இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Monday, August 10, 2020

பதினான்காம் அத்தியாயம் - உயர்ந்த தளங்களும், ஏனைய கிரகங்களும் (Higher Planes and Other Planets)

ஆர்தர் எப்போதும் எட்கர் கேஸி (Edgar Cayce), யோகானந்தா, பெற்றி வைற் போன்ற மிகவும் முன்னேறிய ஆத்மாக்களைப் பற்றிச் சொல்கையில் எமது ஆவலைத் தூண்டும் விதமாக 'உயரிய தளங்கள்', 'ஏனைய கிரகங்கள்' போன்ற பதங்களைக் கையாள்வார். அப்பதங்களை விளக்குமாறு நான் கேட்டதற்கு ஆர்தர் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி பின்வருமாறு எழுதினார்: "நீ கேட்கும் அந்த உயரிய தளங்கள் உண்மையில் உயர்வான உணர்வு நிலைகள் தான். அதாவது இடம் ஒரே மாதிரியானது தான். ஆனால் அவர்களின் உணர்வு நிலைகள் மிகமிகத் துல்லியமானவை. எனவே எமது நிலையிலுள்ளவர்கள் போதுமான தயாரிப்பின்றி அவர்களின் நிலைக்கு முன்னேற முடியாது. ஆனால் அதே நேரத்தில் சில உயரிய தளத்திலிருப்பவர்கள் எந்தவித கஷ்டமுமின்றி எமது தளத்திலும், அவர்கள் தளத்திலும் ஒரே நேரத்தில் வசிக்கக் கூடியதாக  இருப்பார்கள். இது எப்படியென்றால் கிட்டத்தட்ட எங்களது நிலைக்கும் உங்களது நிலைக்கும் இடையேயுள்ள வித்தியாசம் தான். எமக்கு நேர் மேலுள்ள தளத்தில் இருப்பவர்களின் இருப்பை நாம் உணர்வதிலும் பார்க்கக் கூடுதலாக அவர்கள் எமது இருப்பை உணர்வார்கள். அந்த நிலைக்கு முன்னேறுவதற்கு முன் சிற்சில வழிகளில் அவர்கள் தங்களைத் தயார் செய்ய வேண்டும். முதலாவது உலகியல் சம்பந்தமான எதிர்மறை எண்ணங்கள் ஏதாவது இருப்பின் அவற்றைச் சீர் செய்யவேண்டும். அதன்பின் படிப்படியாக அவர்கள் மனநிலை வளர்ச்சியும் ஆத்மீக வளர்ச்சியும் அடைவார்கள். பின்னர் மறைபொருளை உணரக்கூடிய உயர்ந்த அறிவைக் கற்பதற்கு அவர்கள் தயாரென்றால் அந்த நிலைக்கு முன்னேறுவார்கள். பூவுலகில் மீண்டும் பிறப்பெடுப்பதன் மூலம் தங்களது முன்னேற்றமானது விரைவாக்கப்படக் கூடுமென எண்ணுபவர்கள் மிக அபூர்வமாகவே அடுத்த உயர் நிலைக்கு முன்னேறிச் செல்வார்கள். ஏனெனில் அப்போது பூவுலகில் மீண்டும் பிறப்பதற்கான நேரடியான வழி முறைகளிலிருந்து விலகி விடுவார்கள்.
தான் பூவுலகுக்கு ஆர்தர் போர்டாகப் பிறப்பெடுப்பதற்கு முன்னர் உயரிய தளத்தில் சில காலங்களைக் கழித்ததாக முன்பு ஒரு தரம் ஆர்தர் போர்ட் குறிப்பிட்டிருந்ததை நினைவுபடுத்திய நான், அவருக்கும் லிலிக்கும் அந்தத் தளம் நன்கு பரிச்சயமா எனக்கேட்டேன். 'ஆம்' என்ற அவர் மேலும் தொடர்ந்து பின்வருமாறு சொன்னார்: "லிலி கூடுதலான நேரத்தை அந்த உயர் அலைவரிசையில் உள்ள தளத்திலேயே கழிக்கிறார். அதைப் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல அவரால் இயலாது. ஏனெனில் உங்களின் வரையறுக்கப்பட்ட அறிவால் அவர் சொல்வதை அதிகம் புரிந்து கொள்ள இயலாது. முதலிலேயே சொன்னது போல், அது வேறு ஒரு தளம் என்பதிலும் பார்க்க உயரிய உணர்வு நிலை என்பதே சாலப்பொருந்தும். ஏனெனில் பிரபஞ்சம் ஒன்றேதான். அவர் அநேகமாக பூவுலகில் மீண்டும் பிறவியெடுக்க மாட்டார். ஆனால் அவர் விரும்பின் மீண்டும் பிறவி எடுக்கக் கூடிய தகுதி அவருக்குள்ளது.
"அவரது கடைசிப் பிறவியில் அவர் ஒரு எழுத்தாளராக இருந்தார். இப்போது பல எழுத்தாளர்கள் அங்குள்ளதால், இங்கு வேறு பலரால் ஆற்ற முடியாத சில விஷயங்களை அவர் முயல்கிறார். அதாவது இங்கு வந்துள்ள அப்படியான எழுத்தாளர்களின் முன்னேற்றத்துக்கு ஆலோசனைகள் வழங்குதல், பூவுலகில் உயர்வான ஆத்மீக ஆய்வுக் கட்டுரைகள் எழுதுபவர்களுடன் நேரடியாக வேலை செய்வது போன்ற வேலைகளில் அவர் ஈடுபடுகிறார். உணர்வு நிலைகளின் (consciousness) வேறுபாடுகளைச் சொற்களிலே விபரிப்பதென்பது மிக மிகக்கடினம். ஹீலியம் என்னும் வாயுவினால் நிரப்பப்பட்ட ஒரு பலூனை ஒரு கணம் எண்ணிப்பார்ப்போம். பூமியிலிருக்கும் போது அதனை அனைவரும் பார்த்துத் தொட்டு உணரக்கூடிய விதமான ஒரு சிறந்த பௌதீக உருவமாக அது இருக்கும். ஆனால் அதனைப் பிணைத்திருக்கும் கயிறு அறுக்கப்பட்டவுடன் அது பூமியின் பிணைப்புகளிலிருந்து விடுபட்டு உயரே செல்கிறது. இதனை இறப்பின் போது ஆத்மாவைப் பூதவுடலிலிருந்து விடுவிக்கும் அந்த வெள்ளி இழையுடன் ஒப்பிடலாம். அந்த பலூனானது வளிமண்டலத்துக்கு மேலுள்ள மெல்லிதான அடுக்கு வளி மண்டலத்தை அடையும் வரை உயரே உயரே போனாலும், இன்னும் அது பூமியில் இருக்கும் போது இருந்தது போலவே தெளிவானதாகவும், தொட்டு உணரக்கூடியதாகவும் தான் இருக்கும். இருந்தாலும் இனிமேல் மனிதர்களால் பூமியிலிருந்து அதனைப் பார்க்கவோ உணரவோ முடியாது. அது மானிடரின் பார்வையில் இருந்து மறைந்து வானில் உயர உயரப் பறந்து, மனிதரின் உடனடிப் புலனுணர்வுக்கு எட்டாததாகப் போய்விடினும் இன்னமும் அது உயிர்ப்பு உள்ளதாகத்தான் இருக்கும். சிறிது காலம் சென்றபின் அது பூமியுடனான அனைத்துத் தொடர்புகளையும் இழக்கிறது. அந்த பலூனுக்கு அதனது ஞாபகத் திறனாலும், அறிவாற்றலாலும் கீழே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது நன்றாகத் தெரியும். எனினும், பூமியில் இருப்பவர்களுக்கு அதனுடன் எந்த விதமானதொரு தொடர்பும் இருக்காது. நான் இப்போ கூறிய இந்த உதாரணமானது ஒரு முழுமையான உதாரணமில்லைத் தான். ஆனால் வரையறைக்கு உட்பட்ட அறிவால் விளங்கிக் கொள்ளக்கூடியவாறு புரிய வைப்பது மிகவும் கடினம்.
"இந்த உயர்வான உணர்வு நிலையில் உள்ள மனித ஆத்மாவானது எப்படிப் பூதவுடலுடன் இருக்கையில் உயிர்ப்புள்ளதாகவும், விழிப்புள்ளதாகவும் இருந்ததோ அவ்வாறே இப்போதும் இருக்கும். ஆனால் பூதவுடலுக்குரிய பந்தங்களில் இருந்து முழுமையாக விடுபட்டிருக்கும். நாம் இப்போ இருக்கும் இடைப்பட்ட நிலையில் எமக்குப் பூவுலக பந்தங்களும், மன அழுத்தங்களும் உள்ளன. ஆனால் லிலி அந்த உயர்வான உணர்வு நிலைக்குப் போகையில் பூவுடல் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான சலனங்களையும் விட்டுவிடுவார்."
பூவுலக வாழ்க்கைக்கு இடைப்பட்ட காலத்தில் யுரேனஸ் கிரகத்துக்கோ அல்லது வேறு கிரகங்களுக்கோ உணர்வு நிலையில் ஒரு ஆத்மாவானது செல்லலாம் என எட்கர் கேஸி கூறியதன் அர்த்தமென்ன என நான் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "பல கிரகங்கள் பல்வேறு உணர்வு நிலைகளில் உள்ள ஆத்மாக்களினால் இடம் பிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றுள் சில பூமியில் வசிப்பவர்களிலும் பார்க்க உயர்வான உணர்வு நிலைகளாயும், சில தாழ்வான உணர்வு நிலைகளாயும் இருக்கும். ஆனால் முன்னேறும் நிலைகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளினால், சில அதிர்வு நிலைகளில் உள்ளவர்கள் மற்றவர்களிலும் பார்க்கக் கூடிய விரைவில் வளர்ச்சியுறுவார்கள். எனவே சிலர் சிறிது காலத்துக்கு வீனஸ் கிரகத்திலோ, யுரேனஸ் கிரகத்திலோ, செவ்வாய்க் கிரகத்திலோ அல்லது வேறு கிரகங்களிலோ சென்று இருக்கலாம். எப்போதாவது உங்களால் கிரகிக்கப்படும் வேறு கிரகங்களுக்கு இடையேயுள்ள தகவல் பரிமாற்றங்கள் உண்மையில் அதிர்வு நிலைகளில் அவர்களால் விண்வெளியில் அனுப்பப்படக் கூடிய எண்ண வடிவங்களே ஆகும். சாதாரணமாக அவை உங்கள் கருவிகளில் பதிவு செய்ய முடியாத அளவுக்கு உயர் அதிர்வெண்களைக் கொண்டவையாகும். ஆனால் சில சமயங்களில் சில வளிமண்டல நிலைகளால் அவற்றின் வலிமை போதிய அளவு குறைக்கப்படும் பட்சத்தில் உங்களது மிக நுணுக்கமான கருவிகள் அவற்றாற் பாதிக்கப்படுவது உண்டு." -
இன்னொரு நாள் போர்ட் உயர் நிலைகளைப் பற்றி இவ்வாறு சொன்னார்: "எனது நினைவுக்கு எட்டிய வரையில், அங்கேயிருக்கும் வேலைகள் சற்றே வேறு பட்டவை. அதாவது புதிய ஆத்மாக்களின் வருகையில் அவர்களுக்கு உதவுவது மற்றும் தத்துவசாஸ்திரம் கற்பது என்பவற்றுக்குப் பதிலாக, அந்த முன்னேற்றமடைந்த ஆத்மாவானது இந்தக் கோட்பாடுகளைப் பரிசீலித்து அவற்றை உண்மையென நிரூபிக்கும் அதே நேரம் உயிர் வாழ்க்கை உள்ள ஏனைய கிரகங்களுக்குச் சென்று அவர்களுக்கு எமது வாழ்க்கை முறைகளைச் சொல்வது போன்ற சுவாரஸ்யமான பணிகளைச் செய்யலாம். ஆரம்பத்தில் இங்கே அனைவருமே ஒன்றாகத் தான் இருந்தோம்.
அட்லாண்டிஸ் என்ற அழிந்து போன கண்டத்தில் வாழ்ந்தவர்களான அட்லாந்தியர்களில் (The Atlanteans - those from the lost continent of Atlantis) பலர் மிக முன்னேற்றம் அடைந்தவர்கள் என்பதால் வேறு தளங்களிலும், கிரகங்களிலும் வாழ்ந்தாலும் இவ்வுலகில் நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஏனெனில் அட்லான்டிஸின் ஒரு பகுதியானது இன்னும் பத்து வருடங்களில் மேலே வருகையில் கண்களுக்குப் புலப்படும். இந்த அட்லாந்தியர்கள் தாம் எல்லாரிலும் பார்க்கச் சிறந்த வர்க்கமாக இருந்திருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இப்போ நடைபெறும் காலமான கும்பராசிக்குரிய காலத்தில் (Aquarian Age) மனித இனமானது அந்த, எளிதில் புரியமுடியாத அறிவை மீண்டும் சிறிது பெறமுடியும். இந்த அட்லாந்தியர்களில் பலர் மீண்டும் மீண்டும் பூவுலகில் பிறந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லவேண்டிய தேவையில்லை. மிக மிக உயர்வான அலை அதிர்வுகளைக் கொண்ட சில அட்லாந்தியர்கள் மீண்டும் பூவுலகுக்குத் திரும்பவில்லை என்றாலும் நீயும், நானுமே முன்னர் ஒரு காலத்தில் அட்லாந்தியர்களாக இருந்திருக்கிறோம். அந்த உயர்வான அலை அதிர்வுள்ளவர்களை மனிதர்களில் ராஜகுமார்கள் என நாம் உரைக்கலாம். அவர்கள் உயர்ந்த ஆத்மாக்களின் வரிசையிலேயே மிக உயர்வான இடத்தில் உள்ளவர்கள். அவர்கள் இனிமேல் பூவுலகுக்கு வரத்தேவையில்லை. ஆனால் அட்லாண்டிஸ் மேலே வருகையில் சிலர் மீண்டும் வர ஆர்வமாக உள்ளனர். ஏனெனில் மிக மிக உன்னத மதிப்புகள் கொண்ட பொருட்கள் சிதைவுறாமல் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குப் பூவுலக மக்களை இட்டுச் சென்று வழிகாட்டுவதில் பலர் ஆர்வமாக உள்ளனர். அதேவேளையில், அவர்கள் நான் இப்போ இருக்கும் நிலையில் பார்க்க மேல் நிலைக்கு முன்னேறிய ஆத்மாக்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது பிரபஞ்சத்தின் ரகசியங்களை அவர்கள் புரிந்து கொள்ள அவர்களுக்கு உதவி புரிகிறார்கள். பூவுகில் வாழும் ஆத்மாக்களுக்கு முன்னர் தானாகவே தெரிந்த ரகசியங்களே அவை"  
ஒரு வாரத்தின் பின் உயர்வான உணர்வு நிலைகளைப் பற்றி லிலி நேரடியாகச் சொல்வாரென போர்ட் அறிவித்த பின் லிலி பின்வருமாறு எழுதினார்: "இந்த இடைப்பட்ட நிலையில் நாம்  கற்கையில் எமது அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும் அதாவது மீண்டும் பிறப்பெடுப்பதா அல்லது மேல் உணர்வு நிலைகளுக்குச் செல்வதா எனத் தீர்மானிக்கும் தகுதி தரப்படுகிறது. நான் செய்தது போல் சிலர் அடுத்த கட்டத்தைத் தெரிவு செய்திருக்கிறோம். எமது தத்துவரீதியான கருத்துப் பரிமாற்றங்களை முடித்து, அத்துடன் பூவுலகிலிழைத்த தவறுகளை மீண்டும் பரிசீலித்து முடிய நாம் தயாரானதும் நமது ஆத்மாவில் நாம் ஒரு இலகுத் தன்மையை உணர்வோம். அப்போது எமது எண்ணத்தின் மிகச் சிறிய முயற்சியாலேயே நாம் எம்மைப் புதியதொரு உணர்வு நிலைக்கு உயர்த்த இயலுமாக இருக்கும். அப்புதிய உணர்வு நிலையில் இங்கு இருப்பவர்களுடனும், பூவுலகில் இருப்பவர்களுடனும் சிறிது காலத்துக்குத் தொடர்புகளேதும் இன்றி இருப்போம்.
"நாம் பின்னர் மிக மிகத் தூய்மையான நுட்பம் வாய்ந்த நிலைக்குச் செல்வோம். அப்போது ஏனைய ஆத்மாக்களுடன் சில காலத்துக்கு எந்த விதமான தொடர்பும் அற்றிருப்போம். இந்த நிலையானது ஓரளவிற்குத் தனிமை வாய்ந்த அனுபவமாகும். ஏனெனில் இங்கேயும், பூவுலகிலும் கூடுதலாக எண்ணங்களையும், சிந்தனைகளையும் நாம் பகிர்ந்து கொண்டே இருக்கிறோம். அதன்பின் சில காலத்துக்கு விண்வெளி என்று சொல்லக்கூடிய இடத்தில் நாம் மிதக்கலாம். ஆனால் அது அவ்வளவு உயர்ந்த அலை அதிர்விலுள்ளது. எனவே பூவுலக மனிதனுக்குப் புரியும் படி எந்த வழியிலும் சொல்ல இயலாது. நாம் யுரேனஸ் கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழே இருக்கிறோமெனில், அங்கேயுள்ள மிகப் பயங்கரமான அதிர்வுகளின் காரணமாக ஆரம்பத்தில் எமது அடிப்படையே அதிரும். அது மிகவும் உக்கிரமான வளிமண்டலமாகும். அல்லது அங்கே வளிமண்டலம் இல்லை எனலாம். அதாவது கதிர்கள், கதிர்வீச்சுகள் மற்றும் அதிர்வுகளில் இருந்தும் எந்த விதமான பாதுகாப்புக்களும் இல்லை. எம்மால் அந்தச் சூழ்நிலையைத் தாங்க இயலுமென்றால் அங்கே நாம் சிறிது காலத்துக்குத் தங்கியிருப்போம். அந்த வேளையில் எமது முன்னேற்றப் பாதையின் அடுத்த கட்டத்துக்கு எம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டும் இருப்போம்.
"அதன் பின்னர் நாம் வெள்ளிக் கிரகத்துக்கோ, செவ்வாய்க் கிரகத்துக்கோ அல்லது எமது சூரிய குடும்பத்தின் ஏதாவது ஒரு கிரகத்தின் உணர்வு ஆளுமைகளுக்கோ செல்வோம். நாம் அந்தக் கிரகங்களின் அதிர்வலைகளின் ஆதிக்கத்தின் கீழே தான் இருப்போம். அந்தக் கிரகத்தின் ஒரு பகுதியாக இருக்கமாட்டோம். நீங்கள் பூமியில் எவ்வாறு நடமாடித் திரிவீர்களோ அவ்வாறே நாமும் இக்கிரகங்களின் மேற்தளங்களில் நடமாடித் திரிவோம். ஆனால் எமது சூட்சும சரீரத்துக்கு எடை கிடையாது. அத்துடன் தூல வடிவமும் இல்லை. நாம் கூடுதலாக எண்ண வடிவங்களே. எங்களைப் போன்ற ஏனைய ஆத்மாக்களும் அங்கு வருவதால், நாம் அவர்களுடன் ஒன்று கலப்பதாகச் சொல்லமுடியும். ஆனால் எல்லாம் எண்ண வடிவங்களிலேயே. சில கிரகங்களின் அலை அதிர்வுகள் அமைதியாகவும், சாந்தமாகவும் இருக்கும். மற்றும் சில கனல் பறக்கும் எதிர் மறையான தள்ளுகை, இழுவைகளுடன் இருக்கும். அனைத்து உயிர்களும் ஒன்று என்ற உண்மையைப் புரிந்து கொள்ளும் பொருட்டும், அதே நேரம் எம்மை ஆளும் விதிகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டும் நாம் இவற்றையெல்லாம் அனுபவிக்க வேண்டும்.
மறுநாட் காலை ஆர்தர் பின்வருமாறு தொடர்ந்தார்: "ரூத், இங்கே லிலியும் குழுவினரும் உள்ளோம். ஆர்தரும் பங்கேற்கிறார். எந்த இடைப்பட்ட நிலையிலிருந்து நாம் உங்களுடன் தொடர்பு கொள்கிறோமோ, அந்த இடைப்பட்ட நிலையிலிருந்து ஆத்மாக்கள் முன்னேறுகையில் என்ன நடக்கிறதென்பதை இன்னும் கூடுதல் விளக்கமாகச் சொல்வதற்கு மிகவும் ஆவலாக உள்ளோம். இந்த உயரிய நிலையில் இப்படியான இருவழித் தகவல் பரிமாற்றமானது சாத்தியமற்றது. எட்கர் கேஸி போன்ற சில ஆத்மாக்கள் இதற்கு விதிவிலக்காகும். அவர் பூமியிலிருக்கையில் அவரும் தனது அலையதிர்வுகளை அதிகரிக்க, நாமும் எமது அலையதிர்வுகளை அதற்கேற்றவாறு குறைத்து அவரை நாம்  இடைவழியில் சந்தித்ததாகச் சொல்லலாம். எங்களுடன் உரையாடக் கூடிய விதமாக ஒருவரைத் தயார் செய்வதற்கு நான் உயர் நிலையிலிருந்து இந்த இடை நிலைக்கு இறங்கி வரவேண்டும். ஆனாலும் அதற்காகத் தாங்கள் மனமிரங்கி ஆசனத்திலமர்ந்து எனது செய்தியை ஏற்கத் தயாராகும் வரை உனக்குப் பின்னால் சுற்றிக் கொண்டு திரிய இயலாது. நான் உன்னைக் குத்திக் காட்டுவதாக எண்ணாதே (அட கடவுளே! என நான் என்னுள் எண்ணிக் கொண்டேன்). ஆனால் நீ நேரத்துக்கு எழுந்து இந்தக் காலை அமர்வுகளுக்குத் தயாராகிறாயா என்று காத்துக் கொண்டு இருப்பதிற் பார்க்கக் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் உள்ளனவென்பதை உனக்கு உணர்த்த விரும்புகிறேன்.
"நான் எனது வாழ்நாளைக் கூடுதலாகச் செலவழிக்கும் இந்த அடுத்த நிலையில் நான் உருமாற்றம் அடைந்திருப்பேன் எனச்சொல்லலாம். நிழலுருவை எடுப்பதற்குப் பதிலாக நான் ஒளி வடிவை எடுத்திருப்பேன். எம்மைப் படைத்தவனின் அற்புதங்களில் நாம் கொள்ளும் பக்தியின் தீவிரமே இதற்குக் காரணமாகும். நாம் ஒரு கிரகத்தின் அதிர்வலைகளிலிருந்து வேறொரு கிரகத்தின் அதிர்வலைகளுக்கு வெகு இலகுவில் நழுவிச் செல்வதால், நாம் ஒளிக்கற்றையாக இருப்பதுவே பொருத்தமாகும். நாம் எந்த வடிவை எடுத்தாலும், நாம் இல்லாமற் போக மாட்டோம். ஏனெனில் நாம் ஒரு போதும் எம்மிலிருந்து விலகிச்செல்ல மாட்டோம். மிகவும் பரிமாண வளர்ச்சி அடைந்த ஆத்மாக்கள் பூவுலகில் என்றும் அன்புடனும், பரிவுடனும், எப்போதும் உதவிக்கரம் நீட்டக்கூடியவர்களாகவும், நுண்ணறிவு மிக்கவர்களாகவும், அழகானவர்களாகவும், மனிதருள் மாணிக்கங்களாகவும் இருக்கும் அதே நேரம் ஏன் வேறு சில ஆத்மாக்கள் தங்கள் பேராசையாலும், காட்டுமிராண்டித் தனங்களாலும் சுயநலப் போக்காலும் கிட்டத்தட்ட விலங்குகளைப் போலவே நடந்து கொள்கிறார்கள் எனச் சிலர் வியக்கலாம். ஒருவர் எப்போதுமே தனக்குரிய தனித்தன்மை மாறாமலே இருப்பாரோவென நீ கேட்கலாம். ஆம் என்பதே அதற்குரிய பதிலாகும். அது முறையற்றதென நீ நினைப்பதற்கு முன் மேலுமொன்று சொல்ல விரும்புகிறேன். அதாவது ஆரம்பத்தில் அவர்களும் இறைவனின் சுடர்ப் பொறிகளாகவே தான் ஆரம்பித்தனர். ஆனால் பூவுலகிலும் இங்கேயுமாக மாறி மாறி வாழ்க்கை தொடருகையில், குறிக்கப்பட்ட சூழ்நிலைகளில் ஒவ்வொருவரும் நடந்து கொள்ளும் விதங்களிலிருந்து ஒவ்வொருவருமே தத்தமக்கென ஒரு தனித்தன்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். அத்துடன் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பூவுலகில் நாம் பிறப்பதென்பதை நாமே தீர்மானிப்பதால், பூவுலகின் ஒரு பிறவியிலிருந்து இன்னொரு பிறவிக்குப் போகையில் அந்தச் சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களினாலும் தாக்கங்கள் ஏற்படும். சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா? ஆரம்பத்தில் இறை அன்பின் பூரணக் கதிர்வீச்சுகளாக ஒவ்வொருவரும் ஏனையோரின் நகல்களாக இருந்தவர்கள், பூவுலக வாசனைகளினால் எப்படி மாறியிருக்கின்றனர் பார்! இது உலக ஆசைத் தூண்டுதல்களை எப்படி நாம் எதிர்கொள்கிறோம் என்பதையும் குறிப்பதாகும். எனவே ஒருவர் மூடனாக இல்லாமல் திறமை வாய்ந்தவராக இருந்தால், அவரே தன்னைப் பற்றியும், தான் ஆசைகளின் தூண்டுதல்களுக்கு எப்படிப் பதிலளிக்கிறார் என்பதைப் பற்றியும் ஆராய்ந்தறிய வேண்டும். மாற்றுவதற்குக் கடினமாக இருக்கக் கூடிய பழக்கங்களைப் பழகாமலிருங்கள். பிறர் உதவியென்று கேட்டால் அவர்களுக்கு உதவுங்கள். அத்துடன் என்றும் இறையுணர்வுடன் செயற்படுங்கள்."
மே தினத்தன்று மிக முன்னேறிய நிலைகளைப் பற்றி அவர்கள் மிக விபரமாகப் பின்வருமாறு கூறினார்கள்: ``இங்கு நாம், மீண்டும் பூவுலகுக்குச் செல்வதா அல்லது நீங்கள் சொல்வது போல் மூன்றாம், நான்காம் நிலைகளுக்குச் செல்வதா எனத் தெரிவு செய்ய முடியும் என நான் முதலிலேயே உனக்குச் சொல்லியிருக்கிறேன். இந்த நிலைகளானது ஒன்றிலிருந்து ஒன்று அதிகம் வேறுபட்டவையல்ல. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், மூன்றாவது நிலையில் நாம் உயர் அதிர்வலைகளில் நன்கு தேர்ச்சியடைகிறோம். அத்துடன் உங்களால் ஒலி, ஒளி என்று அழைக்கப்படும் இன்னும் கூடுதலான அதிர்வலைகளுக்கு உயர்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஒலிவாங்கியை (ஆன்டெனா) ஒலியதிர்வுக்குத் தகுந்தவாறு பூவுலகில் நாம் மாற்றியமைப்பது போல் இங்கே ஒலி, ஒளி ஆகியவற்றின் அலைகளுக்கேற்ப எம்மை ஒத்திசைக்கச் செய்ய இயலும். அந்த அலைகளானவை பூவுலகில் வாழும் மனிதனுக்கு மின்னதிர்ச்சி அளிக்கக் கூடிய அல்லது அவனது காதுகளை நிரந்தரச் செவிடாக்கக் கூடிய மிகச் சக்தி வாய்ந்த கதிர் வீச்சுகளாகும். நாம் மிக மெல்லியதொரு கதிர்வீச்சின் மூலமாகத்தான் இவ்வாறான உயர்ந்த சக்திகளுக்கு இசைவாக்கமடைகிறோம். -சூட்சும சரீரத்துடனிருக்கையில் கதிர் வீச்சுகளிலிருந்து எம்மை ஒன்றும் நாம் பாதுகாக்கத் தேவையில்லை. இப்படிப்பட்ட உயர்வான அதிர்வலைகளுக்கு இசைவாக்கமடையும் போது, நாம் கிட்டத்தட்டத் திரவம் எனச் சொல்லப்படக்கூடிய மாதிரியான ஒரு நிலைக்கு மாற்றமடைகிறோம். உண்மையில் திரவமாக இல்லாவிடினும் பிரபஞ்சத்தின் வடிவங்களுள் நாம் ஊற்றப்படுகின்றோம் எனச்சொல்லலாம். நாம் பிரபஞ்சத்துடன் ஏறக்குறைய இரண்டறக் கலப்பதால், நாம் எமது தனித்தன்மையை அல்லது 'நான்' எனும் அகந்தையைச் சிறிது காலத்துக்கு இழக்கிறோம். நாம் பிரபஞ்சமெனும் மகா சமுத்திரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். அது நான் உனக்கு முதலில் உரைத்த விடயமான நாம் முழுமையான பரிபூரணத்தின் ஒரு பகுதியாக உள்ளோம் என்ற உண்மையை இங்கு நாம் உணர்வதற்கு எமக்கு உதவுகிறது.
"மூன்றாவது நிலையைப் பற்றிச் சொன்னேன். நான்காவது நிலையைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்: செவ்வாய்க்கிரகம், ஜுப்பிட்டர் கிரகம், யுரேனஸ் கிரகம், வீனஸ் கிரகம் (வெள்ளி) மேலும் இவை போன்ற வேற்றுக் கிரகங்களில் சூட்சும வடிவில், உயர்வான உணர்வு நிலையில் வசிப்பது; இக்கிரகங்கள் உயிரினங்களைக் கொண்டிருப்பினும், அவை பூவுலகில் வாழும் பௌதீக மனிதனின் அறிவுக்கெட்டிய முறைகளால் முற்றிலுமாக அடையாளம் காணப்பட முடியாதவாறே உள்ளன. இக்கிரகங்களெல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலுமாக மாறுபட்டது. ஒவ்வொன்றும் உயிர் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலைகளைக் கொண்டுள்ளன. அதாவது மிகத்தாழ்ந்த நிலைகளாகிய உயிரணுக்களிலிருந்து (protoplasm) மிகவும் உயர்ந்த நிலைகளாகிய எண்ண வடிவங்கள் வரை மாறுபடுகின்றன. யுரேனஸ் கிரகமானது தீவினையிலிருந்து நல்வினைக்குச் செல்பவர்களுக்குக் குறிப்பாக மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய கிரகமாகும். ஆனாற் சனிக்கிரகமானது மிக, மிக முன்னேற்றமடைந்த கிரகமாகும். மிகவும் கீழான உணர்வுநிலைகளினால் உண்டாகும் குழப்பங்களேதுமின்றி அங்கு தூய எண்ண அலைகளே நிரம்பியிருக்கும். இந்தக் கிரகங்களில் எண்ண வடிவில் சிறிது காலத்துக்கு வசிப்பவர்கள் சில நேரங்களில் பூமியில் வசிப்பவர்களின் மனநிலைக்கு சற்றே மாறுபட்ட மனநிலையில் இருப்பார்கள். அதாவது நல்ல, நியாயமாகச் சிந்திக்கக் கூடிய மனநிலையெனப் பூமியிலிருப்பவர்கள் நினைக்கக் கூடியதான மனநிலைக்கு முற்றிலும் மாறுபட்ட மனநிலையிலுள்ளதால் அவர்கள் அதன்பின் எப்போதாவது பூவுடலுடன் பிறப்பதற்குத் தீர்மானித்தால், அவர்கள் அந்த நேரத்தில் கூடப் பிறக்கும் சக மனிதர்களுடன் சற்றே இணக்கம் குறைவாகக் காணப்படுவார்கள். சில நேரங்களில் அவர்கள் தங்கள் வாழ்வில் அவ்வளவு தூரத்துக்கு ஒன்றி விட்டதனால், அங்குள்ள ஏனைய ஆத்மாக்களுடன் ஒத்துப் போகக் கூடிய விதத்தில் அவர்களுக்கு ஒன்றும் பொதுவாக இல்லாமலிருக்கலாம் அல்லது செவ்வாய்க் கிரகத்திலோ அன்றி வேறெதிலுமோ உள்ள பகைமை உணர்வுகள், போர்க்குணங்கள் போன்றவற்றின் தாக்கங்களினாற் பூவுலகின் சௌகரியமான வாழ்க்கையை ஏற்க இயலாத விதமாக ஒரு விரோத மனப்பான்மையைக் கொண்டிருக்கலாம்".
இந்தக் கட்டத்தில் ஆர்தர் இடைமறித்துப் பின்வருமாறு உரைத்தார்: "தற்போது நான் இருக்கும் இந்த நிலையில், நான் இன்னும் மற்றைய கிரகங்களுக்குச் செல்லவில்லை. ஆனால், ஏனைய பிறவிகளுக்கிடையில் மூன்று கிரகங்களில் நான் வசித்தது எனக்கு நினைவிலுள்ளது. நான் மீண்டும் அங்கு செல்வேனா இல்லையா என்பதோ அல்லது எனது பிறப்பிறப்புச் சுழற்சியை நிறைவு செய்வதற்காக மீண்டும் பூவுலகிற் பிறப்பேனா இல்லையா என்பதோ எனக்கு இன்னும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும்: அதாவது யுரேனஸ் கிரகத்துக்கு மீண்டும் செல்வதற்கு எனக்கு விருப்பமில்லை."
மற்றைய கிரகங்களிலே எதிலாவது பூவுலகில் வசிப்பவர்களின் உடலமைப்புக்கு நிகரான உடலமைப்பைக் கொண்டவர்கள் இருக்கிறார்களா என்று நான் லிலி, ஆர்தர், குழுவினரைக் கேட்டேன். அதற்குரிய பதில்: இல்லை, பூமியில் இருப்பவர்கள் போல் இரத்தமும் தசையும் கொண்டவர்கள் அவ்விடங்களில் இல்லை. அந்தக் கிரகங்கள் சுவாராஸ்யமான உருவங்களுடனான எண்ண வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. அதாவது இறகுகளைக் கொண்ட முள்ளங்கிக் கிழங்குகள் (radishes with wings), வால்களுடனான கோசுக்கிழங்குகள் (turnips with tails), சிரிக்கும் இலைக்கோசு (lettuce that laughs) என்பவற்றுடன், காற்றிலும், நீரிலும் கூட நடக்கக் கூடியவிதமான விலங்கு வடிவங்களும் உள்ளன. அத்துடன் பூவுலகவாசிகளை அதிபயங்கரமாகத் திகிலூட்டக் கூடிய விதத்தில், ஆனால் அதேநேரத்தில் அங்குள்ளவர்களுக்குச் சாதாரணக் கடற்கரைக் கற்கள் போல இருக்கக் கூடிய விதமான பல விகாரமான உருவங்களைக் கொண்ட கனிம வடிவங்களுமுள்ளன. அவர்கள் பல்வேறு விதங்களில் ஒருவருடன் மற்றவர் தொடர்பு கொள்ள இயலும். அத்தொடர்பு முறைகள் பூவுலக வாசிகளை விட உயர்ந்த அல்லது தாழ்ந்த அதிர்வெண்களில் இருக்கக்கூடும். நாம் எவ்வாறு பூவுலகில் மறுபிறவிகள் எடுக்கிறோமோ, அவ்வாறே அவர்களுக்கும் தங்களது கிரகங்களுக்குத் திரும்பும் சுழற்சிகள் உள்ளன. சில நேரங்களில் கூடுதல் தைரியசாலிகளிற் சிலர் பூவுலக வாழ்வை முயற்சி செய்ய நினைக்கலாம். ஆனால் அது அநேகமாகத் துயர் நிறைந்த முடிவாகத்தான் இருக்கும். உதாரணமாக, ஆப்பிரிக்காவிலோ அல்லது வேறு இடத்திலோ ஒரு  ஒதுக்குப் புறமான பகுதியில் ஒரு ஆதிவாசி காணப்பட்டால், அது அநேகமாக இப்படியான ஒரு வேற்றுக்கிரகவாசி பூவுலகில் உடலெடுத்து வசிப்பதற்குச் செய்த முயற்சியாகத்தான் இருக்கும். சில நேரங்களில் மனிதர்களைப் போற் பேசவியலாத சிறு குழந்தைகள் விலங்குகளுடன் வசிக்கையிற் கண்டு பிடிக்கப்படுவதும் இவ்வாறே இருக்கும். அவர்கள் வேற்றுக் கிரகத்தில் இருப்பவர்கள் ஆர்வத்தால் உந்தப்பட்டுப் புதுவகை உடலை முயன்று பார்க்கிறார்கள். ஒரு ஓநாய் செம்மறியாட்டின் உடையை அணிவது எப்படிப் பொருந்தாதோ, அவ்வாறே அவர்களுக்கும் இது பொருந்தாது. பூவுலகவாசிகளும் சனிக்கிரகவாசிகள் போலவோ, வேறு கிரகவாசிகள் போலவோ முயன்று பார்த்திருக்கிறார்கள். ஆனால் விளைவுகள் சாதகமாக அமையவில்லை. அதாவது இது வெவ்வேறு இரு விலங்குகளை இணைத்து இனப்பெருக்கம் செய்வதைப் போன்ற மடமைத்தனமாகும். நாம் மற்றைய கிரகங்களுக்குச் சென்று சிறிது நாட்கள் வசிப்போமென்று நான் சொல்வது நாம் அங்கு உயிர் வாழும் உயிரினங்கள் போல அங்கு உடலெடுத்து வசிப்பதையல்ல. நாம் அங்கு எண்ணக்கரு (thought forms) வடிவங்களாகவே செல்வோம். நாம் எண்ண வடிவில் அங்கு செல்வது, பிரபஞ்ச விதிகளையறியவும், அத்துடன் 'நாமனைவரும் ஒன்றே' என்ற என்றுமே மாறாத விதியை விளங்கிக்கொள்ளவும் தான்.
இன்னொரு நாட் பின்வருமாறு அவர்கள் எழுதினார்கள்: "மற்றைய நட்சத்திரங்கள் பூமியென்ற கிரகத்தை விட முழுக்க முழுக்க வித்தியாசமான விதங்களில் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இந்த இடைப்பட்ட நிலையில் இருப்பவர்களில் அதிகம் பேருக்குப் பரிச்சயமான ஒரேயொரு கிரகம் பூமியாகும். நாமனைவரும் பூமிக்குப் பயிற்றுவிக்கப்பட்ட ஆத்மாக்களாகும் (earth-trained souls). பூமியிற் பௌதீக நிலையிலிருந்து சமீபத்தில் நாம் வந்த அதே நேரத்தில் வானமண்டலம் பூராவிலுமுள்ள வேறு கிரகங்களிலிருந்து எண்ணிலடங்காத வேறு பல ஆத்மாக்கள் முன்னேற்றமடைந்திருக்கும். சில அங்குள்ள ஆத்மாக்களெல்லாம் பௌதீக உடலையெடுப்பதற்குப் பதில் எண்ணங்களாலான உடலை அணியும் தூய்மையான ஆத்மீக வாசஸ்தலமாக இருக்கும். சில நட்சத்திரங்கள் பௌதீக உடலுடன் வசிக்கக் கூடியதாக இருக்கும். ஆனாற் பூமியெனும் கிரகத்தில் இருப்பதைப் போன்ற பௌதீக உடலுடன் தான் அங்குள்ள ஆத்மாக்கள் இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. ஒரு ஆத்மா எடுக்கும் பௌதீக உடலானது, அது இங்கு என்றாலும், பூமியிலென்றாலும் அல்லது வேறு கிரகங்களிலென்றாலும் அது சூழலுக்கு ஏற்புடையதாகவே அமையும். எனவே ஒரு நட்சத்திரத்துக்குப் பொருந்தக் கூடியது பெரும்பாலும் இன்னொன்றில் உள்ள முன்னேற்றங்களுக்குப் பொருந்தாது.
"நாம் மனிதனை இரு கண்கள், இரு காதுகள், ஒரு மூக்கு, ஒரு கழுத்து, கால்கள், கைகள், உடல் என்பவற்றுடன் தான் கற்பனை செய்வோம். ஆனால் ஒரு ஆத்மா தனது ஆத்மீக வளர்ச்சியை நிறைவு செய்வதற்காக மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் தன்னை வெளிக்கொணர்வதற்கு இது தான் ஒரேயொரு வழியென்பதல்ல. ஆம் இது பூமிக்குரிய வடிவம். அது உண்மைதான். ஆனால் அது செவ்வாய்க் கிரகத்துக்கோ, சனிக்கிரகத்துக்கோ அல்லது வான் வெளியின் எண்ணிலடங்கா நட்சத்திரங்களில் எதற்கோ பொருந்த வேண்டுமென்று அவசியமில்லை. நாம் உடலுடனிருக்கையில் எமக்கு சுவாசிப்பதற்கு நுரையீரல்களும், தொடர்ந்து இயங்குவதற்கு ஒரு இருதயமும் இருந்தன. ஆனாற் சில கிரகங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு இருதயமோ அன்றி நுரையீரல்களோ அவசியமில்லை. சில கிரகங்களில் அன்றாடச் செயற்பாடுகளைக் கொண்டு செலுத்தவும், சிந்திப்பதற்கும்,உயிர்வாழ்வதற்கும் ஒன்றில் மிக எளிமையான அல்லது மிகச் சிக்கலான ஒரு தொழில் நுட்பம் தேவையாயிருக்கிறது.
"மற்றைய கிரகங்களிலும், நட்சத்திரங்களிலும் உள்ள ஆத்மாக்கள் முன்னேற்றங்களின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளார்கள். சில மிகத் தொடக்க நிலைகளிலும், இன்னும் சில மிகவும் முன்னேறிய நிலைகளிலுமுள்ளன. ஆயினும் அவையனைத்தும் இறைவனின் துடிப்பையும், அவனது அன்பு ஒளியையும் தம்மகத்தே கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் தனது வளர்ச்சிக்குத் தானே பொறுப்பாளிகளாகவும், சிருஷ்டிகர்த்தாவுடன் மீளவும் இணைவதற்கான பயணத்தை மீளவும் தொடர்வதற்குள் தமது பிழைகளைத் திருத்திச் சீர்செய்யும் பொறுப்புகளுடனும் உள்ளன.
"ஒரு ஆத்மா பூவுலகில் மிகக் கொடூரமான அளவுக்கு வழிதவறியதனால், இன்னொரு ஆத்மாவுக்கு இழைத்த அந்தக் கொடுமையைச் சீர்செய்வதற்கு அது ஓரு நூறு கோடிப் பிறவிகள் எடுக்க வேண்டியிருந்தால் என்ன செய்வது? சில சமயம் தண்டனையைத் துரிதப்படுத்தும் முகமாகக் கடுமைவாய்ந்த ஒரு கிரகத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ முற்றிலும் வித்தியாசமான ஒரு உயிர்வாழ் வடிவத்தை எடுக்கக் கூடிய சந்தர்ப்பம் அவருக்கு வழங்கப்படலாம். அங்கு உள்ள சூழ்நிலைகளின் படி, பாவமேதும் புரியாத புதிதாக உருவாக்கப்பட்ட ஆத்மா போல, அவர் அந்தக் கடினமான சூழ்நிலைகளுக்கு ஈடுகொடுத்து நிற்பாரேயானால், பூமியென்று சொல்லப்படும் குறைந்த அளவிலான கஷ்டங்கள் நிரம்பிய கிரகத்தின் பற்பல பிறவிகளின் பாவங்களைப் போக்கக்கூடிய அளவில் அவற்றுக்குப் பரிகாரங்கள் தேடமுடியும். நான் என்ன சொல்கிறேன் என்று உனக்குப் புரிந்ததா? அதாவது எல்லை மீறிப் போய்விட்ட பாவங்களுக்கான பரிகாரங்களைப் பூவுலகிற் தேடுவதில் முற்றிலுமாக நம்பிக்கையை இழந்து விட்ட அந்த ஆத்மாவானது தானே விரும்பிக் கடினமான சூழ்நிலைகள் நிறைந்த ஒரு  கிரகத்தின் குடியாளராகப் பிறவியெடுப்பார். அப்போது அதன் வடிவமானது பூவுலகில் இருக்கும் உங்களைப் போன்றவர்களால் மனிதனென்று சொல்ல இயலாதவாறிருக்கும்.
"சில ஆத்மாக்கள் மனித உருவில் இப்படியொரு வகை உயிரினங்கள் இருக்கின்றன என்பது தெரியவர ஒரு காரணமுமில்லாமலே வெவ்வேறு நட்சத்திரங்களிலும், கிரகங்களிலும் உயிர் வாழ்ந்து மடிந்து போகின்றன. மீண்டும், சில கிரகங்களில் பௌதீக உடலெடுக்காமல் தனி ஆத்ம உடலெடுத்துத் தூய எண்ணத் தளங்களில் (thought planes) ஆத்மாக்கள் உயிர் வாழும் என்பதையும் தெரிந்து கொள். பூவுலகில் நாம் காணும் உடலுடன் கூடிய ஆத்மாக்களைக் காட்டிலும் இவை சில சமயம் முன்னேற்றத்தின் மிக மிக உயர்ந்த தளத்தில் இருக்கும்.
"உயர்நிலைகளுக்குச் செல்வதற்காகத் தெரிவுசெய்யப்பட்ட முன்னைய பூவுலகவாசிகள், பூவுலகில் துறவிகளின் மடத்துக்குச் செல்லுமுன் எவ்வாறு பயிற்றுவிக்கப்படுவார்களோ  அவ்வாறே மிகக் கவனமாகப் பயிற்றுவிக்கப்படுவார்கள். அவர்கள் தங்களை அதிர்வலைகளினூடாகச் சில மண்டலங்களில் முன்னிறுத்துவதற்குப் பயில்வார்கள். அப்பிரதேசங்கள் சில நேரங்களில் அவர்களால் முன்னே ஆராயப்படாதவைகளாக இருக்கும். அதாவது இந்த நேரத்தில் அவர்கள் சூக்கும சரீரத்தில் பிரயாணம் செய்வது மட்டுமன்றி (பூவுலகிலிருக்கும் உணர்திறன் கூடியவர்களின் பார்வைக்குச் சில சமயம் தெரியலாம்), நாம் முதலிலேயே உரைத்தது போல ஏனைய கிரகங்களுக்கும் பிரயாணம் செய்வார்கள். இவ்வகைப் பிரயாணமானது பிரபஞ்ச விதிகளை அவர்கள் அறிவதற்கு மிகவும் உதவுகின்றது. அத்துடன் அவர்கள் நான்காவது அல்லது ஐந்தாவது நிலைகளிலிருக்கும் போது, ஒரே நேரத்திற் பல கிரகங்களிற் காணப்படுவது சகஜம். ஏனெனில் உயர் உணர்வு நிலையிலுள்ள ஆத்மாவுக்குத் தன்னை ஒரே சமயத்திற் பல இடங்களில் முன்னிறுத்த இயலும்.
"இப்போ நாம் திரையின் இப்பக்கத்தின் இறுதி நிலை, அதாவது மிக மிக உயர்வான பரிபூரண நிலையைப் பற்றிப் பார்ப்போம். அதாவது இறுதியாக ஆத்மாக்கள் இறைவனுடன் இரண்டறக் கலக்கும் நிலை. அந்தப் பேரின்பநிலையை நாம் இன்னும் அடையவில்லையென்பது தெரிந்ததே. ஆனால் இங்கே நாம் கற்றதன் படி, அந்தக் கடைசிப் பூர்ணத்துவ நிலையை ஆத்மாக்கள் அணுகும் போது அவர்கள் மீண்டுமொரு முறை தமது கடந்த பிறவிகளை மறுபரிசீலனை செய்வது மட்டுமன்றி ஆதியிலிருந்து தம்மைத் தொட்ட அல்லது தாம் தொட்ட ஒவ்வொரு எண்ணங்கள், கருத்துகள், யோசனைகளையும் மறுபரிசீலனை செய்வார்கள். இது ஆறாவது நிலையின் போது நடப்பதாகும். கடைசியில் அவர்கள் தாம் புரிந்த ஒவ்வொரு தவறுக்கும் ஏதோ ஒரு விதத்திலோ, எண்ணத்தாலோ, அன்றி ஏதோ ஒரு வழியிலோ ஈடு செய்து எல்லா வகையான தவறுகளுக்கும் பிராயச்சித்தம் செய்து விட்டோம், எந்த விதமான ஒரு குறையும் விட்டு வைக்கவில்லையென முடிவு செய்தால் அவர்கள் இறைவனுடன் இணைவதற்குத் தயாராவார்கள். இம்முடிவில் எந்த விதமான கர்வமுமில்லை. ஆனால் ஆதியிலிருந்து வாழ்ந்த வாழ்வைப் பற்றிய மிக நுட்பமான மதிப்பீடாகும். அதன்பின் அவர்கள் நிர்மலமாக, இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு ஈர்க்கப்படுவார்கள். அந்தப் பூரண நிலையை அடைந்ததன் பிற்பாடு அவ்வாத்மாக்கள் பிறப்பிறப்புச் சுழற்சிக்கு மீண்டும் திரும்பவோ,தொடரவோ மாட்டார்களென்று கேள்விப்பட்டுள்ளோம் என்று தான் சொல்லவேண்டும்."
இறைவனுடன் ஒன்றுபடுவதைப் பற்றிய இப்படிப்பட்ட ஒரு உன்னதமான கலந்துரையாடலுக்குப் பிற்பாடு பறக்கும் தட்டுகளைப் (flying saucers) பற்றிக் கேட்பது அபத்தமாகப் பட்டாலும், எனது வாசகர்கள் கேட்பார்களே என்பதாற் கேட்டேன். எதற்கும் உடன்படும் போர்ட் இதற்குப் பின்வருமாறு பதிலளித்தார்: "ஆம் பறக்கும் தட்டுகள் உள்ளன. அவை வேற்றுக்கிரக வாசிகளின் எண்ணங்களிலே தான் தோற்றுவிக்கப் பட்டன. ஆனால் தாம் அதனைத் தொட்டதாகவோ, அதற்குள் சென்றதாகவோ பூவுலகவாசிகள் எண்ணும் அப்படியான ஒரு பௌதீக உருவெளித்தோற்றங்கள் உண்மையாக இல்லை. அவை பூமியில் நாம் உணரும் திண்மப்பொருட்களைப் போலல்ல. ஆனால் ஒளி, ஒலி ஆகிய சக்திகளின் பரிமாற்றங்களினால், உருக்கிரும்பால் (ஸ்டீல்) உருவாக்கப்பட்டவை போன்ற உண்மைத் தோற்றத்தை எமது பார்வைகளுக்குத் தருகின்றன. சிற்சில சூழ்நிலைகளின் போது அவை பார்வைக்குப் புலப்படலாம். அத்துடன் மிக அண்மையாக வரும் போது புவியின் வளிமண்டலத்தினூடாக விரையலாம். ஆனாற் பூவுலக மனிதர்கள் அவற்றுட் செல்ல இயலாது. அவ்வளவு தான்!

No comments: