இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Sunday, March 21, 2021

முதலாவது அத்தியாயம்: ஆர்தர் ஃபோர்ட் உயிர்வாழ்கிறார் (Arthur Ford Lives)

 



தொலைபேசியின் கணீரென்ற ஒலி எனது ஆழமான உறக்கத்தைச் சற்றே கலைக்க முயன்றது. அப்பொழுது தான் விடிந்து கொண்டிருந்ததால் அது பிழையான அழைப்பாக இருக்குமென நித்திரைச் சோம்பலில் தீர்மானித்தேன். தலையணையில் மேலும் அழுந்தி, விடுபட்ட கனவைத் தொடர முயன்ற என்னைத் தொடர்ந்த தொலைபேசியின் கதறல் எடுக்கத் தூண்டியது. அடுத்த முனையிலிருந்து மிகப் பரிச்சயமான குரலொன்று, "ருத் (Ruth), நான் மேரியான் வொல்ஃப் (Marianne Wolf) ஃபிலதெல்ஃபியாவில் இருந்து (Philadelphia) பேசுகிறேன்" என்றது. 
மேரியான் தொடர்ந்து "ஆர்தர் இறந்து விட்டார்" என்ற போது அதைக் கிரகித்துக் கொள்ளவும் எனது இதயத்தில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது. "இவ்வளவு அதிகாலையில் குழப்பியதற்கு மன்னித்துக் கொள் ருத். ஆனால் வானொலியில் செய்தி சொல்வதற்கு முன் உனக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதால் தான் அவசரப்படுகிறேன். மையாமியில் இன்று காலையில் தான் அவர் காலமானார்." என்றாள் மேரியான் தொடர்ந்து.
ஆர்தர் இறந்து விட்டாரென்பது உயிரை உலுக்கும் செய்தியாக இருந்தது. முதல் நாள் தான் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு முயல்கையில் அவரது (ஃப்ளோரிடா) தொலைபேசி எண்ணைத் தவறவிட்டது தெரிந்தது. எனது நாட் குறிப்பில் அவருடன் கடிதமூலம் தொடர்பு கொள்வதற்கு எழுதிய குறிப்புக் கண்ணில் பட்டது. இரு மாதங்களுக்கு முன் நியூயோக் சிற்றியில் எனது புதிய புத்தகத்துக்காகச் சுற்றுலா சென்ற போது இரவு மீண்டும் ஹோட்டல் அறைக்கு வர எனக்கு ஆர்தரிடமிருந்து ஒரு செய்தி, 'எந்நேரமென்றாலும் வந்தவுடன் தன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்படி' இருந்தது. நான் உடனே அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். உரையாடல் பலமாக இருந்தது. நியூயோர்க்கிலிருக்கும் யூனிவேர்சலிஸ்ட் சர்ச்சில் (Universalist Church) நடந்த எனது உரையைப் பற்றிய செய்தி அவருக்கு எட்டியிருந்தது. அதில் அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசியிருந்தேன். அது அவருக்கு மிக மகிழ்வாக இருந்தது. அப்போது அவரது உடல் நிலை நன்றாக இருந்ததால் ஒரு விரிவுரையாடல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அது தான் நான் அவரின் குரலை இறுதியாகக் கேட்டது.
இப்போ அவர் இவ்வுலகில் இல்லை. அன்று முழுவதும் (4.1.1971) அவர் இறந்த கவலையில் இருந்தேன். 69 ஆம் ஆண்டு நானும் பாப் (Bob) உம் மெக்சிகோவில் இருக்கும் குவேனவாகா (Cuernavaca) நகரத்துக்குச் சென்று வசிப்பதற்கு முடிவு செய்த போது ஆர்தரும் எங்களுடன் வர விரும்பினார். எங்களுக்கும் அவரை எங்களருகில் குடி வைக்க விருப்பமெனினும் அவரது உடல் நிலையை உத்தேசித்து அதற்கு மாறான வழியில் புத்தி சொன்னோம். அந்த உயர்வான பிரதேசம் (நிலமட்டத்திலிருந்து ஒரு மைல் உயரம்) அவரது இருதயத்திற்குக் கூடாது என்பதாலும் மெக்சிகோ சிற்றியிலிருந்து மிகக் கிட்டிய வைத்தியசாலையே ஐம்பது மைல் தொலைவில் இருப்பதாலும் நாம் அந்த எண்ணத்தை வரவேற்கவில்லை. அதன் பிறகு அவர் மியாமியில் இருந்து கொண்டார். அங்கே ஒரு இருதயச் சிகிச்சை கிளினிக் அருகே இருந்தது அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. இனி அவரை மிகக் கடுமையாக வருத்திய 'அஞ்சைனா பெக்டோரிஸ்' (angina pectoris) என்ற இருதய நோயிலிருந்து அவர் விடுதலை பெற்று விட்டாரெனினும் எனது சுயநலம் அவர் மீண்டும் வரவேண்டுமென விரும்பியது. பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக அவர் எனக்கு ஒரு தந்தையைப் போலிருந்தார். ஆர்தருக்குள் 'ஆத்மா' வந்த போது தான் எனது தந்தையுடன் தொடர்பு கொள்ள இயலுமாகவிருந்தது. ஆர்தருக்குள் வரும் ஃபிளெச்சர் (Fletcher) என்ற மறு உலக ஆத்மாவின் மூலம் எனது தந்தையும் என்னுடன் தொடர்பு கொண்டார்.
ஆர்தரைச் சந்தித்த பின்பு தான் எனக்குத் 'தன்னிச்சையான எழுதுகை' (automatic writing) வருவது தெரிந்தது. லிலி என்ற உயர் எண்ணம் கொண்ட ஆத்மா எனக்குள்ளால் 'தன்னிச்சை எழுதுகை' மூலம் தொடர்பு கொண்டது. எனது 'உண்மையின் தேடல்' (A Search for the Truth) என்ற புத்தகத்துக்கும் 'இங்கும், அங்கும்' (Here and Hereafter) என்ற அத்தியாயத்துக்கும் லிலி என்ற ஆத்மாவின் உரைகளே காரணங்களாக இருந்தன. அந்த இரு நூல்களுக்குப் பிறகு நான் தன்னிச்சை எழுதுகையைக் கைவிட்டு விட்டேன். அதற்குக் காரணங்களிருந்தன. முதலாவதாக இவ்வுலக வாழ்க்கையில் நான் கொஞ்சம் கூடுதல் ஈடுபாட்டுடன் இருந்த காரணம். அடுத்தது இறந்த ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்வதென்பது என் வரையிலாவது நிரூபிக்கப்பட்டு விட்டதுடன் எனக்குத் தொடர்ந்து ஒரு ஆவியுலக இடையீட்டாளராகச் (medium) செயல்படும் விருப்பமும் இல்லாதிருந்தது. எனவே நான் சாதாரண விஷயங்களுக்கு மாறித் 'தலைவர்களுக்கு வந்தனம்: ஆறு ஜனாதிபதிகளுடனான எனது வாழ்க்கை' (Hail to the Chiefs: My Life and Times with Six Presidents) என்ற புத்தகத்தை எழுதினேன். இதனால் 'வாஷிங்டன்' என்ற பத்திரிகையின் நிரந்தர எழுதுனர் என்ற பெயரை மீண்டும் நிலைநாட்ட இயலுமாக இருந்தது. இப்போ எனது அடுத்த புத்தகமான மெக்சிகோவின் வெற்றியைப் பற்றி, ஹெர்னான்டோ கோர்டேசுக்கு மொழி பெயர்ப்பாளராகச் செயற்பட்ட 'மாலின்ச்' என்ற சிவப்பிந்திய இளவரசியைக் கதாநாயகியாக்கி எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் இப்போ சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியதை முன்னிட்டு எனது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
அன்று அந்தத் துயரச் செய்தியைக் கேள்வியுற்ற பின்னர் திடீரென ஏதோ ஒரு உந்து சக்தி என்னை எனது தட்டச்சு இயந்திரத்துக்கு இழுத்துச் சென்று மீண்டும் தன்னிச்சை எழுதுகையை எழுதத் தூண்டியது. 'ஒன்றுமே கூட நடவாமல் போகலாம்' என நான் எண்ணினேன். ஏனெனில் சென்ற முறை நான் சடுதியாகத் தன்னிச்சை எழுதுகையைக் கைவிட்டு விட்டதனால் அப்போ எனக்கு உதவிய 'லிலி' என்ற அந்தச் சுறுசுறுப்பான ஆத்மா மீண்டும் எனக்கு உதவுமோ என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் அதுதான் நடந்தது. பாதுகாப்புக்கான வழமையான எனது பிரார்த்தனையை முடித்துத் தட்டச்சு இயந்திரத்தில் இயங்குவதற்குத் தயாரான நிலையில் எனது விரல்களை வைத்ததும் தான் தாமதம் எனது விரல்கள் தன்னிச்சையாக இயங்கத் தொடங்கிப் பின்வருமாறு எழுதியது: ரூத், லிலியும் குழுவினரும் இப்போ இங்கே இருக்கிறோம். ஆர்தர் ஃபோர்டும் இங்கேயிருக்கிறார். அவர் தான் வசந்தகாலம் போல இளமையுடன் இருப்பதாக உனக்குச் சொல்லச் சொன்னார். தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் உன்னைக் கவலைப்பட வேண்டாம் என்றும் சொல்லச் சொன்னார். அவர் உன்னால் கற்பனை கூடச் செய்ய முடியாத அளவு மகிழ்ச்சியாக உள்ளார். அவர் தன் மனத்துள்ளே இரகசியமாக இப்படிப்பட்டதொரு பயணத்தை வேண்டி நின்றார். ஆனால் அவர் எதிர்பார்த்ததிலும் பார்க்க இது அழகாக உள்ளதாகவும் அவருள் 'ஆத்மா' வந்த போது அனுபவித்ததிலும் பார்க்க இனிமையாக உள்ளதாகவும் சொல்கிறார். அவர் உலகிலேயே மிக மகிழ்ச்சியாக உள்ளார். அவருக்கு மிக வேதனையைத் தந்த அந்த உடலை விட்டுவிட்டு வந்ததற்காக அவர் மகிழ்கிறார்.
எனது நெஞ்சிலிருந்த பாரம் இறங்கி மனது இலேசான மாதிரியிருந்தது. மறுநாள் காலை 'லிலி' எனது தந்தை 'இரா விட்மர் ஷிக்' (Ira Whitmer Shick) உடன் தொடர்பு கொள்ளச் செய்தார். எனது தந்தை, "ரூத், ஆர்தரும் நானும் நண்பர்களாகி விட்டோம். அவர் மிக நல்லவர். இப்படிப்பட்டதொரு மிக இயல்பான தொடர்புக்கு உன்னைத் தூண்டியதற்கு அவரை நான் பாராட்டினேன். ஆனால் அவர் எனக்கும் அதில் பங்கு இருப்பதாகச் சொல்கிறார். நீயும் என்னுடன் தொடர்பு கொள்ள மிக ஆவலாய் இருந்ததாயும் சொல்கிறார்." என எழுதினார்.
பின்பு ஆர்தர் அவர் மூலம் வந்து, "ரூத், நான் இப்போ ஆர்ட் (ஆர்தரின் சுருக்கம்) எழுதுகிறேன். இப்போதைக்கு நான் உன்னுடன் தொடர்பு கொள்வதை வெளியில் சொல்ல வேண்டாம். ஏனெனில் பிறகு மற்றையவர்கள் தாமும் தொடர்பு கொள்வதாகச் சொல்வார்கள். எனக்கு இப்போ அதற்கு நேரமில்லை. மேரியானுக்கும் சுகம் சொல்லி விடவும். மேரியான் உனக்கு எனது மரணச் செய்தியை உடனே தெரிவித்ததற்கு அவளுக்கு என் நன்றியைத் தெரிவித்து விடு. பூதவுடலை நான் நீத்ததை எனது உற்ற தோழியான நீ உடனே அறியவேண்டுமென விரும்பினேன். நீயும் மேரியானும் என்னுடன் மிக அன்பாக இருந்தீர்கள். நான் அங்கு இருந்த போது எனக்கு நீங்கள் இருவரும் செய்த உதவிகளுக்கு மிக்க நன்றி. 'குட் பை' சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் இங்கே தானிருக்கிறேன். உனக்குத் தெரிகிறமாதிரி நான் ஒரு இடமும் செல்லவில்லை. உனது தந்தையை எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது. அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வேன். இப்போதைக்கு இவ்வளவு தான் ரூத். இப்படிக்கு உன் நண்பன் ஆர்ட்" என எழுதினார்.
மறுநாட் காலை 'லிலி'யின் தூண்டுகையால் பழையபடி எனது தட்டச்சு இயந்திரத்தின் முன்னே அமர்வதற்குத் தயாரானேன், (முந்தைய எனது 'உண்மையைத் தேடி' என்ற நூலுக்கான விஷயங்களைச் சேகரிக்கும் போது செய்தது போல). லிலி எழுதினார்: ஆர்தர் இப்போ இங்கில்லை. அவர் தனது மரணச் சடங்குக்கான ஆயத்தங்களைப் பார்ப்பதற்கும் அவர் விட்டு வந்த எஸ்டேட்டை என்ன செய்வது என்று பார்க்கவும் சென்று விட்டார். ஆனால் இது ஒரு தற்காலிக நிலை தான். கூடிய விரைவில் எது எப்படியானாலும் எவர் எங்கு சென்றாலும் ஒரு மாற்றமும் இங்கில்லையென அவர் அறிந்து கொள்ளவார்.
பின்பு 'லிலி' மார்பெல் ஜூடி என்ற எனது அண்மையில் இறந்த அன்ரியைப் பற்றிச் சொன்னார். அவர் எப்படித் தனது பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்ந்தாரென உரைத்தார். பின்பு ஆர்தர் வந்தார். அவர் எழுதினார், "லிலி அற்புதமானவர். பூவுலகில் உன்னையறிந்ததன் பிற்பாடு அவரை நான் உணர்ந்திருக்கிறேன். அவர் ஒரு பிரகாசமான மிகச்சக்தி வாய்ந்த ஒளி நிறைந்த ஆத்மா ஆவார். அவர் உனதருகில் இருப்பது நல்லது. எனவே அவரை உதாசீனம் செய்யாதே. அத்துடன் அவரது உதவியை ஏற்கத் தயங்காதே" என்றார்.
ஆர்தர் இப்போ நான் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகமான 'மாலின்ச்'சைப் பற்றிக் கேட்டார். அதை விரைவில் முடிக்கும் படி கூறினார். இரெண்டொரு நாட்களில் இதற்கான காரணம் தெரியவந்தது. இறப்பின் பிற்பாடு உள்ள வாழ்வின் தன்மைகளைப் பற்றிய ஒரு புத்தகத்தைத் தன்னுடன் சேர்ந்து எழுதுவதற்காக என்னை எதிர்பார்த்தார். அவர் தனது வழமையான உற்சாகமான முறையில், தான் இப்போ உள்ள இடத்தைப் பற்றிய முழு விபரங்களையும் சேகரித்ததாகவும் அவை அப்புத்தகத்துக்கு உதவி, உண்மையான மறு உலக நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்றும் உறுதியளித்தார்.
ஜனவரி மாதம் 19 ஆம் திகதி நியூயோர்க்கிலிருக்கும் எனது புத்தக வெளியீட்டாளர் வேறொரு வெளியீட்டகம் 'மாலின்ச்' என்ற பெயரில் இன்னொரு புத்தகம் வெளியிடப் போவதாக அறிவித்தார். ஒரு வருடத்தில் ஒரே விஷயத்தைப் பற்றி இரு புத்தகங்கள் வெளிவருவது புத்திசாலித்தனமல்ல என்பதால் நான் அரைகுறையாக விட்டிருந்த புத்தக எழுத்துக்களை மூட்டை கட்டி வைத்து விட்டேன். லிலியும் ஆர்தரும் மகிழ்ந்தார்கள். மறுநாள் லிலி, "இன்னொரு புத்தகம் வெளிவருவதைப் பற்றிய செய்தி உனக்கு வரும் வரையிலும் எமக்கும் தெரியாது. எம்மால் எதையும் அறிய முடியும், எமக்கு எல்லாம் தெரியுமென எண்ணி விடாதே. பூவுலகில் நடக்கும் பல விடயங்கள் (நாம் நெருக்கமாக வேலை செய்யும் உன்னைப் போன்றவர்களின் புத்தியை ஊடுருவும் வேளை தவிர) எமக்குத் தெரிவதில்லை. உனது புத்தகம் வெளியிட இயலாமல் போனதைப் பற்றி எமது அனுதாபங்கள். ஆனால் எமக்கு அச்செய்தி கவலையளிக்கவில்லை. ஏனெனில் எமது மிக முக்கியமான, உபயோகமான ஒரு திட்டம் இதனால் வீணாகத் தாமதமாகிறது. அதைப் பற்றித்தான் ஆர்தர் ஃபோர்ட் உன்னுடன் பேசியிருந்தார். உனக்குச் சம்மதமெனில் உடனேயே அத்திட்டத்தை ஆரம்பிக்கலாம். வாழ்வானது ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்கு எப்படித் தொடரும் என்பதைப் பற்றிய விஸ்தாரமான உண்மைகளையும் எப்படி ஒவ்வொன்றும் வேறுபடுகிறது என்பதைப் பற்றியும் அறியலாம். பூதவுடலை நீத்து மேலுலகுக்குச் செல்வதனைப் பற்றியும் பின்பு மேலுலகிலே எங்களது வாழ்வின் படிகளையும் ஆராயலாம். மேலுலக வாழ்வின் ஒவ்வொரு உயர்வான கட்டங்களைப் பற்றியும் நான் விளக்குவேன்.
மிக்க ஆவலுடன் 'லிலி' சொன்னதன் படி ஒரு புதிய காகிதத்தை டைப் ரைட்டரில் பொருத்தினேன். ஆர்தர் எழுத ஆரம்பித்தார். "ருத் நீயும் நானும் முந்தைய பல பிறவிகளில் ஒன்றாக இருந்திருக்கிறோம். நாம் நண்பர்களாக இருந்திருக்கிறோம்; சகாக்களாக இருந்திருக்கிறோம். சில பிறவிகளில் உறவினர்களாகவும் சிலவற்றில் இல்லாமலும் இருந்திருக்கிறோம். பூதவுடலுடன் நானிருக்கும் போது இதை உணர்ந்திருக்கிறேன். அத்துடன் இப்போதும் அது நிரூபணமாகி உள்ளது. நாம் ஒரு பிறவியில் கூட எதிரிகளாக இருக்கவில்லை. அதுதான் கடைசிப் பிறவியான இப்போ முடிந்த பிறவியில் ஒற்றுமையாக நாம் வேலை செய்ததுடன் எமக்குள் உண்மையுள்ளவர்களாயும் இருந்திருக்கிறோம். முகவுரைக்கே இவ்வளவு வந்துவிட்டது. நாம் இப்போ ஆத்மாவுக்கு அழிவில்லை; அது நிரந்தரமானது என்ற உண்மைதனை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து எமது நூலைத் தொடர்வோம். சிலர் சொல்வது போல பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிவதல்ல எமது வாழ்க்கை. நாம் இல்லாத நாளே கிடையாது. நாம் என்றும் இருந்து கொண்டே இருக்கிறோம். ஆனால் அடிக்கடி உருவங்களிலும் நிலைகளிலும் மாறுதலடைந்து கொண்டிருக்கிறோம். நாம் இறைவனுக்கு நிகரானவர்கள். இறைவன் எங்களில் ஒரு பகுதியே. இந்த வசனம் சிலரைத் திடுக்குற வைக்கலாம். ஆனால் எல்லாரையுமல்ல. எவ்வளவு ஒரு விரிவான உணர்வு. நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு நிகரென்பதால் அனைவரும் சேர்ந்தால் நாம் இறைவனே. ஒரு முழுமையான இறைவனை உருவாக்க அனைவரும் தேவை என்பதால் ஏனையவர்களும் எங்களுக்கு மிக வேண்டியவர்களே. அத்துடன் உலகப் பொது நலனுக்கு எம்மைப்போல ஏனையவர்களும் அவசியமானவர்களே. எமது கைகள், கால்கள், கண்கள், காதுகள் எவ்வளவு எமக்கு முக்கியமானவையோ அவ்வாறே  ஏனையவர்களும் எமக்கு முக்கியமானவர்களே. எனவே அனைவரும் உயர்ந்தவர்களாகவும் முக்கியமானவர்களாகவும் இருக்கிறார்கள்."
"உயிருடனிருப்பவர்களோ இறந்தவர்களோ அனைத்து உயிரினங்களும் சேர்ந்தால் தான் முழுமையிருக்கும். ஒருவர் குறைந்தாலும் குறை இருக்கும். ஒருவர் அனைவருக்காகவும் அனைவரும் ஒருவருக்காகவும் இருப்பதென்பது இருப்பவர்களையும் இறந்தவர்களையும் சேர்த்துத்தான் என்பதை மறந்து விடாதே. ஏனெனில் அனைவரும் சேர்ந்து தான் பிரம்மத்தை உருவாக்கலாம். அது தான் நாம் கடவுளென்று அழைப்பது. பாதிரிமார்களுக்கு இந்த விளக்கம் விருப்பமில்லாதிருக்கலாம். ஆனால் நீ கொஞ்சம் சிந்தித்தாயானால் இது ஏசுபிரான் சொன்ன, "இறைவனின் ஆட்சி எம்முள்ளே" என்ற அறிவித்தலையும் அனுசரிக்கிறது. ஆனால் இப்போது சொல்லப்படுவது போல இறைவன் உயரே இருந்து கொண்டு எம்மைச் சரி பிழை பார்த்துக் கொண்டிருப்பது என்பதை மறுதலிக்கிறது. நாமனைவரும் சேர்ந்து தான் இறைவனை உருவாக்குகிறோம். நாம் அனைவரும் இறைவனின் ஒரு பகுதியே"
ஆர்தர் ஆத்மாவைப் பற்றிய இந்தத் தத்துவத்தையே விளக்கங்களுடன் தொடர்ந்து கொண்டிருந்திருப்பார். ஆனால் நான் இக்கட்டத்தில் குறிப்பாக ஆர்தரும் ஃப்ளெட்சரும் (Fletcher) மீண்டும் சந்தித்த விடயத்தைப் பற்றி அறிய விரும்பினேன். ஃப்ளெட்சர் என்பவர் ஃப்ளோரிடாவில் ஆர்தரின் சிறிய வயதுப் பிரஞ்சுக் கனேடியச் சிநேகிதன். முதலாம் உலகப் போரில் உயிரிழந்தவர். அவர் உயிரிழந்து சில வருடங்களின் பின் ஆர்தர் மூலமாக வந்து ஆவியுலகுக்கும் இவ்வுலகுக்குமிடையே தொடர்புகளை ஏற்படுத்தினார். பல ஆத்மாக்கள் ஆர்தருக்குள் வந்து இவ்வுலகிலிருக்கும் தமது உறவினர்களுடன் தொடர்பு கொள்வதற்கு இது உதவியது. ஆர்தரை அறிந்தவர்கள் அனைவருக்கும் இது தெரியும். எனது எண்ணம் ஆர்தருக்குத் தெரிந்து விட்டது போலும். ஏனெனில் மறுநாள் காலை அவர் தொடங்கும் போதே, "ஹாய் ருத், நான் இவ்வுலகுக்கு வந்தவுடன் எனது தாயார், சகோதரி, அத்துடன் நெருங்கிய உறவினர்களின் வருகையால் மகிழ்ந்தேன். பின்பு ஃப்ளெட்சர் வந்தார். அவரது முகம் மகிழ்ச்சியால் பளிச்சிட்டது. அதற்குக் காரணம் நான் அவ்வுலக வாழ்க்கையை எவ்விதப் பிரச்சனையுமின்றி இலகுவாகக் கடந்து விட்டது தான். அத்துடன் அவரது கடமையிலிருந்து நான் அவரை விடுவிப்பேன் என்பதும் காரணம். அவருக்கு அவரது கடமையை நிறைவேற்ற ஆசையிருந்தாலும் பொறுப்பாகவும் இருந்தது.
ஃப்ளெட்சரின் முதலாவது வசனமே, "பால்ய நண்பனே வருக, வருக! இருவருக்கும் விடுதலையடைந்த மாதிரி எவ்வளவு மகிழ்வாக உள்ளது! இனி நான் உயர்ந்த சேவைகளுக்குச் செல்லலாம்", என்பதாகும். ஆனால் முதலில் அவர் எனக்கு மறு உலகில் என்னென்ன எதிர்பார்க்கலாம் என்பதனை விரிவாக எடுத்துரைத்ததுடன் சில மிக அவசியமான அறிவுரைகளும் வழங்கினார். தான் ஐம்பது வருடங்களாக என் மூலமாக வந்து பூவுலகிலிருப்பவர்களுடன் தொடர்பு கொண்டதால் பூவுலக பந்தங்களில் இருந்து விடுபட முடியாமல் தவித்ததைப் போல என்னைத் தவிக்காமலிருக்கும் படி அறிவுரை வழங்கினார். அதுதான் இப்புத்தகத்தை எழுதுவதற்காக எல்லோரும் உன்னுடன் தொடர்பு கொள்வதில் ஆவலாக உள்ளோம் ருத். இப்படிப்பட்டதொரு குறுகிய காலத் திட்ட நடவடிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் நான் எனது விட்டகுறை தொட்டகுறையான கடமைகளை நிறைவேற்ற விரும்புகிறேன். அத்துடன் இத்துறையில் எனது வழிகாட்டலை எதிர்பார்த்த நல்ல மனிதர்களின் அறிவுகளுக்கு என்னாலான நிரந்தரப் பங்களிப்புகளையும் அளிக்க விரும்புகிறேன். அதன் பின் நான் மேலான சேவைகளுக்குச் செல்ல இயலும். ஃப்ளெட்சர் செய்ததைப் போல வருடக்கணக்கில் செய்தித் தொடர்பாளராக இரு உலகங்களுக்கும் இடையில் என்னைப் பந்தப்படுத்த எனக்கு விருப்பமில்லை. இது தான் என் எண்ணம்."
"இனி இந்த நிலையில் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம். இந்த நிலைக்கு நான் புதிது என்பதால் இங்கு நான்  அனுபவிப்பவைகளை முழுமையாகப் புரியவைக்க இயலாமல் இருக்கலாம். எனவே இங்கு வரப்போகும் எனது வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப உங்களையும் நான் உடன் அழைத்துச் செல்வேன். வாசகர்கள் தாமும் அதை நேரில் அனுபவிப்பதைப் போல உணரலாம். கடிகார நேரம் இங்கில்லை. இங்கு நேரம் வித்தியாசமாக உள்ளது. நேரத்தைப் பற்றி பெற்றி (Betty) என்பவரும் ஸ்டுவேர்ட் எட்வேர்ட் வைட் (Stewart Edward White) என்பவரும் 'தடைகளற்ற அகிலம்' (The Unobstructed Universe) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் செங்குத்தான நேரத்துக்கும் நட்சத்திரங்களால் ஆன (பூமியில் உள்ள) நேரத்துக்கும் இடையேயான தொடர்பைப் பற்றி எழுதியுள்ளனர். எனவே நேரத்தைப் பற்றிய விடயத்தை உயர்ந்த அறிவுள்ள அவர்களிடமே விட்டு விடுகிறேன். அவர்கள் இருவரின் நிலையும் இங்கே மிக முன்னேறியுள்ளது. நாம் எமது இந்த நூலைக் கடுமையான சொற்களை உபயோகித்து வாசகர்களைக் குழப்பாமல் எல்லோருக்கும் புரியக்கூடிய விதமாகக் கொண்டு செல்வோம். நாம் இங்கே காலத்தையும் இடத்தையும் தவிர்க்கலாம். பூவுலகின் எந்த இடத்துக்கும் எந்த நேரத்திற்கும் வெறுமனே எண்ணுவதன் மூலமே நாம் சென்று வரலாம். எதிர்காலம் எனப் பூவுலக வாசிகளால் அழைக்கப்படும் காலங்களையும் சற்றே நாம் அறியலாம். எனவே பூவுலகின் நேரம் எனும் எண்ணத்தின் எல்லைகளைத் தாண்டி நிற்கின்றோம் எனலாம். எந்த விஷயமும் நிகழ்வுகளும் முன்பே திட்டமிடப்பட்டுள்ளதால் தவறு நேர்வதற்குச் சந்தர்ப்பமில்லை. எவ்வளவு தூரத்துக்கு அனைத்து விடயங்களும் முதலிலேயே திட்டமிடப்பட்டுள்ளன என்பதைப் பூவுலகவாசிகள் அறிந்திருந்தால் பேரழிவுகளைத் தவிர்ப்பதற்கு சிரமப்பட மாட்டார்கள். ஏனெனில் நடைபெறும் விஷயங்களெல்லாம் முன்னால் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கையில் அதைப்பற்றிக் கவலைப்பட்டு ஆவதென்ன? வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். மற்றையவர்களுக்கு உதவியாக இருந்து எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும். இப்பூவுலகுக்கு நாம் வரும் போது செய்து முடிப்பதற்கு ஏற்றுக் கொண்ட வேலையின் நிமித்தமோ அல்லது எமக்காக ஏற்படுத்தப்பட்ட தெய்வீகத் திட்டத்தின் ஒரு பகுதியாகவோ அவை இருக்கும் போது பயமேன்? அத்திட்டத்தின் மேலுள்ள நம்பிக்கைக் குறைவே பயத்துக்குக் காரணம். நிதானமாக வருவதை எதிர்கொண்டு உங்களால் இயன்றளவு நல்லனவற்றைச் செய்து கொண்டு இருங்கள்."
மறு நாள் ஆர்தர் ஆத்ம உலகின் வருகையைப் பற்றிய உண்மையின் திரையை மேலும் சிறிது விலக்கினார், பின்வருமாறு: "இறப்பு என்பது எமது வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாயிலே அன்றி வேறல்ல. அது ஒரு மிகச்சிறிய மாற்றம். சில வேளைகளில் அது கவனிக்கப்படாமலும் கூடப் போகலாம். அந்த வாயிலின் மறுபக்கமுள்ளது தான் முக்கியம். மேலும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு கட்டத்தில் உடல் வலுவிழந்து சோர்ந்து விடுகிறது; இதயம் நின்று விடுகிறது; இருதயம் நிற்பதற்கு உடல் உறுப்புகள் வேலை செய்வதை நிறுத்துவது மட்டும் காரணமல்ல. எமது ஆத்மா அதன் வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாயிலினூடாக நழுவி விடுவதும் ஒரு காரணம். சிலர் மகிழ்ச்சியுடனும் சிலர் தயக்கத்துடனும் செல்வர். ஆனால் எல்லோரும் அமைதிக்காகவும் சாந்திக்காகவுமான பிரபஞ்சத்தின் அழைப்புக்கு இணங்கியே செல்வர்.
சில வேளைகளில் அந்தக் குறிப்பிட ஆத்மா நித்திரையில் ஆழலாம். குறிப்பாகத் திடீர் அதிர்ச்சியின் காரணமாக அல்லது மனவலுவில்லாத ஆத்மாக்களாயின் இவ்வாறு நிகழும். அந்த ஆத்மா விழிக்கையில் தானாக இங்குள்ள ஏனையவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பும் வரையும் நித்திரை கொள்ள விடப்படும். ஆனால் சில வேளைகளில் உடலை நீக்கும் நிகழ்வானது தென்றல் காற்றில் அசையும் இலையைப் போல மென்மையாக நிகழும். எனது விஷயத்தில் அப்படித்தான் நிகழ்ந்தது. ஏனெனில் இந்த நோயால் வாடும் உடலை நீக்கும் போது என்ன நிகழுமென்ற எதிர்பார்ப்பும் அறிவும் எனக்குப் போதுமான அளவு இருந்தது. உடல் வாதை நின்றது. ஆத்மா வெளியேறிற்று. இப்போ நான் உன்னால் கனவு கூடக் காண முடியாத அளவு அழகுக்குள் நிற்கிறேன். 'இங்கு' என்பதற்கும் 'அங்கு' என்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை. இங்கு உடல் தேவைகள் ஒன்றுமில்லை. உலகின் அழகு மட்டுமே உள்ளது."
"இங்கு எனது உள்ளுணர்வுகளில் நினைவிருந்ததைப் போலவே அனைத்தும் இருந்ததைக் கண்டேன். ஆனால் இங்குள்ள அழகையும் ஒரே மனப்பான்மை உடையவர்களின் மேலெழும் அன்பையும் ஒருவராலும் சரியாக நினைவுபடுத்த இயலாது. இறுதியாகக் களைத்து விட்ட உடலை விட்டு விட்டு வாயிலைக் கடந்து வீட்டுக்கு வந்து விட்டதைப் போலுள்ளது. ஒரு கணத்தில் நான் நினைக்க முதலே இங்கிருக்கிறேன் (சொந்தங்கள் புடை சூழ). எனது தாயார், "அல்லேலுயா ஆர்தர், கனான் பூமிக்கு வருக வருக" என்றார். இது அவர் உரைத்தது போல் 'கனான்' பூமியல்ல என்றாலும் எனது தாயார் ஒரு சிறிய நகரத்தில் 'ஏவாஞ்சலி' என்ற நம்பிக்கையுடன் இருந்ததால் அவரின் எதிர்பார்ப்பு அது.
அங்கிருக்கும் சிலரின் சிறு பிள்ளைத்தனமான எண்ணங்களைப் போக்க வேண்டும். அர்த்தமற்ற (மோட்சம், நரகம் என்பவை போன்ற) எதிர்பார்ப்புகள் இங்கு அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ளன. உண்மைகளைப் போர்த்து மூடி வைத்தால் அவைகளை விலக்குவதற்கு நாளாகும். அதிலும் பார்க்க உண்மைகளை இப்போதே அறிந்து கொண்டால் இங்குள்ள விடயங்களில் கவனத்தைச் செலுத்தலாம். இங்கும் வேலைகள் உள்ளன. ஆனால் அவை காரணங்களுடன் தான் உள்ளன. இங்குள்ள வேலைகள் தேவைகளைப் பொறுத்து, ஒவ்வொருவரின் தன்மைகளுக்கு ஏற்ற வகையில் மாறுபடுகின்றன. ஒருவரையும் இங்கே வேலை செய்யக் கட்டாயப்படுத்துவதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வேலையை அவரவரே தீர்மானித்துக் கொள்வார்கள். அது அவர்களின் ஆத்ம முன்னேற்றத்துக்கு உதவி செய்யுமானால் அதுவே போதும். சமயவாதிகள் சொல்வது போல அதுவே தேவதைகளின் இன்னிசையை எழுப்பப் போதுமானது. ஒருவரையும் வளர்வதற்கோ முன்னேறுவதற்கோ இங்கு ஒருவரும் கட்டாயப்படுத்துவது இல்லை. மாணவனைப் படிப்பதற்குக் கட்டாயப்படுதுவது போல் இங்கு ஒருவரையும் கட்டாயப்படுத்துவது இல்லை (அவராகத் தன் முன்னேற்றத்தை வேண்டும் வரையிலும்). எனவே பூவுலகிலும் பார்க்க இங்கே நாம் உறுதியான மனத்துடன் இருக்க வேண்டும். புரிகிறதா? பூவுலகில் எம்மைக் கட்டாயப்படுத்தி முன்னேற வைப்பதற்கு எமது பெற்றாரும் ஆசிரியர்களும் இருந்தார்கள். ஆனால் இங்கு எமது முன்னேற்றமானது எமது விருப்பங்களிலேயே தங்கியுள்ளது. எனவே மனவுறுதியில்லாதவர்கள் பாதையில் கால்களை வைத்து வழியைத் தேடாமல் சோம்பி இருக்க வேண்டியதுதான்."
"என்னைப் பொறுத்தவரையில் இப்போதைக்கு நான் புரிந்து கொண்டது இப்படித்தான். நான் இங்கே இப்போது புதிதாக வந்துள்ளவன் என்பதையும் மறக்கக்கூடாது. ஒவ்வொரு பிறப்புக்குப் பிறகும் நாம் இங்கே வந்து செல்வோமெனினும் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகத் தான் இருக்கும். ஒவ்வொரு பிறப்பு முடிந்தும் நாம் இங்கு வரும் போது வித்தியாசமானவர்களாகவே வருவோம். நாம் புதிது புதிதாக எண்ண வடிவங்களை உருவாக்கி இருப்போம். இங்கு என்ன எதிர்பார்ப்பது என்று புதிய எண்ணங்கள் உருவாகியிருக்கும். அத்துடன் எண்ணங்களே பொருட்கள் என்பது உறுதி என்பதாலும் நாம் இறைவனுடன் சேர்ந்து இங்கு எமக்கானவற்றை உருவாக்குகிறோம். ரூத், அங்குள்ளவர்களுக்கு இந்தப் பெரிய உண்மையை உணர்த்தி அவர்களைத் தூக்கத்தில் இருந்து நீ எழுப்ப வேண்டும் என விரும்புகிறோம். அவர்கள் தமது எண்ணங்களினால் தமது எதிர்கால நிகழ்வுகளை மட்டும் உருவாக்கவில்லை தங்களது சொர்க்கம், நரகங்களையும் உருவாக்குகிறார்கள்."
"அவரது நிலைப்பாட்டை விளக்கும் முகமாக ஆர்தர் எனது அன்ரி மாபெலின் (Mabel) நிலையை எடுத்துரைத்தார். அவர் கிட்டத்தட்ட ஆர்தர் இறந்த அதே நேரத்தில் தான் இறந்தவர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மணமாகாமல் ஒரு ஆசிரியையாக இருந்து கழித்தவர். அவர் தயாள மனப்பான்மை கொண்டவர். எல்லோருக்கும் அவர் மேல் நல்ல அபிப்பிராயமும் அபிமானமும் உண்டு. ஆனால் எப்படி எனது தாயார் தனது சிறு வயதை மத்திய மேற்குப் பின்னணியில் கழித்தார்களோ அதே போலவே இவர்களுக்கும் நடந்தது. இருவருமே எனது ஆவியுலக ஆராய்ச்சியை விரும்பாதவர்களே.
ஆர்தர் ஆண்டி மாபெலைப் பற்றிக் குறிப்பிடுகையில், "ஆரம்பத்தில் அவர் தனது பழைய நண்பர்களையும் உறவினர்களையும் மீளவும் சந்தித்ததில் மகிழ்ந்து, மாறி மாறி அனைவரையும் சுகம் விசாரித்தார். பின் அவரில் சிறு மாற்றம் தெரிந்தது. பூலகில் இருக்கும் போது அவர் ஒரு குறுகிய வட்டத்துள், சமயப்பற்றுள்ள ஒரு நல்ல பெண்ணாக இருந்தார். ஆனால் அவருக்கென்று சொந்தமாக ஒரு கருத்தும் இல்லாதிருந்தது. அதற்குரிய சூழ்நிலையும் இருக்கவில்லை. இங்கு வந்தும் அந்தக் கருத்து மாறவில்லை. சொர்க்கத்தைப் பற்றிய அவரது எதிர்பார்ப்புகளுக்கு இது மாறாக இருந்ததால் தான் தவறுதலான இடத்துக்கு வந்து விட்டதாக அவர் எண்ணினார். பிழையான இடம் சரியான இடமென்று ஒன்றுமே இங்கில்லை. எல்லாம் ஒன்று தான். அந்தப்பக்கத்தில் நீங்கள் உள்ளீர்கள், இந்தப்பக்கத்தில் நாங்கள் உள்ளோம். ஆனால் நாம் பூவுலகில் இருக்கும் போது எதை எதிர்பார்த்தோமோ அது மறு உலகில் எமது நிலையைப் பாதிக்கும். அந்தப் பாதிப்பு நல்ல விதமாகவும் இருக்கலாம் அல்லதாகவும் இருக்கலாம்."
"மாபெல் ஆண்டியின் எதிர்பார்ப்பின் படி சொர்க்கத்தில் தேவதைகளும் தேவகுமாரர்களும் கைகளில் யாழுடன் மாட மாளிகைகளுக்கும் கூட கோபுரங்களுக்கும் இடையே மிதந்து கொண்டிருப்பார்கள் என்பது தான் அவர் எண்ணம். அதனால் அவர் சற்று ஏமாற்றமடைந்து விட்டார். ஆனால் அந்த ஏமாற்றம் கூடிய விரைவில் (அவர் முன்னேறுகையில்) விலகிவிடும். அது அவரில் தான் தங்கியுள்ளது. அதற்கு அவர் முயற்சி எடுக்க வேண்டும். இல்லாவிடில் பல ஆயிரம் வருடங்களுக்குக் கூட ஒரு ஆத்மா பின் தங்கி இருக்க வேண்டிவரும். வளர்ச்சி தான் எங்கும் வேண்டும். இங்கேயும் அங்கேயும் ஆத்ம வளர்ச்சியும், ஆத்மீக முன்னேற்றமும் தான் மிக முக்கியமான விடயங்கள். அதற்கு நாம் தான் முயல வேண்டும். வளர்ச்சி தானாக வந்து விடாது. அதனால் தான் நாம் எல்லோரும் கடவுளே, கடவுளின் ஒரு பகுதியே என்ற நினைப்பை உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். ஏனெனில் வளர்ச்சி அடைகிறோமோ, வளராமலே கருவாக இருக்கிறோமோ எனத் தீர்மானிக்கும் நாம் தான் கடவுள்கள்."
"முன்னேற்றம் தான் அங்கேயும் இங்கேயும் மகிழ்ச்சிக்குத் திறவுகோல். ஆராய்ந்து, அறிந்து முன்னேறும் ஆசை உள்ளவர்களுக்கு இது ஏற்ற இடம். இங்கு ஆகாயம், மலர்கள், மரம், செடி, கொடிகள், சூரியோதய, அஸ்தமனங்கள் அனைத்தும் உங்களால் புரிந்து கொள்ள இயலாத அளவு மிகத் தெளிவாக, மிகப் பிரகாசமாக உள்ளன. இங்கு எனினும் அங்கு எனினும் ஒவ்வொரு விடயமும் எண்ண வடிவங்களால் ஆனவை என்பது தான் இதற்குக் காரணம். இங்கு நாம் தொடர்பு கொள்வதோ, வேலை செய்வதோ, வளர்ச்சியுறுவதோ அல்லது வெற்றி அடைவதோ எல்லாம் எண்ணங்களின் மூலம் தான். அதனுடன் இங்கு எமக்குப் பூவுலக மனங்களின் இடைஞ்சல் இல்லாததால் (அவை வெறும் கருவி இயந்திரங்களே), எமது எண்ணங்களெல்லாம் உடனே நிறைவேறும். நாம் எவரை நினைத்தாலும் உடனே நாம் அவரைக் காண்போம் (அது மனிதரென்றாலும், ஆத்மாவென்றாலும்). நாம் தொடர்ந்து எமது எண்ண வடிவங்களை உருவாக்குவதால் நாம் எங்கிருக்க விரும்புகிறோமோ அங்கே இருப்போம்."
"இங்கு எமக்கு அசுத்தமான, பாழடைந்த இடங்களோ அசுத்தக் காற்றுகளோ தெரியாது. ஏனெனில் நாம் அவற்றை (அரை குறையான எண்ணங்கள் என்பதால்) எமது எண்ணங்களில் உருவாக்குவதில்லை. எண்ணங்கள் தான் சடப்பொருட்கள் என்பது  உனக்குத் தெரியும் தானே. எனவே நாம் நமது எண்ணங்களில் நாம் காண விரும்புவைகளைப் புகுத்துவோம். பூவுலகில் உங்களது எண்ணங்களால் எப்படி நீங்கள் உங்களது வாழ்வை இனிமையானதாகவோ, கசப்பானதாகவோ உருவாக்குவதைப் போலவே இதுவும். கெட்டனவற்றை நினைத்தால் உங்களைச் சுற்றிக் கெட்டன நிகழும். நல்லனவற்றை நினைத்தால் நல்லனவே நடக்கும். அன்பைப் பற்றி எண்ணினால் நீ அன்பால் ஆளப்படுவாய். வெறுப்பைப் பற்றி எண்ணினால் உலகில் வெறுப்பாளர்கள் நிறைந்திருப்பதைக் காண்பாய். இங்கு நாம் தீய எண்ணங்களைத் தவிர்ப்பதற்கு விரைவில் கற்றுக் கொள்வோம். எமது ஆத்மீக மனங்கள் தமது எண்ண வடிவங்களை வெளியிடுவதால் எமக்கு எமது எண்ணக் கருத்துக்கு ஒத்ததான எண்ணக் கருத்துகளைக் கண்டு பிடிக்க இலகுவாகும். எனவே ஒத்த கருத்துள்ளவர்கள் இலகுவாக ஒன்று சேரலாம். வெறும் நினைவாலேயே நாம் காற்றோட்டமுள்ள, சூரியவெளிச்சமுள்ள கடற்கரையோ அல்லது மலைப்பாங்கான அழகான பிரதேசமோ உருவாக்கலாம் எனும் போது ஏன் பாழடைந்த இடங்களையோ அல்லது இறுக்கமான காற்றோட்டம் இல்லாத கட்டடங்களையோ எண்ணப் போகிறோம்."
ஆர்தர் இப்பூவுலகிலிருந்த போது அவருடன் நான் இறுதியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது எனது எடிட்டர் எலிஸ் அம்பேர்ன் (Ellis Amburn) என்பவருக்காக எமது அறிவுக்கு அப்பாற்பட்ட விடயங்களைப் பற்றியும் ஆவியுலக ஆராய்ச்சியைப் பற்றியும் ஒரு புத்தகம் எழுதும்படி வேண்டினேன். அதற்கு ஆர்தர் சம்மதித்திருந்தார். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். இப்போ அவர் அதைப் பற்றியும் பின்வருமாறு சொன்னார், "நான் அங்கிருக்கும் போது அவருக்காக எழுதாமல் விட்ட புத்தகத்துக்கு உரிய பரிகாரத்திலும் பார்க்கக் கூடுதலாக இவ்விடயம் இருக்குமென்று அம்பேர்னிடம் சொல்லு. நான் அங்கிருக்கும் போது எழுதிய வேறு புத்தகங்களில் இன்னும் சில விடயங்கள் சேர்க்க வேண்டியதாய் இருக்குமென்றாலும் மனிதர்களைக் குழப்பிக் கொண்டிருந்த பல விடயங்களைக் கண்டறிய இயலுமாக உள்ளது இப்போது. இங்கு எமது நிலையைப் பற்றிய எல்லா விடயங்களையும் உங்களுக்குச் சொல்லுமாறு லிலியும் அவரது குழுவினரும் சொல்கிறார்கள். பூவுலகிலிருக்கும் போதே ஏன் மேலுலகிற்குரிய ஆயத்தங்களைச் செய்ய வேண்டுமென்பதன் முக்கியத்துவத்தையும், தியானம் செய்வது, வழிபாடு செய்வதன் காரணங்களையும், இவையிரண்டினதும் நெருங்கிய தொடர்புகளையும், அத்துடன் மேலுலகத்தின் வாழ்க்கை முறைகளையும் சொல்லச் சொல்கிறார்கள். அங்கு ஒவ்வொரு நாளும் இதற்குரிய ஆயத்தங்களைச் செய்யாவிடின் அவையெல்லாம் வீணான நாட்களே என்பதனைச் சில உணரக்கூடியவர்களுக்கு உணர்த்தி அவர்களை எழுப்பிவிட இயலுமென நாம் எண்ணுகிறோம்.
உதாரணத்துக்கு ஒரு சிறுவனின் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடமாக (முதல் நாளிலும் கூடிய தரமாக) அவன் படித்துப் பரீட்சை நாளில் ஆசிரியர் அவனது தராதரத்தை அளவிடக்கூடியதாக உள்ளது. அது போலவே இவ்வுலக வாழ்க்கையும். நாம் அங்கு படித்து அறிந்து வளர்ச்சியுற்று முன்னேறி மேலுலகில் எமது முன்னேற்றத்தைப் பற்றி அறியப் போகிறோம். ஆத்மீக அடிப்படையில் இது ஒரு பள்ளிக்கூடம் போலவே. ஒவ்வொரு நாளும் புதுப் பிரச்சனைகள், புதிய வழிமுறைகள், எமது ஆத்மீக முன்னேற்றத்தை அறிவதற்குப் புதிய முறைகள் வருகின்றன. தியானம் செய்யாத ஒவ்வொரு நாளும் வீணாகிப் போன நாட்களே. அத்துடன் காலம் விரைவாகப் பறந்து விடும். நான் இங்கு அறிந்தவற்றை அங்குள்ளவர்கள் உணர்ந்தார்களேயானால், பூவுலக வாழ்க்கைக் காலமென்பது மின்னல் போன்ற மிகச் சிறிய காலமே என்பதனையும், அந்தப் பூவுலக வாழ்க்கைக்கிடையில் நாம் கழிக்கும் காலமென்பது மிக நீண்ட காத்திருக்கும் காலங்கள் என்பதனையும் உணர்வார்கள்" என்றார். அத்துடன் அவர் லிலி, ஃப்ளெச்சர், மற்றும் எய்லீன் காரட் (Eileen Garrett) என்ற எனக்கும் ஆர்தருக்கும் பிரத்தியேகமாகத் தெரிந்த பிரபல அயர்லாந்து அமெரிக்க ஆவியூடகவியலாளர் மூலமாக வேலை செய்தவர்கள் போல அசாதாரணமான வேலை செய்து இங்குள்ள விஷயங்களை அங்கு வசிக்கும் திறந்த மனதுள்ளவர்களுக்கு அறியத்தந்தால் அது அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிகோலி அந்தக் காலங்களைக் குறைக்க உதவும் எனவும் உரைத்தார்.
அத்துடன் ஆர்தர் இடையில் தான் எய்லீனைச் சந்தித்ததைப் பற்றி, "நான் எய்லீனை இங்கே பல தடவைகள் சந்தித்திருக்கிறேன். அவருக்கு அங்கிருந்ததைப் போல மூட்டுவாத நோய்களோ, மனவருத்தங்களோ இன்றி மிகவும் சாந்தமாக, அமைதியாக, அழகாக, முழு விழிப்புணர்வுடன் காணப்படுகிறார் (அங்கேயுள்ள மாயத்திரை விலகி வழிவிட்டு வந்ததைப் போல). அவர் அங்கு செய்ததைப் போல இங்கு வேலை செய்ய ஆர்வமாக உள்ளார். ஆனால் சரியான தொடர்பு தேவைப்படுகிறது அவருக்கு" என்றுரைத்தார்.

No comments: