இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Saturday, October 10, 2020

பன்னிரெண்டாம் அத்தியாயம்: பூவுலக வாழ்க்கைகளுக்கிடையே (Between Earth Lives)


ஆர்தர் போர்ட் இப்புத்தகத்துக்கான தனது எழுத்தைக் குறிப்பிட்ட ஒழுங்கில் பின்பற்றவில்லை. சில காலைகள் மறுபிறப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகவும், சில உயரிய வாழ்வு நிலைகளுக்காகவும், மற்றும் சில அவர் இப்போ இருக்கும் நிலையிலுள்ள பாடசாலைகள் மற்றும் நடக்கும் முறைகளுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. பூதவுடலுடன் இருக்கும் நாம் கூடுதல் ஒழுங்கு முறையான செயல் திட்டங்களுக்கு எம்மைப் பழக்கப்படுத்தி இருப்பதால், அந்தத் தகவல்கள் சில சமயம் ஒன்றுக்குள் ஒன்று கலந்திருந்தாலும் வகை வகையாகப் பிரிக்க வேண்டியது அவசியமாகிறது.
மிக முக்கியமான விடயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கையில் அவ்வப்போது திடுமென அவரது குறும்புத்தனமான நகைச்சுவைப் பகிடிகள் வரும். எனக்கு ஏறக்குறைய அவரது பரிச்சயமான சிரிப்புச்சத்தம் கேட்பது போலிருக்கும். கடந்த சகாப்தங்களிலிருந்த பிரபலமான மனிதர்களைப் பற்றி ஒரு தரம் அவரைக் கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கையில், நான், "------ இப்போ என்ன செய்கிறார்?" எனக் கேட்டேன். அவரை நான் தந்திரமாக ஏமாற்றப் பார்த்தேன். ஏனெனில் எனது முன்னைய பிறவியொன்றில் நான் அந்த ஆளாக இருந்தேனென முன்னம் ஒரு தரம் அவர் எனக்குச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் தயங்காமல், "உனக்குத் தெரியவேண்டும். டைப்ரைட்டரில் இருந்து கொண்டு என்னிடம் கேள்விகள் கேட்கிறார்" என்று பதிலளித்தார். இன்னொரு நாள், எப்படி நான் சிகரெட் பழக்கத்தை விடலாமென்று கேட்டதற்கு, அவர் பவ்வியமாக, "புகை பிடிக்காமல் இருப்பதன் மூலம்" எனப் பதிலளித்தார்.
சில சமயங்களில் இறந்து போய்விட்டதாக நாம் சாதாரணமாகக்  கருதும் ஆத்மாக்களைப் பற்றி அற்புதமாகச் சித்தரிப்பார். மார்ச் மாதம் 3 ஆம் திகதி அவர் பின்வருமாறு எழுதினார்: முடிவற்ற இந்தச் சுழற்சியில் நாம் மீண்டும் மீண்டும் இணைந்து, இடையில் எம்முடன் சேர்த்துக் கொண்ட குறைபாடுகளைக் களைந்து இறுதியில் இறைவனில் ஒரு பகுதியாவதற்கு நாம் பொருத்தமாகும் வரை நாம் வளர்கிறோம். உயிர் வாழ்கிறோம், அன்பு செலுத்துகிறோம். ஏன் பாவிகள் அதிகமாகக் காணப்படுகிறார்கள்? ஏனெனில் பலர் சேவையில் பார்க்க எமது சந்தோஷங்களுக்கே முதலிடம் கொடுக்கிறோம். அதை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். நாம் மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியை உணர்ந்தால், நாம் இன்னும் விரைவில் முன்னேறுவோம். ஏனென்றால் அப்போது வேலையும் மகிழ்ச்சியும் இணைகிறது. ஆனால் சோம்பேறித்தனமான வழிகள் தான் கூடுதலாகக் கடைப்பிடிக்கப் படுகின்றன: வெற்றுப் பொழுதுபோக்குகளும் அத்துடன் ஏனையோருக்கோ எமக்கோ கூட உபயோகப்படாத முயற்சிகள். அதைத்தான் மனித இயல்பென்று அழைக்கிறோம். அதாவது பூதவுடலை எடுக்கையில் ஆத்மாவின் இயல்பு என்பது. காம இச்சைகள், இலக்கேதுமின்றி நேரத்தை வீணடித்தல், தற்பெருமையைத் திருப்தி செய்யக்கூடிய வழிகள், எமது ஆசைகளைத் திருப்திப் படுத்தும் வழிகள், இவையெல்லாமே மனித இயல்பென்று நாம் எண்ணிக் கொண்டிருப்பவற்றை உருவாக்குகின்றன. சில இங்கும், ஆத்மவடிவில் வந்த பின்னரும் தொடர்கின்றன. சிலர் தங்கள் எண்ணங்களால் உருவாக்கப்பட்ட கண்ணாடிகளுக்கு முன் நின்று அழகு பார்ப்பார்கள். அவர்களின் விருப்பங்களின் படி அவர்களுக்கு உண்மைபோலத் தோன்றுகின்ற ஆடம்பரமான ஆடைகளை அணிந்து அழகு பார்ப்பார்கள். சிலர் தம் எண்ணங்களில் மட்டுமே இருக்கும் தலை முடியை அரக்கு போன்ற சாயங்களால் அழகு பார்ப்பார்கள். தங்களது முக்கியத்துவத்துக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் அழகான வீடுகளில் வசிப்பார்கள். அத்துடன் மிகப்பெரிய வாகனங்களை ஓட்டுவார்கள். அவ்வாகனங்கள் அவ்வளவு பெரியவை ஆதலால், நாம் திண்மப் பொருட்களுக்கு வழிவிட்டு விலக வேண்டுமெனில் நாள் முழுக்க டிராபிக் போக்குவரத்தைத் தவிர்த்துக் கொண்டே இருக்கவேண்டி வரும். ஆனால் அவை எண்ண வடிவங்கள் மட்டுமே. எனவே அவற்றை நிஜமென்று நம்புபவர்களுக்கு மட்டுமே அவை நிஜமாகும். இங்கு வந்த பின்னரும் கூடத் தொடர்கின்ற பொருட்களின் மேலுள்ள இந்த மோகத்தைக் கண்டு எம்மால் நகைக்கக்கூட முடியாதது வேடிக்கை தான். ஏனெனில் பின் தங்கும் ஆத்மாவானது மனித ஆத்மாக்களாகிய முழு மனித குலத்தையுமே கீழே இழுக்கும். நினைவில் வைத்துக் கொள் ரூத். நாம் செய்யும் பிழையான விஷயங்கள் ஒவ்வொன்றும் எல்லோரையும் எதிர்மறையான முறையில் பாதிக்கின்றன. முழு மனித குலத்தின் முன்னேற்றம் தான் பிரதானமானது என்பதை நினைவில் வைத்திருப்பது அவசியம். அதனால் தான் கிறிஸ்து, 'பிறரில் அன்பு செலுத்து' என்றும் 'உன்னைப் போலவே அயலானையும் நேசி' என்றும் சொல்லியிருக்கிறார். எனவே ஒவ்வொருவருக்கும் உதவுவதன் மூலம் நாம் எல்லோரையும் முன் நோக்கியும், மேல் நோக்கியும் செலுத்துவோம்."
சரியாக ஒரு வாரம் கழிந்த பின் பின்வரும் செய்தி வந்தது: "பல்வேறு வகையான முன்னேற்றப் படிகளுக்கு எம்மைத் தயார் செய்யும் வழிகளைப் பற்றிப் பார்ப்போம். நாம் முதலிலேயே சொன்னது போல மற்றவர்களையும் மேலே செலுத்துவது அவசியமாகிறது ஏனெனில் பாதை ஆழமானது . உதாரணமாக, தனியே முன் செல்ல முயன்றாலோ அன்றி மற்றவர்களுடன் போட்டியிட்டுக் கொண்டு மேலே செல்ல முயன்றாலோ நீங்கள் உச்சியை அடைய மாட்டீர்கள். ஏனெனில் கீழே விடப்பட்டவர்கள் நீங்கள் முன்னேறும் வேகத்திலும் கூடுதல் வேகத்தில் உங்களைப் பின்னால் இழுப்பார்கள். அவர்களுக்கு உதவி தேவை. வழியில், ஒவ்வொரு நிறுத்தத்திலும் இன்னோருவரைக் கைபிடித்து உதவுகையில் நீங்கள் பின் தங்கமாட்டீர்கள் இன்னும் முன்னேறுவீர்கள். காலம் என்பதற்குப் பூவுலகில் நியமனங்களை (appointments) வகுப்பதைத் தவிர வேறு அர்த்தமொன்றுமில்லை என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். காலமானது ஒப்பு நோக்கத்தக்கது (relative) அத்துடன் இங்கே அதற்கு அர்த்தமேதுமில்லை. நீங்களிருக்கும் இடத்திலும் கூட நீங்கள் நேரம் மெதுவாகப் போகவேண்டுமென்று ஆசைப்படுகையில் அது விரைவாகப் போய்விடும். விரைவில் போகவேண்டுமென்று நினைக்கையில் அது ஊர்ந்து செல்லும். மற்றவர்களுக்கு உதவுவதற்கு எப்போதும் நேரம் இருக்கும். இங்கே யாருக்கெனினும் உதவி வேண்டுமெனில் நாம் தாமாகவே உதவுவோம். தான் மட்டும் முன்னேறுவது என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. பதிலாக நாம் பிரபஞ்சத்தின் விதிகளையே கைக்கொண்டு செயற்படுவோம். இங்கே அவை வெளிப்படையாகவே உள்ளன. மற்றவர்களை ஊதாசீனப்படுத்துதல் தான் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகுமெனவும், அப்படிச் செய்தால் நாம் திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிக்கவேண்டி வருமெனவும் உணர்கிறோம்.
இந்தப் புதிய ஆனால் பழமை வாய்ந்த தத்துவத்துக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொண்டால், எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கலாமென்பதைக் கண்டுகொண்டோம். இங்கே பொறாமைகளில்லை, பதவிக்கான போட்டியில்லை, அசூசைகளோ குரோதமோ இல்லை. நாம் அனைவரும் ஒருவரே என்னும் போது எப்படி அது சாத்தியமாகும்? கை விரலையோ அன்றிக் கால் விரலையோ பார்த்துப் பொறாமைப்பட முடியுமா? எமது தலை முடிகள் ஒன்றிலொன்று பொறாமையோ அசூசையோ படமுடியுமா? அவையெல்லாம் ஒரு முழுமையின் பகுதிகளே அன்றி வேறில்லை. உங்கள் இரு கண்களைப் போல, உங்கள் மூக்கும் காதுகளும் போல. உங்கள் உடலின் பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வேலை. அதில் ஏதாவதொன்று மற்றையதை விட மேன்மை போலக் காட்டவோ, செய்யவோ முயற்சி செய்யவில்லை. இங்கு நாம் இறைவனின் மாபெரும் திட்டத்தை உணர்ந்ததனால் நாமும் அவ்வாறே இருக்கிறோம். நாமனைவரும் ஒருவரே. சிலரின் கடமைகள் மற்றவர்களில் பார்க்க வித்தியாசமாக இருக்கும். ஆனால் ஒன்றுபட்ட பூரணத்துவத்தை உருவாக்க அனைவரும் இணைந்து செயற்படுவோம். எனவே பூவுலகில் இருக்கையிலேயே ஏன் நீங்கள் இப்படிப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொள்ளக்கூடாது? கூட்டிற்குள் பதுங்காமல் உங்களைச் சுற்றி நல்லிணக்கத்தைப் படரவிடுவதன் மூலம் இசைவான எண்ணங்கள் உங்களைச் சூழ்வதற்கு அனுமதியுங்கள். நீங்கள் அன்பையும் பரிவையும் அள்ளித் தெளித்தால், உங்களைச் சூழ்ந்துள்ள ஆத்மாக்கள் அந்த நல்லிணக்கத்தை உணர்வார்கள். உள்ளுணர்வால் அவர்கள் உங்களருகில் ஈர்க்கப்படுவார்கள். பின்வாங்காதீர்கள். உதவி கேட்பவர்களுக்குத் தாராள மனப்பான்மையோடு உதவுங்கள்."
ஆத்மீக முன்னேற்றமடைவதற்கு இது தான் ஒரே வழியென்பதை அழுத்தமாகச் சொன்ன போர்ட், பின்வருமாறு தொடர்ந்தார்: "நாம் ஏங்கித்தவிக்கும் முன்னேற்றமானது வழியில் நாம் எவ்வளவு தூரத்துக்கு மற்றவருக்கு உதவுகிறோம் என்பதை வைத்தே அளவிடப்படுகையில், ஏன் தெய்வீகப் பாடல்களைக் கஷ்டப்பட்டுக் கற்கவேண்டும்? ஏன் கலைத்துறையிலோ, விஞ்ஞானத் துறையிலோ ஒருவர் பிரபலமாக வேண்டும்? பிரபலமான ஒருவர் கதவைத் தாண்டி எங்கள் பக்கத்துக்கு வருகையிலே ஒரு வித்தியாசமுமே இருப்பதில்லை. ஏன் அவர் பிரபலமானார்? அவர் விஞ்ஞானக் கண்டு பிடிப்பொன்றைச் செய்தார் எப்படியென்றால் அதற்குரிய எண்ணக்கரு எமது பக்கத்திலிருந்தே அவருக்குப் போயிருக்கும். அவர் சரியான தொனியிலும் அலைவரிசையிலும் பாடியதனால் தான் அவர் பிரபலமானாரா? அந்தத் திறமையானது எமது சிருஷ்டிகர்த்தாவால் அவருக்கு அருளப்பட்டதாகும். இப்படிப்பட்ட கொடைகள் மற்றவர்களின் பாதைகளை வெளிச்சமாக்க உதவியனவா என்பதே இங்கே கவனிக்கப்படும். இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மற்றவர்கள் கஷ்டப்படுகையில் நின்று உதவுகிறோமா அல்லது எங்களது திறமையைப் பற்றி மட்டுமே எண்ணுகிறோமா? ஆமையும் முயலும் கதை தெரியுமல்லவா? ஆமையானது தனது முதுகில் கனமான சுமையைத் தாங்கிக் கொண்டு கஷ்டப்பட்டு நடக்கையில் முயலானது மற்றவர்களுக்கு உதவ மறந்து, துள்ளியோடுவதும் நிற்பதுமாகத் தனது திறமையைப் பற்றி மட்டுமே எண்ணிச் செயற்பட்டது."
ஆர்தர், அவர் இருக்கும், இறப்பின் மறு பக்கம் இருக்கக்கக்கூடிய பாடசாலைகளைப் பற்றிச் சொல்வதற்கு ஒரு நாளும் சலித்ததில்லை. ஒரு முறை அவர் பின்வருமாறு எழுதினார்: "ஆத்மீக முன்னேற்றமடைவதில் ஆவலாக உள்ளவர்கள், கடந்த பூவுலக வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடு முடிந்தவுடனேயே ஒரு குருவிடம் மேலதிக வழிகாட்டல்களைப் பெறுவதற்குப் பதிவு செய்யப்படுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரத்தியேகக் குரு இருப்பார். அவர்கள் தாமாகவே இங்கு ஆத்மாக்களின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்குமாக உதவுபவர்கள். சொல்லப்போனால், அவர்கள் புதிதாக வந்தவர்களைத் தங்கள் சிறகுகளுள் அணைப்பதைப் போல அணைத்துக் கொள்வார்கள். நாம் தவறாமல் சந்தித்துக் கற்றுக் கொள்வோம். ஏனென்றால் இங்கு நாம் முறையான உயர்வுக்கான பிரபஞ்ச விதிகளை நாமாகவே பின்பற்றுவோம். இல்லையென்றால் குழப்பங்கள் நேரிடலாம். ஏனெனில் பூவுலகில் இப்போ இருப்பவர்களிலும் பார்க்க மிக அதிகமான ஆத்மாக்கள் இங்கே உள்ளனர். சிலர் உயர்ந்த நிலைகளுக்குச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகையில், சிலர் மீண்டும் பௌதீக வடிவினில் மூழ்குவதற்கான தங்களது முறைக்காகக் காத்திருக்கிறார்கள். நீயும் நானும் இப்போ செய்து கொண்டிருக்கும் பணியானது முடியும் வரை எனது அடுத்த கட்டத்தைப் பற்றி முடிவு ஒன்றும் எடுக்க வேண்டிய தேவையில்லை.
"இப்போ நாம் என்னென்ன படிப்புகள் இங்கு உள்ளனவெனப் பார்ப்போம். கணக்கோ, கேத்திர கணிதமோ இங்கு தேவையில்லை. ஏனென்றால் அவைகளின் தேவை பௌதீகத் தளத்திலேயே உள்ளன. எழுத்துக் கூட்டல் (spelling) காலம் கடந்த விஷயம். நாம் பிரபஞ்சக் குறியீடுகளிலேயே எண்ணுவோம். எந்தவொரு பாஷைக்குரிய சொற்களும் தேவையில்லை. ஆகாயத்தின் பதிவுகளைப் (akashic records) பார்வையிடுவதற்கு விரும்புபவர்களுக்கு மட்டுமே வாசித்தல் (reading) ஒதுக்கப்பட்டுள்ளது. எழுதுவதும் (writing) அப்படியே. 'ஆகாயப் பதிவுகள்' என்று சொல்லப்படுபவை, பேனா, மைக்குப் பதிலாக ஒரு ஆத்மாவின் செயல்களின் மூலமும், எண்ணங்களின் மூலமும் அழிக்க முடியாதபடி பதிப்பிக்கப்பட்டுள்ளதால், இங்கே நாம் எழுதுவதற்கு ஒன்றுமில்லை. அப்படியெனில் இங்கே நாம் என்னதான் கற்பது? சிலருக்குக், குறிப்பாகப் பூவுலகிலிருக்கும் விஞ்ஞானிகளின் மனங்களிலே தங்கள் எண்ணங்களைப் புகுத்த விரும்புபவர்களுக்கு விஞ்ஞானத்தின் அடிப்படை விதிகள்; பிரபஞ்ச விதிகளை முழுவதுமாக விளங்கிக் கொள்ள விரும்புபவர்களுக்குத் தத்துவவியல்; நல்லியல்பு, அது ஒரு உயிர் இன்னொரு உயிருடன் சேர்ந்திருப்பதற்கான தத்துவமாகும். சூழலியல் (ecology), எதிர்காலத்தில் பிறக்கப்போகும் உயிர்களுக்குப் பூமியில் எஞ்சியிருக்ககூடிய சுகாதாரச் சூழலிலிருந்து மீட்டெடுப்பதற்கு உதவுவதற்கு அது மிக மிக அவசியமாகும். அன்பு - ஆம் அதுவும் கூடக் கற்க வேண்டியதாயிருக்கும். ஏனெனில் எம்மில் பலர் பல காலத்துக்கு முன்பே முந்திய பிறவிகளின் போது அதை நினைவிலிருந்து அகற்றி விட்டோம். ஏன் நாம் அன்பைக் கற்கவேண்டும்? ஏனெனில் அன்பில்லையென்றால் இணக்கமிருக்காது. இணக்கமில்லையினில், இம்முழுப் பிரபஞ்சத்தின் செயல் திட்டங்களனைத்தும் தவிடு பொடியாகி விடும். எனவே கற்பதற்கும், அதைப் பற்றி ஆராயவும் அன்பு மிக மிக முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது.
"வெளி உடற்கவர்ச்சிக்கும் அன்புக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதனைக் கற்போம். அது பூமியில் பூவுடலை அணிகையில் உருவாகும் விலங்கியல்பாகும். ஆத்மாவுக்கும், ஆத்மாவுக்கும் இடையேயான கவர்ச்சியே அன்பாகும். எமது அன்பின் வரம்புகளை விரிவடையச் செய்வதற்கு நாம் எமது குணநலன்களில் உள்ள குறைபாடுகளைச் சீர் செய்யவேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் இன்னும் பெரிய, எப்போதுமே விரிவடைந்து கொண்டியிருக்கும், ஆத்மாக்களின் அன்புக்குரியவர்களாக அவர்களின் வட்டத்திற் சேரலாம். இது நிச்சயமாகச் சாத்தியமானது தான். பூமியிலிருக்கையில் விஷத்தைப் போல ஒவ்வொருவரையொருவர் வெறுத்து ஒதுக்கியவர்கள் இங்கு வந்து, ஒவ்வொருவரும் இந்தத் தூய்மைப்படுத்தும் அனுபவமாகிய, அவர்களின் நடைமுறைகளில், பழக்கவழக்கங்களில், நடக்கும் பண்புகளில் இருக்கும் கரடுமுரடான பகுதிகளைச் சீர் செய்தபின், உற்ற துணைவர்களாக மாறுகின்றனர். கூடுதலான ஆத்மாக்கள் இணக்கமாக வர வர விரிவடைந்து கொண்டே செல்லும் அந்த ஆத்மாக்களின் வட்டமானது நீயும் நாமனைவரும் வாழும் உலகில் தனது முத்திரையைப் பதிய வைக்கும்: மக்களிடையேயும், நாடுகளிடையேயும் குறைவான யுத்தங்களும், கூடுதல் பரிமாற்றங்களும், பகிர்ந்தளித்தலும் நடைபெறும். இங்கே அது பிரதிபலிக்கிறது. எங்கும் குழப்பமிருக்கையில், அது திரையின் இரு பக்கங்களிலும் பிரதிபலிக்கும் என்பது நிச்சயம். ஒருவரையொருவர் தவிர்க்கும், புறக்கணிக்கும் அதிருப்தியுள்ள ஆத்மாக்கள் திரையின் இரு பக்கமும் தாக்கங்களை உண்டாக்குகின்றனர்.
போர்ட் மேலும் சொல்கையில், "ஆகாயப் பதிவுகள் (akashic records) என்பவை எமது செய்கைகளால், எண்ணங்களால், நடைமுறைகளால் நாம் உருவாக்குபவையாகும். அதிலுள்ள குறைபாடுகளை அழிக்கும் ஒரே வழி, உதவி தேவைப்படும் ஒருவருக்கு நாம் செய்யும் அன்பான உதவியாகும். மேலும் அவர், "எம்மால் செய்யப்படும் ஒவ்வொரு நல்ல செய்கைக்கும், எமக்கு ஒவ்வொரு மதிப்பெண் விழுந்து கொண்டிருக்கும். அவை யாரோ ஒரு ஸ்கோர் கீப்பரால் குறிக்கப்படமாட்டா. ஆனால் தானாகவே ஒவ்வொரு ஆத்மாவினாலும் அழுத்தமாகப் பதியப்படும். நாமே எமது பதிவுகளைக் கண்காணித்துக் கொள்வோம். நாமே எமக்குரிய ஜூரியும் நீதிபதியுமாகும். ஏனென்றால் வெண்தாடி வைத்துக் கொண்டுள்ள ஒருவர் தரும் கடுமையான இறுதித் தீர்ப்பென்று நாம் நினைப்பது உண்மையில் எமது மனச்சாட்சியே. ஆனால் அதிலிருந்து நாம் தப்பவியலாது. அது முன்பு எம்முடன் இருந்தது போலவே இப்பொழுதும் எம்முடனேயே இருக்கும். அத்துடன் தொன்று தொட்டு எமது அந்தச் சுவடியில் நாம் முத்திரை பதித்துக் கொண்டே தான் வருகிறோம். இது முக்கியமான விஷயம். ஆசிரியரையோ ஸ்கோர் கீப்பரையோ ஏமாற்றுவது போல் இங்கு ஏமாற்ற முடியாது. ஏமாற்றுதல் பலனளிக்காது. நாமே எமது புள்ளிகளைப் போட்டுக் கொள்வதால், எம்மை நாமே ஏமாற்றவியலாது."
ஆத்ம உலகிலுள்ள பாடசாலைகளில் கற்கும் கல்வியானது ஒரு வகை ஊடுகையின் (osmosis) மூலம் உட்கிரகிக்கப் படுகின்றது என்பதை ஆர்தர் வலியுறுத்தினார். "பௌதீக உலகில் எப்படி விதிகள் வெளிப்படுத்தப் படுகின்றன என்பதை ஆழமாக அறிய விரும்புபவர்களுக்காகவே இங்கே ஆசிரியப் பெருந்தகைகள் உள்ளனர். அங்கிருப்பவர்களில் யார் யாரெல்லாம் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட உண்மைகளைப் பற்றி மேன்மேலும் அறிய ஆவலாயிருக்கிறீர்களோ, அவர்களின் மனங்களில் எமது எண்ணங்களைப் புகுத்துவதற்கு நாம் இங்கு அவற்றை உபயோகப் படுத்துகின்றோம். இப்படியான புரிந்து கொள்ளமுடியாத அறிவிலுள்ள நாட்டங்கள் ஆபத்தானவை என்று எச்சரிப்பவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். சிலர் இப்படிப்பட்ட, அதாவது முடிவற்ற வாழ்வின் மறு பக்கத்திலிருப்பவர்களுடன் இடையே இருக்கும் மெல்லிய திரையைத் தாண்டித் தொடர்பு கொள்ளக் கூடிய ஆற்றலைக் காலகாலமாக அபிவிருத்தி செய்துள்ளனர். சமநிலை பேணப்படுமிடத்தில் ஒரு ஆபத்துமில்லை. சமநிலையானது பேணப்படாதவிடத்து இப்படிப்பட்ட தொடர்புகள் மேற்கொள்வதாயினும் அல்லது தேவதைகள் யாழ் மீட்டிக்கொண்டு மிதந்து திரியும் பொய்யான மேலுலகில் நம்பிக்கை வைத்திருந்தாலும் பிரச்சனைகளை உருவாக்கும். சமநிலை பேணப்படாத தன்மையானது மறைந்திருக்கும் ஆபத்தாகும். எப்படி தேவதைகளின் பெயரில் தியானம் செய்வது, பூவுலகை ஆத்ம உலகுக்குக் கடந்து சென்றவர்களின் மேல் தியானம் செய்வதை விட ஆபத்துக் குறைவென்று சொல்லலாம்? உனது தந்தை முன்னர் ஒரு தரம் உனக்குக் கூறியது போல் இந்தத் துறையில் ஆராய்ந்ததால் மூளை பாதிப்படைந்ததென்று சொல்லப்படுபவர்கள் உண்மையில் வேறு ஏதோ சில முயற்சிகளால் தான் மூளை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். சமநிலை பாதிப்படைந்த பலர் அங்கேயுள்ளனர். அவர்களின் மனநிலை கட்டுக்கோப்பாக இல்லை. எனவே இந்த அமானுஷ்ய துறையில் ஏதும் பிழைகளில்லாமலே அவர்களின் ஆளுமைகள் சில சமயம் பிளவுபட்டுக் காணப்படுகின்றன."
ஆத்ம உலகின் பாடசாலைகள் பற்றி மீண்டும் சொல்கையில் அவர் பின்வருமாறு சொன்னார்: "இங்கேயிருக்கும் ஆத்மாக்களில், பூவுலகில் ஒரு முழுமையான வாழ்வை வாழ்ந்து முடித்த ஆத்மாக்கள் அவசரமாகத் திரும்ப விரும்புவதில்லை. அவர்கள், இங்கிருக்கும் மற்றைய ஆத்மாக்களுக்கும், பூதவுடலுடன் இருப்பவர்களுக்கும் உபயோகப் படக்கூடியதான விஷயங்களை எடுத்து ஆராய்கிறார்கள். பூவுலகிலிருக்கும் ஒரு குழந்தையால் எப்படி சபலத்தூண்டுகைகளையும், நோய்களையும், விபத்துகளையும் தவிர்க்க முடியுமென்று அவர்கள் அறிய விரும்புகிறார்கள். எனவே இங்கே மிகப்பெரிய ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்த வகை முன்னேற்றங்களை எடுத்துச் செல்ல அவர்கள் பூவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகள், உளவியலாளர்கள், மருத்துவர்கள் போன்றோரினூடாக வேலை செய்கிறார்கள். இந்த எண்ணங்களையும், பரிந்துரைகளையும் பெரும்பாலும் அவர்களின் மனங்களிலே விழிப்புடனிருக்கையிலும், கனவு நிலைகளிலும் அவர்களால் உட்புகுத்த இயலுமாகவுள்ளது: ஒரு திருப்புமுனைக்கு வழிவகுக்கும் ஒரு மன உத்வேகம், ஒரு புதிய கருவியை உருவாக்குவதற்கான வரிசையான எண்ணக்கருக்கள், அல்லது கைகெட்டும் இடத்திலுள்ள புத்தகம், விழிப்பு நிலையிலிருக்கும் மனத்தினுள் லாவகமாகப் புகுத்தப்படும் எண்ணங்கள், அதேபோல அரையுறக்க நிலையிலோ, அல்லது உறக்கத்திலோ ஆழ்மனதில் புகுத்தப்படும் எண்ணங்கள். 
"பூவுலகில் நடைபெறும் சடுதியான முன்னேற்றங்கள் கூடுதலாக இங்குள்ள ஆத்மாக்கள் பிரச்சனைகளைப் பற்றி இங்கே ஆராய்வதால் தான் உருவாக்கப்படுகின்றன. இங்கே பிரச்சனைகளைப் பற்றியும் அவற்றின் தீர்வுகளைப் பற்றியும் பரந்த அறிவுகள் காணப்படுகின்றன. நான் சொல்லியது போல நான் இப்போ இருக்குமிடம் ஒரு பிசியான, மும்முரமாக வேலைகள் நடக்குமிடமாகும். அழிவையுண்டாக்கக் கூடிய தீய கண்டுபிடிப்புகள் எப்படி உருவாகின்றன? அவையும் கூட நானிருக்கும் இந்தப் பக்கத்திலே தான் அநேகமாகத் தோற்றுவிக்கப் படுகின்றன. ஆனால் நல்ல கருத்துக்களை அழிவுக்காகப் பயன்படுத்தும் எண்ணங்கள் பூவுலகிலேயே உருவாக்கப்படுகின்றன. ஆத்ம உலகிலல்ல. எந்தக் கண்டுபிடிப்புகளுக்கும் நன்மை, தீமை என இருவகைச் சாத்தியக்கூறுகளும் இருக்கும். அது யார் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. அற்புதமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் பிழையான மூளைகளிலும், கைகளிலும் அகப்பட்டுத் திரிபடைந்து, மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு உபயோகப்படாமல், தீங்கு விளைவிக்ககூடிய விதமாக மாற்றப்படுவது மிகமிகப் பரிதாபத்துக்குரிய விஷயமாகும். கலகக்காரர்களையும், ஆர்ப்பாட்டக்காரர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தீயனவற்றை அடித்து உடைக்கையில் அவற்றுடன் எந்த நல்ல விஷயத்துக்காக ஆர்ப்பாட்டம் செய்கிறார்களோ அவற்றையும் சேர்த்து உடைக்கிறார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் ஒரு தீர்வை வழங்கினால் எவ்வளவு நன்மையாக இருக்கும்."

No comments: