இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Friday, March 12, 2021

இரண்டாவது அத்தியாயம்: ஆர்தர் ஃபோர்டின் வாழ்க்கைச் சரிதம் (The Arthur Ford Saga)




ஆர்தர் ஃபோர்ட் அமெரிக்காவின் மிகப்பிரபலம் வாய்ந்த ஆவியூடகவியலாளராக (medium) இருக்கையில் அவருக்குக் கடுமையான இருதயநோய் வந்து இறந்தார். அவர் நன்கு படித்தவர். பல நூல் கற்றவர். பண்புள்ளவர். நகைச்சுவையாகப் பேசுபவர். அவரின் குறும்புத்தனமான, நையாண்டித்தனமான பேச்சுகளினால் அவரைச் சுற்றி இருப்பவர்கள் எப்போதுமே மகிழ்ச்சியாகக் காணப்படுவர். அவர் சுய நினைவுடன் இருக்கையிலும் அவருள் 'ஆத்மா' வந்து பேசுகையிலும் அனைவரையும் அவர் கவரக்கூடியவர். அவரது 50 ஆண்டு கால 'ஆவியூடகவியலில்' அவர் சக்தி வாய்ந்த வலிமையான ஆத்மாக்கள், சக்தி குறைந்த சாதாரண ஆத்மாக்கள் எல்லாவற்றுக்கும் ஒரேவிதமாக, வேறுபாடின்றி ஊடகமாகச் செயற்பட்டிருக்கிறார். அவர் இன வேறுபாடு பார்ப்பவரல்ல. கடுமையான இருதய நோயிலிருந்து அப்போது தான் அவர் மீண்டு கொண்டிருந்த போதும்  மார்டின் லூதர் கிங் வாஷிங்டனில் நடாத்திய முதலாவது நடைபவனியில் ஏனைய மதகுருமார்களுடன் தானும் சென்று பங்கு பற்றினார். ஏனெனில் அவருக்கு மனித உரிமைகளில் அவ்வளவு நம்பிக்கை இருந்தது. 
அவர் மிகுந்த ஞானதிருஷ்டி உள்ளவர். அத்துடன் ஒருவர் உபயோகித்த பொருட்களை வைத்து அவரைப் பற்றிய முழு விபரங்களையும் சொல்லக்கூடிய வல்லமையுள்ளவர். அவர் நேரடி ஆவியூடகமாகச் செயற்படவில்லை. ஆனால் முழு விழிப்பு நிலையிலேயே இறந்தவர்களிடம் இருந்து விபரங்களை அறியும் ஆற்றல் கொண்டிருந்தார். அவருள் ஃபிளெச்சர் (Fletcher) என்கிற ஆத்மாவே வந்து அவர் மூலம் இறந்த ஆத்மாக்களைத் தொடர்பு கொள்ளும். இறந்த ஆத்மாக்கள் நேரடியாகக் குழல் கருவி மூலம் (trumpet) பேசுவது போல் பேசுவதில்லை. எனவே அவர் முழு வெளிச்சத்திலும் ஒரு கறுப்புத் துணியைத் தன் கண்களைச் சுற்றிக் கட்டிவிட்டு அரைத் தூக்க நிலைக்குச் (trance sleep) சென்று குறி சொல்வார்.
நேரடி ஆவியூடகமாகத் தொழிற்படுபவர்கள் முழு இருட்டில் தான் இயங்க முடியுமென்பர். வெளிச்சத்தில் ஆவிகளின் குழல் கருவிகள் (trumpet) இயங்காது என்பர். அவர்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம். ஆனாலும் அப்படிச் செய்வது துரதிஷ்டவசமாக நம்பகத்தன்மையைக் குறைத்துக் காட்டும். ஆனால் ஃபோர்ட் (Ford) ஊடகமாகத் தொழிற்படும் போது நாம் எப்போதும் குறிப்புகள் எடுக்கலாம். டேப்ரிகார்டரிலும் பதிவு செய்யலாம்.
ஃபோர்ட் அடக்கமானவர். அமரிக்கையானவர். மறு உலகுக்கும் இவ்வுலகுக்கும் இடையே ஊடகமாகத் தொழிற்படக்கூடிய அவருக்குக் கிடைத்த அந்த வரப்பிரசாதத்தையே பெரிய பாரமாகக் கருதுபவர். ஆனால் இப்பிறவியை எடுத்ததற்கான காரணமே இப்படி ஊடகமாகத் தொழிற்படுவதற்குத் தானென நம்புபவர். எனவே அவர் வருந்தி ஒரு போதும் நான் கண்டதில்லை.
அவரது சொந்த மாநிலமான ஃப்ளோரிடாவில் (Florida) இருக்கும் டைட்டஸ்வில் (Titusville) என்ற இடத்தில் அவர் சிறுவனாயிருந்த போது அவரது குடும்பத்தின் பொது உலகத்தொடர்புகள் அனைத்தும் கிறிஸ்தவக் கோயிலைச் சார்ந்தே இருந்தன. அவரது தாயாரின் பக்கம் பல தலைமுறைகளாக ஸதேர்ன் பப்டிஸ்ட் (Southern Baptist) என்ற கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவினைச் சார்ந்தவர்களாகவே இருந்து வந்துள்ளனர். ஆர்தர் காலை மாலைப் பூசைகளுக்குத் தவறாமற் செல்வதாலும் அங்கேயிருந்த சிறுவர்களுக்கான சங்கத்தில் முழுமையாக ஈடுபட்டதாலும் அவர் ஒரு பாதிரியாராக வருவாரென அவரது அன்னை நம்பியிருந்தார். அன்னை பப்டிஸ்ட் மதத்திலேயே இறுதிவரைக்கும் இருந்தார். ஆனால் ஆர்தர் யூனிடேரியன் சர்ச் (Unitarian Church) என்னும் சபையினால் வெளியிடப்பட்ட நூல்களைப் படித்துப் புரட்சிகரமாகச் சிந்திக்கத் தொடங்கினார். சமயக் கொள்கைகளுக்கு மாறான கருத்துகளைக் கொண்டதனால் அவரது சர்ச்சிலிருந்து அவர் விலக்கப்பட்டார். ட்ரான்ஸ்லவேனியாப் பல்கலைக்கழகத்துக்கு (Transylvania University) அவருக்கு ஸ்கொலர்ஷிப் (scholarship) கிடைத்தது. முதலாம் உலகப்போர் முடிந்ததும் டிசைப்பில்ஸ் ஒவ் க்ரைஸ்ட் சர்ச் (Disciples of Christ Church) என்ற சபையில் பாதிரியாரானார். எப்போ அவர் தனக்கு மறு உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியுமென்பதைக் கண்டு கொண்டாரோ அன்றிலிருந்து அந்த வல்லமையை அவர் பொது நலனுக்காக உபயோகிக்கத் தொடங்கினார். அதன்பின் தனது வாழ்வின் பெரும் பகுதியை அவர் தன்னுடன் இருந்த பாதிரிமார்களின் அறியாமையைப் போக்குவதற்கே செலவழித்தார். அதாவது ஐம்புலன்களின் அறிவுகளுக்கு அப்பாலும் தொடர்ந்து கொண்டிருக்கக் கூடியதான வாழ்வின் தொடர் நிலையைப் புரிய வைப்பதற்கு முயன்றார்.
ஆர்தர் ஃபோர்ட் அமெரிக்காவின் கென்ரக்கி என்ற மாநிலத்தில் உள்ள லெக்ஸிங்டன் நகரில் இருக்கும் ட்ரான்ஸ்லவேனியா பல்கலைக்கழகத்தில் பாதிரியார் ஆவதற்காகப் பயின்று கொண்டிருக்கையில் முதலாம் உலகப் போர் ஆரம்பித்தது. 90 நாட்கள் பயிற்சி பெற்ற பின்பு அவர் இரண்டாம் லெப்டினன்டாக காம்ப் க்ராண்ட் (Camp Grant) எனும் இராணுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தன்னம்பிக்கை கொண்டதொரு இளம் ஆபீசராக வேலை செய்தார். அப்போது தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. ஒரு நாள் அவருக்கு ஒரு விசித்திரமான கனவு வந்து பதறி எழுந்தார். இன்ஃப்ளுவன்ஸா (influenza) என்ற நோயால் அன்று இரவு இறந்தவர்களின் பட்டியலில் அந்தக் காம்பில் உள்ளவர்களின் பெயர்கள் இருக்கக் கண்டார். உண்மையான பட்டியலைப் பார்த்தால் மனதுக்குச் சற்று ஆறுதலாக இருக்குமென எண்ணிப் போய்ப் பட்டியலைப் பார்த்தார். அதில் அதே பெயர்கள் கனவில் கண்ட அதே வரிசையில் இருக்கக் கண்டார். அடுத்து வந்த இரண்டு நாட்களும் இதே விதமாகத் தொடர்ந்து நிகழ்ந்தது. சிலர் அவரைச் சந்தேகித்ததால் அவர் எழுந்த உடனேயே கனவைச் சொல்லி விடுவார். அதன் படியே நிகழ்ந்திருக்கும். அதன் பின்னர் கடல் கடந்து போரிட்டுக் கொண்டிருந்த ரெயின்போ (Rainbow) பிரிவில் இறந்தவர்களின் பெயர்களும் கனவில் வரத்தொடங்கின. அதே விதமாகவே தினம் தினம் பத்திரிகைகளிலும் பெயர்கள் வந்து கொண்டிருந்தன.
உலகப்போர் முடிவடைந்ததும் அவர் ட்ரான்ஸ்லவேனியாவுக்குத் திரும்பினார். அவரைக் குழப்பிய கனவுகளும் அத்துடன் நின்று விட்டிருந்தன. அந்தக் கனவுகளால் அவர் தனக்குப்  பித்துப் பிடித்து விட்டதோ எனவும் பயந்திருந்தார். பேராசிரியரும் உளவியல் பயிற்சியாளருமான 'எல்மர் ஸ்நொடி' என்பவர் ஆர்தருக்குப் பொது அறிவுக்கப்பாற்பட்ட விடயங்களைப் பற்றிய புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்புத்தகங்களில் இருந்து தான் அவர் தனக்கு ஏற்பட்டதைப் போன்ற அனுபவங்கள் வேறு பலருக்கும் ஏற்பட்டுள்ளன என்பதனை அறிந்து கொண்டார். அவர்களுள் ஜோன் வெஸ்லி, மார்ட்டின் லூதர், இமானுவேல் ஸ்வீடன் போர்க், டுலைட் மோடி, பல கத்தோலிக்கத் துறவிகள் என்போரும் அடங்குவர். இச்செய்திகள் அவருக்குச் சற்றே ஆறுதலைத் தந்தன. அவர் சில பேராசிரியர்களுடனும் சில துறவிகளுடனும் சேர்ந்து இத்துறையில் (அமானுஷ்ய) சில ஆராய்ச்சிகளைச் செய்தார். இத்துறையில் அவர் மிகவும் ஆர்வமுடையவராக இருந்ததனால் நியூயோர்க்கில் இத்துறையிலான ஆராய்ச்சிகள் செய்யும் சங்கத்தைப் (American Society for Psychical Research) பற்றிய முழு விபரங்களையும் பார்வையிடச் சென்றார். அவர் கென்டக்கி, பார்போர்வில்லில் (Barbourville, Kentucky) இருக்கும் சர்ச்சில் பாதிரியாராக இருக்கையிலும் இத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். இரண்டாமாண்டு பாதிரியார் சேவையின் போது ஸ்வாத்மொர் ஷாத்தகுவா (Swarthmore Chautauqua) சங்கத்தின் ஸ்தாபகரும் தலைவருமான டாக்டர் பால் பியர்சன் (Dr Paul Pearson) என்பவரைச் சந்தித்தார். அவர் ஆர்தர் ஃபோர்டைத் தனது சங்கத்தில் பொது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பேசும் பேச்சாளராகச் சேரத்தூண்டினார்.
அவர் இலையுதிர் காலத்தில் (autumn season) மீண்டும் பாதிரிச் சேவைக்குத் திரும்புவதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அப்போது இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து பேருரைகள் நிகழ்த்திக் கொண்டிருந்த சுவாமி யோகானந்தா என்ற துறவியின் சிஷ்யனாகச் சிறிது நாட்கள் பயின்று கொண்டிருந்தார். அது சுவாமி யோகானந்தா தனது சித்திகளால் நியூயோர்க்கிலும் லண்டனிலும் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம். 1924 ஆம் ஆண்டு ஃபிளெச்சர் (Fletcher) என்கிற ஆத்மா ஆர்தருக்குள் வந்து இறந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தியது. சேர் ஆர்தர் கோனான் டொயில் என்பவர் ஆர்தர் ஃபோர்டை இறந்தவர்களுக்கும் உயிரோடிருப்பவர்களுக்கும் இடையில் ஊடகமாகத் தொழிற்படும்படி தூண்டினார். பாதிரிமார்களும் ஆவியுலக ஊடகர்களும் (mediums) இறைவனின் விருப்பத்தையே பூர்த்தி செய்வதாக அந்த 'ஷெர்லொக் ஹோம்ஸின்' ஆசிரியர் நம்பினார். மீடியமாகத் தொழிற்படுபவர்கள் மிகக்குறைவாக இருப்பதாலும் ஆர்தரை இத்தொழிலையே செய்யும்படி அவர் தூண்டினார்.
1928 ஆம் ஆண்டில் காலம் சென்ற ஹௌடினி (Houdini) எனும் பிரபலமிக்க மந்திரவாதியின் 'இரகசியச் சொல்லை' (code) ஆர்தர் கண்டு பிடித்தார். இறந்து போன அம்மந்திரவாதி ஆர்தருக்குள் வந்து தனது மனைவி பியட்ரிஸ் ஹௌடினிக்கு அச்சொல்லைச் சொல்லியது. ஆர்தர் பொய் சொல்வதாகப் பலரும் நம்பினர். ஆனால் (ஆர்தரால் உரைக்கப்பட்ட) அச்சொல்லானது தனக்கும் இறந்து போன தனது கணவருக்கும் மட்டுமே தெரியுமென அம்மந்திரவாதியின் மனைவி ஏற்றுக்கொண்டு அதனை எழுதிக் கொடுத்தார். ஆர்தரது ஆவியூடகச் செயற்பாட்டின் நம்பகத்தன்மையை அந்நாட்களில் பிரபலமாயிருந்த பலரும் மீண்டும் மீண்டும் பரிசோதித்து நிரூபித்திருந்தனர். அவர்களுள் பிரபல ஆங்கில வைத்தியர் சேர் ஒலிவர் லொட்ஜ், ஹார்வோட் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைப் பேராசிரியர் வில்லியம் மக்டௌகால், நாவலாசிரியர்கள் உப்ரன் சென்க்ளையர் (Upton Sinclair), ஜாக் லண்டன், ஜெரால்ட் ஹெர்ட், ஹியூ வால்போல், அத்துடன் சேர் ஆர்தர் கோனான் டொயில், YMCA வின் உலகப் பொதுச்செயலாளர் டாக்டர் ஷேர்வூட் எடி (Sherwood Eddy), அத்துடன் பற்பல எழுத்தாளர்கள், கலைஞர்கள், செனட்டர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள், வெள்ளை மாளிகையில் உள்ளவர்களும், அத்துடன் ஐரோப்பியாவின் அறிஞர்களும் அடங்குவர். மூன்று கண்டங்களில் அவரின் விரிவுரைகள் நடந்து கொண்டிருந்தன. அவரது புகழ் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது தான் அவருக்கு ஒரு விபத்து ஏற்றப்பட்டது. சௌத் கரோலைனாவிலிருந்து நியூயோர்க்குக்குக் காரில் வந்து கொண்டிருக்கும் போது நோர்த் கரோலைனா லைனுக்குக் கிட்டே அவரது கார் புகையிலை ஏற்றி வந்த ட்ரக் வண்டியுடன் மோதியதில் கூட இருந்த அவரது சகோதரியும் சிநேகிதனும் கொல்லப்பட்டனர். ஆர்தரும் மிகுந்த உட்காயங்களுடன் இறக்கும் தருவாயில் இருந்தார். காயங்களினால் ஏற்பட்ட நோவிலிருந்து விடுவிக்கும் முகமாக டாக்டர் அவருக்கு வல்லமை வாய்ந்த மயக்க மருந்துகளைத் தந்து அவரது இறுதி நாட்களை அமைதியாகக் கழிக்கும்படி செய்திருந்தார். துரதிஷ்டவசமாக அவருக்கு வைத்தியம் பார்த்த டாக்டருக்கு அவரது நலனிலும் பார்க்க அவரது அதீத சக்திகளில் கூடுதல் நாட்டமிருந்தது. அரை மயக்க நிலையிலிருந்த ஆர்தர் அந்தச் சிறிய வைத்தியசாலைக்கு வந்த நோயாளிகளின் நோய்களை இலகுவில் கண்டுபிடித்தார். இதனைக் கண்ட அந்த டாக்டர் ஆர்தருக்குத் தொடர்ந்து மயக்க மருந்துகளை (Morphine) கொடுத்து அவரை எந்த நேரமும் மயக்க நிலையிலேயே வைத்திருந்தார். அவரது காயங்களெல்லாம் ஆறியும் கூட இந்த நிலை தொடர்ந்தது.
ஆர்தருக்கு மயக்க மருந்துப் பழக்கம் தவிர்க்க இயலாததாக இருந்ததையும் (Drug addiction) அந்த டாக்டரின் செயலையும் அறிந்த வேறொரு டாக்டர் ஆர்தரை அந்த ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேற்றி நியூயோர்க்குக்கு அனுப்பி வைத்தார். இருப்பினும் ஆர்தரால் அந்த மருந்துப் பழக்கத்தை விட முடியாமலும் மருந்து எடுக்காவிடின் பைத்தியம் பிடிக்கும் போலவும் (withdrawal phase) சங்கடப்பட்டார். இதிலிருந்து விடுபட அவரது டாக்டர் நண்பர் ஒருவர் மதுவை நாடும்படி ஆலோசனை வழங்கினார். மதுவானது நாடி நரம்புகளை நேராக்கி நித்திரை வரச்செய்யும் என்பது அந்த டாக்டரின் எண்ணம். ஆர்தர் அதற்கு முன்பு ஒருநாளும் மது அருந்தியதில்லை. நண்பனின் ஆலோசனையின் படி இந்த மருந்துப் (drug) பழக்கத்தைப்  போக்குவதற்காகக் குடிக்கத் தொடங்கினார். அதற்கு முன்னர் அவர் எப்போதுமே மது அருந்தாமலிருந்தும் கூடக் குடிக்கத் தொடங்கியதும் பழைய குடிகாரர்கள் போல எவ்வளவு குடித்தாலும் தாங்கும் வல்லமையிருந்தது. ஒரு போத்தலிலும் கூட ஸ்காச் (scotch) குடித்தால் தான் அவருக்கு அதன் விளைவு தெரியும். நித்திரையும் அதன் பின்னர் தான் வரும். அடுத்து வந்த இருபது வருடங்களுக்கு அவர் மதுப்பழக்கத்துடன் போராடினார். உலகெங்கிலும் பற்பல நாடுகளுக்குச் சென்று பற்பல மேடைகளிற் பேருரைகள் நிகழ்த்திக் கொண்டிருந்த போதும் கூட அவர் இக் குடிப்பழக்கத்துடன் போராடிக் கொண்டேயிருந்தார். அவர் இப்போ மோர்ஃபின் (Morphine) என்ற மருந்துப் பழக்கத்திலிருந்து குடிப்பழக்கத்துக்கு மாறி விட்டார். அவர் இப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காகப் பற்பல வழிகளைக் கையாண்டார். ஆனால் அவரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை. விரக்தியடைந்த அவர் அல்கஹொலிக்ஸ் அனோனிமஸ் என்ற குடிப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சங்கத்தில் சேர்ந்து தன்னை ஒருவாறு இப்பழக்கத்திலிருந்து விடுவித்துக் கொண்டார். என்னதான் அவர் குடிபோதையில் இருந்தாலும் 'மறு உலகத்துடன் தொடர்பு கொள்ளும்' தன்மைகளும் அப்படியே தானிருந்தன. இங்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலரைத் தனது சித்திகளால் ஆச்சரியத்திலாழ்த்தினார் அவர்.
அவர் இவ்வளவு உலகப் புகழ் பெற்றிருந்தும் கூட 1956 ஆம் ஆண்டு வரை ஆர்தர் ஃபோர்டைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. இண்டர்நேஷனல் நியூஸ் சர்வீஸ் (International News Service) என்ற பத்திரிகையில் பொது அறிவுக்கு அப்பாற்பட்ட சித்திகளை (psychic phenomena) ஆராய்ந்து நான் ஒரு தொடர் எழுதவிருந்தேன். அதற்காக அங்கேயிருந்த நூலகத்துக்குச் சென்று ஆராய்ந்து கொண்டிருந்தேன். அங்கேயிருந்த நூல்கள் எல்லாமே ஆர்தர் ஃபோர்டையே மேற்கோள் காட்டியிருந்தன. நிரூபிக்கப்பட்ட அவரது ஆவியுலகத் தொடர்புகளைப் பற்றிப் பற்பல எழுத்தாளர்கள் தங்களது நேரடி அனுபவங்களை விபரித்திருந்தனர். அப்போது நான் ஆவியுலகத்துடன் தொடர்பு கொள்வது பற்றிய நம்பிக்கை இல்லாதவளாக இருந்தும் கூட எனக்கு அவை ஆவலைத் தூண்டின. சில வருடங்களின் பின் வாஷிங்டனிலிருக்கும் சுவீடன்போர்ஜியன் சர்ச்சுக்கு (Swedenborgian church) அவர் உரையாற்ற வருவதாக அறிந்து அங்கு சென்று அவரின் உரையைக் கேட்டேன். பின்னர் அவரை நேரே சந்தித்துப் பேட்டி கண்டேன். நான் அப்போது எழுதிக் கொண்டிருந்த தொடருக்கு அது மிகவும் தேவையாக இருந்தது.
எங்களது பேட்டியின் போது முக்கியமாகப் பேசப்பட்ட விஷயம் என்னவெனில் ஆர்தரும் வேறு சிலரும் சேர்ந்து புதிதாகத் தொடங்கிய ஒரு ஆத்மீக ஆராய்ச்சியாளர் சங்கத்தைப் (Spiritual Frontiers Fellowship) பற்றியதாகும். அதைத் தொடங்கியவர்களுள் சமயத் துறவிகள், காலேஜ் பேராசிரியர்கள், பெரிய பதவிகளில் இருப்பவர்களும் அடங்குவர். அச்சங்கமானது அங்கேயிருந்த சர்ச்சுகளின் ஆதரவுடன் எமது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை (psychic phenomena) ஆராய்வதற்காக உண்டாக்கப்பட்ட சங்கம். மீடியம் என்று சொல்லப்படுகின்ற, 'ஆவிகளுக்கும் எங்களுக்கும் இடையில் ஊடகமாகச் செயற்படுபவர்களைப்' பற்றி நான் ஒரு பத்திரிகையில் தாக்கி எழுதியிருந்தேன். அதை அவர் வாஷிங்டனை விட்டுப் புறப்படுவதற்கு முன் ஏற்றுக்கொண்டேன். அவர் எனக்காக அங்கேயே மயக்கநிலைக்குச் சென்று (trance) ஆவிகளுடன் உரையாடச் சம்மதித்தார். அப்போது நடந்த ஆச்சரியப்படத்தக்க விஷயங்களை நான் எனது "உண்மையைத் தேடி" (A Search for the Truth) என்ற நூலில் எழுதியிருக்கிறேன்.
நான் ஆர்தரின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பற்றிப் பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதன் பின்னர் எப்பொழுது அவர் வாஷிங்டன் வந்தாலும் எங்களது வீட்டிற்கு வருவார். அந்த நேரங்களில் முன் பின் அறிமுகமில்லாத எவரையேனும் அழைத்து வந்தாலும் கூட அவர்களின் இறந்த உறவினர்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிவார். ஃபிளெச்சர் என்கிற ஆத்மாவின் உதவியுடனேயே இது நடைபெறும். இறந்த உறவினர்களின் பெயர்களை எல்லாம் சொல்வார். தொடர்ந்து வந்த ஆண்டுளில் ஆர்தர் எங்களது வாஷிங்டன் வீட்டிலும் வேர்ஜீனியா பீச் வீட்டிலும் அடிக்கடி வந்து தங்குவார். அடிக்கடி நகைச்சுவைபடக் கடிதங்கள் எழுதுவார். தொலைபேசியிலும் பல மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். மேடைப் பேச்சுகளின் போதும் சந்தித்து இருக்கிறோம். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்பில்லாமல் ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால் அவர் மறு உலகை அடைந்த பின் தான் ஒழுங்காகத் தொடர்பு கொள்கிறோம். ஏனெனில் ஒவ்வொரு நாட்காலையிலும் ஒரே நேரத்துக்குச் சந்தித்து மகிழ்கிறோம். 

No comments: