று விளங்கிக் கொண்டார். அவர் தனது மனநிலை வரம்புகளைப் பாதிப்புறச் செய்யக்கூடிய எந்தவொரு விஷயத்திலும் ஆசை வைப்பதில்லையென உறுதிமொழி எடுத்தார். அத்துடன் பிறப்பெடுக்க முன்வருமுன் உள்ளத்தாலும் உயிராலும் தன்னிலையிழந்து நோயுற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் தனது உறுதிமொழியை வலிமையாக்கிக் கொள்வார்."
 ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நான் போர்டிடம் அவரது மோட்டார் விபத்துக்கும், அதன் காரணமான மோர்ஃபின் போதைப்பொருள் பழக்கத்துக்கும், பின்னர் குடிப்பழக்கத்துக்கும் எந்தக் கர்மவினைப்பயன் இட்டுச் சென்றதென அறிந்து கொண்டாரா எனக்கேட்டேன். அவர் நேரடியாகவே பின்வருமாறு பதிலளித்தார்: "மிக நன்றாகவே அறிந்துள்ளேன். முன்னைய ஒரு பதிவின்படி நான் ஒரு குடிகாரனாக இருந்திருக்கிறேன். அப்போது என்னையும் எனது பாட்டிலையும் விட வேறொருவரைப் பற்றியும் நான் நினைத்ததில்லை. அந்தப் பிறவியில் காலனித்துவ ஆட்சியின்போது பென்ஸிலவேனியா நகரத்தில் கிட்டத்தட்ட நான் ஒரு சாக்கடையில் தான் இறந்தேன். நான் நல்ல இருதயமுள்ளவனாக இருந்தாலும் எனது வீழ்ச்சிக்கு மதுபானமே காரணமாக இருந்தது. ஏனெனில் எனக்குக் குடும்பத்தில் இருந்த பிடிப்பிலும் பார்க்க மதுவில் இருந்த பிடிப்பு அதிகமாக இருந்ததால் நான் மதுவுக்கு அடிமையாகிக் குடும்பத்தையே தியாகம் செய்தேன். ஆர்தர் போர்டாக மீண்டும் இவ்வுலகுக்கு வந்தபோது பிராயச்சித்தம் செய்து ஒரு ஆத்மீக வாழ்வு வாழ்வதென்ற உறுதியான தீர்மானத்துடன் தான் வந்தேன். எனது 'நத்திங் ஸோ ஸ்ரேன்ஜ்' (மிக விசித்திரமொன்றுமில்லை) என்ற புத்தகத்திலிருந்தும், எமது சம்பாஷணைகளில் இருந்தும் நீ அறிந்து கொண்டது போல அது தான் இளமையில் எனது வாழ்க்கை முறையாக இருந்தது. எனவே மேற்கு வேர்ஜீனியாவின் மலைப்பிரதேசத்திலோ அல்லது கென்ரக்கியிலோ ஒரு சலிக்கவைக்கும் போதகராக எனது வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பேன். ஆனால் கனவுகளின் மூலம் முந்தைய பிறவி ஒன்றிலே பண்டைய எகிப்து தேசத்திலே நான் ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததனை உணரவைத்ததன் மூலம் எனது கண்கள் திறக்கும் படி செய்யப்பட்டது. சிறிது காலத்துக்கு இந்த இரு தீர்மானங்களும் ஒன்றாக சந்தோஷமாக வாழமுடிந்தது. அதாவது உடல், மனச் சோர்வுகளால் எனது இன்னொரு வாழ்க்கையான ஊதாரித்தனமான குடிகாரனாக வாழ்ந்த வாழ்க்கைக்கான யன்னலை நான் திறக்கும் வரை அப்படி இருக்க முடிந்தது. அந்த விபத்தால் எனது அந்தக் கர்மவினைகளைக் கடப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு அளிக்கப்பட்டது. எனக்குத் தெரிந்தவரை அந்த விபத்தானது முன்கூட்டியே தீர்மானிக்கப் படவில்லை. ஆனால் யார்கண்டது, ஏனெனில் அவ்விபத்தில் இரு பெண்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.
எது எப்படியிருந்தாலும், சபலத்தைத் தூண்டும் சந்தர்ப்பமானது எனக்கு வழங்கப்பட்டது. எனவே முந்திய பிறவியில் நான் ஒரு ஊதாரியாக இருந்தமையினால் எனது ஆத்மா உள்ளூர எனது பழைய நண்பனாகிய மதுபானத்தைத் தழுவிக்கொண்டது. நான் சொல்வதை நம்பு அது நண்பனேயில்லை. பென்சிலவேனியாவில் கழிந்த அந்த வீணாகிப் போன வாழ்க்கையால், கடந்த பிறவியில் மதுபானத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய தாங்கும் திறனும், கொள்ளக்கூடிய திறனும் என்னால் உருவாக்கப் பட்டிருந்ததால், அளவுக்கு மீறி அருந்தினால் தான் எனக்குப் போதையேறும். அது அப்படியில்லாமல் இருந்திருந்தால் அவ்வப்போது சில சமயங்களில் அருந்துவது என்னைப் பாதித்திருக்காது. ஆனால் பென்சிலவேனியாவின் வாழ்க்கையின் கர்மவினையானது எனது உயரிய தீர்மானத்தையும் மிஞ்சிவிட்டது. அது எனது கடந்த வாழ்க்கையையும் முழுவதுமாகப் பாதிக்காதது அதிசயமே. என்னைப் புரிந்து கொண்ட நண்பர்களுக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். அவர்கள் எனது நலனில் அக்கறை காட்டினார்கள். நான் பாதை தவறும் போதெல்லாம் என்னைச் சரியான பாதையில் வழிநடத்துவார்கள். இப்போ அந்தப் பழைய அரக்கனுடன் தொடர்ந்து நடத்திய உறுதியான போராட்டத்தால், எனது பிரச்சனை தோற்கடிக்கப்பட்டு விட்டதென நான் நினைக்கிறேன். நான் வேண்டுமென்றே மதுபானத்தைத் தேடவில்லை. அந்த முட்டாள் டாக்டர் இல்லையென்றால் ஆர்தர் போர்டாக வந்த எனது வாழ்வில் நான் அதனைச் சுவைத்திருந்திருக்க மாட்டேன்." 
அந்தத் துக்ககரமான ஒப்புதல் வாக்குமூலத்தின் பின், சில நாட்களில், ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: "உண்மையைத் தேடி (A Search for the Truth) என்ற புத்தகமானது தேடலுள்ளவர்கள், கவலையில் உள்ளவர்கள் போன்ற பலருக்கும் மிகப் பெறுமதி வாய்ந்ததாக இருந்தவாறு ஊக்கம் தரக்கூடிய விஷயங்களையும் உனது புத்தகத்தில் நன்றாகச் சேர்க்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். எனவே இன்று லிலிக்கு மிகத் திறமையாக இருக்கும் அந்த உயரிய சிந்தனை வாய்ந்த விஷயங்களைப் பற்றிச் சற்றே பேசுவோமாக. இதோ லிலி."
பின் லிலி பின்வரும் செய்தியுடன் டைப்ரைட்டரைப் பொறுப்பேற்றார்: "ரூத், பூதவுடலுடன் இருக்கையிலேயே ஒரு ஆத்மாவானது பூரணத்துவமடைவதற்குப் போதியளவு முயற்சிக்கவில்லையென்றால், உண்மையிலேயே அவர் பின்னடைவு அடைகிறார் என்று பொருள். ஏனெனில் இந்தப் பக்கத்திலே உள்ள விதிகளின் படி இங்கே பின்வாங்குவது என்பது சாத்தியமில்லை. ஒன்றில் முன்னேறுவது அல்லது முன்னேற்றம் ஏதுமின்றி அப்படியே நிற்பது மட்டுமே சாத்தியம். எனவே, உடலுடன் இருக்கும் நிலை தான் எமது சலனங்களை வெல்வதன் மூலமும், மற்றவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதன் மூலமும் ஆத்மீக முன்னேற்றமடைவதற்கென  உருவாக்கப்பட்ட நிலையாகும். இவ்விஷயம் நன்றாக விளங்கிக் கொள்ளப்பட்டால், கெட்டபழக்கங்களை வெல்வது, கூரிய நாக்கைக் கட்டுப்படுத்துவது, கோபத்தையும் சிறுமைத்தனத்தையும் அடக்குவது, எமது நலனுக்குச் சமமாகவாவது மற்றவர்களின் நலனையும் பேணுவது என்பவை மூலம் ஒரு அன்பற்ற செயலும் சொல்லும் ஒரு ஆத்மாவுக் கெதிராக மற்ற ஆத்மா புரியாமலிருப்பதன் முக்கியத்துவத்தை உணர முடியும். ஆத்ம நிலையில் நாம் தாமாகவே மற்றையவர்களின் தேவைக்கேற்ப உதவுவோம். ஏனெனில் நாம் இறைவனின் விதிகளின் கீழே நேரடியாக உள்ளோம். அத்துடன் எமக்கு நீங்கள் குறுகிய வருட இடைவெளிக்குள் அனுபவிப்பது போன்ற தனிப்பட்ட விருப்பங்களொன்றும் பெரிதாக இருக்காது. அது தான் உங்களது மிக முக்கியமான பரீட்சையாகும். அதிலிருந்து எவ்வளவு தூரம் பலனடைகிறீர்கள்? உங்களது முன்னேற்றத்தைப் பாதிப்பவையும், அத்துடன் ஆத்மநிலைக்குப் போன பின்னரும் கூடப் பூவுலக ஆசைகளினால் ஆவியாகச் சுற்றும் நிலைக்குத் தள்ளகூடியவையுமான பழக்கவழக்கங்களைக் களைகிறீர்களா? மதுவருந்துதல், போதைப்பொருட்கள், நிகோடின் புகையிலை நஞ்சு (எந்த வடிவத்திலென்றாலும்) இவையெல்லாம் அங்கு இருக்கையிலேயே களைந்தெறியப்பட வேண்டும். ஏனென்றால் அடுத்த கட்டத்தில் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்காமலிருப்பதற்காக. மற்றவர்களின் நலனில் தானாகவே அக்கறைப்படுவதற்குப் பழகுதல்; கோபக்கொந்தளிப்பை அன்பால் இடம் மாற்றுதல்; ஒருவரின் கடும் கோபத்துக்கு நாம் ஆளாவதை எவ்வளவு தூரம் நாம் விரும்பவில்லையென்பதைக் கண்டுகொண்டு, அதன்மூலம் இன்னொருவரை இனி எப்பொழுதுமே எமது கடும் கோபத்துக்கு ஆளாக்குவதில்லை என்பதைத் தீர்மானிப்பது; எம்மிலும் பார்க்கக் கணவனின் அல்லது மனைவியின் தேவைகளை முன் வைப்பது; எங்களில் பார்க்க ஒருவர் வித்தியாசமான அதிர்வுத் தளத்திலிருப்பதால் அவரில் அன்பு செலுத்துவது கடினமாக இருந்தாலும் அவர்களின் மேல் அன்பு செலுத்துவது - இவையெல்லாம் பூவுலகில் மிக மிக மிக முக்கியமானவையாகும். ஏனெனில் இந்தப் பக்கத்தில் வேறு அலைவரிசையிலோ அதிர்வுத்தளத்திலோ இருப்பவர்கள் தாமாகவே விலகிக் கொள்வார்கள். ஏனென்றால் ஒரே விதமான ஈர்ப்புகள் உள்ளவர்கள் தான் ஒன்று சேர்க்கப்படுவோம்: எனவே, சவால்கள் நிறைந்த அந்தப் பக்கத்திலே தான் முக்கியமான வளர்ச்சியுள்ளது."
போர்ட் இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில் எந்த வகையிலும் களைத்து விடவில்லை. நான் இந்தியானாபோலிஸுக்கு (Indianapolis) எனது குடும்பத்தைப் பார்க்கப் போயிருந்தேன். நான் டைப்ரைட்டருக்குத் திரும்பிய முதல் நாள் ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: "உனது பிரயாணம் சந்தோஷகரமாக இருந்ததை அறிந்து மகிழ்ச்சி. இறப்பிற்கு அப்பால் வரும் இப்படிப்பட்ட நிலையை அடைந்த பின்னரும் கூடத், தாம் மனிதராக, மனிதவுடல் சம்பந்தப்பட்ட ஆசைகளுடன் இருந்ததை மறக்க மாட்டாமல், கடந்து சென்ற பூவுலக வாழ்க்கையில் ஏற்பட்ட பழக்க வழக்கங்களைக் கைவிட முடியாத காரணத்தால், இந்தச் சூழ்நிலைக் கேற்ப மாறமுடியாமல் இருப்பவர்களைப் பற்றி மீண்டும் பார்ப்போம். அவர்கள், புகை பிடிப்பவர்களையோ, மது அருந்துபவர்களையோ அல்லது போதைப் பொருள் உபயோகிப்பவர்களையோ சுற்றித் திரிந்து, அவர்களின் கிளர்ச்சிகளையோ, உணர்ச்சிகளையோ முதலில் அனுபவித்தது போல அனுபவிப்பார்கள். அத்துடன் மது, போதைப்பொருள் புகைத்தல் மற்றும் மரிஜுவானா போன்ற போதைப் பொருள்களை உபயோகித்து இன்பம் அனுபவிப்பவர்களின் ஒரு பகுதியாகத் தாமும் இருக்க ஆவல் படுவார்கள். அவர்கள் இங்கிருப்பவர்களில் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்களாகும். ஏனென்றால், அவர்கள் அந்தப் பழக்கங்களுடன் கூடுதலாக ஒன்றிவிடுவதால், அவற்றைக் கைவிடாமல், எதற்கு ஆசைப்படுகிறார்களோ அவற்றைத் தகாத வழிகளில் அனுபவித்து மகிழ்வார்கள். அந்த சந்தோஷங்களைத் தீவிரமாக விரும்புவதால், ஆத்மீக வழிகளில் முன்னேறுவதற்கு விரைவில் முன் வரமாட்டார்கள். அது அவர்களின் ஆத்மாவின் முன்னேற்றத்துக்கு மோசமான பின்னடைவாகும்.
"வேறு ஒரு காரணத்துக்காக இல்லாவிடினும், இந்த ஒரு காரணத்துக்காகப் புகை பிடித்தல், மதுவருந்துதல், போதைப்பொருள் போன்ற பழக்கங்களைப் பூவுலகில் இருக்கையிலேயே கைவிடுவது நல்லது. ஆத்ம உலகுக்கு வரும் வரை காத்திருப்பதிலும் பார்க்க அங்கேயே அது மிக இலகுவாக இருக்கும். ஆத்ம உலகில் பழக்கங்களை உடைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. எனவே வழக்கமாக அவை அடுத்த பிறவிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்போது அவை வேறு வடிவமெடுக்கலாம் அத்துடன் சிலசமயம் அபாயகரமான போதைப்பழக்கமாக மாறலாம்."   
அவரது போதைப் பழக்கத்தைப் பற்றி நேரடியாக மீண்டுமொரு முறை கேட்கும் துணிவு எனக்கு வரவில்லை. ஆனால் ஒருநாள் போர்ட் திடீரெனப் பின்வருமாறு தொடங்கினார்: "உன்னை ஒரே தொந்தரவு செய்து கொண்டிருக்கும் அந்தக் கேள்வியைப் பற்றிப் பார்ப்போம் - அதாவது நான் இங்கும் தொடர்ந்து மது போதைக்கோ , சிகரெட், போதைப்பொருள் போன்ற விஷயங்களுக்கோ ஏங்குகிறேனோ என்பது தானே. அதற்கான பதிலென்னவென்றால், தற்போது முடிந்து போன எனது பூவுலக வாழ்க்கையில் நான் அவற்றைத் தொடாமல் இருந்திருந்தால், இங்கே எனது நிலை மேலும் சிறப்பாக இருந்திருக்கும். கூடுதலான புரிந்துணர்வுடன் இருந்திருப்பேன். அத்துடன் விரைவாக ஆத்மீக முன்னேற்றமடைந்திருப்பேன். ஆம் நான் சிலவேளைகளில் குடிபோதையில் இருக்கும் யாராவது ஒருவரைச் சுற்றித் திரிவேன். இது ஒரு வெட்கப்படத்தக்க மோசமான செயலாகும். ஆனால் அது ஏனையோருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். அதாவது அவர்களுக்கு அங்கிருக்கையிலேயே அந்தக் கெட்டபழக்கங்களை ஒழிக்கும் படி சொல்லும் ஒரு எச்சரிக்கையாகும்.
"ரூத், உனது கனமான புகை பிடிக்கும் பழக்கத்தை அங்கேயே முதலில் நிறுத்தாவிட்டால், இங்கு வந்த பின் களைய முடியாது. மதுப் பழக்கத்தை முற்றாக நான் விடவில்லை என்பது உனக்குத் தெரியும். சொல்லப் போனால் அடிக்கடி வாகனிலிருந்து விழுந்து கொண்டிருந்தேன். மதுப்பழக்கத்தை முற்றுமுழுதாக அங்கேயே விட்டுவிட்டு வேறு விஷயங்களில் நான் எனது கவனத்தைத் திருப்பியிருந்தால், பிழையான பூவுலகத் தளையில் நான்  கட்டுண்ணாமல், இங்கேயுள்ள முன்னேற்றத்துக்குச் சரியான முறையில் ஈடுகொடுக்க இயலுமாக இருக்கும். எனவே நான் சொல்வதைக் கவனி. நான் தேவையின்றி அறிவுரைகள் வழங்கமாட்டேன் என உனக்குத் தெரியும். நீ தான் கேட்டாய். இது தான் எனது பதில். தொல்லை தரக்கூடிய கெட்ட பழக்கங்களை இயலுமாக இருக்கையிலேயே கைவிடுங்கள்.

Saturday, October 10, 2020

பன்னிரெண்டாம் அத்தியாயம்: பூவுலக வாழ்க்கைகளுக்கிடையே (Between Earth Lives)


ஆர்தர் போர்ட் இப்புத்தகத்துக்கான தனது எழுத்தைக் குறிப்பிட்ட ஒழுங்கில் பின்பற்றவில்லை. சில காலைகள் மறுபிறப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகவும், சில உயரிய வாழ்வு நிலைகளுக்காகவும், மற்றும் சில அவர் இப்போ இருக்கும் நிலையிலுள்ள பாடசாலைகள் மற்றும் நடக்கும் முறைகளுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. பூதவுடலுடன் இருக்கும் நாம் கூடுதல் ஒழுங்கு முறையான செயல் திட்டங்களுக்கு எம்மைப் பழக்கப்படுத்தி இருப்பதால், அந்தத் தகவல்கள் சில சமயம் ஒன்றுக்குள் ஒன்று கலந்திருந்தாலும் வகை வகையாகப் பிரிக்க வேண்டியது அவசியமாகிறது.
மிக முக்கியமான விடயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கையில் அவ்வப்போது திடுமென அவரது குறும்புத்தனமான நகைச்சுவைப் பகிடிகள் வரும். எனக்கு ஏறக்குறைய அவரது பரிச்சயமான சிரிப்புச்சத்தம் கேட்பது போலிருக்கும். கடந்த சகாப்தங்களிலிருந்த பிரபலமான மனிதர்களைப் பற்றி ஒரு தரம் அவரைக் கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கையில், நான், "------ இப்போ என்ன செய்கிறார்?" எனக் கேட்டேன். அவரை நான் தந்திரமாக ஏமாற்றப் பார்த்தேன். ஏனெனில் எனது முன்னைய பிறவியொன்றில் நான் அந்த ஆளாக இருந்தேனென முன்னம் ஒரு தரம் அவர் எனக்குச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் தயங்காமல், "உனக்குத் தெரியவேண்டும். டைப்ரைட்டரில் இருந்து கொண்டு என்னிடம் கேள்விகள் கேட்கிறார்" என்று பதிலளித்தார். இன்னொரு நாள், எப்படி நான் சிகரெட் பழக்கத்தை விடலாமென்று கேட்டதற்கு, அவர் பவ்வியமாக, "புகை பிடிக்காமல் இருப்பதன் மூலம்" எனப் பதிலளித்தார்.
சில சமயங்களில் இறந்து போய்விட்டதாக நாம் சாதாரணமாகக்  கருதும் ஆத்மாக்களைப் பற்றி அற்புதமாகச் சித்தரிப்பார். மார்ச் மாதம் 3 ஆம் திகதி அவர் பின்வருமாறு எழுதினார்: முடிவற்ற இந்தச் சுழற்சியில் நாம் மீண்டும் மீண்டும் இணைந்து, இடையில் எம்முடன் சேர்த்துக் கொண்ட குறைபாடுகளைக் களைந்து இறுதியில் இறைவனில் ஒரு பகுதியாவதற்கு நாம் பொருத்தமாகும் வரை நாம் வளர்கிறோம். உயிர் வாழ்கிறோம், அன்பு செலுத்துகிறோம். ஏன் பாவிகள் அதிகமாகக் காணப்படுகிறார்கள்? ஏனெனில் பலர் சேவையில் பார்க்க எமது சந்தோஷங்களுக்கே முதலிடம் கொடுக்கிறோம். அதை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். நாம் மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியை உணர்ந்தால், நாம் இன்னும் விரைவில் முன்னேறுவோம். ஏனென்றால் அப்போது வேலையும் மகிழ்ச்சியும் இணைகிறது. ஆனால் சோம்பேறித்தனமான வழிகள் தான் கூடுதலாகக் கடைப்பிடிக்கப் படுகின்றன: வெற்றுப் பொழுதுபோக்குகளும் அத்துடன் ஏனையோருக்கோ எமக்கோ கூட உபயோகப்படாத முயற்சிகள். அதைத்தான் மனித இயல்பென்று அழைக்கிறோம். அதாவது பூதவுடலை எடுக்கையில் ஆத்மாவின் இயல்பு என்பது. காம இச்சைகள், இலக்கேதுமின்றி நேரத்தை வீணடித்தல், தற்பெருமையைத் திருப்தி செய்யக்கூடிய வழிகள், எமது ஆசைகளைத் திருப்திப் படுத்தும் வழிகள், இவையெல்லாமே மனித இயல்பென்று நாம் எண்ணிக் கொண்டிருப்பவற்றை உருவாக்குகின்றன. சில இங்கும், ஆத்மவடிவில் வந்த பின்னரும் தொடர்கின்றன. சிலர் தங்கள் எண்ணங்களால் உருவாக்கப்பட்ட கண்ணாடிகளுக்கு முன் நின்று அழகு பார்ப்பார்கள். அவர்களின் விருப்பங்களின் படி அவர்களுக்கு உண்மைபோலத் தோன்றுகின்ற ஆடம்பரமான ஆடைகளை அணிந்து அழகு பார்ப்பார்கள். சிலர் தம் எண்ணங்களில் மட்டுமே இருக்கும் தலை முடியை அரக்கு போன்ற சாயங்களால் அழகு பார்ப்பார்கள். தங்களது முக்கியத்துவத்துக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் அழகான வீடுகளில் வசிப்பார்கள். அத்துடன் மிகப்பெரிய வாகனங்களை ஓட்டுவார்கள். அவ்வாகனங்கள் அவ்வளவு பெரியவை ஆதலால், நாம் திண்மப் பொருட்களுக்கு வழிவிட்டு விலக வேண்டுமெனில் நாள் முழுக்க டிராபிக் போக்குவரத்தைத் தவிர்த்துக் கொண்டே இருக்கவேண்டி வரும். ஆனால் அவை எண்ண வடிவங்கள் மட்டுமே. எனவே அவற்றை நிஜமென்று நம்புபவர்களுக்கு மட்டுமே அவை நிஜமாகும். இங்கு வந்த பின்னரும் கூடத் தொடர்கின்ற பொருட்களின் மேலுள்ள இந்த மோகத்தைக் கண்டு எம்மால் நகைக்கக்கூட முடியாதது வேடிக்கை தான். ஏனெனில் பின் தங்கும் ஆத்மாவானது மனித ஆத்மாக்களாகிய முழு மனித குலத்தையுமே கீழே இழுக்கும். நினைவில் வைத்துக் கொள் ரூத். நாம் செய்யும் பிழையான விஷயங்கள் ஒவ்வொன்றும் எல்லோரையும் எதிர்மறையான முறையில் பாதிக்கின்றன. முழு மனித குலத்தின் முன்னேற்றம் தான் பிரதானமானது என்பதை நினைவில் வைத்திருப்பது அவசியம். அதனால் தான் கிறிஸ்து, 'பிறரில் அன்பு செலுத்து' என்றும் 'உன்னைப் போலவே அயலானையும் நேசி' என்றும் சொல்லியிருக்கிறார். எனவே ஒவ்வொருவருக்கும் உதவுவதன் மூலம் நாம் எல்லோரையும் முன் நோக்கியும், மேல் நோக்கியும் செலுத்துவோம்."
சரியாக ஒரு வாரம் கழிந்த பின் பின்வரும் செய்தி வந்தது: "பல்வேறு வகையான முன்னேற்றப் படிகளுக்கு எம்மைத் தயார் செய்யும் வழிகளைப் பற்றிப் பார்ப்போம். நாம் முதலிலேயே சொன்னது போல மற்றவர்களையும் மேலே செலுத்துவது அவசியமாகிறது ஏனெனில் பாதை ஆழமானது . உதாரணமாக, தனியே முன் செல்ல முயன்றாலோ அன்றி மற்றவர்களுடன் போட்டியிட்டுக் கொண்டு மேலே செல்ல முயன்றாலோ நீங்கள் உச்சியை அடைய மாட்டீர்கள். ஏனெனில் கீழே விடப்பட்டவர்கள் நீங்கள் முன்னேறும் வேகத்திலும் கூடுதல் வேகத்தில் உங்களைப் பின்னால் இழுப்பார்கள். அவர்களுக்கு உதவி தேவை. வழியில், ஒவ்வொரு நிறுத்தத்திலும் இன்னோருவரைக் கைபிடித்து உதவுகையில் நீங்கள் பின் தங்கமாட்டீர்கள் இன்னும் முன்னேறுவீர்கள். காலம் என்பதற்குப் பூவுலகில் நியமனங்களை (appointments) வகுப்பதைத் தவிர வேறு அர்த்தமொன்றுமில்லை என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். காலமானது ஒப்பு நோக்கத்தக்கது (relative) அத்துடன் இங்கே அதற்கு அர்த்தமேதுமில்லை. நீங்களிருக்கும் இடத்திலும் கூட நீங்கள் நேரம் மெதுவாகப் போகவேண்டுமென்று ஆசைப்படுகையில் அது விரைவாகப் போய்விடும். விரைவில் போகவேண்டுமென்று நினைக்கையில் அது ஊர்ந்து செல்லும். மற்றவர்களுக்கு உதவுவதற்கு எப்போதும் நேரம் இருக்கும். இங்கே யாருக்கெனினும் உதவி வேண்டுமெனில் நாம் தாமாகவே உதவுவோம். தான் மட்டும் முன்னேறுவது என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. பதிலாக நாம் பிரபஞ்சத்தின் விதிகளையே கைக்கொண்டு செயற்படுவோம். இங்கே அவை வெளிப்படையாகவே உள்ளன. மற்றவர்களை ஊதாசீனப்படுத்துதல் தான் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகுமெனவும், அப்படிச் செய்தால் நாம் திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிக்கவேண்டி வருமெனவும் உணர்கிறோம்.
இந்தப் புதிய ஆனால் பழமை வாய்ந்த தத்துவத்துக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொண்டால், எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கலாமென்பதைக் கண்டுகொண்டோம். இங்கே பொறாமைகளில்லை, பதவிக்கான போட்டியில்லை, அசூசைகளோ குரோதமோ இல்லை. நாம் அனைவரும் ஒருவரே என்னும் போது எப்படி அது சாத்தியமாகும்? கை விரலையோ அன்றிக் கால் விரலையோ பார்த்துப் பொறாமைப்பட முடியுமா? எமது தலை முடிகள் ஒன்றிலொன்று பொறாமையோ அசூசையோ படமுடியுமா? அவையெல்லாம் ஒரு முழுமையின் பகுதிகளே அன்றி வேறில்லை. உங்கள் இரு கண்களைப் போல, உங்கள் மூக்கும் காதுகளும் போல. உங்கள் உடலின் பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வேலை. அதில் ஏதாவதொன்று மற்றையதை விட மேன்மை போலக் காட்டவோ, செய்யவோ முயற்சி செய்யவில்லை. இங்கு நாம் இறைவனின் மாபெரும் திட்டத்தை உணர்ந்ததனால் நாமும் அவ்வாறே இருக்கிறோம். நாமனைவரும் ஒருவரே. சிலரின் கடமைகள் மற்றவர்களில் பார்க்க வித்தியாசமாக இருக்கும். ஆனால் ஒன்றுபட்ட பூரணத்துவத்தை உருவாக்க அனைவரும் இணைந்து செயற்படுவோம். எனவே பூவுலகில் இருக்கையிலேயே ஏன் நீங்கள் இப்படிப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொள்ளக்கூடாது? கூட்டிற்குள் பதுங்காமல் உங்களைச் சுற்றி நல்லிணக்கத்தைப் படரவிடுவதன் மூலம் இசைவான எண்ணங்கள் உங்களைச் சூழ்வதற்கு அனுமதியுங்கள். நீங்கள் அன்பையும் பரிவையும் அள்ளித் தெளித்தால், உங்களைச் சூழ்ந்துள்ள ஆத்மாக்கள் அந்த நல்லிணக்கத்தை உணர்வார்கள். உள்ளுணர்வால் அவர்கள் உங்களருகில் ஈர்க்கப்படுவார்கள். பின்வாங்காதீர்கள். உதவி கேட்பவர்களுக்குத் தாராள மனப்பான்மையோடு உதவுங்கள்."
ஆத்மீக முன்னேற்றமடைவதற்கு இது தான் ஒரே வழியென்பதை அழுத்தமாகச் சொன்ன போர்ட், பின்வருமாறு தொடர்ந்தார்: "நாம் ஏங்கித்தவிக்கும் முன்னேற்றமானது வழியில் நாம் எவ்வளவு தூரத்துக்கு மற்றவருக்கு உதவுகிறோம் என்பதை வைத்தே அளவிடப்படுகையில், ஏன் தெய்வீகப் பாடல்களைக் கஷ்டப்பட்டுக் கற்கவேண்டும்? ஏன் கலைத்துறையிலோ, விஞ்ஞானத் துறையிலோ ஒருவர் பிரபலமாக வேண்டும்? பிரபலமான ஒருவர் கதவைத் தாண்டி எங்கள் பக்கத்துக்கு வருகையிலே ஒரு வித்தியாசமுமே இருப்பதில்லை. ஏன் அவர் பிரபலமானார்? அவர் விஞ்ஞானக் கண்டு பிடிப்பொன்றைச் செய்தார் எப்படியென்றால் அதற்குரிய எண்ணக்கரு எமது பக்கத்திலிருந்தே அவருக்குப் போயிருக்கும். அவர் சரியான தொனியிலும் அலைவரிசையிலும் பாடியதனால் தான் அவர் பிரபலமானாரா? அந்தத் திறமையானது எமது சிருஷ்டிகர்த்தாவால் அவருக்கு அருளப்பட்டதாகும். இப்படிப்பட்ட கொடைகள் மற்றவர்களின் பாதைகளை வெளிச்சமாக்க உதவியனவா என்பதே இங்கே கவனிக்கப்படும். இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மற்றவர்கள் கஷ்டப்படுகையில் நின்று உதவுகிறோமா அல்லது எங்களது திறமையைப் பற்றி மட்டுமே எண்ணுகிறோமா? ஆமையும் முயலும் கதை தெரியுமல்லவா? ஆமையானது தனது முதுகில் கனமான சுமையைத் தாங்கிக் கொண்டு கஷ்டப்பட்டு நடக்கையில் முயலானது மற்றவர்களுக்கு உதவ மறந்து, துள்ளியோடுவதும் நிற்பதுமாகத் தனது திறமையைப் பற்றி மட்டுமே எண்ணிச் செயற்பட்டது."
ஆர்தர், அவர் இருக்கும், இறப்பின் மறு பக்கம் இருக்கக்கக்கூடிய பாடசாலைகளைப் பற்றிச் சொல்வதற்கு ஒரு நாளும் சலித்ததில்லை. ஒரு முறை அவர் பின்வருமாறு எழுதினார்: "ஆத்மீக முன்னேற்றமடைவதில் ஆவலாக உள்ளவர்கள், கடந்த பூவுலக வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடு முடிந்தவுடனேயே ஒரு குருவிடம் மேலதிக வழிகாட்டல்களைப் பெறுவதற்குப் பதிவு செய்யப்படுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரத்தியேகக் குரு இருப்பார். அவர்கள் தாமாகவே இங்கு ஆத்மாக்களின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்குமாக உதவுபவர்கள். சொல்லப்போனால், அவர்கள் புதிதாக வந்தவர்களைத் தங்கள் சிறகுகளுள் அணைப்பதைப் போல அணைத்துக் கொள்வார்கள். நாம் தவறாமல் சந்தித்துக் கற்றுக் கொள்வோம். ஏனென்றால் இங்கு நாம் முறையான உயர்வுக்கான பிரபஞ்ச விதிகளை நாமாகவே பின்பற்றுவோம். இல்லையென்றால் குழப்பங்கள் நேரிடலாம். ஏனெனில் பூவுலகில் இப்போ இருப்பவர்களிலும் பார்க்க மிக அதிகமான ஆத்மாக்கள் இங்கே உள்ளனர். சிலர் உயர்ந்த நிலைகளுக்குச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகையில், சிலர் மீண்டும் பௌதீக வடிவினில் மூழ்குவதற்கான தங்களது முறைக்காகக் காத்திருக்கிறார்கள். நீயும் நானும் இப்போ செய்து கொண்டிருக்கும் பணியானது முடியும் வரை எனது அடுத்த கட்டத்தைப் பற்றி முடிவு ஒன்றும் எடுக்க வேண்டிய தேவையில்லை.
"இப்போ நாம் என்னென்ன படிப்புகள் இங்கு உள்ளனவெனப் பார்ப்போம். கணக்கோ, கேத்திர கணிதமோ இங்கு தேவையில்லை. ஏனென்றால் அவைகளின் தேவை பௌதீகத் தளத்திலேயே உள்ளன. எழுத்துக் கூட்டல் (spelling) காலம் கடந்த விஷயம். நாம் பிரபஞ்சக் குறியீடுகளிலேயே எண்ணுவோம். எந்தவொரு பாஷைக்குரிய சொற்களும் தேவையில்லை. ஆகாயத்தின் பதிவுகளைப் (akashic records) பார்வையிடுவதற்கு விரும்புபவர்களுக்கு மட்டுமே வாசித்தல் (reading) ஒதுக்கப்பட்டுள்ளது. எழுதுவதும் (writing) அப்படியே. 'ஆகாயப் பதிவுகள்' என்று சொல்லப்படுபவை, பேனா, மைக்குப் பதிலாக ஒரு ஆத்மாவின் செயல்களின் மூலமும், எண்ணங்களின் மூலமும் அழிக்க முடியாதபடி பதிப்பிக்கப்பட்டுள்ளதால், இங்கே நாம் எழுதுவதற்கு ஒன்றுமில்லை. அப்படியெனில் இங்கே நாம் என்னதான் கற்பது? சிலருக்குக், குறிப்பாகப் பூவுலகிலிருக்கும் விஞ்ஞானிகளின் மனங்களிலே தங்கள் எண்ணங்களைப் புகுத்த விரும்புபவர்களுக்கு விஞ்ஞானத்தின் அடிப்படை விதிகள்; பிரபஞ்ச விதிகளை முழுவதுமாக விளங்கிக் கொள்ள விரும்புபவர்களுக்குத் தத்துவவியல்; நல்லியல்பு, அது ஒரு உயிர் இன்னொரு உயிருடன் சேர்ந்திருப்பதற்கான தத்துவமாகும். சூழலியல் (ecology), எதிர்காலத்தில் பிறக்கப்போகும் உயிர்களுக்குப் பூமியில் எஞ்சியிருக்ககூடிய சுகாதாரச் சூழலிலிருந்து மீட்டெடுப்பதற்கு உதவுவதற்கு அது மிக மிக அவசியமாகும். அன்பு - ஆம் அதுவும் கூடக் கற்க வேண்டியதாயிருக்கும். ஏனெனில் எம்மில் பலர் பல காலத்துக்கு முன்பே முந்திய பிறவிகளின் போது அதை நினைவிலிருந்து அகற்றி விட்டோம். ஏன் நாம் அன்பைக் கற்கவேண்டும்? ஏனெனில் அன்பில்லையென்றால் இணக்கமிருக்காது. இணக்கமில்லையினில், இம்முழுப் பிரபஞ்சத்தின் செயல் திட்டங்களனைத்தும் தவிடு பொடியாகி விடும். எனவே கற்பதற்கும், அதைப் பற்றி ஆராயவும் அன்பு மிக மிக முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது.
"வெளி உடற்கவர்ச்சிக்கும் அன்புக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதனைக் கற்போம். அது பூமியில் பூவுடலை அணிகையில் உருவாகும் விலங்கியல்பாகும். ஆத்மாவுக்கும், ஆத்மாவுக்கும் இடையேயான கவர்ச்சியே அன்பாகும். எமது அன்பின் வரம்புகளை விரிவடையச் செய்வதற்கு நாம் எமது குணநலன்களில் உள்ள குறைபாடுகளைச் சீர் செய்யவேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் இன்னும் பெரிய, எப்போதுமே விரிவடைந்து கொண்டியிருக்கும், ஆத்மாக்களின் அன்புக்குரியவர்களாக அவர்களின் வட்டத்திற் சேரலாம். இது நிச்சயமாகச் சாத்தியமானது தான். பூமியிலிருக்கையில் விஷத்தைப் போல ஒவ்வொருவரையொருவர் வெறுத்து ஒதுக்கியவர்கள் இங்கு வந்து, ஒவ்வொருவரும் இந்தத் தூய்மைப்படுத்தும் அனுபவமாகிய, அவர்களின் நடைமுறைகளில், பழக்கவழக்கங்களில், நடக்கும் பண்புகளில் இருக்கும் கரடுமுரடான பகுதிகளைச் சீர் செய்தபின், உற்ற துணைவர்களாக மாறுகின்றனர். கூடுதலான ஆத்மாக்கள் இணக்கமாக வர வர விரிவடைந்து கொண்டே செல்லும் அந்த ஆத்மாக்களின் வட்டமானது நீயும் நாமனைவரும் வாழும் உலகில் தனது முத்திரையைப் பதிய வைக்கும்: மக்களிடையேயும், நாடுகளிடையேயும் குறைவான யுத்தங்களும், கூடுதல் பரிமாற்றங்களும், பகிர்ந்தளித்தலும் நடைபெறும். இங்கே அது பிரதிபலிக்கிறது. எங்கும் குழப்பமிருக்கையில், அது திரையின் இரு பக்கங்களிலும் பிரதிபலிக்கும் என்பது நிச்சயம். ஒருவரையொருவர் தவிர்க்கும், புறக்கணிக்கும் அதிருப்தியுள்ள ஆத்மாக்கள் திரையின் இரு பக்கமும் தாக்கங்களை உண்டாக்குகின்றனர்.
போர்ட் மேலும் சொல்கையில், "ஆகாயப் பதிவுகள் (akashic records) என்பவை எமது செய்கைகளால், எண்ணங்களால், நடைமுறைகளால் நாம் உருவாக்குபவையாகும். அதிலுள்ள குறைபாடுகளை அழிக்கும் ஒரே வழி, உதவி தேவைப்படும் ஒருவருக்கு நாம் செய்யும் அன்பான உதவியாகும். மேலும் அவர், "எம்மால் செய்யப்படும் ஒவ்வொரு நல்ல செய்கைக்கும், எமக்கு ஒவ்வொரு மதிப்பெண் விழுந்து கொண்டிருக்கும். அவை யாரோ ஒரு ஸ்கோர் கீப்பரால் குறிக்கப்படமாட்டா. ஆனால் தானாகவே ஒவ்வொரு ஆத்மாவினாலும் அழுத்தமாகப் பதியப்படும். நாமே எமது பதிவுகளைக் கண்காணித்துக் கொள்வோம். நாமே எமக்குரிய ஜூரியும் நீதிபதியுமாகும். ஏனென்றால் வெண்தாடி வைத்துக் கொண்டுள்ள ஒருவர் தரும் கடுமையான இறுதித் தீர்ப்பென்று நாம் நினைப்பது உண்மையில் எமது மனச்சாட்சியே. ஆனால் அதிலிருந்து நாம் தப்பவியலாது. அது முன்பு எம்முடன் இருந்தது போலவே இப்பொழுதும் எம்முடனேயே இருக்கும். அத்துடன் தொன்று தொட்டு எமது அந்தச் சுவடியில் நாம் முத்திரை பதித்துக் கொண்டே தான் வருகிறோம். இது முக்கியமான விஷயம். ஆசிரியரையோ ஸ்கோர் கீப்பரையோ ஏமாற்றுவது போல் இங்கு ஏமாற்ற முடியாது. ஏமாற்றுதல் பலனளிக்காது. நாமே எமது புள்ளிகளைப் போட்டுக் கொள்வதால், எம்மை நாமே ஏமாற்றவியலாது."
ஆத்ம உலகிலுள்ள பாடசாலைகளில் கற்கும் கல்வியானது ஒரு வகை ஊடுகையின் (osmosis) மூலம் உட்கிரகிக்கப் படுகின்றது என்பதை ஆர்தர் வலியுறுத்தினார். "பௌதீக உலகில் எப்படி விதிகள் வெளிப்படுத்தப் படுகின்றன என்பதை ஆழமாக அறிய விரும்புபவர்களுக்காகவே இங்கே ஆசிரியப் பெருந்தகைகள் உள்ளனர். அங்கிருப்பவர்களில் யார் யாரெல்லாம் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட உண்மைகளைப் பற்றி மேன்மேலும் அறிய ஆவலாயிருக்கிறீர்களோ, அவர்களின் மனங்களில் எமது எண்ணங்களைப் புகுத்துவதற்கு நாம் இங்கு அவற்றை உபயோகப் படுத்துகின்றோம். இப்படியான புரிந்து கொள்ளமுடியாத அறிவிலுள்ள நாட்டங்கள் ஆபத்தானவை என்று எச்சரிப்பவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். சிலர் இப்படிப்பட்ட, அதாவது முடிவற்ற வாழ்வின் மறு பக்கத்திலிருப்பவர்களுடன் இடையே இருக்கும் மெல்லிய திரையைத் தாண்டித் தொடர்பு கொள்ளக் கூடிய ஆற்றலைக் காலகாலமாக அபிவிருத்தி செய்துள்ளனர். சமநிலை பேணப்படுமிடத்தில் ஒரு ஆபத்துமில்லை. சமநிலையானது பேணப்படாதவிடத்து இப்படிப்பட்ட தொடர்புகள் மேற்கொள்வதாயினும் அல்லது தேவதைகள் யாழ் மீட்டிக்கொண்டு மிதந்து திரியும் பொய்யான மேலுலகில் நம்பிக்கை வைத்திருந்தாலும் பிரச்சனைகளை உருவாக்கும். சமநிலை பேணப்படாத தன்மையானது மறைந்திருக்கும் ஆபத்தாகும். எப்படி தேவதைகளின் பெயரில் தியானம் செய்வது, பூவுலகை ஆத்ம உலகுக்குக் கடந்து சென்றவர்களின் மேல் தியானம் செய்வதை விட ஆபத்துக் குறைவென்று சொல்லலாம்? உனது தந்தை முன்னர் ஒரு தரம் உனக்குக் கூறியது போல் இந்தத் துறையில் ஆராய்ந்ததால் மூளை பாதிப்படைந்ததென்று சொல்லப்படுபவர்கள் உண்மையில் வேறு ஏதோ சில முயற்சிகளால் தான் மூளை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். சமநிலை பாதிப்படைந்த பலர் அங்கேயுள்ளனர். அவர்களின் மனநிலை கட்டுக்கோப்பாக இல்லை. எனவே இந்த அமானுஷ்ய துறையில் ஏதும் பிழைகளில்லாமலே அவர்களின் ஆளுமைகள் சில சமயம் பிளவுபட்டுக் காணப்படுகின்றன."
ஆத்ம உலகின் பாடசாலைகள் பற்றி மீண்டும் சொல்கையில் அவர் பின்வருமாறு சொன்னார்: "இங்கேயிருக்கும் ஆத்மாக்களில், பூவுலகில் ஒரு முழுமையான வாழ்வை வாழ்ந்து முடித்த ஆத்மாக்கள் அவசரமாகத் திரும்ப விரும்புவதில்லை. அவர்கள், இங்கிருக்கும் மற்றைய ஆத்மாக்களுக்கும், பூதவுடலுடன் இருப்பவர்களுக்கும் உபயோகப் படக்கூடியதான விஷயங்களை எடுத்து ஆராய்கிறார்கள். பூவுலகிலிருக்கும் ஒரு குழந்தையால் எப்படி சபலத்தூண்டுகைகளையும், நோய்களையும், விபத்துகளையும் தவிர்க்க முடியுமென்று அவர்கள் அறிய விரும்புகிறார்கள். எனவே இங்கே மிகப்பெரிய ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்த வகை முன்னேற்றங்களை எடுத்துச் செல்ல அவர்கள் பூவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகள், உளவியலாளர்கள், மருத்துவர்கள் போன்றோரினூடாக வேலை செய்கிறார்கள். இந்த எண்ணங்களையும், பரிந்துரைகளையும் பெரும்பாலும் அவர்களின் மனங்களிலே விழிப்புடனிருக்கையிலும், கனவு நிலைகளிலும் அவர்களால் உட்புகுத்த இயலுமாகவுள்ளது: ஒரு திருப்புமுனைக்கு வழிவகுக்கும் ஒரு மன உத்வேகம், ஒரு புதிய கருவியை உருவாக்குவதற்கான வரிசையான எண்ணக்கருக்கள், அல்லது கைகெட்டும் இடத்திலுள்ள புத்தகம், விழிப்பு நிலையிலிருக்கும் மனத்தினுள் லாவகமாகப் புகுத்தப்படும் எண்ணங்கள், அதேபோல அரையுறக்க நிலையிலோ, அல்லது உறக்கத்திலோ ஆழ்மனதில் புகுத்தப்படும் எண்ணங்கள். 
"பூவுலகில் நடைபெறும் சடுதியான முன்னேற்றங்கள் கூடுதலாக இங்குள்ள ஆத்மாக்கள் பிரச்சனைகளைப் பற்றி இங்கே ஆராய்வதால் தான் உருவாக்கப்படுகின்றன. இங்கே பிரச்சனைகளைப் பற்றியும் அவற்றின் தீர்வுகளைப் பற்றியும் பரந்த அறிவுகள் காணப்படுகின்றன. நான் சொல்லியது போல நான் இப்போ இருக்குமிடம் ஒரு பிசியான, மும்முரமாக வேலைகள் நடக்குமிடமாகும். அழிவையுண்டாக்கக் கூடிய தீய கண்டுபிடிப்புகள் எப்படி உருவாகின்றன? அவையும் கூட நானிருக்கும் இந்தப் பக்கத்திலே தான் அநேகமாகத் தோற்றுவிக்கப் படுகின்றன. ஆனால் நல்ல கருத்துக்களை அழிவுக்காகப் பயன்படுத்தும் எண்ணங்கள் பூவுலகிலேயே உருவாக்கப்படுகின்றன. ஆத்ம உலகிலல்ல. எந்தக் கண்டுபிடிப்புகளுக்கும் நன்மை, தீமை என இருவகைச் சாத்தியக்கூறுகளும் இருக்கும். அது யார் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. அற்புதமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் பிழையான மூளைகளிலும், கைகளிலும் அகப்பட்டுத் திரிபடைந்து, மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு உபயோகப்படாமல், தீங்கு விளைவிக்ககூடிய விதமாக மாற்றப்படுவது மிகமிகப் பரிதாபத்துக்குரிய விஷயமாகும். கலகக்காரர்களையும், ஆர்ப்பாட்டக்காரர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தீயனவற்றை அடித்து உடைக்கையில் அவற்றுடன் எந்த நல்ல விஷயத்துக்காக ஆர்ப்பாட்டம் செய்கிறார்களோ அவற்றையும் சேர்த்து உடைக்கிறார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் ஒரு தீர்வை வழங்கினால் எவ்வளவு நன்மையாக இருக்கும்."